குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

25.12.11

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

நற்குணங்கள்
நற்குணங்கள்

குணங்களின் முக்கியத்துவம்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.
'நான் அல்லாஹ்வின்பாலிருந்து நற்குணங்கள் முழுமைப்படுத்துவதற்காக அனுப்பப்பட்டுள்ளது.'(இமாம் மாலிக் (ரஹ்)அவர்களின் முஅத்தா)

விளக்கம் :
அதாவது, மக்களின் குணங்களையும் விவகாரங்களையும் சீர்படுத்துவதும், அவர்களுக்குள் இருக்கும் தீய குணத்தின் வேர்களைப் பிடுங்கி எறிந்து விடுவதும், அவற்றிற்குப் பரில் நற்குணங்களை உருவாக்குவதும் தாம் அண்ணல் நபி (ஸல்) அவர்களுடைய நபித்துவத்தின் நோக்கமாகும். இந்தத் தூய்மைப்படுத்தும் பணியே – அதாவது -  'தஸ்தியா' பணியே அண்ணலார் அனுப்பப்பட்டதற்கான நோக்கமாகும். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தம் சொல்லாலும் செயலாலும் எல்லா நற்குணங்களையும் வாழ்வின் எல்லாத் துறைகளிலும் முழுமையாக செயல்படுத்தினார்கள். எல்லாவிதமான நிலைகளிலும் அவற்றை விடாமல் பற்றிப் பிடித்திருக்கும்படி அறிவுறுத்தினார்கள்.
'நற்குணம் என்பது என்ன?' என்பதை அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு விளக்குகிறார்கள்: 'எவரையும் துன்புறுத்தாமல் இருத்தலதான் நற்குணமாகும்.'
பாருங்கள்! நற்குணம் என்பது எத்தனைப் பரந்து விரிந்த பொருள் கொண்டதாய்த் திகழ்கின்றது!
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ருப்னுல் ஆஸ் (ரலி)
       'அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வெட்கமற்ற பேச்சை தம் நாவால் பேசுவதுமில்லை, வெட்கமற்ற செயலை செய்வதுமில்லை. மேலும், 'உங்களில் நற்குணமுடையவரே உங்களில் சிறந்தவர் ஆவார்' என்று கூறுவார்கள். (புகாரி, முஸ்லிம்)
அறிவிப்பாளர் : முஆத் (ரலி)
'அண்ணல் நபி (ஸல்) அவர்கள் என்னை யமன் நாட்டுக்கு அனுப்பும் வேளையில், நான் என் வாகனத்தில் கால் வைக்கும்போது கூறிய அறிவுரை இதுதான்: 'மக்களிடம் நீர் நற்குணத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.' (இமாம் மாலிக் (ரஹ்) அவர்களின் முஅத்தா)


கம்பீரம் - நிதானம்
-------------------------
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அப்துல் கைஸ் குலத்தாருடைய தூதுக் குழுவின் தலைவரை (அவரது பட்டப் பெயர் ஸுஷஜ் என்பதாகும்) நோக்கி (பாராட்டும் வகையில்) கூறினார்கள்: 'உம்மிடம் அல்லாஹ்வுக்கு விருப்பமான இரு குணங்கள் உள்ளன. அவை சகிப்புத்தன்மையும் (உணர்ச்சிவசப்படாமையும்), கம்பீரமான நிதானமும்தாம்.' (முஸ்லிம்)
விளக்கம் :
அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழு அண்ணல் நபி (ஸல்) அவர்களின் திருச் சமூகத்திற்கு வருகை தந்தது. அக்குழுவில் வந்திருந்த மற்வர்கள் மதீனா வந்து சேர்ந்தவுடன் அண்ணலாரைச் சந்திக்க ஓடினார்கள். அவர்கள் குளிக்கவுமில்லை, கை – கால், முகம் கழுவிக் கொள்ளவுமில்லை. இத்தனைக்கும் இவர்கள் வெகு தொலைவிலிருந்து வந்திருந்தார்கள். மேலும், அழுக்கடைந்து புழுதிபடிந்திருந்தார்கள். ஆனால், அவர்களுக்கு முற்றிலும் மாற்றமாக அவர்களுடைய தலைவர் அவசரம் ஏதும் காட்டவில்லை. அமைதியாக (வாகனத்தை விட்டு) இறங்கினார். தன் பொருட்களை வகைப்படுத்தி எடுத்து வைத்தார். வாகனங்களுக்குத் தீனி போட்டார். நீர் புகட்டினார். பிறகு, குளித்து விட்டு கம்பீரத்துடன் அண்ணலாரின் சமூகத்திற்கு வருகை தந்தார். அந்த நேரத்தில் அவரை நோக்கி, அண்ணலார் மேற்கண்டவாறு கூறினார்கள்.


எளிமையும் தூய்மையும்.
-------------------------------
அறிவிப்பாளர் :  அபூ உமாமா (ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'எளிமையாக வாழ்வது இறைநம்பிக்கையின்பாற்பட்டதாகும்.' (அபூதாவூத்)
விளக்கம் :
எளிய நிலையில் வாழ்வது இறைநம்பிக்கையாளனுக்குரிய தன்மைகளுள் ஓன்று. ஓர் இறைநம்பிக்கையாளனுக்கு மறுமை வாழ்வை நன்றாக அமைத்துக் கொள்ளவேண்டும் என்னும் சிந்தனையே மேலோங்கி இருக்கும். உலக வாழ்வின் படாடோபங்கள் - (ஆடம்பரங்கள்), அலங்காரங்களிலெல்லாம் அவனுக்கு ஈடுபாடு இருப்பதில்லை.
அறிவிப்பாளர் :  ஜாபிர் (ரலி)
ஒரு முறை எங்களைச் சந்திக்க அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வருகை தந்தார்கள். அப்போது உடலில் புழுதி படிந்த தலைவிரிகோலமான ஒரு மனிதரை அண்ணலார் கண்டார்கள். 'இந்த மனிதரிடம் தலைவாரிக் கொள்வதற்குச் சீப்பு எதுவும் இல்லையா?' என்று அண்ணலார் வினவினார்கள். பிறகு, அண்ணலார் அழுக்கான ஆடைகள் அணிந்திருந்த இன்னொரு மனிதரைக் கண்டார்கள். ' இந்த மனிதரிடம் ஆடைகளைத் துவைத்துக் கொள்வதற்கான பொருள் (சோப்பு) இல்லையா?' என்று கேட்டார்கள். (மிஷ்காத்)
அறிவிப்பாளர் :  அதாஉ பின் யஸார் (ரலி)
ஒரு முறை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலினுள் இருந்தபோது, தலைமுடியும் தாடியும் ஒழுங்கின்றிக் கிடந்த ஒரு பள்ளிவாசலினுள் நுழைவதைக் கண்ட அண்ணலார் அவர்கள், அவரைப் பார்த்து 'திரும்பிப் போய் தலையையும் தாடியையும் சீப்பால் வாரி ஒழுங்குபடுத்திக் கொண்டு வா' என் சைகை காட்டினார்கள். அவர் அவ்வாறே சென்று தலைமுடியை வாரிக் கொண்டு திரும்பி வந்தார். அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ' மனிதனின் தலைமுடி தாறுமாறாகக் கலைந்துபோய், அவன் ஷைத்தானைப் போல் காட்சியளிப்பதைவிட இது நல்லதல்லவா?' என்று கூறினார்கள். (மிஷ்காத்)
அறிவிப்பாளர் :  அபுல் அஹ்வஸ் (ரலி)
(தம் தந்தையார் கூறியதாக அறிவிக்கின்றார்:) நான் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் திருச்சமுகத்திற்கு சென்றேன். அப்போது நான் அணிந்திருந்த ஆடைகள் சாதாரணமான வையாகவும், தரம் குறைந்தவையாகவும் இருந்தன. அண்ணலார் 'உம்மிடம் செல்வம் உள்ளதா?' என் வினவினார்கள். நான் இதற்கு, 'ஆம்' என்றேன். அதற்கு அண்ணலார், 'எத்தகைய செல்வதம்?' எனக் கேட்டார்கள். ' அல்லாஹ் எல்லாவிதமான் செல்வத்தையும் எனக்கு வழங்கி இருக்கின்றான். என்னிடம் ஒட்டகங்களும் உள்ளன, பசுக்களும் உள்ளன, ஆடுகளும் உள்ளன, குதிரைகளும் உள்ளன, அடிமைகளும் உள்ளனர்' என்று நான் பதில் கூறினேன். அதற்கு, 'அல்லாஹ் உமக்கு இவ்வளவு செல்வம் கொடுத்திருக்கிறான் எனில், அவனது அருளின் அடையாளம் உங்கள் உடலில் வெளிப்பட்டிருக்க வேண்டும்' என்று அண்ணலார் கூறினார்கள். (மிஷ்காத்)
விளக்கம் :
இதன் கருத்து: அல்லாஹ் எல்லாம் கொடுத்து வைத்திருக்கிறான் என்றால் உங்கள் வசதிக்கேற்றவாறு உண்ணுங்கள், பருகுங்கள்! மனிதனுக்கு வீட்டில் எல்லா வசதிகளும் இருக்க, பரம ஏழையைப் போல் தன்னை ஏன் ஆக்கிக் கொள்ளவேண்டும்? அது மிகவும் கெட்ட பழக்கம். அல்லாஹ்வுக்கு நன்றி கொல்வதாகும்.


ஸலாம் சொல்வது
------------------------
அறிவிப்பாளர் :  அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர். 'இஸ்லாத்தின் எந்தச் செயல் சிறந்தது?' என்று வினவினார்கள். அதற்கு அண்ணலார், ஏழை எளியவர்களுக்கு உணவளிப்பதும், ஒவ்வொரு முஸ்லிமுக்கு ஸலாம் சொல்வதுமாகும் - அவர் உமக்குச் தெரிந்தவராயிருப்பினும் சரி, தெரியாதவராயிருப்பினும் சரியே!' (அதாவது, அவர் உம்மிடம் பழகியவராயிருப்பினும் சரி, பழகாதவராயிருப்பினும் சரியே!) (புகாரி, முஸ்லிம்)
அறிவிப்பாளர் :  அபூஹுரைரா (ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: 'நீங்கள் உண்மையான இறைநம்பிக்கையாளர்களாய்த் திகழாதவரை சுவனம் புக முடியாது. நீங்கள் ஒருவரையொருவர் நேசிக்காதவரை உண்மையான இறைநம்பிக்கையாளர்களாக விளங்க முடியாது. நீங்கள் எதனைச் செய்தால் உங்களிடையே நேசம் வளருமோ அத்தைகைய ஒரு செயலை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? உங்களிடையே ஸலாமைப் பரப்புங்கள்!' (முஸ்லிம்)
விளக்கம் :
இந்த நபிமொழியிலிருந்து நமக்குத் தெரிவது இதுதான்: முஸ்லிம்கள் தமக்கிடையே ஒருவர் மற்றவரை நேசித்திட வேண்டும். இது அவர்களுடைய ஈமானின் (இறைநம்பிக்கையின்) தேட்;டமாகும். ஒருவருக்கொருவர் ஸலாம் உரைத்துக் கொள்ளும் பண்பு அவர்களுடைய பொது வழக்கமாக நிலவுவதுதான், அவர்கிளடையே நேசம் வளர்வதற்கான வழியாகும். மக்கள் ஸலாமின் பொருளை அறிந்து 'அஸ்ஸலாமு அலைக்கும்' என்னும் சொற்றொடரின் உயிரோட்டத்தை அறிந்திருப்பார்களாயின், இந்த வழிமுறை சிறப்பான ஒன்றாகும்.


நாவடக்கம்
---------------
அறிவிப்பாளர் :  ஸஹ்ல் பின ஸஅத் (ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'தன் நாவையும் வெட்கத்தலத்தையும் பாதுகாத்துக் கொள்வதாக ஒருவர் பொறுப்பேற்றுக் கொண்டால் அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்Nபுற்றுக் கொள்கிறேன்.' (புகாரி)
விளக்கம் :
மனிதனின் உடலில் உள்ள இந்த இரண்டு உறுப்புகளும் அபாயகரமான, பலவீனமான இடங்களாகும். இங்கிருந்து தாக்குதல் நடத்துவது ஷைத்தானுக்கு மிக எளிதாகும். பெரும்பாலான பாவங்கள் இந்த இரண்டு உறுப்புகளிலிருந்துதான் நிகழ்கின்றன. எவராவது ஷைத்தானின் தாக்குதல்களிலிருந்து அவ்விரண்டையும் காப்பாற்றிக் கொண்டால் அவரது தங்குமிடம் சுவனமாகவே இருக்கும்.
அறிவிப்பாளர் :  அபூஹுரைரா (ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: அடியான், அல்லாஹ்வின் உவப்புக்குரிய ஒரு சொல்லை தன் நாவினால் மொழிகின்றான், ஆனால் அதில் அவன் கவனம் செலுத்தவில்லை (அதற்கு அவன் முக்கியத்துவம் தருவதில்லை) ஆனால் அல்லாஹ் அந்தச் சொல்லின் காரணத்தால், அவனுடைய தகுதியை பல படித்தரங்கள் உயர்த்திவிடுகின்றான். இவ்வாறே மனிதன் இறைவனுக்கு கோபமுண்டாக்கும் ஒரு சொல்லை அலட்சியமாகச் சொல்லி விடுகின்றான். அது அவனை நரகில் தள்ளி விடுகின்றது! (புகாரி)
விளக்கம் :
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுவதின் நோக்கம் என்னவெனில், மனிதன் தன் நாவினால் கட்டுப்பாடின்றி பேச்சை விட்டுவிடக் கூடாது. எதைப் பேசினாலும் சிந்துத்துப் பேசவேண்டும். நரகத்திற்குக் கொண்டு செல்லும் சொற்களை தன் நாவால் மொழிந்து விடக்கூடாது.
, ,