குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

3.11.10

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

நபி வழியில் நம் உம்ரா-ஹஜ்
உம்ரா செய்யும் முறை

almighty - arrahim
உம்ரா செய்வதற்கு முன் குளித்து நறுமணம் பூசிக்கொண்டு இஹ்ராம் உடையை அணிந்த பின் அல்லாஹும்ம லப்பைக்க உம்ரத்தன் என்று
உரிய எல்லையிலிருந்து (மீக்காத்திலிருந்து) நிய்யத்து வைத்துக் கொண்டு மக்காவிற்கு புறப்பட வேண்டும். இஹ்ராம் உடை என்பது ஆண்களுக்கு இரண்டு துணிகளை அணிவதாகும். ஒரு துணியை உடுத்துக்கொள்வது, மற்றத்துணியால் தன் மேனியை போத்திக் கொள்வது. பெண்;களுக்கு தனி இஹ்ராம் உடை கிடையாது. அவர்கள் தங்களுடைய அங்கங்கள் மறையும் அளவுக்கு இஸ்லாம் அனுமதித்த எந்த ஆடையையும் அணிந்து கொள்ளலாம். மக்கா செல்லும் வரை தல்பியா சொல்லிக் கொண்டு செல்வது சுன்னத்தாகும்.


لَبَّيْكَ أَللَّهُمَّ لَبَّيْكَ ، لَبَّيْكَ لاَ شَرِيْكَ لَكَ لَبَّبيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكُ، لاَشَرِيْكَ لَكَ.

லைப்பைக்க, அல்லாஹும்ம லைப்பைக்க, லப்பைக்க லா ஷரீக்க லக்க லப்பைக்க, இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல் முல்க், லா ஷரீக்க லக்.

ஹரத்திற்குள் நுழைவதற்கு முன் தல்பியாவை நிறுத்திக் கொண்டு வலது காலை முன் வைத்து பின் வரும் துஆவை ஓத வேண்டும்.

بِسْمِ اللهِ وَالصَّلاَةُ وَالسَّلاَمُ عَلَى رَسُوْلِ اللهِ أَللَّهُمَّ إفْتَحْ لِيْ أَبْوَابَ رَحْمَتِكَ.

ஹரத்திற்குள் நுழைந்ததும் தவாபை முதலில் ஆரம்பிக்க வேண்டும். தவாபை ஆரம்பிப்பதற்கு முன் ஆண்கள் தங்களின் வலது தோழ்ப்புயத்தை திறந்துவிட வேண்டும். அதாவது மேனியை போத்தியிருக்கும் துணியின் நடுப்பகுதியை வலது கக்கத்தின் கீழ் வைத்துக் கொண்டு அத்துணியின் இரு ஓரங்களையும் இடது தோழ் மீது போட வேண்டும். அதன் பின் உம்ராவிற்குரிய தவாபை நிறைவேற்றுகின்றேன் என்ற நிய்யத்தோடு ஹஜருல் அஸ்வத் கல் பொருத்தப்பட்டிருக்கும் மூலையிலிருந்து உம்ராவின் தவாபை ஆரம்பிக்க வேண்டும். தவாபை ஆரம்பிக்கும் போது மூன்று முறைகளில் ஒன்றைக் கொண்டு ஆரம்பிப்பது சுன்னத்தாகும்.
1- முடியுமாக இருந்தால் ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடுவது. 2- அதற்கு முடியாவிட்டால் கையினால் ஹஜருல் அஸ்வத் கல்லை தொட்டு கையை முத்தமிடுவது. 3- அதற்கும் முடியாவிட்டால் ஹஜருல் அஸ்வத் கல்லுக்கு நேராக நின்று தன் வலது கையை அதன்பக்கம் உயர்த்திக்காட்டி 'அல்லாஹு அக்பர் என்று சொல்லுவது, இப்போது கய்யை முத்தமிடக்கூடாது. இம்மூன்றில் முடியுமான ஒன்றைச் செய்துவிட்டு தவாபை ஆரம்பிக்க வேண்டும். தவாப் என்பது கஃபத்துல்லாவை ஏழு முறை பரிபூரணமாக சுற்றி வருவதற்குச் சொல்லப்படும். முந்திய மூன்று சுத்துக்களிலும் ரம்ல் செய்வது சுன்னத்தாகும். ரம்ல் என்பது கால் எட்டுக்களை கிட்ட வைத்து வேகமாக நடப்பதற்குச் சொல்லப்படும். மற்ற நான்கு சுற்றுக்களையம் சாதாரணமான நடையில் நடப்பது. இப்படிச் செய்வது ஆண்களுக்கு மாத்திரம்தான் சுன்னத்தாகும். பெண்களுக்கு அல்ல.
ஒவ்வொரு சுற்றுக்களுக்கும் மத்தியில் குறிப்பிட்ட துஆக்கள் எதுவும் இல்லை, விரும்பிய துஆக்களை கேட்கலாம். தஸ்பீஹ், திக்ர் செய்தல், குர்ஆன் ஓதுதல் போன்றவைகளை செய்து கொள்ளலாம். ருக்னுல் யமானியிலிருந்து அதாவது ஹஜருல் அஸ்வத் கல் மூலைக்கு முன் மூலையிலிருந்து ஹஜருல் அஸ்வத் கல் பொருத்தப்பட்டிருக்கும் மூலை வரையுள்ள இடத்தில் ''ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகினா அதாபன்னார்'' என்ற துஆவை ஓதுவது சுன்னத்தாகும்.
கஃபத்துல்லாவோடு சேர்ந்து ஒரு அரைவட்டம் இருக்கின்றது. அதையும் சேர்த்து தவாப் செய்ய வேண்டும், காரணம் அதுவும் கஃபத்துல்லாஹ்வின் எல்லைதான். தவாஃபுக்கு ஒழு அவசியமாகும். தவாஃப் செய்து முடிந்ததும் திறந்த வலது தோள்புஜத்தை மூடிக்கொள்ள வேண்டும். பின்பு மகாமுல் இப்றாஹிமுக்குப் பின் சென்று தவாஃபுடைய இரு ரக்அத்து சுன்னத்துத் தொழ வேண்டும். முந்திய ரக்அத்தில் சூரத்துல் பாத்திஹாவுக்குப்பின் சூரத்துல் காபிரூனும் (குல்யாஅய்யுஹல் காபிருன்), இரண்டாவது ரக்அத்தில் சூரத்துல் பாத்திஹாவுக்குப்பின் சூரத்துல் இக்லாஸையும் (குல்ஹுவல்லாஹு அஹது) ஓதுவது சுன்னத்தாகும். மகாமுல் இப்றாஹிமுக்குப்பின் நெருக்கமாக இருந்தால் ஹரத்தில் உள்ள வேறு எந்த இடத்திலும் தொழுது கொள்ளலாம்.

ஸஃயி

ஸஃயி என்பது ஸபா மர்வா மலைக்கு மத்தியில் ஏழு சுற்றுக்கள் சுற்றுவதாகும். தவாப் முடிந்த பின் ஸஃயி செய்வதற்காக ஸபா மலைக்குச் செல்லவேண்டும். கஃபத்துல்லாஹ்வை பார்க்கும் அளவு அதன்மீது ஏறி பின்வரும் துஆக்களை ஓதுவது சுன்னத்தாகும்.

لااِلَهَ اِلا اللهُ، ألله أَكْبَرُ، اَلْحَمْدُ للهِ، لاَاِلَهَ اِلاَّاللهُ وَحْدَهُ لاَشَرِيْكَ لَهُ، لَهُ اْلمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِيْ وَيُمِيْتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٍ. لاَاِلَهَ اِلاَّ اللهُ وَحْدَهُ، أَنْجَزَ وَعْدَهُ، وَنَصَرَ عَبْدَهُ، وَأَعَزَّ جُنْدَهُ، وَهَزَمَ الأَحْزَابَ وَحْدَهُ. (رواه النسائي ، وابن ماجة)

லாஇலாஹா இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர், அல்ஹம்து லில்லாஹ், லாஇலாஹா இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்கு வலஹுல்ஹம்து யுஹ்யீ வயுமீது வஹுவ அலா குல்லி ஷைய்யின் கதீர்;. லாஇலாஹா இல்லல்லாஹு வஹ்தஹு, அன்ஜஸ வஃதஹு, வனஸற அப்தஹு, வஅஅஸ்ஸ ஜுன்தஹு, வஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹு.(நஸாயி, இப்னுமாஜா)
இந்த திக்ருகளை மூன்று முறை ஓதுவது சுன்னத்தாகும். இவைகளுக்கு இடையே நமக்காக துஆக்கள் செய்வதும் சுன்னத்தாகும். நபியவர்களும் இப்படித்தான் செய்தார்கள், பின்பு ஸபா மலையிலிருந்து இறங்கி மர்வாவை முன்னோக்கி செல்ல வேண்டும், முதல் பச்சை விளக்கு பொருத்தப்பட்ட இடத்திலிருந்து மறு பச்சை விளக்கு பொருத்தப்பட்ட இடம் வரைக்கும் சிறிது வேகமாக ஓட வேண்டும். அதன்பிறகு சாதாரணமாக நடக்க வேண்டும். இப்படி வேகமாக ஓடுவது ஆண்களுக்கு மட்டும்தான் பெண்களுக்கல்ல. மர்வா மலையை அடைந்ததும் மர்வா மலை மீது ஏறி கிப்லாவை முன்னோக்கி சபா மலையில் செய்தது போன்று செய்வது சுன்னத்தாகும். இத்தோடு ஒரு சுற்று முடிவுறுகின்றது. பின்பு மர்வாவிலிருந்து ஸபா வரைக்கும் செல்வது, ஸபாவிலிருந்து வரும்போது இரு பச்சை விளக்குகளுக்கும் மத்தியில் சற்று வேகமாக ஓடியது போன்று இங்கேயும் சற்று வேகமாக ஓடுவது சுன்னத்தாகும். ஸபா மலையை அடைந்தால் இரண்டாவது சுற்று முடிவுறுகிறது. இப்படி ஏழு சுற்றுக்கள் சுற்ற வேண்டும், ஒவ்வொரு சுற்றுக்கும் தனிப்பட்ட பிரார்த்தனை கிடையாது. விரும்பிய பிரார்த்தனைகள், திக்ருகள், குர்ஆன் ஓதுவது போன்றவைகளை செய்யலாம். இப்படிப்பட்ட சிறப்பான இடங்களில் மனமுருக அல்லாஹ்விடத்தில் பிரார்த்தியுங்கள். ஸஃயின் ஏழு சுற்றுக்களும் முடிவடைந்தபின் ஆண்கள் தங்களின் தலைமுடியை மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும், இதுவே சிறந்த முறையாகும். மொட்டை அடிக்காதவர்கள் முடியை குறைத்துக் கொள்ள வேண்டும். முடியை குறைத்துக் கொள்வதென்பது இரண்டு அல்லது மூன்று இடங்களில் சில முடிகளை கத்தரிப்பது என்பதல்ல, மாறாக தலையில் உள்ள எல்லா முடிகளும் கொஞ்ச அளவுக்காவது கத்தரிக்கப்பட வேண்டும், இதுவே நபிவழியாகும். பெண்கள் தங்களின் தலைமுடியின் நுனியில் விரல் நுனியளவுக்கு வெட்டிக் கொள்ள வேண்டும், இதுவே அவர்களுக்கு சுன்னத்தான முறையாகும், இத்துடன் உம்ராவின் செயல்கள் பரிபூரணமடைந்துவிட்டன. அல்லாஹ் எங்களின் உம்ராவையும் மற்ற அமல்களையும் ஏற்றுக் கொள்வானாக.

ஹஜ் செய்யும் முறை
almighty - arrahim


ஹஜ்ஜின் வகைகள் மூன்று

1. ஹஜ்ஜுத்தமத்துஉ 2. ஹஜ்ஜுல் கிரான் 3. ஹஜ்ஜுல் இப்ராத்

ஹஜ்ஜுத் தமத்துஉ என்பது:- ஹஜ்ஜுடைய மாதத்தில் (ஷவ்வால், துல்கஃதா, துல்ஹஜ்) ஹஜ்ஜுக்கான உம்ராவைச் செய்து அதே வருடத்தில் ஹஜ்ஜையும் செய்வதற்குச் சொல்லப்படும். ஹஜ்ஜுக்கு செல்லும்போது குர்பானி கொடுக்கும் பிராணியை தன்னுடன் கூட்டிக் கொண்டு செல்லாதவர்களுக்கு இதுவே சிறந்த முறையாகும். ஹஜ்ஜுத்தமத்துஉ செய்பவர் உம்ராவை முடித்துவிட்டால் துல்ஹஜ் 8ஆம் நாள் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டும்வரை இஹ்ராமினால் ஹராமாக்கப்பட்டிருந்த அனைத்தும் ஹலாலாகிவிடும், துல்ஹஜ் 8ஆம் நாள் காலையில் தங்கியிருக்கும் இடத்தில் இருந்தே ஹஜ்ஜுக்கு நிய்யத் வைத்துக் கொண்டு இஹ்ராமை அணிந்து மினாவிற்குச் செல்ல வேண்டும்.
ஹஜ்ஜுல் கிரான் என்பது:- ஹஜ்ஜுடைய மாதத்தில் ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் சேர்த்து ஒரே நிய்யத்து வைப்பது. யார் தன்னுடன் குர்பானிக்குரிய பிராணிகளைக் கொண்டு செல்கின்றார்களோ அவர்களுக்கு இதுவே சிறந்த முறையாகும். இந்த முறையில் தான் நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜு செய்தார்கள்.
ஹஜ்ஜுல் இப்ராத் என்பது:- ஹஜ்ஜுடைய மாதத்தில் ஹஜ்ஜுக்கு மாத்திரம் நிய்யத்து வைப்பது, மக்காவாசிகளுக்கு இது சிறந்த முறையாகும்.
குறிப்பு:- கிரான் மற்றும் இப்ராதான முறையில் ஹஜ் செய்பவர்கள் மக்கா வந்ததும் தவாப் செய்ய வேண்டும். இதற்கு தவாபுல் குதூம் என்று சொல்லப்படும். தவாபுல் குதூமுக்குப் ஸஃயி செய்பவர்கள் 10ம் நாள் தவாபுல் இபாலாவுக்குப் பின் ஸஃயி செய்யத்தேவையில்லை. இப்போது ஸஃயி செய்யாதவர்கள் தவாபுல் இபாளாவக்குப்பின் ஸஃயி செய்தே ஆகவேண்டும்.
துல்ஹஜ் பிறை 8ம் நாள்
மேலே கூறப்பட்ட மூன்று முறையில் ஹஜ் செய்பவர்களும் துல்ஹஜ் பிறை எட்டாம் நாள் மினாவிற்குச் செல்ல வேண்டும். மினாவில் லுஹர், அஸர், மஃரிப், இஷா, ஸுப்ஹுத் தொழுகைகளை உரிய நேரத்தில் தொழ வேண்டும். நான்கு ரக்அத்துத் தொழுகைகளை இரண்டாக சுருக்கித் தொழவேண்டும். இப்படித்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும்; தொழுதார்கள்.
துல்ஹஜ் பிறை 9ம் நாள்
துல்ஹஜ் பிறை ஒன்பதாம் நாள் சூரியன் உதித்தபின் தல்பியா கூறியவர்களாக அரஃபா செல்ல வேண்டும். அரஃபா சென்றதும் அரஃபா எல்லையை உறுதிப் படுத்தியபின் மஃரிப் தொழுகையின் நேரம் வரும் வரை அங்கே தங்கி இருப்பது அவசியமாகும். லுஹருடைய நேரம் வந்ததும் அதானும், இகாமத்தும் கூறி லுஹரை இரண்டு ரக்அத்தாக சுருக்கித் தொழ வேண்டும். லுஹர் தொழுகை முடிந்ததும் இகாமத் கூறி அஸர்த் தொழுகையை முற்படுத்தி லுஹர் தொழுகையுடன் சேர்த்து இரண்டு ரக்அத்தாக சுருக்கித் தொழ வேண்டும். முன் பின் சுன்னத்துக்கள் கிடையாது. தொழுகை முடிந்ததும் ஒரு இடத்தில் அமர்ந்து வணக்கத்தில் ஈடுபடவேண்டும். அரபாவுடைய தினம் மிக சிறப்பான தினமாகும். ஹஜ் என்றால் அரபாவில் தரிப்துதான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அன்று செய்யும் வணக்கத்தில் மிக மேலானது துஆ செய்வதாகும். நபி (ஸல்) வஸல்லம் அவர்கள் தொழுகையை முடித்து விட்டு அரஃபா மலையடிவாரத்திலிருந்து கிப்லாவை முன்னோக்கி மஃரிப் வரைக்கும் துஆச்செய்தார்கள். ஆகவே, அங்குமிங்கும் அலைந்து திரியாமல் நீங்களும் உருக்கமான முறையில் ஈருலக உங்களின் வெற்றிக்காகவும், உலக முஸ்லிம்களுக்காகவும் அல்லாஹ்விடம் நெஞ்சம் உருக பிரார்த்தியுங்கள். அந்நாளில் செய்யும் திக்ருகளில் மிகச் சிறந்தது பின்வரும் திக்ராகும்.
நானும் எனக்கு முன்வந்த நபிமார்களும் கூறியவையில் மிகச் சிறந்தது

لااِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَشَرِيْكَ لَهُ ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءِ قَدِيْرٍ .

என நபி (ஸல்) வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அரஃபாவுடைய எல்லைக்குள் எங்கும் தங்கிஇருக்கலாம். ஜபலுர் ரஹ்மாவிற்க்குப் போய் அங்கிருந்து பிரார்த்தனை செய்யவேண்டும் என்று நினைத்து பல சிரமங்களுக்கு மத்தியில் அங்கு சென்று அன்றைய நாளையே பாழாக்காமல் கிடைத்த இடத்தில் அமர்ந்து, கொஞ்ச நேரத்தைக்கூட விணாக்காமல் முடியுமான அளவு அமல்களைச் செய்யுங்கள். நான் இந்த இடத்தில்தான் தரித்தேன், அரஃபாவின் எல்லைக்குள் எங்கும் தரிக்கலாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அபூதாவூத், அஹ்மத்)
முஸ்தலிபாவில் இராத்தரிப்பது
ஒன்பதாம் நாளின் சூரியன் மறைந்த பின் அரஃபாவிலிருந்து முஸ்தலிபாவுக்கு தல்பியா கூறியவர்களாக அமைதியான முறையில் புறப்பட்டுச் செல்ல வேண்டும். முஸ்தலிபா சென்றதும் மக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழ வேண்டும். அதானும் இகாமத்தும் சொல்லி முதலில் மக்ரிபைத் தொழ வேண்டும். பின்பு இகாமத் மாத்திரம் சொல்லி இஷாவை இரண்டு ரகஅத்தாக சுருக்கித் தொழ வேண்டும். முன் பின் சுன்னத்துக்கள் கிடையாது. சுப்ஹு வரை அங்கு தங்குவது அவசியமாகும். முஸ்தலிபாவிற்குள் எங்கும் தங்கலாம். நான் இங்குதான் தங்கினேன். முஸ்தலிபாவிற்குள் எங்கும் தங்கலாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
நோயாழிகள், பெண்கள் நடு இரவுக்குப்பின் அவர்கள் விரும்பினால் முஸ்தலிபாவிலிருந்து மினா செல்லலாம். நபி (ஸல்) அவர்கள் இதை அனுமதித்துள்ளார்கள்.
சுப்ஹுடைய நேரம் வந்ததும் சப்ஹுத் தொழுகையை தொழுதுவிட்டு சூரியனின் மஞ்சள் நிறம் வரும் வரை அல்லாஹ்வை போற்றிப்புகழ்ந்து அவனைப் பெருமைப் படுத்தக்கூடிய திக்ருகளைக் கூறுவதும், கிப்லாவை முன்னோக்கி துஆச் செய்வதும் சுன்னத்தாகும்.
நபி (ஸல்) அவர்கள் மஷ்அருல் ஹராம் என்னும் மலைமீது ஏறி கிப்லாவை முன்னோக்கி நின்று சூரியனின் மஞ்சள் நிறம் வரும் வரை நின்ற நிலையில் பிரார்த்தனை செய்தார்கள்.(அபூதாவூத்) இன்னும் ஒரு அறிவிவப்பில்:- அல்லாஹ்வை போற்றிப்புகழ்ந்து அல்லாஹுவைப் பெருமைப்படுத்தும், ஒருமைப்படுத்தும் திக்ருகளை ஓதினார்கள்.
பத்தாம் நாள்
தல்பியா கூறியவர்களாக முஸ்தலிபாவிலிருந்து புறப்பட்டு மினா வர வேண்டும். மினா வந்ததும் பத்தாம் நாளில் நான்கு அமல்கள் செய்ய வேண்டும்.
1- ஜம்ரத்துல் அகபாவிற்கு மாத்திரம் ஏழு கற்களை வீசுவது. 2- குர்பானி கொடுப்பது. 3- முடி எடுப்பது. 4- தவாபுல் இபாளா செய்வது.
சொல்லப்பட்ட வரிசைப்பிரகாரம் செய்வதே சுன்னத்தாகும். முற்படுத்தி பிற்படுத்தி செய்தாலும் தவறில்லை. பத்தாம் நாள் நபி (ஸல்) அவர்களிடம் பல ஸஹாபாக்கள் வந்து ஒன்றை முற்படுத்தி செய்துவிட்டேன் அல்லாஹ்வின் தூதரே என்று கேட்கும் போதெல்லாம் பறவாயில்லை என்றே நபி (ஸல்) அவர்கள் விடையழித்தார்கள்.
கல் எறிவது:- பத்தாம் நாள் எறியும் கற்களை காலை சூரிய உதயத்திலிருந்து ளுஹர் நேரத்துக்குள் எறிய வேண்டும். இந்த நேரத்திற்குள் எறிய முடியாதவர்கள் இதற்குப் பின்னும் எறியலாம்.
பத்தாம் நாள் ஒரு நபித்தோழர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! மாலையான பின்புதான் நான் கல் எறிந்தேன் என்றார், பறவாயில்லை என நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். (புகாரி)
எறியும் கல்லின் அளவு சுண்டு விரலால் வீசும் கல் அளவிற்கு இருக்க வேண்டும். அதை ஒவ்வவொரு கற்களாக எறிய வேண்டும். அல்லாஹு அக்பர் என்று சொல்லிக் கொண்டு எறிய வேண்டும். இதுதான் நபிவழியாகும்.
சுண்டு விரலால் வீசக்கூடிய கற்களைப் போன்று ஏழு கற்களை நபி (ஸல்) அவர்கள் வீசினார்கள். ஒவ்வொரு கற்களையும் விசும் போது தக்பீர் கூறினார்கள் என ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அபூதாவூத் , பைஹகி)
குர்பானி கொடுப்பது:- தமத்துஉ மற்றும் கிரான் முறைப்பிரகாரம் ஹஜ் செய்பவர்கள் கல் எறிந்ததற்குப் பிறகு குர்பானி கொடுக்க வேண்டும். அதாவது ஒட்டகம், மாடு, ஆடு இவைகளில் ஒன்றை அல்லாஹ்வுக்காக அறுப்பது. ஏழு பேர் சேர்ந்து ஒரு ஒட்டகத்தை அல்லது ஒரு மாட்டை அறுக்கலாம். ஆடு கொடுப்பதாக இருந்தால் ஒருவருக்கு ஒன்று மேனி கொடுக்க வேண்டும். இப்ராது முறையில் ஹஜ் செய்தவருக்கு குர்பானி கொடுக்கத் தேவையில்லை. குர்பானியை மினாவிலும் மக்காவின் எல்லைக்குள் எங்கும் கொடுக்கலாம்.
நான் இந்த இடத்தில்தான் குர்பானி கொடுத்தேன். மினாவில் எங்கும் குர்பானி கொடுக்கலாம். மக்காவின் தெருக்கள் எல்லாம் நடக்கும் பாதையும் குர்பானி கொடுக்கும் எடமும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், அபூதாவூத்)
குர்பானி இறச்சியிலிருந்து அதைக் கொடுத்தவர் உண்ணலாம்.
தலை முடி எடுப்பது:- குர்பானி கொடுத்த பின் தலை முடியை எடுக்க வேண்டும். (முடி எடுக்கும் முறை முன்னால் சொல்லப்பட்டுவிட்டது) முடியை எடுத்ததும் இஹ்ராமிலிருந்து நீங்கிக் கொள்ளலாம். அதாவது கணவன் மனைவி தொடர்பைத்தவிர இஹ்ராத்தினால் தடுக்கப் பட்டிருந்தவைகள் எல்லாம் ஆகுமாகிவிடும். தவாபுல் இபாலாவை (ஹஜ்ஜுடைய தவாபை) செய்துவிட்டால் கணவன் மனைவி உறவும் ஆகுமாகிவிடும்.
தவாபுல் இபாலா:- தலை முடி எடுத்த பின் தனது வழமையான ஆடையை அணிந்து கொண்டு தவாபுல் இபாலா செய்வதற்காக மக்கா செல்ல வேண்டும். தமத்துஆன முறையில் ஹஜ் செய்பவர்கள் தவாபுல் இபாலாவை முடித்துவிட்டு சஃயும் செய்ய வேண்டும். கிரான் மற்றும் இப்ராதான முறையில் ஹஜ் செய்பவர்கள் மக்கா வந்தவுடன் செய்த தவாபுல் குதூமுக்குப் பின் சஃயு செய்திருந்தால் இப்போது தவாபுல் இபாலா மாத்திரம் செய்தால் போதும், சஃயு செய்யத் தேவையில்லை. தவாபுல் குதூமுக்குப் பின் சஃயு செய்யவில்லையென்றால் இப்போது தவாபுல் இபாலாவுக்குப் பின் சஃயு செய்தே ஆக வேண்டும். தவாப் மற்றும் சஉயை முடித்ததும் மினா சென்று 11ம் இரவில் மினாவில் தங்குவது அவசியமாகும்.
துல் ஹஜ் பிறை 11ம் நாள்
11ம் நாள் ளுஹருடைய நேரம் வந்ததிலிருந்து சூரியன் மறைவதற்கு முன் மூன்று ஜம்ராக்களுக்கும் முறையே ஏழு கற்கள் வீதம் எறிய வேண்டும். முதலில் சிறிய ஜம்ராவிற்கும், இரண்டாவது நடு ஜம்ராவிற்கும், மூன்றாவது பெரிய ஜம்ராவிற்கும் எறிய வேண்டும். முதலாவது ஜம்ராவிற்கு கல் எறிந்த பின் சற்று முன் வலது பக்கம் சென்று கிப்லாவை முன்னோக்கி துஆச் செய்வது சுன்னத்தாகும். இரண்டாவது ஜம்ராவிற்கு கல் எறிந்த பின் சற்று முன் இடது பக்கம் சென்று கிப்லாவை முன்னோக்கி துஆச் செய்வது சுன்னத்தாகும். இதுவே நபிவழியாகும்.
துல் ஹஜ் பிறை 12ம் நாள்
12ம் இரவும் மினாவில் தங்குவது அவசியமாகும். 12ம் நாளும் 11ம் நாளைப் போன்று மூன்று ஜம்ராக்களுக்கும் ளுஹர் தொழுகையின் நேரத்திற்க்குப் பின் கல் எறிய வேண்டும். 12ம் நாளோடு ஹஜ்ஜுக் கடமையை முடித்துவிட்டுச் செல்ல விரும்புபவர்கள் சூரியன் மறைவதற்கு முன் மினா எல்லையை விட்டும் வெளியாகிவிட வேண்டும். 13ம் நாளும் மினாவில் தங்க விரும்புபவர்கள் 13ம் இரவும் மினாவில் தங்கிவிட்டு 13ம் நாள் ளுஹர் தொழுகையின் நேரத்திற்க்குப் பின் மூன்று ஜம்ராக்களும் கல் எறிந்தவிட்டு மக்கா செல்ல வேண்டும்.
தவாபுல் விதா
ஹஜ் கடமையை முடித்துவிட்டு தன்வீடு செல்ல விரும்புபவர்கள் கடைசியாக செய்யும் அமல் தவாபுல் விதாவாகும். தவாபுல் விதா என்பது கஃபத்துல்லாவிலிருந்து விடை பெற்றுச் செல்லும் தவாபாகும். அதுவே ஹஜ் செய்பவரின் கடைசி அமலாகும். தவாபுல் இபாலாவை முடித்த பெண் மாதவிடாய் அல்லது பிள்ளைப்பெற்றதினால் ஏற்பட்ட தொடக்கின் காரணமாக தவாபுல் விதாவை செய்ய முடியவில்லையென்றால் அப்பெண்ணுக்கு மாத்திரம் தவாபுல் விதாவை விடுவதற்கு அனுமதி உண்டு. அது அல்லாத மற்ற எல்லா ஹாஜிகளுக்கும் அதை நிறைவேற்றுவது அவசியமாகும். மக்காவிலுள்ள எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு கடைசியாக தவாபுல் விதாகைச் செய்ய வேண்டும். தவாபுல் விதா முடிந்ததும் பிரயாணத்தை ஆரம்பிக்க வேண்டும். இத்துடன் ஹஜ் கடமை முடிவடைகின்றது. அல்லாஹ் நம் அனைவரின் ஹஜ் கடமைகளை ஏற்று அன்று பிறந்த பாலகரைப் போன்று தன் தாயகம் திரும்ப நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக.
இஹ்ராம் அணிந்தவர் தவிர்க்க வேண்டியவைகள்
உடலிலுள்ள முடியையோ, நகங்களையோ எடுப்பது. உடல், ஆடைகள், உணவு, குடிபானம் ஆகியவைகளில் மணம் பூசுவது. பூமியிலுள்ள உயிர்ப்பிராணிகளை கொல்லுவது, வேட்டடையாடுவது, விரட்டுவது. இஹ்ராமிலும், இஹ்ராமில்லாத நிலையிலும் ஹறமின் எல்லைக்குள் உள்ள மரம் செடிகளை வெட்டுதல். தவறி விடப்பட்ட பொருட்களை எடுப்பது, உரியவர்களிடம் கொடுக்க முடியுமாக இருந்தால் மாத்திரம் எடுக்கலாம். இஹ்ராமுடைய நிலையில் தனக்காகவோ அல்லது பிறருக்காகவோ திருமணம் பற்றி பேசுதல். இன்னும் பெண்ணுடன் உடலுறவு கொள்ளுதல், காம உணர்வோடு கலந்துரையாடுதல்.
ஆண்கள் மீது மாத்திரம் விலக்கப்பட்டவைகள்
தலையை துணி போன்றவைகளால் மறைப்பது, தையல் போடப்பட்ட எந்த உடைகளையும் உடம்பில் எந்த இடத்திலாவது அணிவது.
பெண்கள் மீது மாத்திரம் விலக்கப்பட்டவைகள்
இஹ்ராமுடைய நிலையில் பெண்கள் கையுறை அணிதல். முகத்தை புர்காவால் மூடுதல் கூடாது. ஆனால் அன்னிய ஆண்களுக்கு முன் இருக்கும் போது முகத்தை மூடிக்கொள்ள வேண்டும்.
(ஹஜ் செய்யும் போது) கெட்ட செயல்களில் ஈடுபடாமலும், தன் மனைவியோடு இல்லற உறவில் ஈடுபடாமலும் யார் ஹஜ் செய்கின்றாரோ அவர் அன்று பிறந்த பாலகரைப்போன்று (தன் தாயகம்) திரும்பிச் செல்வார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

, ,