குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

27.7.13

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

பொது அறிவிப்பு
.
நான்
புன்னகை தேசத்தவன்
புவிதனில்
உன்னையும் நேசிப்பவன்

கண்களில் கருணையும்
கைகளில் உழைப்பையும்
கலன்களாய்ப் பூண்டவன் - உயர்க்
கடமையாய்க் கொண்டவன்


இன்னா செய்திட்டாலும்
இவர்க்கும் அவர்க்கும்
நன்னயம் செய்பவன்
எவர்க்கும் என்றும்
நன்மையை நாடுபவன்
அடிகளின் வலிகளைச் சகிப்பவன்
அவற்றை
அழகிய வழிகளிற் கடப்பவன்

கற்றதில் நல்லதைக் காரியமாக்கி
மற்றவர் வாழத் தருபவன்
இதைப் பெற்றவர் பயன்பெற
பாதையைத் திருத்தி வருபவன்

மூத்தவர் வாக்கினை மதிப்பவன்
தோற்றவர் வாழ்வினை
வேற்றொரு வழிகொண்டு
வெற்றியின் இலக்கினில் விதிப்பவன்

இளையவர் படைப்பினை ரசிப்பவன்
அதில்
இழிவுகள் கண்டால்
தெளிவுகள் சொல்லிக் கொடுப்பவன்

அன்பெனும் கருவிக்கு அடங்குபவன்
அதை
அம்பென எய்தாலும்
விற்களின் கோபம் பொறுப்பவன்

நட்பினால் துடிக்கும்
நாடியைக் கொண்டவன்
நல்லதை மட்டுமே
நாடியே வென்றவன்

ஓரிறை கொள்கையில் வாழ்பவன்
உளமதை அடக்கி ஆள்பவன்
பேரிடர் வந்துப்
பிடறியைத் தாக்கினும்
நேரிடை முயன்று மீள்பவன்

என்னுடன் வாருங்கள்
என் தேசம் போவோம்
புன்னகை பூப்பொழிய
புவிதனில் சீவிப்போம்!


                         b.sabeer
, ,