குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

8.3.13

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அப்சல் குரு - அரசியல் கொலை
almighty-arrahim,blogspot.comமுஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.5:8




டிசம்பர் 13 நாடாளுமன்றத் தாக்குதல் நடந்த தினம் முதலே நூற்றுக்கணக்கான கேள்விகளைத் தொடர்ச்சியாக இந்தத் தேசத்தை காக்க நினைப்பவர்கள் எழுப்பி வருகிறார்கள். அதனைப் பற்றி விரிவான பல புத்தகங்களும் வெளிவந்தன. அருந்ததி ராயின் Ôஅப்சலைத் தூக்கிலிடாதேÕ கட்டுரை எனது மொழியாக்கத்தில் தமிழில் நூலாக வெளிவந்தது. நந்திதா ஹஸ்கர் அவர்களின் Ôஏன் அப்சல் தூக்கிலிடப்படக் கூடாதுÕ நூலும் தமிழில் வெளிவந்தது. அருந்ததி ராய், இந்தக் கட்டுரை தொடர்ந்து ஆங்கிலத்தில் நூலாக வெளிவந்த போது அதில் டிசம்பர் 13ம் 13 கேள்விகளும் என ஒரு முன்னுரை எழுதினார். அந்தக் கேள்விகள் மிகவும் முக்கியமானவை. கொஞ்சம் திறந்த மனதுடன் ஒரு அறிவார்ந்த சமூகம் இந்தக் கேள்விகளைப் பற்றிக் கொஞ்சம் யோசித்தால் கூட நமக்குப் பல புதிர்களுக்கு விடை கிடைக்கும். அந்தக் கேள்விகளை தமிழ் வாசகர்கள் புரிதலை மனதில் வைத்து கொஞ்சம் எளிமைப்படுத்தி, விரிவுபடுத்தி இங்கு வழங்குகிறேன்.
                                                 
கேள்வி 1 : இந்தத் தாக்குதல் நடப்பதற்குப் பல மாதங்கள் முன்பிருந்தே பாராளுமன்றத்தின் மீது பெரும் தாக்குதல் நடக்கவிருக்கிறது என்று காவல்துறையும் அரசாங்கமும் சொல்லிக் கொண்டேயிருந்தது. 12 டிசம்பர் 2011 அன்று அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் ஒரு தனிப்பட்ட கூட்டத்தில் பாராளுமன்றம் மீது பெரும் தாக்குதல் நடக்கவிருக்கிறது என்று கூறினார். அவர் கூறியபடியே டிசம்பர் 13 அன்று பாராளுமன்றம் தாக்கப்பட்டது. இந்தியப் பாராளுமன்றம் 4-5 அடுக்கு பாதுகாப்பு வளையங்கள் கொண்டு பாதுகாக்கப்படுகிறது. அதற்குள் யாராலும் இத்தனை சுலபமாக நுழைந்துவிட இயலாது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் நமக்கு அனுமதிச் சீட்டை வழங்கியிருந்தால் கூட அவர்கள் நம்மைக் கேட்கும் கேள்விகளிலேயே நாம் திரும்பிவிடலாமா என்று நினைக்கும் அளவுக்குக் கெடுபிடியான பாதுகாப்பு. அப்படியிருக்க, தாக்குதல் தொடர்பான எச்சரிக்கைகளும், பிரத்யேக பாதுகாப்பு நடைமுறைகளும் அங்கு இருந்தபோதும், எப்படி வெடிப் பொருட்களுடனான அம்பாசிடர் கார் பாராளுமன்ற வளாகத்தில் நுழைந்தது? அந்த கார் எப்படி இத்தனை பாதுகாப்பு வளையங்களைக் கடந்தது? 

கேள்வி 2 : இந்தத் தாக்குதல் நடந்த சில தினங்களில் டெல்லி காவல்துறை இந்தத் தாக்குதல் ஜெய்ஷ்&-ஏ&-முகம்மது மற்றும் லஷ்கர் ஏ தோய்பா ஆகிய இரு இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை என்று அறிவித்தது. இந்தத் தாக்குதலை 1998 காந்தஹார் விமானக் கடத்தலில் ஈடுபட்ட முகமது தான் செய்தார் என்று காவல்துறை மிக துல்லியமாகத் தெரிவித்தது (இதனை பின்பு சிபிஐ மறுத்தது). இவைகளில் எவையும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை. இப்படிக் கூறிய காவல்துறையின் சிறப்புப் புலனாய்வு பிரிவிடம் என்ன சான்றுகள் இருந்தன? (இதனை மீண்டும் மீண்டும் ஒளி பரப்பிய ஊடகங்கள் கூட எந்த சான்றையும் ஏன் கோரவில்லை) 

கேள்வி 3: இந்த மொத்த தாக்குதல்களும் பாராளுமன்றத்தின் கண்காணிப்பு காமிராக்களில் பதிவாகியிருந்தது. காங்கிரஸ் எம்பி கபில் சிபல் இந்தத் தாக்குதல்களில் காணொளிப் பதிவுகள் எல்லாம் பாராளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் காட்டப்பட வேண்டும் என்றார். அவரது வாதத்தை ராஜ்ய சபாவின் துணைத் தலைவர் நஜ்மா ஹெப்துல்லா ஆமோதித்தார். மேலும் இந்தத் தாக்குதல்கள் தொடர்பான விபரங்கள் அனைத்திலும் பல குழப்பங்கள் உள்ளது என்றார் கபில் சிபல். பாராளுமன்ற காங்கிரஸ் அவைத் தலைவர் ப்ரியரஞ்சன் தாஸ்முன்ஷி “நான் அந்தக் காரில் இருந்து ஆறு பேர் இறங்கியதை என் கண்களால் பார்த்தேன். ஆனால் ஐந்து பேர் மட்டுமே சுட்டுக் கொல்லப்பட்டனர். கண்காணிப்புக் காமிராவின் பதிவில் ஆறு பேர் இறங்கியது பதிவாகியுள்ளது” என்றார். தாஸ்முன்ஷி கூறுவது சரி என்றால் ஏன் காவல்துறை ஐந்து பேர் மட்டுமே இருந்தார்கள் என்று கூறுகிறது? அப்படி என்றால் யார் அந்த ஆறாவது நபர்? அவர் இப்பொழுது எங்கே இருக்கிறார்? அந்தக் கண்காணிப்பு காமிராவின் பதிவு ஏன் பாராளுமன்றத் தாக்குதல் வழக்கு விசாரணையில் சாட்சியமாக அளிக்கப்படவில்லை? இந்தப் பதிவை ஏன் பாராளுமன்ற உறுப்பினர்களின் பார்வைக்கோ, பொதுமக்கள் பார்வைகோ அவர்கள் வெளியிடவில்லை? ( இந்த வழக்கைப் பொறுத்தவரை இந்த காமிராக்களின் பதிவு என்பதை விட வேறு எந்த சாட்சியம் இந்த விசாரணைக்கு உதவிட முடியும்) 

கேள்வி 4 : இப்படியாக சில கேள்விகளைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பியவுடன் ஏன் அவை ஒத்திவைக்கப்பட்டது? (அதன் பிறகு அவையில் தொடர்ச்சியாக இந்த விவகாரம் விவாதிக்க அனுமதிக்கப்படவில்லை. (ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏன் மௌனமானார்கள் என்பது கூட இன்று வரை விந்தையாகவே உள்ளது) 

கேள்வி 5 : டிசம்பர் 13 தாக்குதல் நடந்து சில தினங்கள் கழித்து இந்திய அரசு இந்தத் தாக்குதல்களில் பாகிஸ்தானின் தலையீடு இருப்பது தொடர்பாக மறுக்கமுடியாத சாட்சியங்கள் உள்ளன என்று அறிவித்தது. அதனால் உடனே இந்திய&பாகிஸ்தான் எல்லையில் ஐந்து லட்சம் ராணுவத் துருப்புகளை அனுப்பினார்கள். பெரும் அணு ஆயுதப் போர் சூழல் நோக்கி இந்தியத் துணைக் கண்டமே நகர்த்தப்பட்டது. அப்சலை சித்ரவதை செய்து பெற்ற வாக்குமூலங்கள் (இந்த வாக்குமூலங்களைக் கூட அதன் பின் உச்சநீதிமன்றம் நிராகரித்தது) தவிர்த்து அப்படி எந்த அசைக்க முடியாத சாட்சியம் அரசிடன் இருந்தது? வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த நேரம் அப்சல் குருவின் சாட்சியம் ஒரு தொலைக்காட்சியால் படம்பிடிக்கப்பட்டு அது அவர்கள் டிசம்பர் 13 தாக்குதல்கள் தொடர்பாக தயாரித்த ஆவணப்படத்தில் இணைக்கப்பட்டது. அந்த ஆவணப்படம் பெரும் விளம்பரத்துடன் மொத்த தேசம் பார்க்க ஒளிபரப்பப்பட்டது. ஏன் வழக்கு விசாரணையின் போது நீதிமன்றம் இத்தகைய ஒரு நடைமுறையை அனுமதித்தது? அந்த வாக்குமூலங்கள் தன்னிடம் வன்கொடுமை செய்து பெற்றதாக அப்சல் குரு தெரிவித்து அது நிரூபிக்கப்பட்டவுடன் அந்த வாக்குமூலங்களை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்தது. இந்த மறுக்கப்பட்ட சாட்சியத்தை உருவாக்கிய தொலைக்காட்சியை அத்வானியும் வாஜ்பாயும் மாறி மாறிப் புகழாரம் சூட்டிய காரணம் என்ன?

 கேள்வி 6 : எல்லை நோக்கிய இந்தப் படைகள் அனுப்புதல் என்பது தாக்குதல்களுக்கு வெகு முன்பாகவே தொடங்கப்பட்டதா? (எல்லையில் பொதுவாக சாதாரண நாட்களில் இருக்கும் படைகளின் எண்ணிக்கையையும் தாக்குதல் நடந்த ஐந்து தினங்களில் அங்கு குவிக்கப்பட்ட படைகளின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டு ராணுவத்தின் முன்னாள் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் பலர்கூட இது ஐந்து நாட்களில் சாத்தியமில்லை. இப்படி ஒரு பெரும் படை திரட்டல் என்பது ஒரு ஆண்டுக்கு முன்பே துவங்கியிருக்க வேண்டும் என்று விரிவான கேள்விகளுடன் வெளிப்படையாகப் பேட்டியளித்துள்ளனர்) 

கேள்வி 7: எல்லையில் இந்த ராணுவப் படைகள் குவிப்பு ஏறக்குறைய ஒரு ஆண்டுக்கு மேலாகத் தொடர்ந்தது. அதற்கு மொத்தம் எவ்வளவு செலவானது? இந்த நடவடிக்கைகளில் எத்தனை ராணுவ வீரர்கள் பலியானார்கள்? கண்ணிவெடிகள் கையாண்டதில் மொத்தம் எத்தனை ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இறந்தார்கள்? தொடர் ராணுவ வாகனங்கள் இந்தக் கிராமங்களின் வழியே சென்றதால் எத்தனை கிராமவாசிகள் தங்களின் வீடுகளை, வயல்களை இழந்தார்கள்? இந்த விவசாயி களின் வயல்களில் எத்தனை கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டன? 

கேள்வி 8 : ஒரு குற்றப்புலனாய்வில் சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த தடயங்கள் எவ்வாறு குற்றம் சாட்டப்பட்டவருடன் தொடர்புடையவை என்பதை நிறுவுவது காவல்துறையின் பணி. காவல்துறை எவ்வாறு அப்சல் குருவை வந்தடைந்தது? கிலானியின் வாக்குமூலங்களின் வழிதான் நாங்கள் அப்சல் குருவை நெருங்கினோம் என்றது சிறப்புப் புலனாய்வுப் பிரிவு. ஆனால் கிலானியைக் கைது செய்வதற்கு முன்பாகவே ஸ்ரீநகர் காவல்துறை அப்சல் குருவைத் தேடும் நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டது. எந்த வகையில் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு அப்சல் குருவையும் டிசம்பர் 13 ஐயும் இணைத்தது? (சில திரையரங்குகளில் ரீலை மாற்றிப் படம் ஓட்டிய கதைகள்தான் ஞாபகம் வருகிறது) 

கேள்வி 9 : அப்சல் குரு ஒரு சரணடைந்த தீவிரவாதி. அவர் தொடர்ச்சியாக இந்திய ராணுவத்துடன் (ஷிஜிதி-யி&ரி) தொடர்பில் இருந்தவர் என்பதை நீதிமன்றமே ஆமோதித்தது. இந்திய ராணுவத்தின் நேரடிக் கண்காணிப்பில் இருந்த ஒருவர் எப்படி இத்தனை பெரும் தாக்குதல் நடவடிக்கையைத் திட்டமிட்டார்? (பல ஆண்டுகளாக இந்திய ராணுவ முகாம்களுக்குத் தினசரி சென்று கையொப்பம் இடுபவர் அப்சல் குரு) 

கேள்வி 10 : லக்ஷர்&ஏ&தொய்பா, ஜெய்ஷ்&ஏ&முகம்மது போன்ற அமைப்புகள் இந்தியா மீது ஒரு தாக்குதலைத் தொடுக்க ஷிஜிதி-ன் நேரடித் தொடர்பில், கண்காணிப்பில் உள்ள ஒருவரை இத்தனை பெரும் சதியின் முக்கிய தொடர்பாளராகத் தேர்வு செய்யுமா? 

கேள்வி 11 : தன்னிடம் தாரிக் என்பவர் முகமத் என்பவரை அறிமுகம் செய்து “இவரை நீ தில்லிக்கு அழைத்துச் செல்” என்று கூறியதாக நீதிமன்றத்தில் அப்சல் குரு தெரிவித்தார். தாரிக் காஷ்மீர் ஷிஜிதில் பணியாற்றியவர். தாரிக்கின் பெயர் காவல்துறையின் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது. யார் இந்த தாரிக். அவர் இப்பொழுது எங்கே இருக்கிறார்? 

கேள்வி 12 : டிசம்பர் 19, 2001, தாக்குதல் நடந்து ஆறு தினங்கள் கழித்து மகாராஷ்டிரத்தின் தானே பகுதி காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.எம்.சாங்காரி பாராளுமன்றத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஒருவரை லக்ஷர்&ஏ&தொய்பாவின் முகமத் யாசின் ஃபதே என்று அடையாளம் காண்பித்தார். இவரை மும்பையில் நவம்பர் 2000ல் கைது செய்ததாகவும், கைது செய்தவுடன் முகமத்தை ஜம்மு -காஷ்மீர் காவல்துறை வசம் ஒப்படைத்ததாகவும் தெரிவித்தார். இதற்குச் சான்றாக அவர் மிக விரிவான விவரணைகளையும் அளித்தார். காவல்துறை கண்காணிப்பாளர் சாங்காரி கூறுவது சரி என்றால் ஜம்மு&காஷ்மீர் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒருவர் எப்படி பாராளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்டிருக்க முடியும்? அவர் சொல்வது தவறு என்றால், முகமத் யாசின் இப்பொழுது எங்கே இருக்கிறார்? 

கேள்வி 13 : பாராளுமன்ற தாக்குதலில் கொல்லப்பட்ட ஐந்து தீவிரவாதிகள் யார் என்பது பற்றிய விபரங்கள் ஏன் இன்றுவரை வெளியிடப்படவில்லை? (அரசாங்கத்திடம் அவர்கள் அம்பாசிடர் காரில் இருந்து இறங்கும் பதிவுகள் ஆதாரமாக இருக்க, அவர்களின் சடலங்கள் இருக்க, அவர்கள் வந்த வாகனத்தில் அடையாள அட்டைகள் பல இருந்துமா அடையாளம் காண முடிய வில்லை)! 

இந்தக் கேள்விகள் எல்லாம் மிக நியாயமான கேள்விகள். இந்த பாராளுமன்றத் தாக்குதல்கள் தொடர்பான அருந்ததி ராயின் முழு கட்டுரையை வாசித்தால் இந்த விஷயங்கள் இன்னும் குவிமையம் பெறும். இவை பெரும் ஆய்வு செய்து கேட்கப்பட்ட கேள்விகள் அல்ல. மாறாக, அந்த நேரத்தில் இந்தியப் பத்திரிகைகள் மற்றும் அரசியல்வாதிகளின் பேச்சுகளைத் தொடர்ந்து கேட்கும் எவருக்கும் இந்தக் கேள்விகள் கொஞ்சம் யோசித்தாலே இயற்கையாக எழுபவையே. பாராளுமன்றத் தாக்குதல் தொடர்பான இந்தக் கேள்விகளுக்கு இன்று வரை எந்த பதிலும் இல்லாமல் அவை இந்தியாவின் மீது மிதந்தவண்ணம் உள்ளது. இன்றும் அந்தக் கேள்விகள் எல்லாம் ஒரு கருமேகமாக தில்லியின் திகார் சிறைச்சாலை மீது மிதக்கிறது.

 இந்தக் கேள்விகளை எல்லாம் விட வருத்தம் தரும் விஷயம், அப்சல் குருவுக்கு இந்த வழக்கு நடந்த காலம் முழுவதும் ஒரு வழக்கறிஞரை வைத்து வாதாடும் உரிமையை வழக்குத் தொடர்ந்த அரசுகள் வழங்க மறுத்தன. அரசு ஒரு வழக்கறிஞரைப் பெயரள வில் நியமித்தது. அவர் அப்சலைச் சென்று சிறையில் இறக்கும்வரை பார்க்கவில்லை. மாறாக, அவர் அப்சலை எதிர்த்து ஆவணங்கள் சேகரித்து அரசுக்கு வழங்கினார். அப்சலைப் போல் தூக்குத் தண்டனை அளிக்கப்பட்ட மற்றவர்களுக்கு இந்தியாவின் தலைசிறந்த வழக்கறிஞர்கள் வாதாடினார்கள். அவர்களைத் தூக்கு மரத்தின் நிழலில் இருந்து மட்டும் காப்பாற்றவில்லை. மாறாக, குற்ற மற்றவர்கள் என்று விடுதலையைப் பெற்றுத்தந்தார்கள். இன்றுவரை அவர்களைப் பற்றி பக்கம் பக்கமாக அவதூறுக் கதைகளை எழுதிய எந்த ஊடகமும், எந்த அரசியல் தலைவரும் அவர்களிடம் மன்னிப்புக் கோரவில்லை. 1984ல் மக்பூல் பட்டின் தூக்குத் தண்டனை மொத்த காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழும் மக்களின் மனதில் பெரும் ரணத்தையே ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து தான் ஃபரூக் அப்துல்லா தனது ஆட்சியை இழந்தார். அன்று ஏற்பட்ட பெரும் கொந்தளிப்புகள் அடங்கி, சாமானிய மக்கள் ஒரு அமைதியான வாழ்க்கை வாழும் சூழல் சமீபத்தில்தான் வந்தது. சுற்றுலா பயணிகள் போக்குவரத்தும், கல்வி நிலையங்களும் அங்கு அரும்பத்தொடங்கியது. காஷ்மீர் மக்களை பொறுத்தவரை அப்சல் குருவின் இறப்பு அங்கு பெரும் பதட்டங்களையே ஏற்படுத்தும் என்பதை இந்திய அரசு நன்கு அறியும். இந்திய அரசு காஷ்மீரில் அமைதியை விரும்பவில்லை என்கிற செய்தியைத் தான் இந்தச் செயல்கள் காட்டுகின்றன. பல கருணை மனுக்களை முந்திக்கொண்டு அப்சலுக்கு அளிக்கப்பட்ட தூக்கு தண்டனை  எந்த அடிப்படையிலானது என்பதை இந்த நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டிய அவசியம் ஜனாதிபதிக்கு உள்ளது. பிரணாப் முகர்ஜி அப்படி நமக்கு விளக்க மறுத்தால் அவர் இன்னும் காங்கிரஸ் கட்சியின் ரிமோட் கண்ட்ரோலில் இயங்கும் ஒரு குமாஸ்தாவாகவே அர்த்தப்படும்

 இந்திரா காந்தி கொலை வழக்கிலும் கூட கொலை செய்தவர்கள் அந்த இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இருப்பினும் காங்கிரஸ் கட்சியின் கூட்டு மனசாட்சியை சாந்தப்படுத்த இருவரைப் பிடித்து தூக்கில் போட்டார்கள். இவர்கள் இருவரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன, தூக்கில் போடுவதற்கு முன்பாக அவர்களின் குடும்பங்களுக்கு முறையே தகவல் தெரிவிக்கப்பட்டது. கேஹர் சிங்கைச் சந்திக்க அவரது குடும்பத்தார் 20 பேர் வந்தார்கள். சத்வந்சிங்கைச் சந்திக்க 18 பேர் வந்தனர். அவர்களின் தூக்கு தேதி வெளிப்படையாக தேசத்திற்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்றைய விந்தை, அப்சல் குரு விஷயத்தில் உள்துறை அமைச்சர் ஷிண்டே மக்களிடம் தூக்கு பற்றி எல்லாம் தெரிவித்தால் தேசத்தை நிர்வகிக்க முடியாது என்கிறார். 

இந்திரா காந்தி கொலையைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் இந்தத் தேசத்தில் இருக்கும் சீக்கியர்களை வேட்டையாடினார்கள், நரேந்திர மோடி கோத்ரா கலவரங்களின்பொழுது செய்த காரியங்களை எல்லாம் அன்றே காங்கிரஸ் கட்சியினர் செய்தனர். நமக்கு ஏற்படும் விந்தை, இதே கூட்டு மனசாட்சி இந்தக் கொலைகளைச் செய்த காங்கிரஸ் தலைவர்களை மீண்டும் மீண்டும் பாராளுமன்றத்திற்கு தேர்வு செய்தது, நரேந்திர மோடியை மீண்டும் மீண்டும் முதல்வர் ஆக்குவதுமே. எத்தனை அபாயகரமான ஒரு கூட்டு மனசாட்சியை நாம் இங்கே வளர்த்துக் கொண்டிருக்கிறோம். போகிற போக்கைப் பார்த்தால் இதே கூட்டு மனசாட்சி ராணுவ வீரர்கள் தங்களின் முகாம்களைச் சுற்றியுள்ள ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் பெண்களைப் பலாத்காரம் செய்யலாம் என்று கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. 

thanks amuthukrishnan.com
, ,