குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

20.7.10

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அன்னை கதீஜா பின்த் குவைலித் (ரலி)
அன்னை கதீஜா பின்த் குவைலித் (ரலி)

இஸ்லாத்தின் மீது அவர்களுக்கு இருந்த ஈடுபாடு, உறுதியான நம்பிக்கை, இன்னும் அவரது அரும்பெருங் குணங்கள் இவையனைத்தும் அல்லாஹ்வின் அளப்பெரும் அருளுக்கும், இன்னும் வான தூதர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலமாக வாழ்த்துச் செய்தியையும் பெற்றுத் தந்தது.



மிகவும் வசதியான, கௌரவமிக்க குடும்பத்தில் பிறந்திருந்த அருமைத் தாயவர்கள் இயற்கையிலேயே இறைநம்பிக்கை, வாய்மை, பண்பாடுகள், அருங்குணங்கள் இன்னும் கொடைத் தன்மை மிக்கவர்களாக வளர்ந்து வந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த தூதை முதன் முதலாக ஏற்று இறைவிசுவாசம் கொண்டு, அதனைத் தனது வாழ்க்கை நெறியாகவும் ஏற்றுக் கொண்டவர்களாகத் திகழ்ந்தார்கள்.

இன்னும் இறைவன் தனது திருத்தூதர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலமாக இவர்களுக்கு தனது ஸலாமைத் தெரிவிக்கும் அளவுக்கு இறைவனது உவப்புக்கு உரிய நங்கையாகத் திகழ்ந்தார்கள் அன்னை கதீஜா (ரலி) அவர்கள். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முதல் மனைவியும், அதனை விட இவர்கள் உயிரோடு இருந்த காலம் வரைக்கும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இன்னொரு மனைவியைத் திருமணம் செய்து கொள்ளவில்லை. இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் 24 ஆண்டுகள் அன்போடும், பாசத்தோடும் குடும்பம் நடத்தினார்கள். இன்னும் இவர்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற காலத்தில், கதீஜா (ரலி) அவர்களது வீட்டில் வைத்து, வானவ தூதர் ஜிப்ரீல் (அலை) கொண்டு வந்த தூதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். அன்னை அவர்கள் வசதியான குடும்பத்தில் பிறந்து, வசதியான வாழ்வுக்குச் சொந்தக்காரராக இருந்த போதிலும், மக்கத்துக் குறைஷிகள் இறைத்தூதர் (ஸல்) அவர்களையும், இன்னும் அவர்கள் கொண்டு வந்த தூதைச் சுமந்த நெஞ்சங்களையும், அபூதாலிப் கணவாய்க்கு அனுப்பி வைத்து, சமூக பகிஷ்காரம் செய்த பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்களது வலக்கரமாக இருந்து செயல்பட்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் தோளோடு தோள் கொடுத்து நின்றார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களை மணந்த நாள் முதல், அவர்களது தூதை ஏற்ற நாள் முதல் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் பல இன்னல்களையும், கஷ்டங்களையும் சுமந்த போதிலும் தளராத அந்த நெஞ்சம், இறைவனது அழைப்பை ஏற்று - மரணத்தைத் தழுவிய பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்களது இதயம் சற்று நின்று தான் போனது. தணலில் விழுந்த புழுவாய் துடித்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், இறைவனது விதியை ஒப்புக் கொண்டவர்களாக, தானே முன் நின்று தனது பிரிய மனைவிக்கு மண்ணறையை முன்னின்று தோண்டினார்கள், தானே குழிக்குள் இறங்கி குழியைச் சரி செய்தார்கள், இன்னும் தானே அவர்களது உடலை வாங்கி மண்ணறைக்குள் வைத்தார்கள். இஸ்லாத்தின் வெளிச்சப் புள்ளிகள் மக்காவைத் தரிசித்த அந்த ஆரம்ப நாட்களில், அதனைக் கை கொண்டு மறைக்கப் பார்த்த குறைஷிகள், அதனை வாய் கொண்டு அணைக்க முற்பட்ட போது, அன்னை அவர்கள் தோள் கொடுத்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் துவண்டு விடாமல் பார்த்துக் கொண்டார்கள்.

இன்னும் சொர்க்கத்துப் பெண்களின் தலைவி எனப் போற்றப்படும் ஃபாத்திமா (ரலி) அவர்களைப் பெற்றெடுத்த பாக்கியமிக்க பெண்மணியும் கூட. இன்னும் சொர்க்கத்தின் வாச மலர்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்களால் மணம் பரப்பப்பட்ட ஹஸன் (ரலி) மற்றும் ஹுஸைன் (ரலி) ஆகியோர்களின் தாயாரைப் பெற்ற பாக்கியம் பெற்றவருமாவார்கள்.

அப்துல்லா இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

ஒருமுறை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தரையில் நான்கு கோடுகளை வரைந்து, இந்தக் கோடுகளின் அர்த்தம் என்னவென்று தெரியுமா? என்று தனது தோழர்களைப் பார்த்துக் கேட்டார்கள். அதற்கு, இறைவனும், இறைத்தூதரும் தான் அறிவார்கள் என்று தோழர்கள் பதில் கூறினார்கள். இந்தக் கோடுகள் இந்த உலகின் மிகச் சிறந்த நான்கு பெண்மணிகளைக் குறிக்கக் கூடியதாகும். அவர்களாவன : கதீஜா பின்த் குவைலித், ஃபாத்திமா பின்த் முஹம்மத், மர்யம் பின்த் இம்ரான், ஈஸா (அலை) அவர்களின் தாயாரான மர்யம் (அலை) மற்றும் ஆஸியா பின்த் மஸாஹிம் (பிர்அவ்னின் மனைவி) என்று பதில் கூறினார்கள்.

முதல் நபர் இறைத்தூது சுமந்து வந்த நெஞ்சுக்கு ஆறுதல் அளித்ததோடு மட்டுமல்லாமல், இறைவிசுவாசத்தில் உலகிலுள்ளோருக்கெல்லாம் முதன்மையாக விசுவாசம் கொண்டு விட்ட கதீஜா (ரலி) அவர்களும், இரண்டாவதாக, சொர்க்கத்துப் பெண்களின் தலைவி என இறைத்தூதர் (ஸல்) அவர்களால் நன்மாராயம் கூறப்பட்ட - இறைத்தூதர் (ஸல்) அவர்களின் அருமை மகளார் ஃபாத்திமா (ரலி) அவர்களும், மூன்றாவதாக இறைவனுடைய குன் - ஆகுக என்ற வார்த்தையால் இறைத்தூதர் ஈஸா (அலை) அவர்களை ஈன்றெடுத்த கன்னிப் பெண்ணான மர்யம் (அலை) அவர்களும், நான்காவதாக, ஃபிர்அவ்ன் தன்னுடைய ஆட்சி நிலைக்க வேண்டுமென்றால் பிறக்கும் அனைத்து ஆண் குழந்தைகளையும் உயிரோடு விட்டு வைக்கக் கூடாது என்று சபதமெடுத்து, பிறந்த ஆண் குழந்தைகளைக் கொன்று குவித்துக் கொண்டிருந்த பொழுது, மூஸா (அலை) அவர்களை பிர்அவ்னின் சம்மதத்தோடு தன்னுடைய அரண்மணையில் வைத்து வளர்த்ததோடு மட்டுமல்லாமல், நேர்வழி பெற்ற பெண்மணியாக இறைவிசுவாசத்தோடு வாழ்ந்து காட்டிய ஆஸியா (அலை) அவர்களும் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் போட்டுக் காட்டிய கோட்டிற்கான, அந்த நான்கு பெண்மணிகளுமாவார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் :

எப்பொழுதெல்லாம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கதீஜா (ரலி) அவர்களைப் பற்றிப் பேசுகின்றார்களோ, அப்பொதெல்லாம் அவர்களை மிகவும் உயர்த்தியே பேசுவார்கள். ஒருநாள் மிகவும் இளமையான மனைவியாக இறைவன் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு என்னை அளித்திருக்க, கதீஜா (ரலி) அவர்களை இவ்வளவு உயர்வாகப் பேசுகின்றார்களே என பெண்களுக்கே உரிய அந்த குணத்தினால், ஆயிஷா (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம், அந்த மனைவியிடம் தாங்கள் என்ன தான் கண்டீர்கள் என்ற பொருள்படக் கேட்டு விடுகின்றார்கள்.

இந்தக் கேள்வி இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சங்கடப்பட வைத்தது, இருப்பினும் அவர்களுக்கே உரித்தான அந்த சகிப்புத் தன்மை காரணமாக அதனைப் பெரிதுபடுத்தாமல், ஆயிஷா (ரலி) அவர்களுக்கு இவ்வாறு பதிலளித்தார்கள் :

அவளை (கதீஜா) விட மிகச் சிறந்த மனைவியை நான் கண்டதில்லை. என்னுடைய குடும்பமும், என்னுடைய கோத்திரமும் என்னை விசுவாசிக்க மறுத்த பொழுது, யாருமே என்னுடைய தூதை ஏற்றுக் கொள்ள முன்வராத போது என்னையும் நான் கொண்டு வந்த தூதையும் முதன் முதலாக விசுவாசித்தார். அல்லாஹ் அனுப்பிய தூதனாக என்னையும், என்னை தூதனாக அனுப்பி வைத்த அல்லாஹ்வையும் அவர் விசுவாசித்தார். அந்த விசுவாசத்தின் காரணமாக தன்னுடைய அனைத்து சொத்துக்களையும் இழந்தார். என்னையும் நான் கொண்டு வந்த தூதையும் ஒரு சேர அணைத்து விட முழு உலகமும் துடித்துக் கொண்டிருந்த பொழுது, தனது உடலாலும், பொருளாலும் என்னையும், நான் கொண்டு வந்த தூதையும் அவள் காப்பாற்ற உதவினாள். இன்னும் அவள் மூலகமாகத் தான் இறைவன் எனக்கு குழந்தைப் பாக்கியத்தையும் நிரப்பமாக வழங்கி அருளினான் என்று கூறினார்கள்.

மக்காவில் கி.பி.556 ஆம் ஆண்டு ஃபாத்திமா பின்த் ஸயீத் மற்றும் குவைலித் பின் அஸத் என்பவருக்கும் மகளாக கதீஜா (ரலி) அவர்கள் பிறந்தார்கள். இவருடைய தந்தை குவைலித் பின் அஸத் மக்கத்துக் குறைஷிகளின் கோத்திரத்தில் மிகச் சிறப்புமிக்க கோத்திரத்தவராவார். மிகச் சிறந்த வணிகராகத் திகழ்ந்த குவைலித் பின் அஸத் அவர்கள், அன்றைய அரேபியாவில் மிகவும் அறியப்பட்ட ஃபுஜ்ஜார் என்ற போரின் போது கொல்லப்பட்டார்கள். மிகவும் செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்த கதீஜா (ரலி) அவர்கள் மிகவும் வசதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள்.

அபூ ஹாலா மலக் பின் நபஷ் பின் ஸர்ராஹ் பின் அத்தமீமி என்பவரைத் தனது முதல் கணவராகத் திருமணம் செய்தார்கள். தனது கணவர் மிகப் பெரும் வணிகராகத் திகழ வேண்டும் என்ற ஆசை கொண்ட கதீஜா (ரலி) அவர்கள், தனது செல்வத்தை தனது கணவரின் வாணிபத்தில் முதலீடு செய்தார்கள். ஆனால் குறுகிய காலத்திலேயே தமீமி அவர்கள் மரணமடைந்து விட்டார்கள். முதல் கணவர் இறந்ததன் பின் அதீக் பின் அய்த் பின் அப்துல்லா அல் மக்சூமி என்பவரைத் திருமணம் செய்தார்கள், ஆனால் இவர்களது திருமணம் வெகு விரைவிலேயே முறிந்து விட்டது. இந்த இரண்டாவது திருமணத்தின் மூலம் கதீஜா (ரலி) அவர்கள், ஹிந்தா என்றொரு பெண் குழந்தையை மகவாகப் பெற்றார்கள். இந்த இரண்டாவது திருமண முறிவுக்குப் பின் தனது குழந்தையை வளர்த்தெடுப்பதிலும், மேலும் தனது வியாபாரத்தைப் பெருக்குவதிலும் கண்ணும் கருத்துமாக இருந்து வந்தார்கள். வியாபாரத்தில் இவர்கள் காட்டிய திறமை, குறைஷிகளிலேயே மிகச் சிறந்த வியாபாரியாக இவரைத் திகழச் செய்தது. இவர் தனது வியாபாரத்தில் திறமைமிக்க, கடின உழைப்பு மற்றும் நேர்மையான வேலையாட்களை நியமித்து, அதன் மூலம் தனது வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்தி வந்தார். இன்றைக்கு இருப்பது போல தொலைத் தொடர்பு வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில், தனக்குப் பதிலாக தொலை தூர நாடுகளுக்குச் சென்று தனது பொருட்களை வாணிபம் செய்து விட்டு வர, நாணயமான திறமையான தொழிலாளர்களை நம்பி இருக்க வேண்டியதிருந்தது. இவர் தனது பொருட்களை மக்காவிலிருந்து சிரியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விட்டு, அங்கிருந்து மக்காவிற்கு சில பொருட்களை இறக்குமதி செய்து வந்தார்கள். ஏனெனில் மக்கா என்பது உலக வணிகச் சந்தையின் மார்பிடமாகத் திகழ்ந்து வந்ததும் ஒரு காரணமாகும்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நேர்மையான நாணயமான நற்குணங்களைப் பற்றிக் கேள்விப்பட்ட கதீஜா (ரலி) அவர்கள், தனது வியாபாரத்தை ஏற்று நடத்துவதற்கு சம்பள அடிப்படையில் வேலைக்கு வந்து சேருமாறு அழைப்பு விடுத்தார்கள். கதீஜா (ரலி) அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், கதீஜா (ரலி) அவர்களின் நன்னம்பிக்கையைப் பெற்ற அடிமையான மைஸரா என்பவருடன் வியாபார நிமித்தமாக வெளிநாடுகளுக்குச் சென்றார்கள்.

இந்த வியாபாரப் பயணத்தில் கதீஜா (ரலி) அவர்களுக்கு மிகப் பெரிய இலபாம் கிடைத்ததோடு, மைஸராவுக்குச் சொல்ல முடியாத அதிசயத்தக்க சில நிகழ்வுகளை நேரில் காணும் வாய்ப்பும் கிடைத்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் காணப்பட்ட நற்குணங்கள், நம்பிக்கை, நாணயம், ஒப்பந்தங்களை நிறைவேற்றுதல், கொடுக்கல் வாங்கலில் காணப்பட்ட நாணயம், மற்றும் வியாபாரத் திறமை ஆகியவை யாவும் மைஸராவை அதிசயிக்க வைத்தன. வியாபார விஷயமாக சிரியா சென்று விட்டு திரும்பி வரும் வழியில் ஓய்வுக்காக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மர நிழலில் ஓய்வெடுக்க ஆரம்பித்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அந்த குறிப்பிட்ட மர நிழலில் ஓய்வெடுப்பதைப் பார்த்த, ஒரு யூதத் துறவி, மைஸராவிடம் யார் இந்த மனிதர்? என்று கேட்டார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் குணநலன்கள், வியாபாரத் திறமைகள் ஆகிய அனைத்தையும் பற்றி அந்த யூத துறவியிடம் மைஸரா விவரித்தார்கள். இவர் வருங்காலத்தில் இறைத்தூதராக வருவதற்கான அறிகுறிகள் இவரிடம் இருக்கின்றன, இந்தக் குறிப்பிட்ட மரத்தில் இறைத்தூதர்களைத் தவிர வேறு யாரும் ஓய்வெடுக்க மாட்டார்கள் என்று அவர் கூறினார்.

இன்னும் சில அறிவிப்புகளின்படி, கடுமையான வெயிலின் பொழுது, வெயிலின் வெப்பத்திலிருந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு, இரண்டு வானவர்கள் மேகத்தைத் தாங்கிப் பிடித்த வண்ணம் தலைக்கு மேல், இறைத்தூதர் (ஸல்) உடன் வந்து கொண்டிருப்பதைக் கண்டிருக்கின்றார். இந்தக் காட்சிகளை எல்லாம் கண்ணாறப் பார்த்த மைஸரா, இவரைத் தனது உற்ற நண்பராக ஆக்கிக் கொள்வதன் மூலம், மிகச் சிறந்த நல்வாய்ப்புகளையும், ஆதாயங்களையும் பெற்றுக் கொள்ளலாம் எனத் தீர்மானித்தார்.

நாடு திரும்பியவுடன் முதல் வேலையாக, தன்னுடைய எஜமானியான கதீஜா (ரலி) அவர்களிடம் சென்று பயண நெடுகிலும் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை மைஸரா விவரிக்க ஆரம்பித்து விட்டார். இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் பற்றி மைஸரா மூலம் அறிந்து கொண்ட கதீஜா (ரலி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களை மணமுடித்துக் கொள்ள ஆவல் கொண்டார்கள்.

ஆனால் தனது ஆசையை எவ்வாறு வெளிப்படுத்துவது? என்ற தயக்கம் அவர்களிடம் காணப்பட்டது. இன்னும் குறைஷிக் கோத்திரங்களில் மிகப் பெரும் கோத்திரத்தவர்கள் பலர் தன்னை மணமுடிக்க விருப்பம் தெரிவித்திருந்த போதிலும், அவை அத்தனையையும் கதீஜா (ரலி) அவர்கள் மறுத்தொதுக்கி இருந்த அந்த நேரத்தில், இறைத்தூதர் (ஸல்) அவர்களைத் தான் மணமுடிக்கத் தயாராக இருப்பது பற்றி தான் எவ்வாறு வெளிப்படுத்துவது என்ற தயக்கமும் இருந்தது. இன்னும் தனது குலத்தவர்கள் தன்னைப்பற்றி என்ன நினைத்துக் கொள்வார்கள்? இன்னும் தனது குடும்பத்தவர்கள் இதற்கு என்ன கூறுவார்கள்? இளமைத்துடிப்போடு உள்ள, இன்னும் மணமுடித்துக் கொள்ளாத முஹம்மது அவர்கள் தனது வேண்டுகோளை ஏற்பாரா? என்பன போன்ற கேள்விகள் அவரது மனப்பரப்பில் வந்து வந்து அலைமோதின.

கடுமையான மனக்குழப்பத்தில் ஆழ்ந்திருந்த அன்னையவர்கள், சூரியன் தனது வீட்டு முற்றத்தில் இறங்கி வந்து தனது வீட்டையே வெளிச்சமாக்கி கொண்டிருப்பதாகக் கனவு கண்டார்கள். தான் கண்ட கனவிற்கு அர்த்தம் சொல்லுமாறு, தனது ஒன்று விட்ட சகோதரர் வரகா பின் நவ்பல் என்பவரிடம் கேட்கின்றார்கள். தௌராத் மற்றும் இன்ஜீல் ஆகிய வேதங்களைக் கற்றவரும், சிறந்த ஞானமிக்கவரும், கனவுகளுக்கு விளக்கம் சொல்லுமளவுக்கு அறிவு ஞானம் படைத்த, கண்தெரியாத அந்த மனிதர் கதீஜா (ரலி) அவர்களைப் பார்த்து புன்னகைத்து விட்டு, கவலைப்பட வேண்டாம், இது நன்மாராயமான கனவாகும் என்று கூறினார்கள். சூரியன் வீட்டு முற்றத்தில் இறங்குவது என்பது இறைத்தூதர் ஒருவரது வருகையைப் பற்றிய தௌராத் மற்றும் இன்ஜீல்; ஆகிய வேதங்களில் காணப்படும் முன்னறிவிப்பு நிறைவேற இருப்பதனைக் குறிக்கக் கூடியதாகும் என்று அவர், கதீஜா (ரலி) அவர்களின் கனவுக்கு விளக்கமளித்தார்.

வரகா பின் நவ்பல் அவர்களைச் சந்தித்து விட்டு வந்த பின், இறைத்தூதர் (ஸல்) அவர்களைத் தான் மணமுடிக்க வேண்டும் என்பதில் உறுதியான முடிவை எடுத்தார்கள். ஆனால் எவ்வாறு முஹம்மது அவர்களை அணுகுவது என்பதில் ஒரு முடிவுக்கு வர இயலாத குழப்பான நிலையிலேயே இருந்தார்கள். கதீஜா (ரலி) அவர்களின் தோழியான நஃபீஸா பின்த் மன்பஃ அவர்கள், கதீஜா (ரலி) அவர்களின் இதயத்துடிப்பை அறிந்து, அதற்கு உதவ முன்வந்தார்கள், இன்னும் முஹம்மது (ஸல்) அவர்களிடம் தூது போகவும் முடிவெடுத்தார்கள்.

மிகப் பெரிய பீடிகை எதனையும் போடாமல், மிக எளிதான முறையில் நான் உங்களிடம் தனிப்பட்ட முறையில் ஒரு கேள்வியைக் கேட்க வேண்டும் என்று முஹம்மது (ஸல்) அவர்களிடம் விண்ணப்பித்த நஃபீஸா அவர்கள், முஹம்மது (ஸல்) அவர்களிடமிருந்து அதற்கு எதிர்ப்பேதும் இல்லாது சம்மதத்திற்கான அறிகுறிகள் கிடைத்தவுடன், நீங்கள் ஏன் இன்னும் திருமணம் முடிக்காமல் இருக்கின்றீர்கள்? என்று கேட்டார். அதற்கு முஹம்மது (ஸல்) அவர்கள் திருமணம் முடிக்கும் அளவுக்கு என்னுடைய பொருளாதார நிலை இல்லை என்று பதிலளித்தார்கள்.

பொருளாதாரத்தைப் பற்றிப் பிரச்னையில்லை, குறைஷிக் குலத்தில் மிகப் பெரும் குலத்தில் பிறந்த வசதியான இன்னும் தங்களையே மணமுடிக்க வேண்டும் என்று விரும்புகின்ற அழகானதொரு பெண்ணை நீங்கள் மணமுடிக்க விரும்புகின்றீர்களா? என்று நபீஸா அவர்கள் கேட்டார்கள்.

நீங்கள் எந்தப் பெண்ணைப் பற்றிக் கூறுகின்றீர்கள்? என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வினாத் தொடுத்தார்கள். நஃபீஸா அவர்கள் கூறிய அடையாளங்களை வைத்து, அவர் என்னை மணக்க விருப்பம் தெரிவித்தால் நான் அவரை மணந்து கொள்ள விரும்புவதாகத் தன்னுடைய விருப்பத்தை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தெரிவித்து, மணமுடிக்க சம்மதம் தெரிவித்தார்கள். இதனைக் கேள்விப்பட்ட கதீஜா (ரலி) அவர்கள் மிகுந்த சந்தோஷமடைந்தார்கள். அப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு 25 வயதும், கதீஜா (ரலி) அவர்களுக்கு 40 வயதும் (இன்னும் சில அறிவுப்புகளின்படி 28 வயதும்) ஆகியிருந்தது.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் சிறிய தகப்பனார்களான ஹம்ஸா (ரலி) அவர்களும், அபூதாலிப் அவர்களும் கதீஜா (ரலி) அவர்களின் சிறிய தகப்பனாரான உமர் பின் அஸத் அவர்களை அணுகி திருமண விஷயம் பற்றிக் கலந்தாலோசனை செய்தார்கள். திருமண ஒப்பந்தங்கள் போடப்பட்டு தேதியும் நிச்சயிக்கப்பட்டது. இரு குடும்பத்தவர்களும் நிச்சயித்த அந்த நாளில் சுற்றமும் நட்பும் புடை சூழ திருமணம் நடந்தேறியது.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இளமைப் பருவத்தின் பொழுது அவர்களுக்குப் பாலூட்டிய செவிலித் தாயான ஹலீமா ஸஃதிய்யா அவர்கள் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார்கள். தனது கிராமத்திலிருந்து திருமணத்திற்காக மக்கா வந்த ஹலீமா அவர்களுக்கு, இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு இளமையில் பாலூட்டி வளர்த்த அந்தத் தாய்க்கு வீட்டுச் சாமான்களையும், ஒட்டகம் மற்றும் 40 ஆடுகளைப் பரிசாக அவர்களுக்குக் கொடுத்து அவர்களை கௌரவப்படுத்தி அனுப்பி வைத்தார்கள்.

இறைத்தூதர் (ஸல்) மற்றும் கதீஜா (ரலி) தம்பதிகளுக்கு ஆறு குழந்தைகள் பிறந்தன. காசிம், அப்துல்லா என்ற இரண்டு மகன்களும் மற்றும் ஸைனப், ருக்கையா, உம்மு குல்தூம் மற்றும் ஃபாத்திமா ஆகிய மகள்களையும் கதீஜா (ரலி) அவர்கள் பெற்றெடுத்தார்கள். அருமையான மனைவி, வசந்தமான வாழ்க்கை, குதூகலிக்க வைக்கும் குழந்தைகள் இத்தனை இருந்தும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எதனையோ இழந்தவர்கள் போல இருந்தார்கள், வருடத்திற்கு ஒரு முறை, ஒரு மாதம் முழுவதும் ஹிரா என்னும் குகைக்குச் சென்று தவமிருக்கலானார்கள்.

இவ்வாறிருக்கையில் ஒருநாள் இனம் புரியாத உருவம் ஒன்று கைகளினால் தன்னை இறுக அணைத்து அழுத்திப் பிடிப்பதை உணர்ந்தார்கள். பின் தன்னுடைய பிடியைத் தளர்த்திய அந்த உருவம், எங்கே ஓதுவீராக என்று கூறியது. அதற்கு, நான் படிப்பறியாதவன் - எனக்கு ஓதத் தெரியாது என்று பதில் கூறினார்கள். இருந்தும் வந்த அந்த உருவம் மீண்டும் இவரைக் கட்டிப் பிடித்து இப்பொழுது ஓதுவீராக! என்று கூறியதும், மீண்டும் எனக்கு ஓதத் தெரியாதே! என்றார்கள். இவ்வாறு பல முறை நிகழ்ந்த பின், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் திருமறைக்குர்ஆனின் ஆரம்ப வசனங்களான இக்ரஃ பிஸ்மி ரப்பிகல்லதி கலக் என்ற வசனத்தை ஓத ஆரம்பித்தார்கள்.

(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக. 'அலக்' என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான். ஓதுவீராக! உம் இறைவன் மாபெரும் கொடையாளி. அவனே எழுதுகோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான். (96:1-5)

பின்பு அந்த உருவம் மறைந்து விட்டது. எதிர்பாராத இந்த நிகழ்ச்சியின் காரணமாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பயந்து நடுநடுங்கியவர்களாக, வியர்த்து வழிகின்ற நிலையில், தன்னுடைய வீட்டை அடைந்து தன்னுடைய துணைவியார் கதீஜா (ரலி) அவர்களை அழைத்து என்னைப் போர்த்துங்கள், என்னைப் போர்த்துங்கள் என்று கூறிகின்றார்கள். சற்று நேரம் அவர்கள் இளைப்பாறியதன் பின்பு சகஜ நிலைக்கு நிலைக்கு வருகின்றார்கள். அதன் பின்பு என்னுடைய உயிருக்கு ஆபத்து வந்து விடுமோ என நான் அஞ்சுகின்றேன் என்று கூறியவாறு, தனக்கு நேர்ந்தவைகளை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது துணைவியார் கதீஜா (ரலி) அவர்களிடம் விவரிக்கின்றார்கள்.

நீங்கள் ஏழைகளுக்கு உதவுகின்றீர்கள், பிறர் மீது அன்பும் கருணையும் உடையவர்களாக இருக்கின்றீர்கள், இந்த நிலையில் எந்த வித தீங்குகளும் உங்களை அணுகாமல் இறைவன் உங்களைப் பாதுகாப்பான், நீங்கள் பயப்பட வேண்டாம் என ஆறுதல் கூறுகின்றார்கள்.

கதீஜா (ரலி) அவர்களின் இந்த விவேகமான ஆறுதலான வார்த்தைகள் இறைத்தூதர் (ஸல்) அவர்களது மனதிற்கு தெம்பையும் தைரியத்தையும் வரவழைத்துக் கொடுத்ததோடு, மனதளவில் அவர்கள் மிகப் பெரிய தாக்கத்தை அவர்களுக்கு உருவாக்கிக் கொடுத்தது.

பின்பு இறைத்தூதர் (ஸல்) அவர்களை தனது சிறிய தகப்பனார் வரகா பின் நவ்பல் அவர்களிடம் அழைத்துக் கொண்டு சென்று, நடந்த விபரங்களை விவரித்தவுடன், தௌர் குகையில் இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்து விட்டுச் சென்றது, ஜிப்ரீல் (அலை) அவர்கள் தாம் என்பதை உணர்ந்து கொண்டு, மூஸா (அலை) அவர்களைச் சந்தித்த அதே தூதர் தான் முஹம்மது (ஸல்) அவர்களையும் சந்தித்துள்ளார்கள் என்று கூறுகின்றார்.

தௌராத் மற்றும் இன்ஜீலில் தனக்கிருந்த புலமையின் காரணமாக, முதுமையின் காரணமாக நான் இறந்து விடாது உயிருடன் இருந்தால், பின் வரும் காலத்தில் இந்த மக்கத்து மக்கள் தங்களை இந்த நாட்டை விட்டே வெளியேற்றுவதை நான் காணக் கூடியவனாக இருப்பேன் என்று வரகா பின் நவ்பல் கூறுகின்றார். அப்போது, என்னையா இந்த மக்களை இந்த நாட்டை விட்டு வெளியேற்றுவார்கள் என்று ஆச்சரியம் கலந்த தொணியில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கேட்ட பொழுது, ஆம்! இது ஒரு நிதர்சனமான உண்மையாகும். தங்களுக்குள் இருந்து வெளியாகும் எந்த இறைத்தூதரையும் அவரது சொந்த மக்கள் உடனே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இன்னும் எந்த இறைத்தூதரும் அவருடைய சொந்த நிலத்தில் கண்ணியப்படுத்தப்பட மாட்டார்கள். இன்னும் அந்த நேரத்தில் நான் வாழ்ந்தால், தங்களுக்கு நான் உதவக் கூடியவனாக இருப்பேன் என்றும் வரகா பின் நவ்பல் அவர்கள் கூறுகின்றார்கள். மேலும் அவர் கூறியவைகள் உண்மையாக இருந்தால், வேதங்களில் முன்னறிவிக்கப்பட்டவரும் இன்னும் உங்களுடைய கணவராகிய இவர் இறைத்தூதர் தான் என்றும் வரகா பின் நவ்பல் சாட்சியம் கூறினார்.

இறைத்தூதர் (ஸல்) மற்றும் கதீஜா (ரலி) அவர்களின் மணவாழ்க்கையின் விளைவாக ஆறு அழகான குழந்தைகளுக்குத் தம்பதியர்களாக ஆனார்கள். இவர்களில் நான்கு பெண் குழந்தைகள் இஸ்லாத்தின் இறைநம்பிக்கை மிக்கவர்களாகவும் இன்னும் மன உறுதிமிக்க பெண்மணிகளாகவும் வளர்த்தெடுக்கப்பட்டார்கள். அவர்களாவன : ஸைனப், ருக்கையா, உம்மு குல்தூம், ஃபாத்திமா (ரலி) ஆகியோர்களாவார்கள். இவர்கள் அனைவரும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் மதீனாவிற்கு ஹிஜ்ரத் சென்றவர்களுமாவார்கள்.

ஸைனப் (ரலி) அவர்கள் அபுல் ஆஸ் பின் ரபீஆ என்பவரையும், ருக்கையா (ரலி) அவர்கள் உதுமான் (ரலி) அவர்களுக்கும், பின் ருக்கையா (ரலி) அவர்கள் இறந்தவுடன் உம்மு குல்தூம் (ரலி) அவர்களை உதுமான் (ரலி)ழூ அவர்கள் மணந்து கொண்டார்கள், ஃபாத்திமா (ரலி) அவர்களை அலி பின் அபீதாலிப் அவர்கள் மணந்து கொண்டார்கள். முதல் மூன்று மகள்களும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலத்திலேயே மரணமடைந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்து ஆறு மாதம் கழித்து மரணமடைந்தார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மகள்கள் இரண்டு பேரை, ஒருவர் இறந்த பின் இன்னொருவரை மணந்ததன் காரணமாக உதுமான் (ரலி) அவர்களை துன்னூரைன் என்ற புனைப் பெயர் கொண்டு அழைப்பதுண்டு.

இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு மூன்று மகன்கள் பிறந்தார்கள். இரண்டு மகன்கள் கதீஜா (ரலி) அவர்கள் மூலமாகவும், ஒரு மகன் மரியா கிப்திய்யா (ரலி) அவர்கள் மூலமாகவும் பெற்றெடுத்தார்கள். முதல் மகனின் பெயர் காஸிம், இவரது பெயரால் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்களை அபுல் காஸிம் என்றும் அழைப்பதுண்டு. இரண்டாவது மகனின் பெயர் தாஹிர் (பரிசுத்தம்) அல்லது தய்யிப் (நல்லது) என்றழைக்கப்பட்ட அப்துல்லா. இவர்கள் இருவரும் குழந்தைப் பருவத்தின் போதே இறந்து விட்டார்கள். இவர்கள் இருவரும் இறந்தது மக்கத்துக் குறைஷிகளுக்கு மிகவும் சந்தோஷத்தைக் கொடுத்தது மட்டுமல்ல, முஹம்மதுக்கு வாரிசு இல்லாமல் போய் விட்டது என்று ஆனந்தப்பட்டார்கள். மூன்றாவது குழந்தையாகிய மரிய்யா கிப்திய்யா (ரலி) அவர்களுக்குப் பிறந்த இப்றாஹிம் அவர்களும் குழந்தையாக இருந்த பொழுதே மரணமடைந்து விட்டார்கள்.

தனது மூன்றாவது மகன் இறப்பெய்திக் கொண்டிருக்கின்ற நிலையில், தன் மகனை மடியில் வைத்துக் கொண்டு நான் உதவியற்றவன்.., இன்னும் இறைவனது விதியின் அமைப்புக்கு முன்னால் நான் எதுவும் செய்ய இயலாதவன்.., என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வருந்திக் கூறினார்கள்.
, ,