குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

20.9.12

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

மாமனிதர்-10
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அரசுக் கருவூலத்தில் நிதி இல்லாத நேரத்தில் யாராவது உதவி கேட்டு வந்தால் வசதி படைத்தவர்களிடம் கடனாகப் பெற்று வழங்குவார்கள். ஸகாத் நிதி வசூக்கப்பட்டு வந்தவுடன் கடனைத் திருப்பிக் கொடுப்பார்கள். ஒரு தடவை இங்கிதம் தெரியாத மனிதரிடம் வாங்கிய கடனைக் குறித்த நேரத்தில் கொடுக்க இயலவில்லை. அப்போது நடந்தது என்ன என்பதைப் பாருங்கள்!



அபூ ஹுரைரா (ரலி) கூறுகிறார்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கடன் கொடுத்திருந்த ஒரு மனிதர் அதை வசூப்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது கடுமையான முறையில் அவர் நடந்து கொண்டார். நபிகள் நாயகத்தின் தோழர்கள் அவரைத் தாக்க முயன்றனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அவரை விட்டு விடுங்கள்! ஏனெனில் கடன் கொடுத்தவருக்கு (கடுமையாகப்) பேசும் உரிமை உள்ளது' எனக் கூறினார்கள். மேலும், 'அதே வயதுடைய ஒட்டகத்தை இவருக்குக் கொடுங்கள்' எனக் கூறினார்கள். 'அல்லாஹ்வின் தூதரே! அதை விடக் கூடுதல் வயதுடைய ஒட்டகம் தான் உள்ளது' என்று நபித் தோழர்கள் கூறினார்கள். 'அவருக்கு அதைக் கொடுங்கள். ஏனெனில், அழகிய முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவராவார்' எனக் கூறினார்கள். நூல் : புகாரி 2306, 2390, 2401, 2606, 2609

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் மாபெரும் ஆட்சித் தலைவராக இருந்த காலகட்டத்தில் நடந்த நிகழ்ச்சி இது.

கொடுத்த கடனைத் திரும்பக் கேட்டு வந்தவர் கடுஞ்சொற்களைப் பயன்படுத்தி கடனைத் திருப்பிக் கேட்கிறார். நபித்தோழர்கள் அவர் மேல் ஆத்திரப்படும் அளவுக்குக் கடுமையாக நடந்து கொள்கிறார்.

ஆட்சியில் உள்ளவர்களுக்கு யாரேனும் கடன் கொடுத்தால் அதைத் திரும்பிக் கேட்க அஞ்சுவதைக் காண்கிறோம். அச்சத்தைத் துறந்து விட்டு திருப்பிக் கேட்கச் சென்றாலும் ஆட்சியில் உள்ளவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைப்பதில்லை. அப்படியே வாய்ப்புக் கிடைத்தாலும் ஏதோ பிச்சை கேட்பது போல் கெஞ்சித் தான் கொடுத்த கடனைக் கேட்க முடியும். ஆட்சியிலுள்ளவர்களால் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படும் என்ற அச்சத்தினால் தயங்கித் தயங்கி தனது வறுமையைக் கூறி கூழைக் கும்பிடு போட்டுத் தான் கடனைக் கேட்க முடியும்.

கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்திக் கடனை வசூலிப்பது ஒரு புறமிருக்கட்டும் சாதாரண முறையில் கூடக் கேட்க முடியாது.

அகில உலகும் அஞ்சக் கூடிய மாபெரும் வல்லரசின் அதிபராக இருந்த நபிகள் நாயகத்தைக் கடன் கொடுத்தவர் சர்வ சாதாரணமாகச் சந்திக்கிறார். கொடுத்த கடனைக் கேட்கிறார். அதுவும் கடுமையான சொற்களைப் பயன்படுத்துகிறார். உலக வரலாற்றில் எந்த ஆட்சியாளரிடமாவது யாராவது இப்படிக் கேட்க முடியுமா?

இவ்வாறு கடுஞ்சொற்களை அவர் பயன்படுத்தும் போதும், ஏராளமான மக்கள் மத்தியில் வைத்து அவமானப்படுத்தும் போதும் 'தாம் ஒரு இறைத்தூதர்; மாமன்னர்; மக்கள் தலைவர்; இதனால் தமது கௌரவம் பாதிக்கப்படும் என்று அந்த மாமனிதர் எண்ணவில்லை.

தமது நிலையிருந்து இதைச் சிந்திக்காமல் கடன் கொடுத்தவரின் நிலையிருந்து சிந்திக்கிறார்கள். வாங்கிய கடனைத் தாமதமாகத் திருப்பிக் கொடுப்பதால் கடன் கொடுத்தவருக்கு ஏற்படக் கூடிய சங்கடங்களையும், சிரமங்களையும், மன உளைச்சல்களையும் நினைத்துப் பார்க்கிறார்கள். இதனால் தான் 'கடன் கொடுத்தவருக்கு அவ்வாறு பேசும் உரிமை உள்ளது' எனக் கூறி அவரைத் தாக்கத் துணிந்த தம் தோழர்களைத் தடுக்கிறார்கள்.

தமது மரியாதையை விட மற்றவரின் உரிமையைப் பெரிதாக மதித்ததால் தான் இதைச் சகித்துக் கொள்கிறார்கள்.

மேலும் உடனடியாக அவரது கடனைத் தீர்க்கவும் ஏற்பாடு செய்கிறார்கள். கடனாக வாங்கிய ஒட்டகத்தை விடக் கூடுதல் வயதுடைய ஒட்டகம் தான் தம்மிடம் இருக்கிறது என்பதை அறிந்த போது அதையே அவருக்குக் கொடுக்க உத்தரவிடுகிறார்கள்.

கடுஞ்சொற்களை என்ன தான் சகித்துக் கொண்டாலும் இத்தகையவருக்கு வாங்கிய கடனை விட அதிகமாகக் கொடுக்க யாருக்கும் மனம் வராது. முடிந்த வரை குறைவாகக் கொடுக்கவே உள்ளம் தீர்ப்பளிக்கும்.

ஆனால், இந்த மாமனிதரோ தாம் வாங்கிய கடனை விட அதிக மாகக் கொடுக்குமாறு உத்தரவிட்டதுடன் இவ்வாறு நடப்பவர்களே மனிதர்களில் சிறந்தவர் எனவும் போதனை செய்கிறார்கள்.

இதனால் தான் முஸ்லிமல்லாத நடுநிலையாளர்களும் இவரை மாமனிதர் எனப் போற்றுகின்றனர்.

பதவியைப் பயன்படுத்தி எந்தவிதமான புகழையும், மரியாதையையும் அவர்கள் விரும்பவில்லை என்பதற்கு அற்புதமான சான்றாக இது அமைந்துள்ளது.

நபிகள் நாயகம் ஸல் வாழ்கை வரலாறு 10
, ,