குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

24.8.12

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

மாமனிதர்-07
நூலாசிரியர்: பீ.ஜைனுல்ஆபிதீன்.அவர்கள்

எத்தனையோ பேர் உணவு, உடை, வாழ்க்கை முறை போன்றவற்றில் கஞ்சத்தனத்தைக் கடைப்பிடிப்பர். ஆனால், தங்கள் சந்ததியினரின் எதிர்காலத்திற்காகச் சேமித்து வைத்து விட்டு மரணிப்பார்கள். அவர்கள் மரணிக்கும் போது தான் அவர்களிடம் ஏராளமான செல்வங்கள் இருந்தது உலகுக்குத் தெரியவரும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இது போல் வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி தமது வாரிசுகளுக்காகச் சேர்த்து வைத்திருப்பார்களோ?



இவ்வாறு யாரேனும் நினைத்தால் அது முற்றிலும் தவறாகும். ஏனெனில் அவர்கள் மரணிக்கும் போது பெரிய அளவில் எதையும் விட்டுச் செல்லவில்லை.

உலக மகா வல்லரசின் அதிபராக இருந்த நிலையில் மரணித்த அவர்கள் அற்பமான கடனைக் கூட நிறைவேற்றாத நிலையில் மரணமடைந்தார்கள்.

'முப்பது படி கோதுமைக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கவச ஆடையை ஒரு யூதரிடம் அடைமானம் வைத்திருந்தார்கள். அதை மீட்காமலேயே மரணித்தார்கள்' என்று நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார். நூல் : புகாரி 2068, 2096, 2200, 2251, 2252, 2386, 2509, 2513, 2916, 4467

வந்தவர்களுக்கெல்லாம் அரசுக் கருவூலத்திருந்து வாரி வழங்கிய மாமன்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடனாகக் கூட அரசுக் கருவூலத்திருந்து எதையும் பெற்றுக் கொள்ளவில்லை. தமது நாட்டின் குடிமகன் ஒருவரிடம் (யூதரிடம்) தமது கவசத்தை அடைமானமாக வைத்து முப்பது படி கோதுமையைப் பெற்றுள்ளனர் என்பதும், அந்தக் கவச ஆடையை மீட்காமலே மரணித்து விட்டார்கள் என்பதும் உலக வரலாற்றில் எந்த மன்னரும் வாழ்ந்து காட்டாத வாழ்க்கையாகும்.

மரணிக்கும் போது அவர்கள் விட்டுச் சென்ற சொத்துக்களின் பட்டியலைப் பாருங்கள்!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது தங்கக் காசையோ, வெள்ளிக் காசையோ, அடிமைகளையோ, வேறு எதனையுமோ விட்டுச் செல்லவில்லை. தமது வெள்ளை கோவேறுக் கழுதை, தமது ஆயுதங்கள், தர்மமாக வழங்கிச் சென்ற நிலம் ஆகியவற்றைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) விட்டுச் சென்றார்கள். நூல் : புகாரி 2739, 2873, 2912, 3098, 4461

நபிகள் நாயகம் (ஸல்) ஆட்சியில் நாட்டைக் காக்கும் இராணுவத்தினருக்கு எந்த ஊதியமும் அளிக்கப்படவில்லை. இறைவனின் திருப்தியை நோக்கமாகக் கொண்டே மக்கள் போர்களில் பங்கு கொள்வார்கள். போரில் வெற்றி கிட்டினால் தோற்று ஓடக் கூடியவர்கள் விட்டுச் செல்லும் உடமைகளும், கைது செய்யப்பட்டவர்களும், கைப்பற்றப்பட்ட நிலங்களும் போரில் பங்கு கொண்டவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். நபிகள் நாயகமும் இவ்வாறு போரில் பங்கு கொண்டதால் அவர்களுக்கும் இது போன்ற பங்குகள் கிடைத்தன. கைபர், பதக் ஆகிய பகுதிகளில் இவ்வாறு கிடைத்த நிலம் நபிகள் நாயகத்திடம் இருந்தது. அதுவும் அவர்கள் விட்டுச் சென்ற சொத்தாகும்.

பத்து ஆண்டுகள் மாமன்னராக ஆட்சி புரிந்த நபிகள் நாயகம் மரணிக்கும் போது விட்டுச் சென்ற சொத்துக்கள் இவை தாம்.

செழிப்பான் நிலையிலும் தேர்ந்தெடுத்துக் கொண்ட வறுமை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது ஆட்சியில் தரித்திரமும், பஞ்சமும் தலைவிரித்தாடியிருக்கலாம். அதன் காரணமாக எதையும் அனுபவிக்க முடியாமல் போயிருக்கலாம்' என்றெல்லாம் யாரேனும் நினைக்கக் கூடும்.

அவ்வாறு நினைத்தால் அது தவறாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு வந்த முதலிரண்டு வருடங்களில் கடுமையான வறுமை தலை விரித்தாடியது உண்மை தான். ஆனால் அவர்கள் கொண்டு வந்த ஸகாத்' என்னும் புரட்சிகரமான பொருளாதாரத் திட்டத்தின் மூலம் செழிப்பும், பொருளாதாரத் தன்னிறைவும் ஏற்பட்டன.

அவர்களது ஆட்சியில் ஏற்பட்டது போன்ற தன்னிறைவை அவர்களுக்குப் பின் இன்று வரை எந்த நாட்டிலும் எந்த ஆட்சியும் அடைய முடியவில்லை. ஆம் அந்த அளவுக்கு அவர்களது ஆட்சியில் செல்வம் கொழித்தது. அந்த நிலையில் தான் இவ்வளவு எளிமையான வாழ்க்கையைத் தேர்வு செய்து கொண்டார்கள்! அவர்களது செழிப்பான ஆட்சிக்குச் சில சான்றுகளைப் பாருங்கள்!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த ஆரம்ப காலத்தில் யாரேனும் ஒருவர் இறந்து விட்டால் அவரது உடல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்வதற்காக (ஜனாஸா தொழுகை நடத்துவதற்காக) அவர்களிடம் கொண்டு வரப்படும். 'இவர் யாருக்கேனும் கடன் தர வேண்டியுள்ளதா?' என்று அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்பார்கள். ஆம் எனக் கூறப்பட்டால் 'கடனை நிறைவேற்றிட எதையாவது விட்டுச் சென்றிருக்கிறாரா?' எனக் கேட்பார்கள். ஆம் என்றால் அவருக்காகப் பிரார்த்தனை செய்வார்கள். இல்லை எனக் கூறப்பட்டால் 'உங்கள் தோழருக்காக நீங்களே பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்' என்று கூறி விடுவார்கள். அவரது கடனுக்கு யாரேனும் பொறுப்பேற்றுக் கொண்டால் அவருக்காகப் பிரார்த்தனை செய்வார்கள். பின்னர் அல்லாஹ் அவர்களுக்குப் பல வெற்றிகளை வழங்கிய போது 'இறை நம்பிக்கையாளர்களைப் பொறுத்த வரை அவர்கள் விஷயத்தில் அவர்களை விட நானே அதிகம் பொறுப்பாளியாவேன். எனவே, யாரேனும் கடன் வாங்கிய நிலையில் மரணித்தால் அந்தக் கடனை அடைப்பது என் பொறுப்பு. யாரேனும் சொத்தை விட்டுச் சென்றால் அது அவரது வாரிசைச் சேரும்' என்று கூறலானார்கள். நூல் : புகாரி 2297, 2398, 2399, 4781, 5371, 6731, 6745, 6763

குடிமக்கள் வாங்காத கடனை குடிமக்கள் தலையில் கட்டுகிற அரசுகளை நாம் பார்த்துள்ளோம். ஊதாரித்தனமாகச் செலவு செய்வதற்காக பணக்கார நாடுகளிடம் கடன் வாங்கி மக்களின் வரிப்பணத்தில் வட்டி கட்டும் ஆட்சிகளையும் நாம் பார்க்கிறோம். மக்கள் வாங்கிய கடனுக்காக மக்களிடம் வட்டி வசூக்கும் ஆட்சியையும், வட்டிக் கட்டத் தவறினால் ஜப்தி செய்யும் தண்டல்கார அரசுகளையும் நாம் பார்க்கிறோம்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சியில் ஒவ்வொரு குடிமகனும் எவ்வளவு கடன் பட்டிருந்தாலும், என்ன காரணத்துக்காகக் கடன் பட்டிருந்தாலும் அந்தக் கடன்கள் அனைத்தையும் ஆட்சித் தலைவர் என்ற முறையில் நபிகள் நாயகம் (ஸல்) அடைத்தார்கள். இவ்வாறு அடைப்பது என்றால் அளவுக்கு அதிகமாக செல்வம் குவிந்திருந்தால் மட்டுமே சாத்தியமாகும். இன்றைக்கு மிகப் பெரிய பணக்கார நாடுகளாகக் கருதப்படும் நாடுகள் தங்கள் குடிமக்களின் கடன்களை அடைக்க முன் வந்தால் பிச்சைக்கார நாடுகளாகி விடும்.

குடிமக்கள் ஒவ்வொருவரின் கடனையும் அரசே அடைத்த அற்புத ஆட்சியை, செழிப்பு மிக்க ஆட்சியைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) நடத்தினார்கள்.

நபிகள் நாயகத்தின் ஆட்சி எந்த அளவு செழிப்பானதாக இருந்தது என்றால் யாரேனும் இல்லை என்று கேட்டு வந்தால் மிகவும் தாராளமாக வாரி வழங்கும் அளவுக்கு செல்வச் செழிப்பு இருந்தது.

இதற்குச் சான்றாக ஒரு நிகழ்ச்சியை மட்டும் இங்கே சுட்டிக் காட்டுவோம்.

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் பள்ளிவாசலில் இருந்தோம். அவர்கள் எழுந்ததும் நாங்கள் எழுந்தோம். அவர்கள் பள்ளிவாசலின் மையப் பகுதிக்கு வந்த போது அவர்களைக் கண்ட ஒருவர் அவர்களின் பின்புறமிருந்து மேலாடையை இழுத்தார். அவர்களின் மேலாடை முரட்டுத் துணியாக இருந்ததால் அவர்களின் பிடரி சிவந்து விட்டது. 'முஹம்மதே எனது இரு ஒட்டகங்கள் நிறையப் பொருட்களைத் தருவீராக! உமது செல்வத்திலிருந்தோ, உமது தகப்பனாரின் செல்வத்தில் இருந்தோ நீர் தரப்போவதில்லை' என்று அந்த மனிதர் கூறினார். 'இழுத்துக் கொண்டிருக்கும் என் மேலாடையை விடும் வரை பொருட்களைத் தர மாட்டேன்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். 'நான் விட மாட்டேன்' என்று அவர் கூறினார். இவ்வாறு மூன்று முறை நபிகள் நாயகம் (ஸல்) கூறிய போது மூன்று முறையும் அவர் விட மாட்டேன்' என்றார். அந்தக் கிராமவாசியின் கூற்றை நாங்கள் செவியுற்ற போது அவரை நோக்கி விரைந்தோம். 'நான் அனுமதிக்கும் வரை தமது இடத்தை விட்டு யாரும் நகரக் கூடாது' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். பின்னர் கூட்டத்திலிருந்த ஒருவரை நோக்கி 'இவரது ஒரு ஒட்டகத்தில் கோதுமையையும், இன்னொரு ஒட்டகத்தில் பேரீச்சம் பழத்தையும் ஏற்றி அனுப்புவீராக' என்றார்கள். பின்னர் மக்களை நோக்கி 'நீங்கள் புறப்படுங்கள்!' என்றார்கள். இதை அபூ ஹுரைரா (ரலி) அறிவிக்கிறார். நூல் : நஸயீ 4694, அபூ தாவூத் 4145

இரண்டு ஒட்டகங்களை வைத்திருப்பவர் வசதியானவராக அன்று கருதப்பட்டார். இத்தகைய வசதியுடையவரும், யாரென்று தெரியாதவருமான ஒருவர் நாகரீகமற்ற முறையில் கேட்கும் போது ஒரு ஒட்டகம் சுமக்கும் அளவுக்கு பேரீச்சம் பழத்தையும், இன்னொரு ஒட்டகம் சுமக்கும் அளவுக்கு கோதுமையையும் ஏற்றி நபிகள் நாயகம் (ஸல்) அனுப்பினார்கள் என்பது அவர்களின் ஆட்சியில் காணப்பட்ட செழிப்புக்குச் சான்றாகும்.

கேட்டவருக்கெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரசுக் கருவூலத்திலிருந்து வாரி வாரி வழங்கியதற்கு இன்னும் எண்ணற்ற சான்றுகள் உள்ளன. அவற்றை இங்கே குறிப்பிட்டால் அதுவே தனி நூலாகி விடும். சிந்திக்கின்ற மக்களுக்கு இதுவே போதுமானதாகும்.

அரசுக் கருவூலத்தில் கணக்கின்றி செல்வம் குவிந்துள்ள நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எளிமையான வாழ்க்கையைத் தேர்வு செய்தது ஏன்?

நபிகள் நாயகம் ஸல் வாழ்கை வரலாறு 07
, ,