குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

15.7.12

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ரமழானுக்கு தயாராவோம்
ரமழானுக்கு தயாராவோம்.

அஸ்ஸலாமு அலைக்கும்,,,
ஏகஇறைவனின் திருப்பெயரால்...

*يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا
كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ*لَعَلَّكُمْ تَتَّقُونَ {183}
மனித சமுதாயத்தை சீர்திருத்த வந்த திருமறைக் குர்ஆன் இறங்கிய ரமழான் மாதம் நெருங்கி விட்டது. ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பதற்காக இப்பொழுதே நாம் நம்மை தயார் படுத்தி இருப்போம். அதில் நம்மை சீர்திருத்திக் கொள்வதற்கு தயார் படுத்திக் கொண்டோமா ?



இல்லை என்றால் இன்னும் சிறிது நாட்கள் இருப்பதால் நம்மை சீர்திருத்திக்
கொள்வதற்கான பயிற்சியை தொடங்குவோமாக

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. திருக்குர்ஆன்-2:183

ருசியுடன் உண்டு புசித்துப் பழகிய நாவை ரமழானுடைய நாளின் பாதிப் பகுதியில் உண்ணாமல் இருக்கப் பழக்கி இருப்போம். பொய் பேசாமல் இருக்கப் பழக்கினோமா ?

இல்லை என்றால் இன்னும் சிறிது நாட்கள் இருப்பதால் நாவை ரமழானில் பொய் பேசாமல் இருக்கப் பழக்குவோமாக !

பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர் தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். புகாரி 1903.

ஸஹர் மற்றும் இஃப்தாருக்கான உணவுகளை வகை வகையாக செய்து உண்டு மகிழ்வதற்கு தேவையான பொருள்களை இப்பொழுதே வாங்கி சேமிக்கத் தொடங்கி இருப்போம். ஆனால் அதில் உறவினர்களில் உள்ள ஏழை எளியோருக்கும் நமது அருகில் வசிக்கும் ஏழை எளியோருக்கும் சிறிதை கொடுத்து அவர்களும் நம்மைப் போல் ஸஹர் மற்றும் இஃப்தாரில்
உண்டு மகிழ்வதற்கும் சேர்த்து வாங்கினோமா ?

இல்லை என்றால் இன்னும் சிறிது நாட்கள் இருப்பதால் அவர்களுக்கும் தாராள மனதுடன் சிறிதை சேர்த்து வாங்குவதற்கு எண்ணம் கொள்வோமாக  இப்பொழுதே அந்த எண்ணம் வந்தால் தான் ரமழானில் வாரி வழங்கும் எண்ணம் உருவாகும்.

நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தனர். ஜிப்ரீல்( அலை) அவர்கள் ரமழான் மாதத்தில் நபி(ஸல்) அவர்களைச் சந்திக்கும் வேளையில் நபி( ஸல்) அவர்கள் அதிகமதிகம் வாரி வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல்(அலை) ரமழானின் ஒவ்வொரு இரவும் ரமழான் முடியும்வரை நபி(ஸல்) அவர்களைச் சந்திப்பார். நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள். ஜிப்ரீல்(அலை) தம்மைச்
சந்திக்கும்போது மழைக்காற்றை விட அதிகமாக நபி(ஸல்) அவர்கள் வாரி
வழங்குவார்கள் என்று இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.  புகாரி 1902.

இரவிலும் பகலிலும் நேரம் தவறாமல் உறங்கிப் பழகிய கண்களை ரமலான் மாதத்தில் மாற்றி உறங்குவதற்கும் குறைத்து உறங்குவதற்கும் இப்பொழுதே பழக்கி இருப்போம். ஆனால் சினிமா பார்க்காமல் இருப்பதற்கு பழக்கினோமா ?

இல்லை என்றால் இன்னும் சிறிது நாட்கள் இருப்பதால் சினிமா பார்க்காமல்
இருப்பதற்கு பழக்கிக் கொள்வோமாக!

ஸஹர் வரை பலருடைய வீட்டில் சினிமா ஒடவே செய்கிறது. சிலருடைய வீட்டில் (ரூமில்) நோன்பு நேரத்திலும் கூட சினிமா ஓடுவதை அறிந்து வருகிறோம்.நோன்பை நோற்றால் அது தீய எண்ணங்களை விட்டும் தடுக்கும் என்று இறுதித் தூதர் (ஸல்) அவர்கள் கூறி இருப்பதால் நோன்பு காலங்களிலும் விரசத்தைத் தூண்டும் சினிமாவை பார்க்கலாமா ?

உங்களில் திருமணத்திற்கான செலவினங்களுக்குச் சக்தியற்றவர் திருமணம்
செய்யட்டும்; ஏனெனில் திருமணம் (அன்னியப் பெண்களைப் பார்ப்பதைவிட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரின் இச்சையைக் கட்டுப்படுத்தும். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  புகாரி 1905.

ரமலானுக்கு இன்னும் சிறிது நாட்கள் இருப்பதால் ரமலானில் பொய் பேசாமால், சினிமா பார்க்காமல், இருக்கவும் வாரி வழங்கும் எண்ணத்தை எற்படுத்தும் பயிற்சியை தொடங்குவோமாக


*وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ

بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ

الْمُفْلِحُونَ***

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.




 அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்
, ,