குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

29.12.11

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அன்னை சௌதா பின் சமாஆ (ரலி)
அன்னை சௌதா பின் சமாஆ (ரலி)

கதீஜா (ரலி) அவர்களின் மரணத்தை அடுத்து இறைத்தூதர் (ஸல்) அவர்களது வாழ்க்கைத் துணைவியாக வாழ்க்கைப்பட்ட இறைநம்பிக்கையாளர்களின் தாய்மார்களின் வரிசையில், சௌதா பின் சமாஆ (ரலி) அவர்கள் இருந்தார்கள்.
இறைநம்பிக்கை, கீழ்ப்படிதல் மற்றும் அற்பணம் ஆகியவற்றில் தாயவர்கள் மிகச் சிறந்த இடத்தை வகித்தார்கள். இவர்களது எளிமை

மற்றும் சுயநலமில்லாத தயாள குணம் ஆகிய நற்குணங்கள் ஆயிஷா (ரலி) அவர்களது மனதை மிகவும் கவர்ந்ததாக இருந்தது. ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தைத் தழுவிய மக்களில் ஒருவராகவும், இன்னும் இருமுறை ஹிஜ்ரத் செய்த பாக்கியத்தைப் பெற்றவர்களுமாவார்கள். ஒருமுறை அபிசீனியாவிற்கும் இன்னுமொரு முறை மதீனாவிற்கும் ஹிஜ்ரத் சென்றார்கள். இவர்களது வாழ்வு, உலகத்துப் பெண்மணிகளுக்கோர் முன்னுதாரணமாகும்.

சௌதா பின் சமாஆ (ரலி) அவர்களது தாயார் குறைஷிகளின் பனூ நஜ்ஜார் என்ற குலத்தைச் சார்ந்தவர்கள், தந்தையும் குறைஷிக் குலத்தில் பனூ ஆமிர் பின் லூய் என்ற கோத்திரத்தைச் சார்ந்தவராவார். சௌதா பின் சமாஆ (ரலி) அவர்கள் முதலில் சக்ரான் பின் அமர் என்பவரையும், இந்த முதல் கணவரது மரணத்தை அடுத்து, இறைத்தூதர் (ஸல்) அவர்களையும் மணந்தார்கள். இவருடைய முதல் கணவரது சகோதரர்களான சுஹைல், சஹல், ஹதீப் மற்றும் சலீத் ஆகியோர்கள் ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டவர்களின் பட்டியலில் உள்ள மிகச் சிறப்புப் பெற்ற நன்மக்களாவார்கள். இன்னும் இவர்கள் அபிசீனியாவிற்குச் சென்ற ஹிஜ்ரத்தின் இரண்டாவது குழுவிலும் அடுத்து வந்த மதீனா ஹிஜ்ரத்திலும் இடம் பெற்ற சிறப்பிற்குரியவர்களுமாவார்கள். அபீசீனியாவில் வைத்து, அன்னையவர்களுக்கு அப்துர் ரஹ்மான் என்ற ஆண் மகவும் பிறந்தது. மக்காவிற்குத் திரும்புவதற்கு முன் ஒரு குறிப்பிட்ட கால அளவு அபிசீனியாவில் அன்னையவர்கள் தங்கியிருந்தார்கள்.

ஒருநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அன்னையவர்களது இல்லத்தில் நுழைந்து, அன்னையின் கழுத்தைப் பற்றிப் பிடிப்பது போலக் கனவு கண்டார்கள். தான் கண்ட கனவினைத் தனது கணவரிடம் எடுத்துரைத்த பொழுது, நான் இறந்தவுடன் நீ இறைத்தூதர் (ஸல்) அவர்களை மணந்து கொள்வாய் என்று அந்த கனவுக்கு, அவரது கணவர் விளக்கமளித்தார்கள். இன்னுமொரு சமயத்தில், அவர்களது மடியில் நிலவு வந்து இறங்குவது போன்றும் கனவு கண்டார்கள். இதனையும் தனது கணவர் சக்ரான் (ரலி) அவர்களிடம் தெரிவித்த பொழுது, மேலே உள்ள விளக்கத்தையே மீண்டும் கூறினார்கள். இன்னும் எனது மரணம் நெருங்கி விட்டது, எனது மரணத்திற்குப் பின் நீங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களை மணந்து கொள்ளுங்கள் என்று கூறிய சில நாட்களிலேயே நோய்வாய்ப்பட்டு மரணத்தையும் தழுவினார்கள். தனது கணவர் இறந்தவுடன், வாழ்க்கையில் எந்த அர்த்தமுமில்லாமல் இருப்பதாக உணர்ந்து, அன்னையவர்கள் மிகவும் கவலையில் தோய்ந்து போனார்கள்.

அன்னையவர்களின் தோழியர்களில் கவ்லா பின்த் ஹகீம் (ரலி) அவர்கள் மிகச் சிறப்புப் பெற்றவர்கள், இவர்கள் உத்மான் பின் மத்ஆன்(ரலி) அவர்களது தாயாருமாவார். ஒருநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சந்திக்கச் சென்ற கவ்லா (ரலி) அவர்கள், கணவரை இழந்து நான்கு பெண் பிள்ளைகளையும் வைத்துக் கொண்டு தனிமையில் மிகவும் சிரமப்படும் அன்னை சௌதா (ரலி) அவர்களது அவல நிலையையும், இன்னும் கதீஜா (ரலி) அவர்கள் இறந்த பின் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அடைந்திருக்கும் துன்ப நிலையையும் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் எடுத்துக் கூறினார்கள் கவ்லா (ரலி) அவர்கள். அப்பொழுது, கதீஜா (ரலி) அவர்களைப் பற்றி கவ்லா (ரலி) அவர்கள் சொன்னவற்றை ஆமோதித்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ஆம்! நீங்கள் சொன்னது போலவே அவர்கள் மிகவும் சிறந்த பெண்மணி தான்.

இன்னும் நீங்கள் கதீஜா (ரலி) அவர்களது நினைவிலேயே இருந்தால் என்னாவது? நீங்கள் திருமணம் முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் கவ்லா (ரலி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆலோசனை கூறினார்கள்.

என்னை யார் மணந்து கொள்வார்கள், இன்னும் எனது மக்களையும் என்னைப் போலவே யார் கவனித்துக் கொள்வார்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கேட்டார்கள்.

அந்தக் கவலையை நீங்கள் விடுங்கள், நீங்கள் திருமணம் முடித்துக் கொள்ளச் சம்மதித்தீர்கள் என்று சொன்னால், நான் தேர்ந்தெடுத்து வைத்திருக்கும் நபரை அணுகி விபரத்தைக் கேட்டறிந்து அவர்களது சம்மதத்தையும் பெற்றுக் கொண்டு திரும்புகின்றேன் என்று கவ்லா (ரலி) அவர்கள் கூறினார்கள். இன்னும் அவர்கள் தேர்ந்தெடுத்து வைத்திருக்கின்ற நபரைப் பற்றியும் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கூறிய கவ்லா (ரலி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களது சம்மதத்தையும் பெற்றுக் கொண்டார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களது சம்மதத்தைப் பெற்றுக் கொண்ட கவ்லா (ரலி) அவர்கள், நேரே சௌதா (ரலி) அவர்களிடம் வருகின்றார்கள்.

சௌதாவே! உங்களுக்கு நான் ஒரு சந்தோஷமான செய்தியைக் கொண்டு வந்திருக்கின்றேன் என்று சொன்ன கவ்லா (ரலி) அவர்கள், அந்தச் சந்தோஷமான செய்தி என்னவென்று அவர்களுக்குச் சொன்னவுடன், அதனை ஏற்றுக் கொண்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்களைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதம் தெரிவித்த அவர்கள், எதற்கும் நான் என்னுடைய தந்தையிடம் கலந்தாலோசனை செய்து என்னுடைய இறுதி முடிவைச் சொல்கின்றேன் என்று கூறினார்கள். நிச்சயமாக இந்தச் செய்தியைக் கேட்டவுடன், சந்தோஷப்படக் கூடிய முதல் மனிதர் அவராகத் தான் இருக்க முடியும், ஆம்! விதவையான தன்னுடைய மகள் தன்னுடைய உயிரை விடவும் மேலான தன்னுடைய தோழர் இறைத்தூதர் (ஸல்) அவர்களை அல்லவா மணமுடிக்கப் போகின்றார்.

சௌதா (ரலி) அவர்களது சம்மதத்தையும் பெற்றுக் கொண்ட கவ்லா (ரலி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று இந்த சந்தோஷமான செய்தியைக் தெரிவிக்கின்றார்கள். இரு பக்கமும் சம்மதம் பெற்றுக் கொண்டவுடன், மிக விரைவாகவே திருமண வேலைகள் நடந்தன. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அன்னை சௌதா (ரலி) அவர்களுக்கு 400 திர்ஹம்களை மஹராகக் கொடுத்தார்கள்.

இந்தத் திருமண நிகழ்ச்சியை சந்தோஷமாகக் கொண்டாட வேண்டிய அன்னையின் சகோதரன் அப்துல்லா என்பவர், ஏதோ நடக்கக் கூடாத ஒன்று நடந்து விட்டதைப் போல, தன்னுடைய தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டு, அந்த அறியாமைக் காலப் பழக்கத்தை அரங்கேற்றிக் கொண்டிருந்தார். பின்னாளில், அவர் இஸ்லாத்தைத் தழுவிய பின்பு.., தான் செய்த அந்த மூடப்பழக்கத்தை எண்ணி எண்ணி அவர் வருந்தியும் இருக்கின்றார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தமக்கையை மணமுடித்ததன் மூலம், தங்களைக் கௌரவப்படுத்தி விட்டதாக இப்பொழுது உணர ஆரம்பித்தார்.

ழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூ

இப்பொழுது, திருமண முடிந்து விட்ட நிலையில் சௌதா (ரலி) அவர்கள் கதீஜா (ரலி) அவர்கள் வாழ்ந்த வீட்டிற்கு குடித்தனம் வந்தார்கள். அங்கு தான் கதீஜா (ரலி) அவர்களுக்குப் பிறந்த மகள்களான உம்மு குல்தூம் (ரலி), ஃபாத்திமா (ரலி) ஆகியோரும் இருந்தார்கள். தனது முதல் கணவர் இறந்ததன் பின் இப்பொழுது தான் தன்னுடைய வாழ்வுக்கு ஒரு அர்த்தம் கிடைத்திருப்பதாக உணர்ந்தார்கள், பாதுகாப்பை அனுபவித்தார்கள். மேலும் தன்னுடைய அபிசீனிய ஹிஜ்ரத்தின் பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மகள்களில் ஒருவரான ருக்கையா (ரலி), அவர்களது கணவர் உதுமான் பின் அஃப்ஃபான் (ரலி) அவர்களைப் பற்றியும், அந்த கடந்த கால அனுபவங்களைப் பற்றியும், இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தனது மகள் பெற்ற அந்த கஷ்டமாக வாழ்வை நினைத்து, மிகவும் ஆவலுடன் அந்த அனுபவங்களை அன்னையிடம் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

ஒரு சமயம்! இறைத்தூதர் (ஸல்) அவர்களது முதல் மனைவியான கதீஜா (ரலி) அவர்கள் இறந்து விட்ட நேரம் அது! இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மகள்களில் ஒருவரான ருக்கையா (ரலி) அவர்கள், ஹிஜ்ரத்திலிருந்து – அபிசீனியாவிலிருந்து திரும்பி மக்காவிற்கு வருகின்றார்கள். தனது உடன் பிறந்த தங்கையை எதிர்கொண்டு இருவேறு நிலைகளில் ஃபாத்திமா (ரலி) அவர்களும், உம்மு குல்தூம் (ரலி) அவர்களும் வரவேற்கின்றார்கள். மிக நீண்ட காலங்கள் கழித்து தனது உடன் பிறந்தாளைக் காண்கின்ற சந்தோஷம், அதே நேரத்தில் தங்களது பாசத்திற்குரிய தாயை இழந்த துயரத்துடன், அந்த சோகமான நிகழ்வுக்குப் பின் முதன் முதலாக இப்பொழுது தான் ருக்கையா (ரலி) அவர்களைச் சந்திக்கவும் செய்கின்றார்கள்.

சௌதா (ரலி) அவர்கள் வாசலுக்கு வந்து, ருக்கையா (ரலி) அவர்களை ஆறத் தழுவி வரவேற்றார்கள். ருக்கையா (ரலி) அவர்கள் அபிசீனியாவில் இருந்த பொழுது நினைத்துப் பார்த்திராத சம்பவம் ஒன்று தங்களது வாழ்வில் நடந்திருப்பதை இப்பொழுது தனது கண்களால் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அது தான் சௌதா (ரலி) அவர்களைத் தனது தாயாகவும், தான் அவர்களது மகளாகவும் மாறி இருப்பதை எண்ணி எண்ணி சந்தோசமடைந்தார்கள் ருக்கையா (ரலி) அவர்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு இந்த நாள் மிகவும் சந்தோஷமான, தனது உள்ளத்தை நிறைத்து விட்ட காட்சியாக அந்தக் காட்சி அமைந்து விட்டிருந்தது.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது மகள் மூலமும், மருமகன் உதுமான் (ரலி) அவர்கள் மூலமும் நஜ்ஜாஸி மன்னனிடம் தஞ்சம் புகுந்திருக்கும் தனது தோழர்களின் நிலை பற்றியும், அங்கு என்னென்ன நடந்து கொண்டிருக்கின்ற என்பது பற்றியும் கேட்டறிந்து கொண்டார்கள்.

ஆனால் மக்காவின் நிலை மிகவும் வேகமாக மோசமடைந்து கொண்டிருந்தது. குறைஷிகள் தங்களது கொடூரமான தாக்குதலை இறைத்தோழர்கள் மீதும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீதும் மிகவும் கடுமையாகக் கட்டவிழ்த்து விட்டிருந்தார்கள். ஒவ்வொரு நாளும் புதுப் புது செய்திகள் மக்காவை நிறைத்துக் கொண்டிருந்தன. அந்தச் செய்திகளில் இறைத்தோழர்களை எவ்வாறெல்லாம் விதவிதமாக மக்கத்துக் குறைஷிகள் கொடுமைப்படுத்தியும், சித்தரவதைகள் செய்து கொண்டிருந்தார்கள் என்பதையும் உரத்துச் சொல்லிக் கொண்டிருந்தது. இப்பொழுது, இந்த அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகள், கொடுமைகள், சித்தரவதைகள் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் பெற்றுக் கொள்ள வேண்டுமென்றால், ஹிஜ்ரத் செய்வதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை.

இந்த நிலையில், அத்தனை சூழ்நிலைகளையும் எடைபோட்டுப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், இந்தக் கொடுமைகளிலிருந்து தனது தோழர்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால், தனது தோழர்களுக்கு ஹிஜ்ரத் செய்யுமாறு அறிவுறுத்துவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை, எனவே, இப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்களை மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் செய்யுமாறு உத்தரவிட்டார்கள்.

சில நாட்களிலேயே இறைத்தூதர் (ஸல்) அவர்களையும் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து செல்லுமாறு அல்லாஹ் உத்தரவிட்டான். இறைவனின் கட்டளை கிடைத்ததும், தனது உற்ற தோழர் நன்னம்பிக்கையாளர் அபுபக்கர் (ரலி) அவர்களுடன் தனது ஹிஜ்ரத் பயணத்தை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அமைத்துக் கொண்டார்கள். மதீனாவை அடைந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அபூ அய்யூப் அல் அன்சாரி (ரலி) அவர்களது வீட்டில் தங்கினார்கள். மதீனாவில் தனது இருப்பிடத்தைக் அமைத்துக் கொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தனது ஆருயிர்த் தோழர்களான ஜைத் பின் ஹாரிதா (ரலி) மற்றும் அபூ ராஃபிஆ (ரலி) ஆகியோர்களை அழைத்து, அவர்களிடம் சில ஒட்டகங்களையும், 500 திர்ஹம்களையும் கொடுத்து, மக்காவில் இருக்கும் தனது குடும்பத்தவர்களை அழைத்து வரும்படி பணித்தார்கள்.

அவர்கள் எப்பொழுது மக்காவை அடைந்தார்களோ, உடனேயே இறைத்தூதர் (ஸல்) அவர்களது குடும்பத்தவர்களான அவர்களது மனைவி சௌதா (ரலி), மற்றும் மகள்களான ருக்கையா (ரலி), உம்மு குல்தூம் (ரலி), ஃபாத்திமா (ரலி) ஆகியோர்களையும், இன்னும் ஜைத் பின் ஹாரிதா (ரலி) அவர்களது மனைவியான உம்மு ஐமன் (ரலி) அவர்களது மகன் உஸாமா (ரலி) ஆகியோர்களையும் இந்தப் பயணத்தில் இணைத்துக் கொண்டு, மதீனாவை நோக்கி பயணமானார்கள். இவர்கள் அனைவரும் மதீனாவை அடைந்தவுடன், அனைவரையும் நபித்தோழர் நுஃமான் அன்சாரி (ரலி) அவர்களது வீட்டில் தங்க வைத்தார்கள். மதீனாவில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த ஆரம்ப கால கட்டத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ஆயிஷா (ரலி) அவர்களையும் மணந்து கொண்டார்கள்.

பின்பு, அன்னை ஹஃப்ஸா பின் உமர் (ரலி), ஜைனப் பின் ஜஹஸ் (ரலி), உம்மு சல்மா (ரலி) இன்னும் மற்ற அன்னையர்களையும் மணந்து கொண்டார்கள்.

இப்பொழுது மதீனா நகரம் மிகவும் வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது. அரபுத் தீபகற்பத்தில் மதீனா சிறப்புக்குரிய நகரமாக, அதிலும் முஸ்லிம்களின் தலைமைப் பீடமாக வளர்ந்து கொண்டிருந்தது. வானவர் தூதர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் அடிக்கடி வந்து சென்று போய்க் கொண்டிருக்கின்ற தளமாக மதீனா விளங்கிக் கொண்டிருந்தது.

நாட்கள் வேகமாக நகர்ந்ததில், அன்னை சௌதா (ரலி) அவர்களுக்கு மிகவும் அதிக வயதாகி முதுமை அடைந்து கொண்டிருந்தார்கள். இப்பொழுது, தனக்கு அதிக முதுமை ஆகி விட்டதன் காரணமாக எங்கே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தன்னை மணவிலக்குச் செய்து விடுவார்களோ என்ற பயமும் அதிகரித்தது. எனவே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தன்னுடன் தங்கியிருக்கக் கூடிய தனக்காக ஒதுக்கப்பட்ட நாளை, ஆயிஷா (ரலி) அவர்களுக்குக் கொடுத்தார்கள். இந்த நேரத்தில் அன்னையைக் குறித்து இறைவன் ஒரு வசனத்தை இறக்கியருளினான் :

ஒரு பெண் தன் கணவன் தன்னை வெறுத்து விடுவான் என்றோ அல்லது புறக்கணித்து விடுவான் என்றோ பயந்தால், அவர்கள் இருவரும் தங்களுக்குள் (சமாதானமான) ஒரு முடிவைச் செய்து கொண்டால் அவ்விருவர் மீது குற்றமில்லை அத்தகைய சமாதானமே மேலானது (4:128)

இப்பொழுது முன்னைக் காட்டிலும் ஆயிஷா (ரலி) அவர்கள் சௌதா (ரலி) அவர்களுடன் மிகவும் நெருக்கமாகி விட்டார்கள். அன்னை சௌதா (ரலி) அவர்களின் இதயம் மிகவும் சுத்தமானது, அதில் போட்டிகளுக்கோ பொறாமைகளுக்கோ இடம் கிடையாது.

சௌதா (ரலி) அவர்கள் மிகவும் உயரமாக வளர்ந்திருப்பார்கள், இன்னும் ஆரோக்கியமான நகைச்சுவைக் குணமுடையவர்கள். ஒருமுறை சௌதா (ரலி) அவர்கள் எவ்வாறு இரவுத் தொழுகையை நிறைவேற்றினார்கள் என்பதை, இப்னு சஅத் (ரலி) அவர்கள் நமக்குக் கற்றுத் தருகின்றார்கள்.

மிக நீண்ட அந்த இரவுத் தொழுகையின் போது இறைவன் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக தனது நாடி நரம்புகள் யாவும் புடைத்து, சுவாசக் குழாயின் நரம்புகள் வெடித்து எங்கே மூக்கின் வழியாக இரத்தம் வழிந்தோடி விடுமோ என்ற அளவுக்கு தான் உணர்ந்ததாக அன்னையவர்கள் மறுநாள் காலையில் இப்னு சஅத் (ரலி) அவர்களிடம் தெரிவித்தார்கள்.

அவர்களது உருவத் தோற்றம் இறைத்தூதர் (ஸல்) அவர்களை குதூகலத்தில் ஆழ்த்தி, சிரிப்பை வரவழைத்து விடும். அன்னையவர்கள் மிகவும் எளிமையான, பழகுவதற்கு பண்பான குணமுடையவர்கள்.

இயற்கையிலேயே அன்னையவர்கள் மிகவும் மெதுவாக ஆடி அசைந்து நடக்கக் கூடியவர்கள். இதனால் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு ஹஜ்ஜில் கலந்து கொண்டிருந்த பொழுது, கூட்ட நெரிசலிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, முஸ்தலிபாவிலிருந்து மிக விரைவாக மினாவுக்குச் சென்று கல்லெறிவதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சிறப்பு அனுமதியைப் பெற்றார்கள்.

தஜ்ஜாலைப் பற்றி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் முதன்முதலாக அறிந்து கொண்டு, கதிகலங்கியவர் அன்னையவர்கள் தான். அன்னையவர்களின் உடலமைப்பையும், எளிதில் உணர்ச்சி வசப்படும் தன்மையையும் வைத்து, மற்றவர்கள் அவரை உணர்ச்சி வசப் பட வைத்து, பின்பு அதனையிட்டு கேலி செய்து சிரித்து மகிழ்வார்கள்.

ஒருமுறை ஆயிஷா (ரலி) அவர்களும் அன்னை சௌதா (ரலி) அவர்களும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் அன்றைய தினம் ஒரு சிறப்பு உணவைத் தயாரித்து பின்னவரான சௌதா (ரலி) அவர்களுக்குக் கொடுக்க வந்தார்கள். ஆனால் அன்னையவர்கள் தனக்கு வேண்டாம் என மறுத்துக் கொண்டிருந்தார்கள். ஆயிஷா (ரலி) அவர்களோ அப்பொழுது மிகவும் இளமைத்துடிப்புடன் உள்ள சிறுமியாகத் தான் இருந்தார்கள். எனவே, தான் செய்த அந்த உணவை கண்டிப்பாகச் சாப்பிட்டே ஆக வேண்டும் என அடம் பிடித்து, வலுக்கட்டாயமாக அதனை அன்னையர்வர்களுக்கு ஊட்டி விட முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். அன்னையவர்கள் மறுக்க, ஆயிஷா (ரலி) அவர்கள் வலுக்கட்டாயமாக முயற்சித்துக் கொண்டிருக்க, இறுதியில் அந்த உணவு அன்னையவர்களின் முகத்தில் கொட்டி விட்டது.

இன்றைக்கு அக்கா தங்கைகளுக்கிடையே இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்திருக்குமென்று சொன்னால் அன்றைக்கு வீடே இரண்டு பட்டுப் போயிருக்கும். ஆனால் சக்களத்திகளாக அவர்கள் இருந்தும், எந்தவித கெட்ட எண்ணமோ, பொறாமைக் குணங்களோ அவர்களிடம் இல்லாமல், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்து சந்தோஷமான வாழ்வை வாழ்ந்தார்கள். இந்தக் கலவரங்கள் நடந்து கொண்டிருக்கும் பொழுது, பாங்கு சப்தம் கேட்டு விட்டால் தன்னுடைய குடும்பத்தவர்களுடன் இருந்து கொண்டிருக்கிறோம் என்ற பிரக்ஞையே இல்லாத அளவுக்கு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விறுவிறு என்று பள்ளிவாசலை நோக்கி நடக்க ஆரம்பித்து விடுவார்கள்.

பத்ர் யுத்தத்தின் பொழுது நடந்த கீழ்க்கண்ட இந்த நிகழ்ச்சி அத்தபரி, காமில் - இப்னு அதீர் மற்றும் சீறா இப்னு ஹிஸாம் ஆகியவற்றிலும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது

அதாவது, முஸ்லிம் படை பத்ர் யுத்தத்தில் வெற்றி பெற்றுத் திரும்பிக் கொண்டிருக்கின்றது. போரில் பிடிபட்ட எதிரிகளில் அன்னையவர்களின் முதல் கணவராக சக்ரான் பின் அம்ர் (ரலி) அவர்களது சகோதரர் சுஹைல் பின் அம்ர் அவர்களும் ஒருவராக இருந்தார். பிடிபட்ட எதிரிகளை கைது செய்து மதீனாவுக்கு அழைத்து வந்து கொண்டிருந்தார்கள். அவ்வாறு அழைத்து வரப்பட்ட சுஹைல் பின் அம்ர் அவர்கள், மாலிக் பின் தாக்தம் (ரலி) அவர்களது பொறுப்பில் வந்து கொண்டிருந்தார்கள்.

அந்த நிலையில், தானாக தன்னை விடுவித்துக் கொண்டு, சுஹைல் தப்பித்து விட்டார். இந்த விஷயம் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியவுடன், முழு இராணுவப் படையையும் நிற்கச் சொல்லி விட்டு, தப்பித்துப் போன அந்தக் கைதியைப் பிடித்து வரும் வரை இராணுவம் இந்த இடத்தை விட்டு நகரக் கூடாது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உத்தரவிடுகின்றார்கள். இந்த உத்தரவைப் பெற்றுக் கொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்களது தோழர்கள், தப்பித்துப் போனவரைத் தேடி அலைந்து, இறுதியில் ஒரு மரத்திற்குப் பின் ஒளிந்து கொண்டிருந்த சுஹைiலைக் கைது செய்து, அவரது கைகளைக் கட்டி, அதனை கழுத்துடன் பிணைத்து இழுத்து வந்தார்கள். இந்த நிலையிலேயே மதீனாவிற்குள்ளும் அழைத்து வந்தார்கள்.

இந்தக் கோரக் காட்சியைப் பார்த்த அன்னையவர்கள், சுஹைலினுடைய அந்த இழிநிலையைப் பார்த்த அன்னையவர்கள் உணர்ச்சி வசப்பட்டவர்களாக, இந்த இழிநிலையைப் பார்த்துக் கொண்டு உயிர் வாழ்வதைக் காட்டிலும் நான் கண்ணியமான முறையில் இறந்திருக்க வேண்டுமே! அதுவே மேலானது, அவமானம்..! என்று வாய் தவறிக் கூற ஆரம்பித்து விட்டார்கள். இவர்கள் கூறிய இந்த வார்த்தைகளை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் செவிமடுக்கக் கூடும் என்பதை அன்னையவர்கள் அறியவில்லை. அன்னையவர்கள் கூறிய இந்த வார்த்தை இறைத்தூதர் (ஸல்) அவர்களை மிகவும் புண்படுத்தி விட்டது.

நீங்கள் என்ன வார்த்தை சொல்லி விட்டீர்கள். நீங்கள் கூறிய இந்த வார்த்தை அல்லாஹ்வின் மற்றும் இறைத்தூதராகிய என்னுடைய எதிரியுமான இவர்களை உசுப்பேத்தி விடக் கூடியதாக இருக்கின்றதே! இன்னும் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் எதிர்த்துப் போர் புரிகின்ற எதிரிகள் எவ்வாறு கண்ணியமான முறையில் மரணமடைய முடியும்?

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இந்தக் கேள்வி அன்னையவர்களை வெட்கப்படச் செய்தது, உடனே அவர்கள் தன்னுடைய அந்த செயலுக்காக வருத்தம் தெரிவித்தார்கள். மன்னிப்புக் கோரினார்கள். என்னுடைய இந்த வார்த்தை இவ்வளவு மோசமானதாக இருக்கும் என நினைக்கவில்லை, கைதிகள் கொண்டு வரப் பட்ட அந்தக் காட்சியைப் பார்த்தவுடன், என்னுடைய மூளையில் உதித்ததை நான் கொட்டி விட்டேன் என்று வருத்தப்பட்டுக் கூறினார்கள். இன்னும் நான் கூறியது இறைமார்க்கத்திற்கு எந்த வகையிலாவது பாதகமாக இருக்குமென்று சொன்னால், இன்னும் அல்லாஹ்வினதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களதும் உத்தரவுக்கு நான் கட்டுப்படுகின்றேன், அதாவது என்ன தண்டனை கொடுத்தாலும் அதனை நான் ஏற்கத் தயாராக இருக்கின்றேன் என்று கூறி, தனது பணிவையும், கீழ்ப்படிதலையும் வெளிப்படுத்திக் காட்டினார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்தவர்களாக, பிடிபட்ட கைதிகளை நல்ல விதமாக நடத்தும்படி உத்தர விட்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களது இந்த உத்தரவைச் செவி மடுத்த தோழர்கள், அது நிமிடம் முதல் கைதிகளுக்கு உணவு பரிமாறி விட்டுத் தான், அவர்கள் சாப்பிட ஆரம்பித்தார்கள். நபித்தோழர்களது இந்த பண்பாடான செயல்களால், அதனால் கவரப்பட்டு பல இறைநிராகரிப்பாளர்கள் இஸ்லாத்தினுள் தங்களை இணைத்துக் கொண்டார்கள். அவ்வாறு இஸ்லாத்தில் இணைந்து கொண்டவர்களில் சுஹைல் (ரலி) அவர்களும் ஒருவராவார்கள்.

ழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூ

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இறுதி ஹஜ் முடிந்தவுடன், இனிமேல் இந்த ஹஜ்ஜுக்குப் பின் நீங்கள் உங்களது இல்லங்களிலேயே தங்கி இருங்கள், இது அல்லாஹ்வினுடைய கட்டளை என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது மனைவிமார்களை நோக்கிக் கூறினார்கள்.

(நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; (33:33)

அதன் பின் அன்னையவர்களும், இன்னும் ஜைனப் பின்த் ஜஹ்ஸ் (ரலி) அவர்களும் இறைத்தூதர் (ஸல்) அவர்களது மரணத்திற்குப் பின்னால், எங்கும் பயணம் செய்ததில்;லை, மதீனாவிலேயே தங்கியிருந்தார்கள். நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜும் செய்தாகி விட்டது, உம்ராவும் செய்தாகி விட்டது, இறைத்தூதர் (ஸல்) அவர்களது கட்டளைக்கு ஏற்ப நாங்கள் இனி எங்கும் பயணம் செல்ல மாட்டோம், வீட்டிலேயே தங்கியிருந்து, இறைத்தூதர் (ஸல்) அவர்களது கட்டளைக்குக் கீழ்ப்படிய விரும்புகின்றோம் என்று கூறினார்கள்.

இன்னும் சௌதா (ரலி) அவர்கள் மிகவும் தயாள குணம் படைத்தவர்களாகவும் விளங்கினார்கள். ஒருமுறை உமர்(ரலி) அவர்களது ஆட்சிக் காலப் பிரிவில், உமர் (ரலி) அவர்கள் அன்னையவர்களுக்கு ஒரு பை நிறைய திர்ஹம்களைக் கொடுத்தனுப்பினார்கள். அந்தப் பையில் உள்ளவை திர்ஹம் என்பதை அறிந்த மாத்திரத்திலேயே, இது என்ன பேரீத்தம் பழம் நிறைக்கப்பட்ட பையைப் போல உள்ளது எனக் கூறியவர்களாக, அந்தப் பையில் உள்ள அனைத்து திர்ஹம்களையும் தானமாக ஏழைகளுக்கும் இன்னும் தேவையுடைய மக்களுக்கு வழங்கி விட்டார்கள்.

இமாம் தஹபீ அவர்களது கூற்றுப்படி, அன்னையின் பெயரால் ஐந்து ஹதீஸுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆடு ஒன்று இறந்து விட்டபின், அந்த ஆட்டின் தோலை உரித்து, அதனைப் பதனிட்டு எவ்வாறு பயன்படுத்தினோம் என்று அன்னையவர்கள் அறிவிப்புச் செய்த அந்த ஹதீஸின் மூலமாக, இறந்த ஆட்டினுடைய தோலைப் பயன்படுத்தலாம், அனுமதிக்கப்பட்டது என்பதை நாம் அறிந்து கொள்ள முடிந்தது.

இன்னுமொரு ஹதீஸ் அன்னையவர்களின் பெயரால் இமாம் அஹமது அவர்கள் தனது முஸ்னதில் பதிவு செய்திருக்கின்றார்கள். ஒருமுறை ஒரு மனிதர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, நான் வயதான எனது தகப்பனாருக்காக ஹஜ்ஜுச் செய்யலாமா? என்று கேட்டு விட்டு, இன்னும் அவர் அதன் கிரியைகளைச் செய்யச் சக்தி பெறவே மாட்டார் என்றும் கூறினார்.

இதைக் கேட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், உனது தந்தையின் கடனை அடைப்பதும், இன்னும் அதுபோல உள்ளவற்றையும் அடைப்பது உன்மீது கடமையாக இருக்குமென்று சொன்னால், இதுவும் அது போல ஏற்றுக் கொள்ளத்தக்கதே என்று கூறினார்கள். ஆம்! அவ்வாறு (கடனை) அடைப்பதும் என்மீது உள்ளதே என்றும் கூறினார். பின்னர், அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், கருணையுடையவனாகவும் இருக்கின்றான், நீங்கள் முதலில் உங்களுக்காக ஹஜ்ஜுச் செய்து கொள்ளுங்கள், பின்னர் உங்களது தகப்பனாருக்காக ஹஜ்ஜுச் செய்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்ததன் பின்பு வந்த கலீபாக்கள் அத்தனை பேரும், இறைத்தூதர் (ஸல்) அவர்களது மனைவிமார்கள் மீது அளப்பரிய மரியாதை செலுத்தி, அன்னையவர்களது நலன்களில் அதிகக் கவனம் செலுத்தினார்கள். இன்னும் இறைநம்பிக்கையாளர்களின் தாய்மார்களான அவர்களை பாதுகாப்பதும், கண்ணியப்படுத்துவதும் தம் மீது உள்ள கடமையாகக் கருதினார்கள்.

சௌதா (ரலி) அவர்கள், தனது தள்ளாத முதுமை வரையிலும், அதவாது 80 வயது வரை வாழ்ந்தார்கள். உமர் (ரலி) அவர்களது ஆட்சிக் காலத்தின் பொழுது அன்னையவர்கள் இறையடி சேர்ந்தார்கள், அவர்களது உடல் ஜன்னத்துல் பக்கீ யில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவர்கள் தான் அல்லாஹ் சூரா அல் பஜ்ர் – ல், இறைநம்பிக்கையுடன் வாழ்ந்து மறைந்த உத்தமர்களான அந்த நன்னம்பிக்கையாளர்களைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகின்றான் :

(ஆனால், அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே! நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக. நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக. மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்). (89:27-30)

, ,