குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

7.10.15

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

யுகமுடிவு நாள்
almighty-arrahim.blogspotcom
யுகமுடிவு நாளின் மாபெரும் பத்து அடையாளங்கள்
1 – புகை மூட்டம்
2 – தஜ்ஜால்
3– (அதிசயப்) பிராணி
4–சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது
5 – ஈஸா (அலை) இறங்கி வருவது
6 – யஃஜுஜ், மஃஜுஜ்
7 – கிழக்கே ஒரு பூகம்பம்
8 – மேற்கே ஒரு பூகம்பம்
9 – அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்
10 – இறுதியாக ஏமனி’லிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச் சென்று ஒன்று சேர்த்தல்
ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி),
நூல்: முஸ்லிம் 5162.
1 – புகை மூட்டம்
இவற்றில் முதலாவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட அடையாளத்திற்கு அதிகமான விளக்கம் எதையும் அவர்கள் கூறவில்லை.
ஆயினும் திருமறைக்குர்ஆனில் புகை மூட்டம் என்ற 44-வது அத்தியாயத்தில் ஓரளவு இது பற்றி விளக்கப்பட்டுள்ளது.
வானம் தெளிவான புகையைக் கொண்டுவரும் நாளை எதிர்பார்ப்பீராக! அது மக்களை மூடிக் கொள்ளும். இதுவே துன்புறுத்தும் வேதனை. ‘எங்கள் இறைவா! எங்களை விட்டும் வேதனையை நீக்குவாயாக! நாங்கள் நம்பிக்கை கொள்பவர்கள் (என்று கூறுவார்கள்) அறிவுரை அவர்களுக்கு எவ்வாறு (பயனளிக்கும்?) அவர்களிடம் தெளிவான தூதர் வந்துள்ளார். பின்னர் அவரை அவர்கள் அலட்சியம் செய்தனர். ‘பிறரால் கற்றுக் கொடுக்கப்பட்டவர்; பைத்தியக்காரர்’ என்றும் கூறினர். வேதனையைச் சிறிது (நேரம்) நாம் நீக்குவோம். நீங்கள் (பழைய நிலைக்கு) திரும்புவீர்கள். மிகக் கடுமையான பிடியாக நாம் பிடிக்கும் நாளில் தண்டிப்போம்.
திருக்குர்ஆன் 44:10 – 44:16
அந்தப் புகை வானிலிருந்து இறங்கி வரும். அதனால் பயங்கரமான பின் விளைவுகள் ஏற்படும். அதைக் காணும் மக்கள் தம்மைத் திருத்திக் கொள்ள முன் வரும் அளவுக்கு அதன் விளைவுகள் கடுமையானதாக இருக்கும் என்பதை இந்த வசனங்களிலிருந்து அறியலாம்.
மக்கா வாசிகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஏற்க மறுத்த போது, புகை மூட்டம் ஏற்பட்டதாகவும் எனவே இந்த அடையாளம் ஏற்கனவே வந்து விட்டதாகவும் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளனர்.
நூல்: புகாரி 1007
இதை நாம் ஏற்கத் தேவையில்லை. ஏற்கவும் கூடாது. ஏனெனில் மதீனா சென்ற பிறகு தான் மேற்கண்ட பத்து அடையாளங்கள் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
இனி மேல் தான் அவை ஏற்படும் என்பது இதிலிருந்து தெரிகின்றது.
மக்காவில் ஏதோ ஒரு புகை மூட்டம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் பிரம்மாண்டமான பத்து அடையாளங்களில் ஒன்று என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிச்சயமாக அதைக் குறிப்பிட்டிருக்க முடியாது.
உங்கள் இறைவன் உங்களுக்கு மூன்று விஷயங்களைப் பற்றி எச்சரிக்கிறான். அவற்றில் ஒன்று புகை மூட்டம். முஃமினை இப்புகை ஜலதோஷம் பிடிப்பது போல் பிடிக்கும். காஃபிரைப் பிடிக்கும் போது அவன் ஊதிப் போவான். அவனது செவிப்பறை வழியாகப் புகை வெளிப்படும். இரண்டாவது (அதிசயப்)பிராணி. மூன்றாவது தஜ்ஜால் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூ மாலிக் (ரலி)
நூல்: தப்ரானி
அப்புகையை காஃபிர்கள் சுவாசிக்கும் போது அப்புகை அவர் களின் காதுகள் வழியாக வெளியேறும் என்றும் அதனால் அவர் களின் உடல் ஊதிவிடும் என்றும் அவர்களுக்கு அதனால் மிகப் பெரிய வேதனை ஏற்படுமென்றும் இந்த ஆதாரங்கள் கூறுகின்றன.
2 – தஜ்ஜால்
பத்து அடையாளங்களில் தஜ்ஜால் என்பவனின் வருகை முக்கியமானதாகும்.
தஜ்ஜால் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்த முன்னறிவிப்புகளை முதலில் அறிந்து கொள்வோம்.
முஸ்லிம் சமுதாயத்தில் தஜ்ஜால் பற்றி பல விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. தஜ்ஜால் என்பது ஒரு தீய சக்தியைப் பற்றியது என்று சிலர் கூறுகின்றனர்.
பிரிட்டனின் கையில் பாதி உலகம் இருந்த போது வாழ்ந்த மாடர்ன்’ மவ்லவிகள், ‘பிரிட்டன் தான் தஜ்ஜால்” என்றனர்.
இஸ்ரேலின் பிரதமர் மோஷே தயானையும் சிலர் தஜ்ஜால் என்றனர்.
ஜார்ஜ் புஷ் என்ற அமெரிக்க அரக்கனின் ஆட்சியைச் சந்தித்த நவீன கால அறிஞர்கள் தஜ்ஜால் என்பது ஜார்ஜ் புஷ்’ தான் என்று அடித்துக் கூறியதும் உண்டு.
தஜ்ஜாலின் சில குணாதிசயங்கள் இவர்களிடம் இருந்திருக்கலாம். தஜ்ஜாலைப் பற்றி எல்லா அறிவிப்புகளையும் ஆராய்ந்தால் அவர்களின் கூற்று பொய்யென உணரலாம். தஜ்ஜால் பற்றிக் கூறப்படும் முன்னறிவிப்பு களில் சில அறிவுக்குப் பொருத்தமாக இல்லாததால் தமது அறிவுக்கு ஏற்ற வகையில் தஜ்ஜாலுக்கு இவ்வாறு விளக்கம் தருகின்றனர்.
மார்க்கத்தைப் பற்றிய ஞானம் சிறிதும் இல்லாத சிலர் தஜ்ஜாலைப் பற்றி அதிகமாகக் கற்பனை செய்து கதைகள் புனைந்துள்ளனர். அவனது தலை, வானத்துக்கும், கால் தரைக்குமாக இருப்பான். கடலில் அவன் நடந்து சென்றால் அவனது கரண்டைக் காலுக்குத் தான் கடல் நீர் இருக்கும். கடலில் மீன் பிடித்து சூரியனுக்கு அருகில் அதைக் காட்டி சுட்டுத் தின்பான் என்றெல்லாம் கடோத்கஜன்’ கதையிலிருந்து காப்பியடித்துக் கூறுகின்றனர்.
இன்னும் சிலர் தஜ்ஜால் பற்றி எதுவுமே அறியாதவர்களாக உள்ளனர். இம்மூன்று சாராரின் அறியாமையையும் அகற்றுவதற்காக தஜ்ஜால் பற்றிய எல்லா முன்னறிவிப்புகளையும் விரிவாக எடுத்து வைப்போம்.
தஜ்ஜாலைப் பற்றி எச்சரிக்கை
நூஹ் (அலை) அவர்களுக்குப் பின் வந்த எந்த நபியும் தஜ்ஜாலைப் பற்றி தமது சமுதாயத்திற்கு எச்சரிக்காமல் விட்ட தில்லை. நிச்சயமாக நானும் அவனைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ உபைதா (ரலி),
நூல்: புகாரி 3057, 3337, 6173, 7127 ,3338, 3440, 3441, 4403, 5902, 6173, 6999, ,7026, 7123, 7127, 7128, 7131, 7407, 7408, 3057
ஆதம் (அலை) படைக்கப்பட்டது முதல் அந்த நாள் வரும் வரையிலும் தஜ்ஜால் விஷயத்தைத் தவிர பெரிய விஷயம் ஏதும் ஏற்படுவதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)
நூல்: முஸ்லிம் 5239
தஜ்ஜாலின் அங்க அடையாளங்கள்
ஒரு கண் ஊனமுற்றவனாக அவன் இருப்பான். அது எந்தக் கண் என்பதில் இருவிதமான ஹதீஸ்கள் வந்திருந்தாலும் அவனது ஒரு கண் ஊனமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
‘நிச்சயமாக அல்லாஹ்வைப் பற்றி உங்களுக்குத் தெரியும். அல்லாஹ் ஒரு கண் ஊனமானவன் அல்லன். ஆனால் தஜ்ஜாலின் வலக்கண் சுருங்கிய திராட்சையைப் போன்று ஊனமுற்றிருக்கும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)
நூல்: புகாரி 3057, 3337, 6173, 7127 ,3338, 3440, 3441, 4403, 5902, 6173, 6999, ,7026, 7123, 7127, 7128, 7131, 7407, 7408, 3057
‘பெரும் பொய்யனாகிய ஒற்றைக் கண்ணனைப் பற்றி எந்த நபியும் தமது சமுதாயத்திற்கு எச்சரிக்காமல் இருந்ததில்லை. நிச்சயமாக தஜ்ஜால் ஒரு கண் ஊனமுற்றவன். உங்கள் இறைவன் ஒரு கண் ஊனமுற்றவன் அல்லன்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி),
நூல்: புகாரி 7131,
தஜ்ஜால் என்பவன் இடது கண் ஊனமானவன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி)
நூல்: புகாரி 3441, 3440, 4403, 5902, 6999, 7026, 7123, 7128, 7407
ஒற்றைக் கண்ணனாக இருப்பவனெல்லாம் தஜ்ஜால் என்று முடிவு செய்து விடக் கூடாது. அவனைப் பற்றி இன்னும் பல அடையாளங்களும் உள்ளன.
ஒரு கண் ஊனமான தஜ்ஜாலின் மற்றொரு அடையாளம் அவனது இரு கண்களுக்கிடையே காஃபிர்’ என எழுதப்பட்டிருக்கும். அதை அனைவரும் படிக்கும் வகையில் அந்த எழுத்துக்கள் பளிச்சென்று தெரியும்.
தஜ்ஜாலின் கண்களுக்கிடையே காஃபிர்’ என்று எழுதப் பட்டிருக்கும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி),
நூல்: புகாரி 7131, 7404
‘எழுதத் தெரிந்த, எழுதத் தெரியாத எல்லா முஃமின்களும் படிக்கும் விதமாக தஜ்ஜாலின் கண்களுக்கிடையே காஃபிர்’ என்று எழுதப்பட்டிருக்கும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி),
நூல்: முஸ்லிம் 5223
ஊனமுற்ற கண்ணின் மூக்கை ஒட்டிய ஓரத்தில் கடினமான சதைக் கட்டி ஒன்று தென்படும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.
நூல்: முஸ்லிம் 5223
ஒரு கண் ஊனமுற்றிருந்தாலும் ஊனமடையாத மற்றொரு கண் பச்சை நிறக் கண்ணாடிக் கற்கள் போன்று அமைந்திருக்கும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.
நூல்: அஹ்மத் 20220
இந்த வர்ணனையின் அடிப்படையில் அவனது முகம் கோரமாக அமைந்திருக்கும் என்று தெரிந்தாலும் அவனது உடலமைப்பில் கவர்ச்சியாகவும் சில உறுப்புகள் அமைந்திருக்கும்.
அவன் சிவந்த நிறமுடையவனாக இருப்பான் என நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.
நூல்: புகாரி 3441, 7026, 7128
அவன் அதிக வெண்மை நிறமுடையவனாக இருப்பான் என நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.
நூல்: அஹ்மத் 2707, 2041
தஜ்ஜாலின் நிறம் குறித்து இரண்டு அறிவிப்புகளும் ஒன்றுக் கொன்று முரண்பட்டது போல் தோன்றினாலும் உண்மையில் இரண்டுக்கும் முரண்பாடு இல்லை.
ஒருவர் சிவந்த நிறமுடையவராகவும், அதிலும் அதிக சிவப்பு நிறமுடையவராக இருந்தால் அவரைப் பற்றி வெள்ளை நிறத்தவர் என்றும் கூறப்படுவதுண்டு. சிவந்த நிறத்தவர் என்றும் கூறப்படுவதுண்டு.
உதாரணமாக வெள்ளையர்கள் என்று ஆங்கிலேயர்களை நாம் குறிப்பிடுகிறோம். எந்த மனிதனும் வெள்ளை நிறத்தில் இருக்க முடியாது. சிவந்த நிறத்தைத் தான் இவ்வாறு குறிப்பிடுகிறோம். அது போலவே இதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
திடகாத்திரமான உடலமைப்புடன் இருப்பான் என நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.
நூல்: புகாரி 3441, 7026, 7128
குறிப்பிட்ட ஒரு மனிதனையே தஜ்ஜால் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்;தீய சக்தியை உருவகமாகச் சொல்லவில்லை என்பதை மேற் கண்ட அடையாளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்த அடையாளங்கள் யாவும் அவன் வானத்துக்கும்,பூமிக்குமாக பிரம்மாண்டமாகத் தென்படுவான் என்ற கற்பனையையும் நிராகரிக்கின்றன.
தஜ்ஜால் இனிமேல் தான் பிறப்பானா?
தஜ்ஜால் இனி மேல் பிறந்து வரப் போகிறானா? அல்லது முன்பே பிறந்து பிற்காலத்தில் வெளியே வருவானா? இதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
தமீமுத்தாரி (ரலி) அவர்கள் கிறிஸ்தவராக இருந்து இஸ்லாத்தை ஏற்றவர். தஜ்ஜாலைச் சந்தித்த விபரத்தை அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தெரிவித்த போது அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள்.
எனவே அவன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்கு முன்பிருந்தே இந்த உலகில் இருந்து வருகிறான் என்பதை நாம் நம்பியாக வேண்டும். அந்த நிகழ்ச்சியில் தஜ்ஜால் பற்றி அதிக விபரங்கள் கிடைப்பதால் அந்த ஹதீஸை முழுமையாகப் பார்ப்போம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அழைப்பாளர் ‘அஸ்ஸலாத்து ஜாமிஆ” (தொழுகை நடத்தும் நேரம் வந்து விட்டது) என்று அறிவிப்பதைச் செவியுற்று நான் பள்ளிவாசல் சென்றேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தொழுதேன். தொழுது முடித்ததும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரித்துக் கொண்டு மிம்பரில் அமர்ந்தார் கள்.’ஒவ்வொருவரும் தொழுத இடத்திலேயே இருங்கள்” என்று கூறிவிட்டு ‘நான் உங்களை ஏன் கூட்டினேன் என்பதை அறிவீர்களா?” என்று கேட்டார்கள். ‘அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று நாங்கள் கூறினோம். அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களுக்கு அச்சமூட்டவோ, ஆர்வமூட்டவோ உங்களை நான் கூட்டவில்லை. தமீமுத்தாரி கிறிஸ்தவராக இருந்தார். அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். தஜ்ஜால் பற்றி நான் உங்களுக்குக் கூறி வந்ததற்கேற்ப அவர் ஒரு செய்தியை என்னிடம் கூறினார். அவர் கூறியதாவது:
லக்ம், ஜுகாம் ஆகிய கோத்திரத்தைச் சேர்ந்த முப்பது நபர்களுடன் கப்பலில் நான் பயணம் செய்தேன். ஒரு மாதம் அலைகளால் நாங்கள் அலைக்கழிக்கப்பட்டோம். சூரியன் மறையும் நேரத்தில் ஒரு தீபகற்பத்தில் ஒதுங்கினோம். சிறு கப்பல் ஏறி தீபகற்பத்தில் நுழைந்தோம். அப்போது அதிகமான மயிர்களைக் கொண்ட பிராணி ஒன்று எங்களை எதிர் கொண்டது. அதிகமான மயிர்கள் இருந்ததால் அப்பிராணியின் மலப்பாதை எது? சிறு நீர்ப்பாதை எது என எங்களால் அறிய முடியவில்லை.
அப்பிராணியிடம் ‘உனக்குக் கேடு உண்டாகட்டும்! நீ என்ன பிராணி?” என்று கேட்டோம்.’நான் ஜஸ்ஸாஸா” என்று அப்பிராணி கூறியது. ‘நீங்கள் இந்த மடத்திலுள்ள மனிதனிடம் செல்லுங்கள்! அவர் உங்களைப் பற்றி அறிவதில் அதிக ஆர்வமுடையவராக இருக்கிறார்”எனவும் அப்பிராணி கூறியது. அது ஒரு மனிதனைப் பற்றிக் கூறியதும் ‘அப்பிராணி ஒரு ஷைத்தானாக இருக்குமோ” என்று அஞ்சினோம்.
நாங்கள் விரைந்து சென்று அந்த மடாலயத்தை அடைந்தோம். அங்கே பருமனான ஒரு மனிதனைக் கண்டோம். அவனைப் போன்ற ஒரு படைப்பை நாங்கள் ஒரு போதும் கண்டதில்லை. இரண்டு கரண்டைக் கால்களுக்கும் முட்டுக்கால்களுக்குமிடையே இரும்பினால் கழுத்துடன் தலை சேர்த்து அவன் கட்டப்பட்டிருந்தான். ‘உனக்குக் கேடு உண்டாகட்டும். ஏனிந்த நிலை?” என்று நாங்கள் கேட்டோம்.
அதற்கு அம்மனிதன், ‘என்னைப் பற்றி அறிய சக்தி பெற்று விட்டீர்கள். எனவே நீங்கள் யார்? என எனக்குக் கூறுங்கள் என்றான்.”
‘நாங்கள் அரபியர்கள். ஒரு கப்பலில் பயணம் செய்த போது ஒரு மாதம் கடல் எங்களை அலைக்கழித்து இந்தத் தீபகற்பத்தில் நுழைந்தோம். அடர்ந்த மயிர்களைக் கொண்ட ஒரு பிராணியைக் கண்டோம். அப்பிராணி நான் ஜஸ்ஸாஸா’ ஆவேன். இந்த மடாலயத் தில் உள்ள மனிதரைச் சந்தியுங்கள் என்று கூறியது. எனவே உம்மிடம் விரைந்து வந்தோம். அதனால் திடுக்குற்றோம். அது ஷைத்தானாக இருக்குமோ என்று அஞ்சினோம்.” எனக் கூறினோம்.
‘பைஸான் எனுமிடத்தில் உள்ள பேரீச்சை மரங்கள் பலன் தருகின்றனவா?” என எனக்குக் கூறுங்கள் என்று அம்மனிதன் கேட்டான். நாங்கள் ஆம் என்றோம். அதற்கு அம்மனிதன்’விரை வில் அங்குள்ள மரங்கள் பலனளிக்காமல் போகலாம்” என்றான்.
‘தபரிய்யா எனும் ஏரியைப் பற்றி எனக்குக் கூறுங்கள்! அதில் தண்ணீர் உள்ளதா?” என்று அவன் கேட்டான். ‘அதில் அதிகமான தண்ணீர் உள்ளது” என்று நாங்கள் கூறினோம். ‘அந்தத் தண்ணீர் விரைவில் வற்றி விடக் கூடும்” என்று அவன் கூறினான்.
‘ஸுகர் என்னும் நீரூற்றில் தண்ணீர் உள்ளதா? அங்குள்ளவர்கள் அத்தண்ணீரால் விவசாயம் செய்கிறார்களா?” என்று அவன் கேட்டான். அதற்கு நாங்கள் ‘ஆம்! தண்ணீர் அதிகமாகவே உள்ளது; அங்குள்ளோர் அத்தண்ணீரால் விவசாயம் செய்து வருகின்றனர்” என்றோம்.
‘உம்மி சமுதாயத்தில் தோன்றக் கூடிய நபியின் நிலை என்ன? என்பதை எனக்குக் கூறுங்கள்” என்று அம்மனிதன் கேட்டான். அவர் ‘மக்காவிலிருந்து புறப்பட்டு மதீனாவில் தங்கியிருக்கிறார்” என்று கூறினோம்.
‘அவருடன் அரபுகள் போர் செய்தார்களா?” என்று அம்மனிதன் கேட்டான். நாங்கள் ஆம்’என்றோம். ‘போரின் முடிவு எவ்வாறு இருந்தது?” என்று அவன் கேட்டான். அதற்கு நாங்கள்’அவர் தன்னை அடுத்துள்ள அரபியரையெல்லாம் வெற்றி கொண்டு விட்டார்” எனக் கூறினோம். ‘அவருக்கு வழிப்படுவதே அவர்களுக்கு நல்லதாகும்” என்று அவன் கூறினான்.
நான் இப்போது என்னைப் பற்றிக் கூறப் போகிறேன். ‘நான் தான் தஜ்ஜால் ஆவேன். (இங்கிருந்து) வெளியேற வெகு விரைவில் எனக்கு அனுமதி வழங்கப்படலாம். அப்போது நான் வெளியே வருவேன். பூமி முழுவதும் பயணம் செய்வேன். (நான் பயணிக்கக் கூடிய) நாற்பது நாட்களில் எந்த ஊரையும் அடையாமல் இருக்க மாட்டேன். ஆயினும், மக்கா,மதீனா ஆகிய இரு ஊர்களைத் தவிர. அவ்விரு ஊர்களும் எனக்கு விலக்கப்பட்டுள்ளன. அவ்விரண்டு ஊர்களுக்குள் நான் நுழைய முயலும் போதெல்லாம் தன் கையில் வாளுடன் ஒரு மலக்கு என்னை எதிர் கொண்டு தடுத்து நிறுத்துவார். அவற்றின் ஒவ்வொரு வழியிலும் அதைக் காக்கும் வானவர்கள் இருப்பர்” என்று அம்மனிதன் கூறினான்.
இதை தமீமுத்தாரி (ரலி) அவர்கள் தம்மிடம் கூறியதாக நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். மேலும் தமது கைத்தடியால் மிம்பர் மீது தட்டி, ‘இது (மதீனா) தைபா (தூய நகரம்) இது தைபா; இது தைபா” எனக் கூறினார்கள். ‘இதே விஷயத்தை முன்பே நான் உங்களிடம் கூறியிருக்கிறேன் அல்லவா?” என்று மக்களிடம் கேட்டார்கள். மக்கள் ‘ஆம்”என்றனர்.
அறிந்து கொள்க! நிச்சயம் அவன் ஷாம் நாட்டின் கடல் பகுதியில் இருக்கிறான், அல்லது எமன் நாட்டின் கடல் பகுதியில் இருக்கிறான், இல்லை; இல்லை; அவன் கிழக்குத் திசையில் இருக்கிறான் என மும்முறை கூறினார்கள்.
இந்த நிகழ்ச்சியை ஃபாத்திமா பின்த் கைஸ்(ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல்: முஸ்லிம் 5235.
தஜ்ஜால் என்பவன் நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்கு முன்பி ருந்தே ஏதோ ஓரிடத்தில் இருந்து வருகிறான் என்பதையும் அவனைப் பற்றிய ஓரளவு விபரங்களையும் இதிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.
இஸ்லாத்தை எதிர்ப்பான்
முஸ்லிம் சமுதாயத்தை வழி கெடுப்பவர்கள் பல வகையினராக இருப்பார்கள். தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொண்டே வழி கெடுப்பவர்களும் தோன்றுவார்கள். இஸ்லாத்தை விட்டு வெளி யேறுமாறு கூறி வழிகெடுப்பவர்களும் தோன்றுவார்கள். தஜ்ஜால் என்பவன் இரண்டாம் வகையைச் சேர்ந்தவனாக இருப்பான்.
அவன் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவனாகவும் இருக்க மாட்டான். இஸ்லாத்தின் பால் அழைப்பதாகவும் கூற மாட்டான்.
இஸ்பஹான் பகுதியைச் சேர்ந்த யூதர்களில் ஒருவனாக தஜ்ஜால் வெளிப்படுவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: முஸ்லிம் 5237.
‘தஜ்ஜாலின் நெற்றிக்கிடையே காபிர்’ என்று எழுதப்பட்டிருக்கும், எழுதத் தெரிந்த, எழுதத் தெரியாத அனைத்து முஃமின்களும் அதைப் படிப்பார்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி),
நூல்: முஸ்லிம் 5223
அவன் இஸ்லாமிய வட்டத்தில் உள்ளதாக தன்னைக் கூறிக் கொள்ள மாட்டான் என்பதற்கு அவன் செய்யும் வாதமும் சான்றாக உள்ளது.
அவன் தன்னைக் கடவுள் என வாதிடுவான்.
‘தஜ்ஜால் என்பவன் ஒரு கண் ஊனமுற்றவன். உங்களது இறைவன் ஒரு கண் ஊனமுற்றவனல்லவன்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
நூல்: புகாரி 3057, 3337, 6173, 7127, 7131, 7407, 7408
தஜ்ஜாலின் அற்புதங்கள்
இஸ்லாத்தின் பெயரைக் கூறாமல் எவ்வாறு முஸ்லிம்களை வழிகெடுக்க இயலும்? என்ற ஐயம் தோன்றலாம்.
தன்னைக் கடவுள் என்று சாதிக்கும் வகையில் அவன் பிரமிப்பூட்டும் அற்புதங்களைச் செய்வான்.
ஒன்றிரண்டு தந்திர வேலைகளைச் செய்வோரின் வலையில் அப்பாவி முஸ்லிம்கள் அநேகர் விழுந்து ஈமானை இழந்து வருவதை இன்றைக்கும் நாம் காண்கிறோம். அவர்களையெல்லாம் விட மிகப் பெரும் அற்புதங்களை நிகழ்த்தும் தஜ்ஜாலின் வலையில் முஸ்லிம்கள் விழுவது ஆச்சரியத்திற்குரியது அல்ல. அவன் நிகழ்த்தும் அற்புதங்கள் எத்தகையதாக இருக்கும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்.
‘மழை பொழியுமாறு வானத்திற்குக் கட்டளையிடுவான். அது மழை பொழியும்,முளைப்பிக்குமாறு பூமிக்குக் கட்டளையிடுவான். அது (பயிர்களை) முளைப்பிக்கும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி),
நூல்: முஸ்லிம் 5228
‘பின்னர் மக்களிடம் வந்து (தன்னைக் கடவுள் என்று ஏற்குமாறு) அழைப்பு விடுவான். அவனை ஏற்க மக்கள் மறுப்பார் கள். அவர்களை விட்டு அவன் விலகி விடுவான். காலையில் அம்மக்கள் தங்கள் அனைத்துச் செல்வங்களையும் இழந்து விடுவார்கள்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி),
நூல்: முஸ்லிம் 5228.
பாழடைந்த இடத்துக்குச் சென்று ‘உன்னுடைய புதையல்களை வெளிப்படுத்து” என்று கூறுவான். அதன் புதையல்கள் தேனீக்களைப் போன்று அவனைப் பின் தொடரும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 5228
‘திடகாத்திரமான ஒரு இளைஞனை அவன் அழைத்து வாளால் இரண்டு துண்டுகளாக வெட்டுவான். பிறகு அவனைக் கூப்பிடுவான். உடனே அந்த இளைஞன் சிரித்துக் கொண்டு பிரகாசமான முகத்துடன் உயிர் பெறுவான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி), நூற்கள்: முஸ்லிம் 5228
ஒரு நாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தஜ்ஜால் பற்றி நீண்ட விளக்கம் தந்தார்கள். மதீனாவின் நுழைவாயிலுக்கு வருவது அவனுக்கு விலக்கப்பட்டுள்ளது. எனவே மதீனாவிற்கு வெளியில் உள்ள உவர் நிலத்திற்கு வருவான். ஒரு நாள் சிறந்த மனிதர் ஒருவர் அவனிடம் செல்வார். ‘அல்லாஹ்வின் தூதர் அவர்கள் எச்சரிக்கை செய்த தஜ்ஜால் நீ தான் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று அவர் கூறுவார். ‘இவரைக் கொன்று விட்டு பின்னர் நான் உயிர்ப்பித்தால் (நான் கடவுள் என்ற) இவ்விஷயத்தில் சந்தேகம் கொள்வீர்களா?” என்று அவன் கேட்பான். அவர்கள் மாட்டோம் என்பார்கள். உடனே அவரை அவன் கொல்வான். பின்னர் உயிர்ப்பிப்பான். உயிர்ப்பிக்கப்பட்டதும் அந்த நல்ல மனிதர்’முன்பிருந்ததை விட இன்னும் தெளிவாக நான் இருக்கிறேன்” என்று கூறுவார். உடனே தஜ்ஜால் அவரைக் கொல்ல நினைப்பான். அவனால் அது இயலாது என்று நபி(ஸல்) கூறினார்கள்.
நூல்: புகாரி 7132, 1882
இறந்தவர்களை அவன் உயிர்ப்பிப்பது ஒரே ஒரு தடவை தான் நிகழும். இதனால் தான் இரண்டாம் முறை அந்த நல்ல மனிதரை அவனால் கொல்ல இயலவில்லை.
இறந்தவர்களை உயிர்ப்பிப்பது என்பது ஒரே தடவை மட்டுமே அவனால் செய்ய இயலும்;தொடர்ந்து செய்ய இயலாது.
ஒரு மனிதனைக் கொன்று அவனை உயிர்ப்பிப்பான். மற்றவர்கள் விஷயத்தில் அவனால் இவ்வாறு செய்ய இயலாது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக அன்ஸாரித் தோழர் ஒருவர் அறிவிக்கிறார்.
நூல்: அஹ்மத் 22573
தஜ்ஜால் பிறவிக் குருடையும், வெண் குஷ்டத்தையும் நீக்குவான். இறந்தவர்களையும் உயிர்ப்பிப்பான். மக்களிடம் ‘நானே உங்கள் இறைவன்” என்பான். ‘யாரேனும் நீ தான் என் இறைவன்” என்று கூறினால் அவன் சோதனையில் தோற்று விட்டான். ‘அல்லாஹ் தான் என் இறைவன்” என்று யார் கூறி அதிலேயே மரணித்து விடுகிறாரோ அவர் தஜ்ஜாலின் சோதனையிலிருந்து விடுபட்டு விட்டார்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸமுரா பின் ஜுன்துப் (ரலி),
நூல்: அஹ்மத் 19292
அவனைப் பின்பற்றியவர்கள் தவிர ஏனைய மக்கள் மிகவும் வறுமையில் இருக்கும் போது அவனிடம் மலை போல் ரொட்டி இருக்கும். அவனிடம் இரண்டு நதிகள் இருக்கும். ஒன்றை அவன் சொர்க்கம் என்பான். இன்னொன்றை நரகம் என்பான். அவன் சொர்க்கம் என்று குறிப்பிடும் நதி உண்மையில் நரகமாகும். அவன் நரகம் என்று குறிப்பிடும் நதி உண்மையில் சொர்க்கமாகும். மழை பொழியுமாறு வானத்திற்குக் கட்டளையிடுவான். மக்கள் பார்க்கும் வகையில் மழை பெய்யும். ‘இதைக் கடவுளைத் தவிர வேறு யாரும் செய்ய முடியுமா? என்று கேட்பான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி),
நூல்: அஹ்மத் 14426
தஜ்ஜாலிடம் தண்ணீரும், நெருப்பும் இருக்கும். மக்கள் எதைத் தண்ணீர் என்று காண்கிறார்களோ அது சுட்டெரிக்கும் நெருப்பாகும். மக்கள் எதனை நெருப்பு என்று காண்கிறார்களோ அது சுவை மிக்க குளிர்ந்த நீராகும். உங்களில் யாரேனும் இந்த நிலையை அடைந்தால் நெருப்பு என்று காண்பதில் விழட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி),
நூல்: புகாரி 7130
தஜ்ஜால் வாழும் நாட்கள் எத்தனை?
இவ்வளவு அற்புத சக்தியுடன் வெளிப்படும் தஜ்ஜால் நீண்ட நாட்கள் ஆட்டம் போட முடியாது. வெறும் நாற்பது நாட்கள் மட்டுமே அவன் இவ்வுலகில் இருப்பான்.
‘தஜ்ஜால் இப்பூமியில் எவ்வளவு காலம் தங்கியிருப்பான்” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாற்பது நாட்கள். ஒரு நாள் ஒரு வருடம் போன்றும், ஒரு நாள் ஒரு மாதம் போன்றும், ஒரு நாள் ஒரு வாரம் போன்றும் ஏனைய நாட்கள் சாதாரண நாட்களைப் போன்றுமிருக்கும் என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி),
நூல்: முஸ்லிம் 5228
தஜ்ஜால் நுழைய முடியாத இடங்கள்
இந்த நாற்பது நாட்களில் உலகம் முழுவதும் அவன் சுற்றி வருவான். ஆயினும் சில இடங்களை அவனால் அடைய முடியாது எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளார்கள்.
மதீனா’ நகருக்கு தஜ்ஜால் பற்றிய அச்சம் இல்லை. அன்றைய தினம் மதீனாவுக்கு ஏழு வாயில்கள் இருக்கும். ஒவ்வொரு வாயிலிலும் இரண்டு மலக்குகள் இருப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி),
நூல்: புகாரி 7125
‘தஜ்ஜால் கீழ்த்திசையிலிருந்து மதீனாவைக் குறிக்கோளாகக் கொண்டு புறப்பட்டு வருவான். அப்போது மலக்குகள் அவனது முகத்தை ஷாம்’ பகுதியை நோக்கித் திருப்புவார்கள். அங்கே தான் அவன் அழிவான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: முஸ்லிம் 2450
‘இஸ்பஹான் நாட்டு யூதர்களில் ஒருவனாக தஜ்ஜால் புறப்பட்டு வருவான். மதீனாவை நெருங்கி அதன் எல்லையில் இறங்குவான். அன்றைய தினம் மதீனாவுக்கு ஏழு வாயில்கள் இருக்கும். ஒவ்வொரு வாயிலிலும் இரண்டு மலக்குகள் இருப்பார்கள். அவனை நோக்கி (மதீனாவில் உள்ள) கெட்ட மக்கள் புறப்பட்டுச் செல்வார்கள். ஷாம் நாட்டில் உள்ள பாலஸ்தீன் நகரின் லுத்’ எனும் வாசலுக்கு அவன் புறப்பட்டுச் செல்வான். அங்கே ஈஸா (அலை) இறங்கி அவனைக் கொல்வார்கள். அதன் பின் நாற்பது ஆண்டுகள் ஈஸா (அலை) இப்பூமியில் நேர்மையான தலைவராக, சிறந்த நீதிமானாக வாழ்வார்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: அஹ்மத் 23327
மதீனாவுக்கு மட்டுமின்றி மற்றும் மூன்று இடங்களுக்கும் அவனால் செல்ல முடியாது.
‘அவன் நாற்பது நாட்கள் பூமியில் வாழ்வான். அனைத்து இடங்களையும் அவன் அடைவான். மஸ்ஜிதுல் ஹராம், மதீனா வின் மஸ்ஜித், தூர் மஸ்ஜித், பைத்துல் முகத்தஸ் ஆகிய நான்கு பள்ளிகளை அவன் நெருங்க முடியாது” என்பது நபிமொழி.
நூல்: அஹ்மத் 22571
தஜ்ஜாலிடமிருந்து பாதுகாப்புப் பெறும் வழி
தஜ்ஜாலின் காலத்தை அடைபவர்கள் அவனிடமிருந்து எவ்வாறு பாதுகாப்புப் பெறுவது என்பதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நமக்கு இரண்டு வழிகளைக் கற்றுத் தந்துள்ளார்கள்.
தொழுகையில் அத்தஹிய்யாத்தின் இறுதியில் நான்கு விஷயங் களை விட்டும் பாதுகாப்புத் தேடுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதனை செய்தார்கள். அதில் ஒன்று ‘தஜ்ஜாலின் சோதனையை விட்டும் இறைவா உன்னிடம் பாதுகாப்புக் கேட்கிறேன்”என்பதாகும்.
நூல்: புகாரி 833, 1377, 6368, 6375, 6376, 6377
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கற்றுத் தந்துள்ளதால், ஜங்காலமும் தொழுது இந்தப் பிரார்த்தனையைச் செய்து வருபவர்கள் அவனது மாய ஜாலத்தில் மயங்க மாட்டார்கள்; ஈமானை இழக்க மாட்டார்கள்.
தஜ்ஜாலின் வருகைக்கு முன் நாம் செய்ய வேண்டிய பிரார்த்தனை இது. தஜ்ஜாலை நமது காலத்தில் நாம் அடைந்தால் அவனது அற்புதத்தில் மயங்கி ஈமானை இழக்காமலிருக்க கஹ்ப்’ அத்தியாத்தின் ஆரம்பப் பகுதியை நாம் ஓதி வர வேண்டும்.
‘உங்களில் யாரேனும் அவனை அடைந்தால் கஹ்பு அத்தியாயத்தின் ஆரம்பப் பகுதியை ஓதுங்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி),
நூல்: முஸ்லிம் 5228
தஜ்ஜால் வெளிப்படும் இடம்
தஜ்ஜால் சிரியாவுக்கும், இராக்குக்கும் இடையே வெளிப்பட்டு வலப்புறமும், இடப்புறமும் விரைந்து செல்வான். ‘அல்லாஹ்வின் அடியார் களே! உறுதியாக நில்லுங்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 5228
மேற்கில் உள்ள குராஸான் என்ற பகுதியிலிருந்து தஜ்ஜால் வெளிப்படுவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
நூல் : திர்மிதீ 2163
தஜ்ஜால் எந்தப் பகுதியிலிருந்து வெளிப்படுவான் என்பதை இந்த ஹதீஸ்களிலிருந்து அறியலாம்.
3 – ஈஸா நபியின் வருகை
தஜ்ஜாலின் கொடுமை தலை விரித்தாடும் போது ஈஸா நபியவர்கள் வானிலிருந்து இவ்வுலகுக்கு இறங்கி வருவார்கள் என்பது பத்து அடையாளங்களில் ஒன்றாகும்.
ஈஸா நபி வருவார்கள் என்று நம்புவது குர்ஆனுக்கு எதிரானது என்றும் ஆதாரமற்றது என்றும் சிலர் வாதிடுகின்றனர். தமது வாதத்தை நிலை நாட்ட சில ஆதாரங்களையும் முன் வைக்கின்றனர்.
எனவே அது பற்றி விரிவாக அறிந்து கொள்ளும் கடமை நமக்கு உள்ளது. அதை இங்கே விளக்கினால் கியாமத் நாளின் அடை யாளங்கள் என்ற தலைப்பை விட்டு விலகிச் செல்வதாகத் தோன்றும்.
எனவே ஈஸா நபி மரணித்து விட்டார்களா? என்ற தலைப்பில் தனியாக ஒரு ஆய்வுக் கட்டுரை நூலின் இறுதியில் சேர்த்துள்ளோம். அக்கட்டுரை இது குறித்த அனைத்து சந்தேகங்களையும் நீக்கும். இன்ஷா அல்லாஹ்.
தஜ்ஜால் இவ்வாறு ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் போது ஈஸா நபியவர்கள் வருவார்கள் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு விளக்குகிறார்கள்.
இவ்வாறு இருக்கும் போது மர்யமின் மகன் மஸீஹ் எனும் ஈஸாவை அல்லாஹ் அனுப்புவான். அவர்கள் குங்குமச் சாயம் தோய்க்கப்பட்ட இரண்டு ஆடைகள் அணிந்து தமது இரு கைகளையும் இரண்டு வானவர்களின் சிறகுகள் மீது வைத்தவர்களாக டமாஸ்கஸ் (திமிஷ்க்) நகரின் கிழக்கே உள்ள வெள்ளை மினராவின் அருகே இறங்குவார்கள். அவர்கள் தலையைக் குனிந்தால் நீர் சொட்டும்! தலையை உயர்த்தினால் முத்துக்களைப் போல் வியர்வைத் துளிகள் உதிரும். அப்போது அவர்களின் பெருமூச்சு இறை மறுப்பாளர் மீது பட்டால் அவர் மரணிக்காமல் இருக்க மாட்டார். அவர்களின் பார்வை எட்டும் தொலைவுக்கு அவர்களின் பெருமூச்சு செல்லும். அவர்கள் தஜ்ஜாலைத் தேடுவார்கள். (பைத்துல் முகத்தஸ் அருகில் உள்ள) லுத் என்ற கிராமத்தின் வாசலில் அவனைக் கொல்வார்கள்.
நூல் : முஸ்லிம் 5228
மர்யமுடைய மகன் நீதியான தீர்ப்பளிப்பவராக இறங்கும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது. அவர் சிலுவையை முறிப்பார். பன்றியைக் கொல்வார். ஜிஸ்யா வரியை நீக்குவார். வாங்குவதற்கு யாரும் இல்லாத அளவுக்குச் செல்வம் கொழிக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி 2476, 3448, 3449
ஈஸா நபி இறங்கும் போது ஒட்டகங்கள் சவாரி செய்யப்படாமல் விடப்படும். பொறாமையும், கள்ளமும், கபடமும் இல்லாது ஒழியும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 221
ஈஸா நபி நபியாக வர மாட்டார்
ஈஸா நபியவர்கள் இறுதிக் காலத்தில் வரும் போது இறைத் தூதராக வர மாட்டார்கள். புதிய மார்க்கம் எதையும் கொண்டு வர மாட்டார்கள்.
உங்கள் இமாம் உங்களைச் சேர்ந்தவராக இருக்கும் போது ஈஸா நபியவர்கள் இறங்குவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
நூல் : புகாரி 3449
ஈஸா நபியவர்கள் இறங்கும் போது அப்போதைய முஸ்லிம்களின் தலைவர் ‘வாருங்கள்! எங்களுக்குத் தொழுகை நடத்துங்கள்” என்று ஈஸா நபியிடம் கேட்பார். அதற்கு ஈஸா நபியவர்கள் ‘உங்களைச் சேர்ந்த ஒருவர் தான் உங்களுக்குத் தலைவராக இருக்க முடியும். இது இந்தச் சமுதாயத்துக்கு இறைவன் அளித்த கண்ணியமாகும்” என்று ஈஸா நபி கூறி விடுவார்கள் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 225
தஜ்ஜாலைக் கொல்வார்கள்
ரோமானியர்கள் (அதாவது கிறித்தவ சக்திகள்) அஃமாக் அல்லது தாபிக் என்ற இடத்தில் பாளையம் இறங்குவார்கள். அவர்களை எதிர் கொள்வதற்காக அன்றைய உலகில் மிகச் சிறந்தவர்களைக் கொண்ட படை ஒன்று மதீனாவிலிருந்து புறப்படும். போருக்காக அணிவகுத்த பின் ‘எங்களைச் சேர்ந்தவர்களைச் சிறைப்பிடித்தவர் களுடன் நாங்கள் போரிட வேண்டும். நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்” என்று ரோமானியர்கள் கேட்பார்கள். அதற்கு முஸ்லிம்கள் ‘எங்கள் சகோதரர்களைத் தாக்க நாங்கள் இடம் தர மாட்டோம்” என்று கூறி அவர்களுடன் போர் புரிவார்கள். முஸ்லிம்களின் படையில் மூன்றில் ஒரு பகுதியினர் பின் வாங்கி விடுவார்கள். அவர்களை அல்லாஹ் ஒரு போதும் மன்னிக்க மாட்டான். மற்றொரு மூன்றில் ஒரு பகுதியினர் கொல்லப்படுவார்கள். அல்லாஹ்விடத்தில் அவர்கள் தாம் சிறந்த ஷஹீத்கள் ஆவர். மற்றொரு மூன்றில் ஒரு பகுதியினர் வெற்றி பெறு வார்கள். அவர்கள் கான்ஸ்டான்டி நோபிலை வெற்றி கொள்வார்கள். தமது வாள்களை ஒலிவ மரத்தில் தொங்க விட்டு போரில் கிடைத்த செல்வங்களைப் பங்கிட்டுக் கொண்டிருப்பார்கள். அப்போது மஸீஹ் (ஈஸா நபி) வந்து விட்டார் என்று ஷைத்தான் பரப்புவான். உடனே அவர்கள் புறப்படுவார்கள். ஆனால் அது பொய்யாகும்.
அவர்கள் சிரியாவுக்கு வந்து போருக்காக படை அணிகளைச் சரி செய்து கொண்டிருக்கும் போது மர்யமின் மகன் ஈஸா இறங்குவார்கள். அவர்களுக்குத் தளபதியாக ஆவார்கள். அல்லாஹ்வின் எதிரி (தஜ்ஜால்) அவர்களைக் காணும் போது தண்ணீரில் உப்பு கரைவது போல் கரைந்து விடுவான். அப்படியே அவர்கள் அவனை விட்டு விட்டால் அவன் அழிந்து விடுவான். ஆனாலும் ஈஸா நபியவர்கள் அவனைத் தமது கையால் கொல்வார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 5157
தஜ்ஜாலைக் கண்டவுடன் மக்கள் மலைகளை நோக்கி ஓட்டம் பிடிப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அல்லாஹ் வின் தூதரே! அந்நாளில் அரபுகள் எங்கே? என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அரபுகள் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் இருப்பார்கள்” என விடையளித்தார்கள்.
நூல் : முஸ்லிம் 5238
தஜ்ஜாலைக் கொன்ற பின் தஜ்ஜாலிடமிருந்து தப்பித்த கூட்டத்தினர் ஈஸா நபியிடம் வருவார்கள். அவர்களின் முகத்தைத் தடவிக் கொடுப்பார்கள். சொர்க்கத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் பதவிகளைப் பற்றி அவர்களுக்கு எடுத்துக் கூறுவார்கள்.
நூல் : முஸ்லிம் 5228
தஜ்ஜாலை ஈஸா நபி கொன்ற பின்னர் ஏழு ஆண்டுகள் எந்த இருவருக்கிடையிலும் எந்தப் பகையும் இல்லாத நிலை ஏற்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 5233
இந்த நிலையில் ‘யாராலும் வெல்ல முடியாத அடியார்களை நான் வெளிப்படுத்தியுள்ளேன். அவர்களைத் தூர் மலையின் பால் அழைத்துச் செல்வீராக” என்று ஈஸா நபிக்கு அல்லாஹ் செய்தி அனுப்புவான்.
நூல் : முஸ்லிம் 5228
ஈஸா நபி அடக்கம் செய்யப்படும் இடம்
ஈஸா நபியவர்கள் மரணித்த பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத் தலத்தின் அருகில் அடக்கம் செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கை பரவலாகக் காணப்படுகின்றது.
இது குறித்து திர்மிதியில் 3550வது ஹதீஸிலும் இன்னும் சில நூல்களிலும் ஒரு ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை உஸ்மான் பின் ளஹ்ஹாக் என்பவர் அறிவிக்கிறார். இவர் பலவீனமானவர். இது குறித்து ஹதீஸ்கள் யாவும் பலவீனமானவையே என்று திர்மிதீ இமாம் குறிப்பிடுகிறார்கள்.
4 – யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்த பத்து அடையாளங்களில் யஃஜுஜ், மஃஜுஜ் எனும் கூட்டத்தினரின் வருகையும் ஒன்றாகும். இக்கூட்டத்தினர் பற்றி திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் பல விபரங்கள் கூறப்பட்டுள்ளன.
இந்தக் கூட்டத்தினர் இனி மேல் தான் பிறந்து வருவார்கள் என்பதில்லை. நீண்ட காலமாகவே அவர்கள் இருந்து வருகின்றனர்.
முடிவில் இரண்டு மலைகளுக்கிடையே உள்ள பகுதியை அவர் அடைந்த போது,அதற்கப்பால் எந்தப் பேச்சையும் புரிந்து கொள்ளாத ஒரு சமுதாயத்தைக் கண்டார்.’துல்கர்னைனே! யஃஜூஜ், மஃஜூஜ் என்போர் பூமியில் குழப்பம் விளைவிக்கின்றனர். எங்க ளுக்கும், அவர்களுக்கும் இடையே ஒரு தடுப்பை நீர் ஏற்படுத்திட உமக்கு நாங்கள் வரி தரட்டுமா?” என்று அவர்கள் (சைகை மூலம்) கேட்டனர். ‘என் இறைவன் எனக்கு அளித்திருப்பதே சிறந்தது. வமையால் எனக்கு உதவுங்கள்! உங்களுக்கும், அவர்களுக்குமி டையே தடுப்பை அமைக்கிறேன்” என்றார். (தனது பணியாளர்களி டம்) ‘என்னிடம் இரும்புப் பாளங்களைக் கொண்டு வாருங்கள்!” என்றார். இரு மலைகளின் இடைவெளி (மறைந்து) மட்டமான போது ‘ஊதுங்கள்!” என்று கூறி அதைத் தீயாக ஆக்கினார். ‘என்னிடம் செம்பைக் கொண்டு வாருங்கள்! அதன் மீது (உருக்கி) ஊற்றுவேன்” என்றார். அதில் மேலேறுவதற்கும்,அதில் துவாரம் போடவும் அவர்களுக்கு இயலாது. இது எனது இறை வனின் அருள். என் இறைவனின் வாக்கு நிறைவேறும் போது இதை அவன் தூளாக்கி விடுவான். என் இறைவனின் வாக்குறுதி உண்மை யானது என்றார். அவர்களை ஒருவரோடு ஒருவராக மோத விடுவோம். ஸூர் ஊதப்படும். அவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவோம்.
(அல்குர்ஆன் 18:94-99)
முன்பே அந்தக் கூட்டத்தினர் இருந்து வருகின்றனர். அவர்கள் மலைகளால் சூழப்பட்ட பகுதியில் வசிக்கின்றனர். அம் மலைகளுக் கிடையே இரும்புப் பாளங்களை அடுக்கி செம்பு உருக்கி ஊற்றப்பட்டுள்ளது. அதைத் தாண்டி வரவும் முடியாது. அதைக் குடைந்து வெளியே வரவும் முடியாது.
யுக முடிவு நாளின் நெருக்கத்தில் அந்தத் தடை உடைக்கப்பட்டு அவர்கள் வெளிப்பட்டு வருவார்கள். ஒருவருடன் ஒருவர் முட்டி மோதிக் கொள்ளும் அளவுக்கு அவர்களின் எண்ணிக்கை பெருமளவில் இருக்கும் என்றெல்லாம் இந்த வசனங்களிலிருந்து நாம் அறியலாம்.
இறுதியில் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் திறந்து விடப்படுவார்கள். உடனே அவர்கள் (வெள்ளம் போல் ஒவ்வொரு மேட்டிலிருந்தும்) விரைந்து வருவார்கள்.
(அல்குர்ஆன் 21:96)
யுகமுடிவு நாளின் நெருக்கத்தில் அவர்களுக்கு வழி திறக்கப்படும் என்பதை இந்த வசனமும் அறிவிக்கின்றது.
அப்போது அல்லாஹ் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினரை அனுப்பு வான். அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் விரைந்து வருவார்கள். அவர்களில் முதலில் வருபவர்கள் தபரிய்யா என்ற ஏரியில் தண்ணீரைக் குடிப்பார்கள். பின்னால் வருபவர்களுக்கு தண்ணீர் இருக்காது. அந்த நேரத்தில் ஈஸா நபியவர்களும், அவர்களின் தோழர்களும் முற்றுகையி டப்படுவார்கள். ஒரு மாட்டின் தலை இன்றைய நூறு தங்கக் காசுகளுக்குச் சமமாகத் தோன்றும் அளவுக்கு முற்றுகை நீடிக்கும். ஈஸா நபியவர்கள் அல்லாஹ்விடம் இறைஞ்சுவார்கள். ஒரேயடியாக யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் செத்து விழுவார்கள். பின்னர் ஈஸா நபியவர்களும், அவர்களின் தோழர்களும் தூர் மலையிலிருந்து கீழே இறங்குவார்கள். ஒரு ஜான் இடம் கூட மிச்சமில்லாமல் அவர்களின் உடல் பூமி முழுவதும் சிதறிக் கிடக்கும். நாற்றமெடுக்கும். அப்போது ஈஸா நபியவர்கள் மீண்டும் அல்லாஹ்விடம் இறைஞ்சுவார்கள்.
அப்போது அல்லாஹ் ஒட்டகத்தின் கழுத்தைப் போன்ற பறவைகளை அனுப்புவான். அவை உடல்களைத் தூக்கிச் சென்று வீசி எறியும். பின்னர் அல்லாஹ் மழையைப் பொழிவிப்பான். கூடாரமோ, மண் வீடுகளோ எதையும் விட்டு வைக்காமல் அவற்றின் மேல் மழை பொழியும். பூமியைக் கண்ணாடி போல் சுத்தமாக்கும்.
“பூமியே உனது பழங்களை முளைக்கச் செய்! உனது அபிவிருத்தி யைத் திரும்பக் கொடு” என்று (இறைவனால்) பூமிக்குக் கட்டளை பிறப்பிக்கப்படும். அந்நாளில் ஒரு மாதுளையை ஒரு பெரும் கூட்டம் சாப்பிடும். அதன் தோல்களில் நிழல் பெறு வார்கள். பாலில் பரகத் செய் யப்படும். ஒரு ஒட்டகத்தில் கறக்கும் பால் ஒரு பெரும் கூட்டத்துக்குப் போதுமானதாக இருக்கும். ஒரு மாட்டில் கறக்கப்படும் பால் ஒரு கோத் திரத்துக்குப் போது மானதாக ஆகும். ஒரு ஆட்டில் கறக்கப்படும் பால் ஒரு குடும்பத் துக்குப் போதுமானதாக அமையும். இவர்கள் இவ்வாறு இருக்கும் போது தூய்மையான காற்றை அல்லாஹ் அனுப்புவான். அனைத்து முஸ்லிம்களின் உயிர்களையும் அது கைப்பற்றும். மிகவும் கெட்டவர்கள் மட்டுமே மிஞ்சுவார்கள். அவர்கள் வாழும் போது தான் உலகம் அழியும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 5228
யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் பைத்துல் முகத்தஸ் பகுதியில் உள்ள மலையில் ஏறுவார்கள். பூமியில் உள்ளவர்களை நாம் கொன்று விட்டோம். வாருங்கள் வானத்தில் உள்ளவர்களைக் கொல்வோம் என்று அவர்கள் கூறுவார்கள். தங்கள் அம்புகளை வானத்தை நோக்கி எய்வார்கள். அவர்களின் அம்புகளை ரத்தத்தில் தோய்த்து அல்லாஹ் திருப்பி அனுப்புவான் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 5228
அவர்கள் எந்த நாட்டில் இவ்வாறு அடைக்கப்பட்டுள்ளனர் என்பதை அல்லாஹ்வும், அவனது தூதரும் நமக்குக் கூறவில்லை. யுகமுடிவு நாளின் நெருக்கத்தில் அவர்கள் வெளிப்பட வேண்டுமானால் மற்ற மனிதர்கள் அவர்களை அறிந்து கொள்ளாமலிருப்பது அவசியம். அதற்காகக் கூட இறைவன் மறைத்து வைத்திருக்கலாம்.
நவீன கருவிகளையும், ஆகாய விமானங்களையும், தொலை நோக்கிக் கருவிகளையும் கண்டுபிடித்துள்ள காலகட்டத்தில் அப்படி ஒரு கூட்டம் அடைக்கப்பட்டிருந்தால் உலகத்திற்குத் தெரியாமல் இருக்குமா? செம்பு உருக்கி ஊற்றப்பட்டால் அதன் பளபளப்பை வைத்து இனம் காணலாமே என்றெல்லாம் சிலர் கேட்கின்றனர். அந்தக் கேள்வி தவறானதாகும்.
மனிதனிடம் இத்தகைய நவீன சாதனங்கள் இருந்தாலும் அவை முழு அளவுக்கு இன்னமும் பயன்படுத்தப்படவில்லை. மிக உயரத்திலிருந்து கொண்டு பூமியைப் படம் பிடித்திருக்கிறார்கள். பார்த்திருக்கிறார்களே தவிர பூமியின் ஒவ்வொரு அங்குலத்தையும் ஏன் ஒவ்வொரு ஏக்கரையும் கூட மனிதன் இந்தக் கருவிகள் மூலம் இது வரை ஆராயவில்லை. பூமியிலேயே இருக்கும் சில பகுதிகளை இப்போதும் கூட கண்டுபிடித்ததாகச் செய்திகள் வருவதிலிருந்து இதை உணரலாம்.
இந்த மண்ணுலகில் மனிதனின் கால் படாத நிலப்பரப்புகள் ஏராளம் உள்ளன. ஆகாயத்தில் வட்டமடித்து சக்தி வாய்ந்த தொலைநோக்கிக் கருவிகள் மூலம் ஒவ்வொரு ஏக்கராக ஆராய முற்பட்டாலும் மரங்கள், காடுகள் போன்ற தடைகள் இல்லாவிட்டால் தான் பூமியில் உள்ளவர்களைப் பார்க்க முடியும். தடைகள் இருந்தால் அந்தக் காடுகளைத் தான் பார்க்க முடியும்.
குறிப்பிட்ட காட்டில் தான் வீரப்பன் இருக்கிறான் என்று தெளிவாகத் தெரிந்த நிலையில் அவனது இருப்பிடத்தைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியாததற்கு இது தான் காரணம். காடுகளும், குகைகளும், தொலைநோக்கிக் கருவிகள் மூலம் பார்ப்பதைத் தடுத்து விடுகின்றன.
இலங்கையில் பிரபாகரனும், புலிகளும் இந்திய இலங்கை இராணுவத்தினரால் பிடிக்கப்பட முடியாமல் போனதற்குக் கூட அடர்த்தியான காட்டுப்பகுதியை அவர்கள் தேர்வு செய்தது தான் காரணம். இலங்கையில் இராணுவத்தினர் மரங்களை வெட்டி வீழ்த்தி வருவதும் இந்தக் காரணத்துக்காகவே.
மலைகளால் சூழப்பட்ட காடுகளிலோ, அல்லது குகைகளிலோ யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் இருந்தால் எந்தச் சாதனங்கள் மூலமும் அவர்கள் இருப்பதை அறிந்து கொள்ள முடியாது.
செம்பு எனும் உலோகம் விரைவில் பாசி படிந்து பச்சை நிறத்துக்கு மாறி விடுவதால் அதன் பளபளப்பை வைத்தும் கண்டு பிடிக்க முடியாது. தொலைவிலிருந்து பார்க்கும் போதும், அருகிலிருந்து பார்க்கும் போதும் கூட மலைகளில் புல் வளர்ந்திருப்பது போன்ற தோற்றமே தென்படும்.
எனவே எவரது கண்களுக்கும் புலப்படாமல் இந்தக் கூட்டத்தினர் இந்தப் பூமியின் ஒரு பகுதியில் வாழ்ந்து வருவது சந்தேகப்பட வேண்டியதன்று.
இனி வருங்காலத்தில் மனிதன் முயன்று நெருங்கலாம். அந்த நேரம் அவர்கள் வெளியே வர வேண்டிய காலமாக யுகமுடிவு நாளின் நெருக்கமாகத் தான் இருக்க முடியும்.
இந்தக் கூட்டத்தினர் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய சில விபரங்களையும் நாம் அறிந்து கொள்வோம்.
யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் வரும் வரை நீங்கள் போராடிக் கொண்டே இருப்பீர்கள். அவர்களின் முகங்கள் கேடயம் போல் அகன்றதாகவும், (வட்டமாகவும்) கண்கள் சிறியதாகவும், முடிகள் செம்பட்டையாகவும் அமைந்திருப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: காலித் பின் அப்துல்லாஹ், நூல்: அஹ்மத் 21299
இந்தக் கூட்டத்தினர் தனியான இனத்தவர் அன்று. ஆதம் (அலை) அவர்களின் சந்ததியில் தோன்றியவர்களே என்பதைப் பின்வரும் நபிமொழி அறிவிக்கின்றது.
யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் ஆதம் (அலை) அவர்களின் சந்ததிகளாவர். அவர்கள் விடுவிக்கப்பட்டால் மக்களின் வாழ்க்கை யைப் பாழாக்குவார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் அல்லது அதற்கும் அதிகமான சந்ததிகளை உருவாக்காமல் மரணிப் பதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி), நூல்: தப்ரானி
ஒவ்வொருவரும் ஆயிரம் சந்ததிகளைப் பெற்றெடுப்பார்கள் என்பதிலிருந்து அவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காமல் இருக்கும் என்று கருத முடிகின்றது.
யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினரின் எண்ணிக்கை மிகமிக அதிகமாக இருக்கும் என்பதை நபிகள் நாயகத்தின் பொன்மொழியிலிருந்து அறிய முடிகின்றது.
உங்களில் ஒருவர் என்றால் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் ஆயிரம் என்ற கணக்கில் நரகவாசிகளின் எண்ணிக்கை இருக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
நூல் : புகாரி 3348
யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் அழிக்கப்பட்ட பின் முஸ்லிம்கள் ஹஜ்ஜும் உம்ராவும் செய்வார்கள். ஹஜ் செய்வோர் யாரும் இல்லை என்ற நிலையில் தான் யுக முடிவு நாள் ஏற்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
நூல்: புகாரி 1593
5- அதிசயப் பிராணி
யுக முடிவு நாளின் நெருக்கத்தில் அதிசயப் பிராணி ஒன்றை இறைவன் படைத்து மக்களிடையே அதை நடமாட விடுவான். அந்தப் பிராணியின் வடிவம் பற்றி ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் விபரம் காணப்படாவிட்டாலும் அத்தகைய பிராணி ஒன்று யுக முடிவு நாளின் நெருக்கத்தில் தோன்றும் என்பதற்கு திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் ஆதாரங்கள் கிடைக்கின்றன.
அவர்களுக்கு எதிரான (நமது) கட்டளை நிகழும் போது பூமியிலிருந்து ஓர் உயிரினத்தை வெளிப்படுத்துவோம். நமது வசனங்களை மனிதர்கள் உறுதி கொள்ளாமல் இருந்தது பற்றி அவர்களிடம் அது பேசும்.
(அல்குர்ஆன் 27:82)
இறை வசனங்களை மக்கள் நம்பாத மோசமான காலகட்டத்தில் அந்தப் பிராணி தோன்றும் எனவும், அது வானிலிருந்து இறக்கப்படாது எனவும், இந்தப் பூமியிலேயே தோன்றும் எனவும், தஜ்ஜால் போன்று முன்பே படைக்கப்பட்டு அந்தப் பிராணி மறைத்து வைக்கப்படவில்லை. இனி மேல் தான் அது தோன்றவிருக்கிறது எனவும் இந்த வசனத்திலிருந்து அறியலாம்.
எத்தனையோ பிராணிகள் உலகில் உள்ளன. அவற்றிலிருந்து இந்தப் பிராணி வித்தியாசப்படுகின்றது. எந்தப் பிராணியும், மனிதர்களுடன் பேசுவதில்லை. இந்த அதிசயப் பிராணியோ மக்களிடம் பேசக் கூடியதாகப் படைக்கப்படும் என்பதையும் இந்த வசனத்திலிருந்து நாம் அறியமுடியும்.
பத்து அடையாளங்களில் ஒன்றாக இந்த அதிசயப்பிராணியும் உள்ளது என்ற ஹதீஸை முன்னரே நாம் குறிப்பிட்டுள்ளோம்.
சூரியன் மேற்கிலிருந்து உதிப்பதும், நண்பகல் நேரத்தில் அந்தப் பிராணி மக்களுக்குக் காட்சி தருவதும் ஆரம்ப அடையாளங்களாகும். இவ்விரண்டில் எது முதலில் தோன்றினாலும் அதைத் தொடர்ந்து அடுத்ததும் தோன்றிவிடும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி), நூல்: முஸ்லிம் 5234
இவற்றைத் தவிர அப்பிராணி பற்றி மேலதிகமாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் நாம் காண முடியவில்லை.
மனிதர்களின் கற்பனைக்கு எட்டக் கூடிய வடிவில் முன்பே மனிதர்கள் அறிந்து வைத்திருக்கின்ற ஏதேனும் மிருகத்தின் வடிவில் அப்பிராணியின் வடிவம் அமைந்திருக்குமென்றால் அதை அல்லாஹ்வோ, அவனது தூதரோ நமக்குக் கூறியிருப்பார்கள். மனி தர்கள் இது வரை கண்டிராத ஒரு வடிவில் அது அமைந்திருக்கக் கூடும் என்று நாம் ஊகிக்க முடியும். அதன் வடிவம் தான் நமக்குக் கூறப்படவில்லையே தவிர அது வந்துவிட்டால் சட்டென்று கண்டு கொள்ளக்கூடிய முக்கியமான தன்மையை அல்லாஹ் கூறிவிட்டான்.
“மனிதர்களுடன் பேசக் கூடியதாக அப்பிராணி அமைந்திருக்கும்” என்பதை விட எந்த அடையாளமும் தேவையில்லை. அப்படி ஒரு பிராணி தோன்றவிருக்கிறது என்று நம்புவதே நமக்குப் போதுமானதாகும் என்பதாலேயே அது பற்றி அதிக விபரம் நமக்குக் கூறப்படவில்லை.
6- சூரியன் மேற்கில் உதித்தல்
நடக்க முடியாத விஷயத்தைக் குறித்து “சூரியன் மேற்கே உதித்தாலும் இது நடக்காது” என்று கூறப்படுவதுண்டு. சூரியன் மேற்கே உதிப்பது சாதாரணமாக நடக்கக் கூடியதன்று என்றாலும் நடக்க முடியாத இதுவும் யுக முடிவு நாளின் நெருக்கத்தில் நடக்கவுள் ளது. உலகம் தோன்றியது முதல் கிழக்கில் உதித்து வரும் சூரியன் திடீரென மேற்கிலிருந்து உதிக்கும். இந்த நிலை ஏற்பட்ட பின் ஈமான் கொள்வதோ, பாவமன்னிப்புக் கேட்பதோ இறைவனால் ஏற்கப்படாது.
சூரியன் மேற்கிலிருந்து உதிப்பதற்கு முன் கியாமத் நாள் ஏற்படாது. அதைக் கண்டவுடன் மக்கள் (இறைவனை) நம்புவார்கள். ஆயினும் அதற்கு முன்பே நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு அந்த நம்பிக்கை, பயனளிக்காது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி),
நூல்: புகாரி 4635, 4636, 6506, 7121
சூரியன் மேற்கிலிருந்து உதிப்பதைச் சாதாரணமான ஒன்றாகக் கருதி விடக் கூடாது. அதனால் ஏற்படும் விளைவுகள் பயங்கரமானவையாக இருக்கும்.
பூமி சூரியனைச் சுற்றி வருவதால் இரவு பகல் ஏற்படுகிறது என்பதை நாம் அறிந்து வைத்திருக்கின்றோம். மணிக்கு ஆயிரம் மைல் வேகத்தில் இந்தப் பூமி சுழன்று கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம். இத்தகைய பூமியில் கிழக்கே உதித்து வரும் சூரியன் மேற்கே உதிக்க வேண்டுமானால் பூமி தன் சுழற்சியை திடீரென நிறுத்தி உடனே எதிர்த்திசையில் சுழல வேண்டும். அப்போது தான் மேற்கில் சூரியன் உதிக்க முடியும்.
நாற்பது மைல் வேகத்தில் செல்லக் கூடிய ஒரு பேருந்து திடீரென நிறுத்தப்பட்டால் அதில் பயணம் செய்தவர்கள் தூக்கி எறியப்படுவதை நாம் அனுபவித்திருக்கிறோம். திடீரென நிறுத்தப்படுவது மட்டுமின்றி உடனேயே பின்புறமாக அதே வேகத்தில் இந்தப் பேருந்து செல்வதாக கற்பனை செய்து பாருங்கள்! இது இன்னும் மோசமான விளைவை ஏற்படுத்தும்.
அப்படியானால் ஆயிரம் மைல் வேகத்தில் சுழலும் இந்தப் பூமி திடீரென நிறுத்தப்பட்டு எதிர்த் திசையில் அதே வேகத்தில் சுழன்றால் அதன் விளைவு எத்தகையதாக இருக்கும் என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
நினைத்துப் பார்த்திராத விதத்தில் இந்தப் பூமி குலுங்கும். கட்டிடங் கள் தகர்ந்து விழும். மலைகளும் கூட பெயர்த்து எறியப்படும். இவ்வளவு பயங்கர விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
7- மூன்று பூகம்பங்கள்
யுக முடிவு நாளின் நெருக்கத்தில் மிகப்பெரிய அளவில் பூகம்பங்களும் ஏற்படும். மனிதர்கள் உயிருடன் புதையுண்டு போவார்கள்.
(மதீனாவின்) கிழக்கே ஒரு பூகம்பம். மேற்கே ஒரு பூகம்பம், அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம் ஆகிய மூன்று பூகம்பங்களை நீங்கள் காண்பது வரை யுகமுடிவு நாள் ஏற்படாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி),
நூல்: முஸ்லிம் 5162
உலகில் ஆங்காங்கே பூகம்பங்களும் ஏற்பட்டு வருகின்றன என்றாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடக்கூடிய இந்தப் பூகம்பங்கள் மிகவும் பிரம்மாண்டமாக அமைந்திருக்கும்.
இம்மூன்று பூகம்பங்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூன்று தனி அடையாளங்களாகக் கூறியுள்ளார்கள். இம்மூன்றையும் சேர்த்து இது வரை ஒன்பது அடையாளங்களை நாம் விளக்கியுள்ளோம்.
8- பெரு நெருப்பு
எமன் நாட்டில் மிகப் பெரும் நெருப்பு ஏற்பட்டு அந்நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி மொத்த உலகையும் சூழ்ந்து கொள்ளும். யாராலும் அணைக்க முடியாத அந்நெருப்பு பரவ ஆரம்பித்ததும் மக்கள் தத்தமது ஊரைக் காலி செய்து விட்டு ஓட ஆரம்பிப்பார்கள். நெருப்பும் அவர்களை விரட்டிச் செல்லும். முடிவில் எந்த இடத்தில் அவர்கள் ஒன்று சேர்க்கப்படுவார்களோ அந்த இடத்தை அடைவார்கள்.
எமனிலிருந்து நெருப்பு தோன்றி மக்களை அவர்களது மஹ்ஷரின் பால் விரட்டிச் செல்லும், அது வரை கியாமத் நாள் ஏற்படாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி),
நூல்: முஸ்லிம் 5162
யுக முடிவு நாளின் நெருக்கத்தில் ஏற்படக்கூடிய பத்து அடையாளங்களையும் ஓரளவு நாம் அறிந்து கொண்டோம்.
இந்தப் பத்து அடையாளங்கள் ஏற்பட்டு, பாவமன்னிப்பின் வாசல் அடைபடுவதற்கு முன் நமது வாழ்வைச் சீராக்கிக் கொள்ள வல்ல இறைவன் துணை செய்வானாக!
ஈஸா நபியின் வருகை
ஈஸா நபி இறைவனால் உயர்த்தப்பட்டார்கள்; இன்னும் மரணிக்கவில்லை; இறுதிக் காலத்தில் இறங்கி வருவார்கள் என்பதற்கான சான்றுகள்:
9 – ஈஸா நபி வருகை
வேதமுடையோரில் ஒவ்வொருவரும் அவர் (ஈஸா, மீண்டும் வந்து) மரணிப்பதற்கு முன் அவரை நம்பாமல் இருக்க மாட்டார்கள். கியாமத் நாளில் அவர் அவர்களுக்கு எதிரான சாட்சியாக இருப்பார்.
(திருக்குர்ஆன் 4:159)
ஈஸா நபியவர்கள் இன்னும் மரணிக்கவில்லை என்பதை மிகத் தெளிவாக அறிவிக்கும் வசனங்களில் இதுவும் ஒன்றாகும்.
இவ்வசனத்தில் வேதமுடையோர் என்று குறிப்பிடப்படுவதில் யூதர்களும், கிறித்தவர்களும் அடங்குவார்கள். இவ்விரு சாராரும் ஈஸா நபியை ஏற்பார்கள் என்று இவ்வசனம் கூறுகிறது.
யூதர்களைப் பொருத்த வரை அவர்கள் ஈஸா நபியின் பகிரங்கமான எதிரிகளாக இருந்தனர். ஈஸா நபியை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. “தவறான வழியில் பிறந்தவர்’ என்றெல்லாம் ஈஸா நபியை விமர்சனம் செய்தனர்.
கிறிஸ்தவர்கள் ஈஸா நபியை நம்பினாலும், மதித்தாலும் அவரை எவ்வாறு நம்ப வேண்டுமோ அவ்வாறு நம்பவுமில்லை; எவ்வாறு மதிக்க வேண்டுமோ அவ்வாறு மதிக்கவுமில்லை. கடவுளின் மகன் என்று அவர்கள் நம்பினார்கள்.
எனவே, இவர்களும் ஈஸா நபியை நம்ப வேண்டிய விதத்தில் நம்பவில்லை.
இவ்விரு சாராரும் எதிர்காலத்தில் ஈஸா நபியை நம்புகின்ற நிலைமை உருவாகும் என்பதை இவ்வசனம் முன்னறிவிப்புச் செய்கிறது.
இந்த முன்னறிவிப்பை மக்கள் புரிந்து கொள்ளாத வகையில் சிலர் தவறான மொழிபெயர்ப்புச் செய்துள்ளதால் அதை முத-லில் சுட்டிக் காட்டுவோம்.
“”அவரை நம்பிக்கை கொள்ளாமல்” (இல்லா லயூமினன்ன பிஹி) என்ற சொற்றொடரில் “அவரை’ என்ற சொல் யாரைக் குறிக்கும்? ஈஸா நபியைத் தான் குறிக்கும் என்று அனைத்து அறிஞர்களும் எந்தக் கருத்து வேறுபாடும் இன்றி ஒருமித்துக் கூறுகின்றனர். இதற்கு முந்தைய வசனங்களில் ஈஸா நபியைப் பற்றிப் பேசி வருவதால் அது ஈஸா நபியைத் தான் குறிக்கும் என்பதில் எவருக்கும் இரண்டாவது கருத்து இருக்கவில்லை. இதில் யாருக்கும் எந்தக் குழப்பமும் இல்லை.
இதே வசனத்தில் இடம் பெற்றுள்ள “அவரது மரணத்திற்கு முன்னர்” (கப்ல மவ்திஹி) என்ற சொற்றொடரில் அமைந்த “அவரது’ என்பது யாரைக் குறிக்கும்? இதில் தான் சிலர் தவறான கருத்துக்குச் சென்று விட்டனர்.
“”வேதமுடையவர் ஒவ்வொருவரும் அவரது (அதாவது தனது) மரணத்திற்கு முன்னர்” என்று அவர்கள் பொருள் கொண்டுள்ளனர்.
“அவரது மரணத்திற்கு முன்னர்” என்றால் “ஈஸாவின் மரணத்திற்கு முன்னர்” என்று பெரும்பாலானவர்கள் பொருள் கொண்டுள்ளனர்.
பல காரணங்களாôல் இதுவே சரியான மொழி பெயர்ப்பாகும்.
அரபு இலக்கணப்படி இரு விதமாகவும் பொருள் கொள்ள இடமிருக்கிறது. இது போன்ற இடங்களில் எது சரியானது? எது தவறானது என்பதைத் தீர்மானிக்க வேறு வசனங்களில் கூறப்பட்டுள்ள செய்திகளை அடிப்படையாகக் கொள்வது வழக்கம்.
ஆனால், இந்த இரண்டு மொழி பெயர்ப்புகளில் முதல் மொழி பெயர்ப்பு தவறானது என்பதை விளங்கிட வேறு எங்கேயும் நாம் செல்லத் தேவையில்லை. முதல் மொழி பெயர்ப்பின்படி கிடைக்கும் மொத்தக் கருத்து பொய்யாகவும், கேலி-க்குரியதாகவும் அமைந்திருப்பதே இந்த மொழிபெயர்ப்பு தவறு என்பதைச் சந்தேகமற நிரூபித்து விடுகிறது.
முதல் மொழி பெயர்ப்பின் அடிப்படையில் இவ்வசனத்தின் கருத்தைப் பாருங்கள்!
“”வேதமுடையவர்களில் ஒவ்வொருவரும் தமது மரணத்திற்கு முன்னால் ஈஸா நபியை நம்பிக்கை (ஈமான்) கொள்ளாமல் மரணிக்க மாட்டார்கள்.”
இது தான் முதல் சாராரின் மொழி பெயர்ப்பின்படி கிடைக்கும் கருத்தாகும்.
அதாவது வேதமுடையவர்களான யூதர்களும், கிறிஸ்தவர் களும் தாம் மரணிப்பதற்கு முன் ஈமான் கொண்டு விடுகிறார்கள்.
யூதர்களும், கிறிஸ்தவர்களும் மரணிப்பதற்கு முன்னால் முஃமின் களாக மாறியே மரணிக்கிறார்கள். இன்னும் ஆழமாகச் சென்றால் யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் நரகமே கிடையாது. ஏனெனில், அவர்களின் கடைசி நிலை நல்லதாகவே அமைந்து விடுகிறது என்றெல்லாம் இந்த மொழி பெயர்ப்பின்படி கருத்து அமைகின்றது.
மற்றவர்களைப் போலவே யூதர்களும், கிறிஸ்தவர்களும் தண்டிக்கப்படுவார்கள் எனக் கூறும் எண்ணற்ற வசனங்களுடன் இக்கருத்து மோதுகின்றது.
ஒவ்வொரு யூதரும், கிறிஸ்தவரும் மரணிக்கும் போது முஃமின்களாக மரணிக்கிறார்கள் என்ற கருத்தை எவருமே சரி என்று ஏற்க முடியாது.
இந்த மொழி பெயர்ப்பு தவறானது என்பது சந்தேகமறத் தெரியும் போது, “அவரது மரணத்திற்கு முன் – அதாவது ஈஸாவின் மரணத்திற்கு முன்னால் வேதமுடையவர்கள் ஈஸாவை நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள்” என்ற இரண்டாவது மொழிபெயர்ப்பைத் தான் நாம் ஏற்றாக வேண்டும்.
இவ்வசனம் அருளப்படும் போது ஈஸா நபி மரணித்திருக்கவில்லை என்பதும் இவ்வசனத்தி-லிருந்து தெரிகிறது. ஏனெனில் அவர் மரணித்திருந்தால் “ஈஸா மரணிப்பதற்கு முன்னால்” என்று கூற முடியாது. மேலும்,
“நம்பிக்கை கொண்டார்கள்” என்று இறந்த கால வினையாகக் கூறாமல் “நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள்” என்று எதிர்கால வினையாகக் கூறப்பட்டுள்ளது. ஈஸா மரணிப்பதற்கு முன்னால் அவரை எதிர்காலத்தில் யூதர்களும், கிறிஸ் தவர்களும் நம்புவார்கள் என்பது தான் இவ்வசனத்தின் கருத்து.
இறைவனால் உயர்த்தப்பட்டுள்ள ஈஸா நபியவர்கள் இறங்கும் போது இந்த நிலை ஏற்படுவது ஆச்சரியமான ஒன்றல்ல.
சாட்டிலைட் யுகத்தில் நாம் வாழ்கிறோம். இந்த யுகத்தில் விண்ணி-லிருந்து ஒருவர் இறங்கினால் உலகின் அத்தனை செயற்கைக் கோள்களும் அவரைப் படம் பிடித்து நமது வீட்டு டி.வி. பெட்டியில் காட்டி விடும். இவ்வாறு அதிசயமாக ஒருவர் இறங்கும் போது அவர் கூறும் உண்மையை உலகம் நிச்சயம் ஏற்றுக் கொள்ளவே செய்யும்.
ஏற்கனவே மரணமடைந்த ஒருவரைப் பற்றி “அவர் மரணிப்பதற்கு முன்னால் இது நடக்கும்” என்று கூறவே முடியாது.
ஈஸா நபியவர்கள் எதிர் காலத்தில் வருவார்கள் என்ற நபி மொழியை அறிவித்த அபூஹுரைரா (ர-லி) அவர்கள் “இதில் உங்களுக்குச் சந்தேகமிருந்தால் இவ்வசனத்தைப் பாருங்கள்” என்று கூறியுள்ளதையும் நாம் இங்கே கருத்தில் கொள்ள வேண்டும்.
(நூல்: புகாரி 3448)
ஈஸா நபி மரணமடையவில்லை என்பதற்குச் சான்றாக இவ்வசனம் அமைந்துள்ளது.
இதற்கு முந்தைய வசனங்களுடன் சேர்த்துப் பார்க்கும் போது மேலும் உறுதியாகின்றது.
அவர்கள் (ஏக இறைவனை) மறுத்ததாலும், மர்யமின் மீது மிகப் பெரும் அவதூறை அவர்கள் கூறியதாலும், “அல்லாஹ்வின் தூதரான மர்யமின் மகன் மஸீஹ் எனும் ஈஸாவை நாங்களே கொன்றோம்” என்று அவர்கள் கூறியதாலும் (இறைவன் முத்திரையிட்டான்.) அவரை அவர்கள் கொல்லவில்லை. அவரைச் சிலுவையிலும் அவர்கள் அறையவில்லை. மாறாக அவர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது. இதில் முரண்பட்டோர் சந்தேகத்திலேயே உள்ளனர். ஊகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு இது குறித்து அறிவு இல்லை. அவர்கள் அவரை உறுதியாகக் கொல்லவே இல்லை. மாறாக அவரை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கிறான். வேதமுடையோரில் ஒவ்வொருவரும் அவர் (ஈஸா, மீண்டும் வந்து) மரணிப்பதற்கு முன் அவரை நம்பாமல் இருக்க மாட்டார்கள். கியாமத் நாளில் அவர் அவர்களுக்கு எதிரான சாட்சியாக இருப்பார்.
திருக்குர்ஆன் 4:156-159
ஈஸா நபியவர்களை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான் என்று இந்த வசனங்கள் அறிவிக்கின்றன.
ஈஸா நபி சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார்கள் என்று கூறப்படுவதை இவ்வசனங்கள் நிராகரிக்கின்றன. ஆள் மாறாட்டம் செய்யப்பட்டு வேறொருவரைத் தான் யூதர்கள் கொன்றனர்.
இவ்வசனத்தில் இடம் பெற்றுள்ள “உயர்த்திக் கொண்டான்’ என்ற சொல் அந்தஸ்து உயர்வைத் தான் குறிக்கும் என்று சிலர் வாதிடுவர். இது தவறாகும்.
“”அவரை உயர்த்திக் கொண்டான்’ என்று மட்டும் கூறப் பட்டால் அந்தஸ்து உயர்வு என்று பொருள் கொள்ள சிறிதளவாவது இடம் இருக்கும். ஆனால் “தன்னளவில்’ என்பதையும் சேர்த்துக் கூறுவதால் அவ்வாறு பொருள் கொள்ள வழியில்லை.
“”ரபஅ’ என்ற சொல்லுக்கு “அந்தஸ்து உயர்வு’ என்று பொருள் கொள்வதாக இருந்தால் அந்தஸ்து, பதவி, புகழ், தகுதி என்பன போன்ற சொற்கள் அச்சொல்லுடன் சேர்க்கப்பட வேண்டும்.
“”உயர்ந்த தகுதிக்கு அவரை உயர்த்தினான்” என்று இத்ரீஸ் நபி பற்றி அல்லாஹ் கூறுகிறான்
(திருக்குர்ஆன் 19:57)
ஆனால் ஈஸா நபியைப் பற்றி இங்கே கூறும் போது அவரையே உயர்த்திக் கொண்டதாகக் கூறுகிறான். இதற்கு நேரடிப் பொருள் தான் கொள்ள வேண்டும்.
தொழுகையில் கைகளை நாம் உயர்த்திக் கட்டுகிறோம். இதைக் குறிப்பிடுவதற்கும் “ரபஅ’ என்ற சொல் தான் பயன்படுத் தப்பட்டுள்ளது. கைகளின் அந்தஸ்தை உயர்த்துவது என்பது இதன் பொருளில்லை. கைகளையே உயர்த்துதல் என்பது தான் பொருள்.
மர்யமின் மகன் உதாரணமாகக் கூறப்பட்ட போது அதைக் கேட்டு உமது சமுதாயத்தினர் கூச்ச-லிட்டனர். “எங்கள் கடவுள்கள் சிறந்தவர்களா? அல்லது அவரா?” என்று கேட்டனர். விதண்டா வாதம் செய்வதற்காகவே தவிர அவரைப் பற்றி அவர்கள் கூற வில்லை. இல்லை! அவர்கள் வீண் தர்க்கம் செய்வோரே! நாம் அருள் புரிந்த அடியாரைத் தவிர அவர் வேறில்லை. இஸ்ராயீலின் மக்களுக்கு அவரை முன்னுதாரணமாக ஆக்கினோம். நாம் நினைத் திருந்தால் உங்களுக்குப் பகரமாக வானவர்களை இப்பூமியில் வழித்தோன்றல்களாக ஆக்கியிருப்போம். “அவர் (ஈஸா) அந்த நேரத்தின் அடையாளமாவார். அதில் நீர் சந்தேகப்படாதீர்! என் னையே பின்பற்றுங்கள்! இதுவே நேர் வழி (எனக் கூறுவீராக.)
(திருக்குர்ஆன் 43:57-61)
ஈஸா நபி கியாமத் நாளின் அடையாளம் என்று அல்லாஹ் கூறுகிறான்.
கியாமத் நாளின் அடையாளம் என்று ஒருவரைப் பற்றிக் கூறுவதென்றால் அவர் அந்த நாளுக்கு மிக நெருக்கத்தில் உலகத்தில் வாழ வேண்டும். அப்போது தான் அவரை கியாமத் நாளின் அடையாளம் எனக் கூற முடியும்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒருவரை கியாமத் நாளின் அடையாளம் என்று எப்படிக் கூற முடியும்?
ஈஸா நபியைப் பொருத்த வரையில் அவர்கள் அல்லாஹ்வால் உயர்த்தப் பட்டார்கள்; ஆள் மாறாட்டம் செய்து வேறொருவரைத் தான் ஈஸா நபியின் எதிரிகள் கொன்றனர்.
அவர் இறைவனால் உயர்த்தப்பட்டார். உயர்த்தப்பட்டவர், இறுதிக் காலத்தில் யுக முடிவு நாளுக்கு நெருக்கத்தில் மீண்டும் வருவார்; மரணிப்பதற்காக அவர் இந்த உலகத்திற்கு மீண்டும் அனுப்பப்படுவார்; என்று நபிகள் நாயகத்தின் ஏற்கத்தக்க ஏராளமான பொன் மொழிகள் தெரிவிக்கின்றன.
கியாமத் நாளின் அடையாளமாக அவர்கள் திகழ்கிறார்கள் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகவும் அழகாக நமக்கு விளக்குகிறார்கள்.
‘எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! மர்யமுடைய மகன் உங்களிடம் நீதி செலுத்து பவராக, தீர்ப்பு வழங்குபவ ராக இறங்குவார். சிலுவையை முறிப்பார். பன்றியைக் கொல்வார். ஜிஸ்யா வரியை நீக்குவார். வாங்குவதற்கு யாருமில்லாத அளவுக்குச் செல்வம் கொழிக்கும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூற்கள்: புகாரி, முஸ்லிம்
நானே ஈஸா நபி என்று கூறிய பொய்யர்கள் சிலர் தோன்றினர். சிலுவை, பன்றி, ஜிஸ்யா என்பதற்கெல்லாம் நவீனமான விளக்கம் கூறி அதைத் தாங்கள் செயல்படுத்தியதாகக் கதையளந்தனர். ‘யாரும் வாங்காத அளவுக்குச் செல்வம் கொழிக்கும்” என்பதற்கு எந்தச் சமாதானமும் அவர்களிடம் இல்லை. இந்தப் பொய்யர்களின் காலத்தில் இத்தகைய நிலை ஏற்படவேயில்லை.
முஸ்லிமில் இடம் பெறும் மற்றொரு அறிவிப்பில் ‘போட்டி, பொறாமை, கபடம் ஆகியவை எடுபட்டுப் போகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக இடம்பெற்றுள்ளது. இந்தப் பொய்யர்கள் வந்தபோது இந்தத் தீயபண்புகள் முன்பை விட அதிகமானதே தவிர எடுபட்டுப் போகவில்லை.
அவர் இறங்கக் கூடிய காலத்தில் ‘இஸ்லாத்தைத் தவிர எல்லா மதங்களையும் அல்லாஹ் அழிப்பான்” என்று அபூதாவூதில் இடம் பெறும் ஹதீஸ் கூறுகிறது. அந்த பொய்யர்களின் காலத்தில் அப்படி நடக்கவில்லை.
தஜ்ஜால் கொடுமை தலைவிரித்தாடும் போது தான் ஈஸா(அலை) இறங்குவார்கள்.
தஜ்ஜாலின் நிலை இவ்வாறு இருக்கும்போது மர்யமின் மகன் மஸீஹை அல்லாஹ் அனுப்புவான். டமாஸ்கஸ் நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள வெள்ளை மினாரா (கோபுரம்) வின் அருகில் அவர் இறங்குவார். இரண்டு வானவர்களின் சிறகுகள் மீது தம் கைகளை வைத்தவராக இறங்குவார். அவர் தலை குனிந்தால் தலையில் நீர் கொட்டும். தலையை உயர்த்தினால் முத்துப் போல் தண்ணீர் சிதறும்! அவரது மூச்சுக்காற்று அவரது பார்வை எட்டும் தூரம் வரை செல்லும். அவரது மூச்சுக்காற்று படுகின்ற எந்த காஃபிரும் சாகாமல் இருப்பதில்லை. பின்னர் தஜ்ஜாலைத் தேடுவார்கள். லுத்’ (பைத்துல் முகத்தஸின் அருகிலுள்ள ஊர்) எனும் வாசலில் வைத்து அவனைக் கொல்வார்கள் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன்(ரலி),
நூல்: திர்மிதீ
இந்தப் பொய்யர்கள் மூலம் இவற்றில் எதுவும் நிறைவேறவில்லை.
ஈஸா (அலை) மரணித்து சில காலத்தில் யுக முடிவு நாள் வந்து விடும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.
யுக முடிவு நாளின் மிக நெருக்கத்தில் ஏற்படவுள்ள நிகழ்ச்சிகளில் ஈஸா (அலை) அவர்களின் வருகையும் ஒன்றாகும் என்பதை முஸ்லிம்கள் நம்பியாக வேண்டும்.
நான்காவது ஆதாரம்
உடனே அவர் (அக்குழந்தை), ‘நான் அல்லாஹ்வின் அடியான். எனக்கு அவன் வேதத்தை அளித்தான். என்னை நபியாக்கினான். நான் எங்கே இருந்த போதும் பாக்கியம் பொருந்தியவனாகவும் ஆக்கினான். நான் உயிருடன் இருந்து, என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும், இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும், ஸகாத் கொடுக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டான். என்னை துர்பாக்கியசாயாகவும், அடக்குமுறை செய்பவனாகவும் அவன் ஆக்கவில்லை.
திருக்குர்ஆன் 19:30-32 இந்த வசனங்களுக்கு பல்வேறு மொழி பெயர்ப்பாளர்கள் தவறாகவே மொழி பெயர்த்துள்ளனர்.
தவறான மொழி பெயர்ப்பின் அடிப்படையில் ஒரு சாரார் ஈஸா நபி அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதற்கு இதைச் சான்றாகக் காட்டுகிறார்கள். சரியான மொழி பெயர்ப்பின் படி ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்ற கருத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ இவ்வசனங்கள் தரவில்லை.
1. நான் அல்லாஹ்வின் அடிமையாவேன். எனக்கு வேதத்தை அவன் வழங்கினான். மேலும், என்னை நபியாகவும் ஆக்கினான். (திருக்குர்ஆன் 19:30)
2. நான் எங்கிருந்த போதும் என்னை பாக்கியம் பெற்ற வனாக அவன் ஆக்கியுள்ளான். மேலும், நான் உயிருள்ளவனாக இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும், ஸகாத் கொடுக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டான். (திருக்குர்ஆன் 19:31)
3. மேலும், எனது தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் (ஆக்கினான்.) என்னை துர்பாக்கியசாயாகவும், அடக்குமுறை செய்பவனாகவும் அவன் ஆக்கவில்லை. (திருக்குர்ஆன் 19:32)
இரண்டாவது வசனத்தில் ‘நான் உயிருள்ளவனாக இருக்கும் போது தொழ வேண்டும்;ஸகாத் கொடுக்க வேண்டும்” என ஈஸா நபி கூறியதாகக் கூறப்படுகிறது.
ஈஸா நபி அவர்கள் உயிருடன் உயர்த்தப்பட்டு வானில் இருந்தால், அவர்கள் எப்படி ஸகாத் கொடுக்க முடியும்? அவர்கள் ஸகாத் கொடுக்க முடியவில்லையானால் அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பது தான் பொருள். ஏனெனில் உயிருடன் இருக்கும் வரை தமக்கு ஸகாத் கடமை என்று ஈஸா நபி அவர்கள் கூறி யிருக்கிறார்கள். இது தான் அந்த சாரார் எடுத்து வைக்கும் வாதம்.
இம்மூன்று வசனங்களில் முதல் இரண்டு வசனங்களுக்குச் செய்யப்படும் பொருளில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. மூன்றாவதாக நாம் குறிப்பிட்டுள்ள 19:32வசனத்திற்குத் தான் எல்லா தமிழ் மொழி பெயர்ப்புகளும், எல்லா ஆங்கில மொழி பெயர்ப்புகளும் தவறான பொருள் தந்துள்ளன.
எனவே 19:32 வசனத்தின் சரியான பொருள் என்னவென்று பார்ப்போம்.
இவ்வசனத்தில் ‘வ பர்ரன் பிவாததீ” என்ற சொற்றொடர் இடம் பெற்றுள்ளது. ‘எனது தாயாருக்கு நன்மை செய்பவனாகவும்” என்பது இதன் பொருள்.
செய்பவனாகவும் (செய்பவன் + ஆக + உம்) என்பதில் ‘உம்”மைப் பொருளை எங்கே முற்றுப் பெறச் செய்வது என்பதில் தான் பலரும் கவனக் குறைவாக இருந்துள்ளனர்.
‘உம்”மைப் பொருளைப் பொருத்த வரை தமிழ் மொழியில் கருத்துக் குழப்பம் ஏற்படுவதில்லை. அரபு மொழியில் கருத்துக் குழப்பம் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது என்பதை முதல் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
‘இப்ராஹீமை நல்லவனாகவும், வல்லவனாகவும் கருதுகிறேன்” என்ற தமிழ் வாக்கியத்தில் நல்லவனாகவும், வல்லவனாகவும் என இரண்டு ‘உம்”மைப் பொருள்கள் இடம் பெற்றுள்ளன. அரபு மொழியில் இதே வாக்கியத்தைக் கூற வேண்டுமானால் ‘கருதுகிறேன் இப்ராஹீமை நல்லவனாகவும், வல்லவனாகவும்” என்ற வரிசைப்படி அமையும்.
நல்லவனாகவும்’ என்பதை முற்றுப் பெறச் செய்வதற்குரிய இடம் தமிழ் மொழியில் பின்னால் இடம் பெற்றிருக்கும். ஆனால், அரபு மொழியில் முன்னால் இடம் பெற்றிருக்கும்.
இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு, திருக்குர்ஆன் 19:32 வசனத்தை ஆராய்வோம்.
‘என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும்” என்பதை எங்கே முற்றுப் பெறச் செய்ய வேண்டும் என்று தேடினால் இரண்டு இடங்களில் அதை முற்றுப் பெறச் செய்ய முடியும்.
‘என்னை நபியாகவும் ஆக்கினான்” என்று 19:30 வசனம் கூறுகிறது. இதன் தொடர்ச்சியாக’என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும்” என்று முற்றுப் பெறச் செய்யலாம்.
‘என்னை நபியாகவும் என் தாயாருக்கு நன்மை செய்பவ னாகவும் அவன் ஆக்கினான்”என்ற கருத்து கிடைக்கிறது.
என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும்’ என்ற சொற்றொடரை 19:31 வசனத்தின் இறுதியிலும் முற்றுப் பெறச் செய்ய முடியும்.
‘நான் உயிருடையவனாகவும், என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும் ஸகாத் கொடுக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்”என்ற கருத்து இதிருந்து கிடைக்கும்.
நாம் இரண்டாவதாகக் கூறியபடி முற்றுப் பெறச் செய்வது தான் மிகவும் சரியானதாகும்.
‘உம்மை”ப் பொருளாக இடம் பெறும் சொற்களை அதற்கு அரு கில் உள்ள இடத்தில் தான் முற்றுப் பெறச் செய்ய வேண்டும். அருகில் முற்றுப் பெறச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் தான் தொலைவில் முற்றுப் பெறச் செய்ய வேண்டும் என்பது இலக்கண விதியாகும்.
‘என் தாயாருக்கு நன்மை செய்பவனாக” என்பது 19:32-வது வசனம்.
அதற்கு முந்தைய வசனமாகிய 19:31-ல் முற்றுப் பெறச் செய்ய வழியிருக்கும் போது அதைப் புறக்கணித்து விட்டு அதற்கும் முன்னால் சென்று 19:30 வசனத்தில் முற்றுப் பெறச் செய்வதை இலக்கணம் அறிந்தவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.
எனவே ‘நான் உயிருள்ளவனாகவும், என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் இருக்கும் காலமெல்லாம்” என்பது தான் சரியான பொருளாகும்.
எனவே, ஈஸா நபி அவர்கள் உயிருடன் இருப்பது மட்டுமின்றி தாயாருக்கு நன்மை செய்பவராகவும் இருந்தால் தான் அவர் மீது ஸகாத் கடமையாகும். அவர் எப்போது உயர்த்தப்பட்டு விட்டாரோ அப்போது அவரால் தாயாருக்கு நன்மை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.
ஈஸா நபிக்கு ஸகாத் எப்போது கடமையாகும்? என்றால் அதற்கு இரண்டு நிபந்தனைகளை அல்லாஹ் கூறுகிறான்.
1. ஈஸா நபி அவர்கள் உயிருடன் இருக்க வேண்டும்.
2. அவர்கள் தமது தாயாருக்கு நன்மை செய்யக்கூடியவராக இருக்க வேண்டும்.
இவ்விரண்டு நிபந்தனைகளும் ஒரு சேர அமைந்திருந்தால் தான் அவர்கள் மீது ஸகாத் கடமையாகும்.
ஈஸா நபி உயர்த்தப்படுவதற்கு முன்பு தான் இது பொருந்தும். அப்போது தான் அவர்கள் உயிருடனும் இருந்தார்கள். தாயாருக்கு நன்மை செய்யும் நிலையிலும் இருந்தார்கள்.
அவர்கள் தாயாரை விட்டு எப்போது உயர்த்தப்பட்டார்களோ அப்போது உயிருடன் இருக்கிறார்கள் என்ற ஒரு நிபந்தனை மட்டும் தான் உள்ளது. தாயாருக்கு நன்மை செய்பவராக என்ற நிபந்தனை இல்லை.
இன்று கூட ஈஸா நபி உயிருடன் தான் இருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் தமது தாயாருக்கு நன்மை செய்யும் நிலையில் இல்லை.
எனவே ஸகாத் அவர்கள் மீது கடமையில்லை. யாருக்கு ஸகாத் கொடுப்பார் என்று கேட்பது அபத்தமானதாகும்.
ஒரு வாதத்திற்காக எதிர் தரப்பினரின் வாதத்தை ஏற்றாலும் அவர்களின் கேள்வி அர்த்தமற்றதாகும்.
அல்லாஹ்வின் எந்தக் கட்டளையானாலும் அதற்குரிய சூழ்நிலை இருக்கும் போது தான் அதை நிறைவேற்ற வேண்டும். ஒவ்வொரு இடத்திலும் அல்லாஹ் அதைக் கூறாவிட்டாலும் கூட அப்படித் தான் புரிந்து கொள்ள வேண்டும்.
‘முஃமின்களே! உங்கள் குரலை நபியின் குரலை விட உயர்த்தாதீர்கள்” (49:2) என்று அல்லாஹ் கூறுகிறான்.
முஃமின்களே என்று அழைத்து இறைவன் கூறுவதால் இதை நாம் செயல்படுத்த வேண்டும். இதை எப்படிச் செயல்படுத்த இயலும்? நபியின் குரலைக் கேட்கும் காலத்தில் உள்ளவர்கள் மட்டுமே இதைச் செயல்படுத்த முடியும். மற்றவர்களுக்கு இது இயலாது. இதற்கான சூழ்நிலை இல்லை என்பதால் இதைச் செயல்படுத்தும் கடமை நமக்கு இல்லை என்று புரிந்து கொள்கிறோம். இங்கே வார்த்தையை மட்டும் வைத்துக் கொண்டு வரட்டுப் பிடிவாதம் பிடிப்பதில்லை. அல்லாஹ் ‘அதற்கான சூழ்நிலை இருக்கும் போது” என்று கூறாவிட்டாலும் அது தான் பொருள் என விளங்குகிறோம்.
ஈஸா (அலை) அவர்கள் இப்பூமியில் வாழக்கூடிய காலத்தில் பொருள் வசதி பெற்றவராக இல்லாமலிருந்தால் அப்போதும் அவர்களால் ஸகாத் கொடுக்க முடியாது. அதனால் அவர்கள் இப்பூமியில் வாழ்ந்ததையே மறுத்து விட முடியுமா? உயிருடன் உள்ளவரை ஸகாத் கொடுக்குமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான் என்றால் அதற்குரிய வசதி வாய்ப்பு இருந்தால் என்றே புரிந்து கொள்ள வேண்டும். எனவே மேற்கண்ட வசனத்தை வைத்து ஈஸா (அலை) மரணித்து விட்டார்கள் என்று முடிவு செய்ய முடியாது.
ஈஸா நபி உயிருடன் உள்ளார் என்ற கருத்தை வலுவூட்டக் கூடிய மற்றொரு சான்றாகவும் இது அமைந்து விடுகிறது.
ஈஸா நபியவர்கள் மரணித்து விட்டார்கள் எனக் கூறுவோர் தமது வாதத்தை நிலைநாட்ட சில ஆதாரங்களை எடுத்துக் காட்டு கின்றனர். ஆராய்ந்து பார்த்தால் அறியாமையின் அடிப்படையில் அவர்களின் வாதம் எழுப்பப்பட்டிருப்பதை அறியலாம்.
ஐந்தாவது ஆதாரம்
முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்.
(திருக்குர்ஆன் 3:144)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து விட்டால் வந்த வழியே திரும்பிச் சென்று விடக் கூடாது; இறைவனது தண்டனைக்கு அஞ்சியும், இறைவனது பரிசுகளை எதிர்பார்த்தும் தான் இம்மார்க்கத்தில் இருக்க வேண்டுமே தவிர, முஹம்மத் (ஸல்) அவர்களுக்காக இம்மார்க்கத்தில் இருக்கக் கூடாது என்று இவ்வசனம் அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றது.
இந்தக் கருத்தைத் தெரிவிப்பதற்காக இவ்வசனம் அருளப்பட்டாலும் இவ்வசனத்தைச் சிந்திக்கும் போது ஈஸா நபி மரணித்து விட்டார்கள்’ என்ற கருத்தும் இதனுள் அடங்கியுள்ளதாகச் சிலர் வாதிடுகின்றனர்; முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு முன் வந்த ஈஸா நபி உள்ளிட்ட அனைத்துத் தூதர்களும் மரணித்து விட்டனர் என்பது இவர்களின் வாதம்.
ஏற்கனவே வந்த தூதர்கள் மரணித்ததை முன்னுதாரணமாகக் காட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மரணிப்பார்கள் என்பதை இறைவன் அறிவிப்பதால், இக்கருத்து மேலும் வலுவடைகின்றது எனவும் கூறுகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த போது, பெரும்பாலான நபித் தோழர்கள் அவர்களின் மரணத்தை நம்ப மறுத்தனர். அப் போது அபூபக்கர் (ர) அவர்கள் இவ்வசனத்தை எடுத்துச் சொல்லித் தான் நபித் தோழர்களைச் சரியான வழிக்குக் கொண்டு வந்தனர்.
இந்த வரலாறு புகாரி (1242, 3670, 4454) மற்றும் பல ஹதீஸ் நூல்களில் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸ்களையும் தங்களின் வாதத்துக்கு வலு சேர்ப்பதற்கு இவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
ஈஸா நபி மரணிக்காமல் இருந்திருந்தால் அபூபக்கர் (ர) அவர் களின் வாதத்தை நபித் தோழர்கள் ஏற்றிருக்க மாட்டார்கள். ஈஸா நபி மரணிக்காமல் இருப்பது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர் களும் ஏன் மரணிக்காமல் இருக்கக் கூடாது’ என்று நபித் தோழர்கள் எதிர்க் கேள்வி கேட்டிருப்பார்கள். இது அவர்களின் வாதம்.
திருக்குர்ஆனை அணுக வேண்டிய விதத்தில் அணுகாதவர்கள் தான் இந்த வாதத்தை எடுத்து வைக்க முடியும். ஒரு விஷயத்தைப் பற்றி ஒரு வசனத்தில் கூறப்பட்டதை வைத்து உடனேயே ஒரு முடிவுக்கு வருவது குர்ஆனை அணுகும் வழி முறையல்ல.
இது பற்றி வேறு வசனங்களில் கூடுதல் விளக்கம் உள்ளதா? அல்லது விதி விலக்குகள் உள்ளனவா? என்றெல்லாம் தேடிப் பார்க்க வேண்டும். பல இடங்களில் அது குறித்து கூறப்பட்ட அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரு முடிவுக்கு வருவதே குர்ஆனை அணுகும் முறையாகும்.
திருக்குர்ஆனில் எத்தனையோ வசனங்களில் பொதுவாகக் கூறப்பட்டதற்கு வேறு இடங்களில் விதி விலக்குகள் கூறப்பட்டுள்ளன. இது தான் குர்ஆனின் தனி நடையாகும்.
ஈஸா நபியைத் தவிர’ இந்த இடத்திலேயே என்று கூறப்படவில்லையே என்று கேட்பது குர்ஆனின் நடையைப் புரிந்து கொள்ளாதவர்களின் கேள்வியாகும்.
முஹம்மதுக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர்’ என்ற வார்த்தைக்குள் ஈஸா நபி அடங்கினாலும் அவர்களுக்கு வேறு இடங்களில் விதி விலக்கு அளிக்கப் பட்டுள்ளதைக் கவனிக்காததால் தான் இவ்வாறு வாதிடுகின்றனர்.
ஈஸா நபி கியாமத் நாளின் அடையாளமாக இருக்கிறார். (திருக்குர்ஆன் 43:61)
ஈஸா நபி மரணிப்பதற்கு முன் அவரை வேதக்காரர்கள் நம்பிக்கை கொள்வார்கள். (திருக்குர்ஆன் 4:159)
ஈஸா நபியவர்கள் மரணிக்கவில்லை என்று இவ்விரு வசனங்களும் அறிவிக்கின்றன.
எனவே ‘அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டார்கள்” என்பதையும் இவ்விரு வசனங்களையும் இணைத்து ‘ஈஸா நபி தவிர மற்ற தூதர்கள் அவருக்கு முன் மரணித்து விட்டார்கள்” என்று தான் முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு முடிவு செய்யும் போது, எந்த வசனத்தையும் நாம் மறுக்கவில்லை. எல்லா வசனங்களும் சேர்ந்து எந்தக் கருத்தைத் தருகிறதோ அந்தக் கருத்தைத் தான் நாம் கொள்கிறோம்.
இவ்விரு வசனங்கள் மட்டுமின்றி மற்றொரு வசனமும் ஈஸா நபியவர்கள் மரணிக்கவில்லை என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.
மர்யமின் மகன் மஸீஹ் தூதரைத் தவிர வேறில்லை. அவருக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டனர். அவரது தாய் உண்மையாளர். அவ்விருவரும் உணவு உண்போராக இருந்தனர். அவர்களுக்குச் சான்றுகளை எவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதைச் சிந்திப்பீராக! பின்னர் அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதையும் சிந்திப்பீராக!
(திருக்குர்ஆன் 5:75)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குறித்து ‘அவருக்கு முன்னர் தூதர்கள் சென்று விட்டனர்” என்று திருக்குர்ஆன் 3:144 வசனம் குறிப்பிடுவது போலவே இவ்வசனம் ஈஸா நபியைக் குறித்துப் பேசுகிறது.
இவ்வசனத்தைக் கவனமாகப் பார்த்தால் ஈஸா நபியவர்கள் மரணிக்கவில்லை என்பது பளிச்சென விளங்கும்.
இவ்வசனம் அருளப்பட்ட காலத்தில் ஈஸா நபி மரணித்திருந்தார்கள் என்று ஒரு வாதத்துக்காக வைத்துக் கொள்வோம். அவரைக் கடவுளாக நம்புகின்ற மக்களுக்கு மறுப்புக் கூறும் போது எவ்வாறு கூற வேண்டும்?
‘ஈஸா தூதர் தான்; அவரே மரணித்து விட்டார்” என்று கூறினால் அது தான் சரியான பதிலாக இருக்க முடியும்.
மரணித்தவரை எப்படிக் கடவுள் எனக் கருதலாம் என்ற கருத்து இதனுள் அடங்கியிருக்கும். ஈஸா நபி மரணித்திருந்தால் அதைச் சொல்ல வேண்டிய இடம் இது தான். ஈஸா நபியைக் கடவுளாக்கியவர்களுக்கு மறுப்புச் சொல்லும் இந்த இடத்தில் இறைவன் பயன்படுத்திய வார்த்தையைக் கவனித்தீர்களா? ‘ஈஸா தூதர் தான். அவருக்கு முன்னர் தூதர்கள் சென்று விட்டனர்” என்று அல்லாஹ் கூறுகிறான்.
அல்லாஹ் ஞானமிக்கவன், நுண்ணறிவாளன், அவன் பொருத்தமற்ற சொற்களைப் பயன்படுத்துவதை விட்டும் தூய்மையானவன். ஈஸா நபி மரணித்திருந்தால் இந்த வாசக அமைப்பு இறைவன் தெளிவாகக் கூறுபவன் அல்லன் என்ற கருத்தைத் தந்து விடும்.
அவரே இறந்திருக்கும் போது அதைக் கூறாமல் அவருக்கு முன் சென்றவர்கள் இறந்து விட்டார்கள் என்று விவேகமுள்ளவர் யாரேனும் பேசுவதுண்டா?
அவருக்கு முன்னர் தூதர்கள் சென்று விட்டனர் எனக் கூறி விட்டு அவர் பூமியில் வாழும் போது சாப்பிட்டுக் கொண்டிருந்ததைக் காரணமாகக் காட்டி அவரது கடவுள் தன்மையை அல்லாஹ் மறுக்கிறான். அவர் மரணித்திருந்தால் அதையே காரணமாகக் காட்டி அவரது கடவுள் தன்மையை இறைவன் மறுத்திருப்பான்.
முஹம்மதுக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர் என்ற வசனம் அருளப்படும் போது முஹம்மத் (ஸல்) அவர்கள் உயிரோடு இருந்தனர் என்று புரிந்து கொள்கிறோம். அது போல் ஈஸாவுக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர் என்ற வசனம் இறங்கும் போதும் ஈஸா நபி உயிருடன் இருந்தனர் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரே மாதிரியாக அமைந்த இரண்டு இடங்களில் வித்தியாசமாகப் பொருள் கொள்வது ஏற்புடையதன்று.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த போது நபித் தோழர்கள் நடந்து கொண்ட முறையை அவர்கள் சான்றாகக் காட்டுவதும் சரியல்ல. ஈஸா நபி வருவார்கள் என்ற ஏராளமான ஹதீஸ்களை நபித் தோழர்கள் தான் அறிவிக்கின்றனர். நாம் முன்னர் சுட்டிக் காட்டிய 43:61, 4:159 இரு வசனங்களையும் நபித் தோழர்கள் அறிந்திருந்தனர். ஈஸா நபிக்கு விதிவிலக்கு இருந்ததைச் சந்தேகமற அவர்கள் அறிந்திருந்தனர்.
நபிகள் நாயகத்துக்கும் அது போல விதிவிலக்கு இருக்கும் என்று அவர்கள் எண்ணியதால் தான் ‘நபிகள் நாயகம் மரணிக்க வில்லை” என்று வாதிட்டனர். நபிகள் நாயகத்துக்கு விதிவிலக்கு இல்லை என்பது அபூபக்கர் (ர) அவர்களின் வாதத்தின் மூலம் தெரிந்ததும் தங்கள் நிலையை மாற்றிக் கொண்டார்கள்.
அனைவருக்கும் சர்வ சாதாரணமாகத் தெரிந்த விதி விலக்குகளை யாரும் சான்றாகக் காட்டிப் பேச மாட்டார்கள்.
எனவே, இவ்வசனம் ஈஸா நபி மரணித்ததாகக் கூறவில்லை.
ஆறாவது ஆதாரம்
‘மர்யமின் மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்!’ என நீர் தான் மக்களுக்குக் கூறினீரா?” என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்கும் போது, ‘நீ தூயவன். எனக்குத் தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமையில்லாதவன். நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிவாய். எனக்குள் உள்ளதை நீ அறிவாய்! உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிபவன்” என்று அவர் பதிலளிப்பார். ‘நீ எனக்குக் கட்டளையிட்ட படி எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்!’ என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. நான் அவர்களுடன் இருக்கும் போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன். அவர்களை நீ தண்டித்தால் அவர்கள் உனது அடியார்களே. அவர்களை நீ மன்னித்தால் நீ மிகைத்தவன்; ஞானமிக்கவன்” (எனவும் அவர் கூறுவார்)
(திருக்குர்ஆன் 5:116-118)
இவ்வசனங்கள் மறுமையில் ஈஸா நபியை விசாரிப்பது பற்றியும், அதற்கு அவர் அளிக்கும் பதில் பற்றியும் கூறுகின்றன.
இவ்வசனத்தில் ‘என்னை நீ கைப்பற்றிய போது” என்று மொழி பெயர்க்கப்பட்ட இடத்தில்’தவஃப்பைத்தனீ” என்ற சொல் பயன் படுத்தப்பட்டுள்ளது. இச்சொல்லுக்கு ‘என்னை மரணிக்கச் செய்த போது” என்று பொருள் கொள்வதா? ‘என்னைக் கைப்பற்றிய போது” என்று பொருள் கொள்வதா? என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.
‘என்னை மரணிக்கச் செய்த போது” என்று சிலர் பொருள் கொண்டு ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்பதற்கு இவ்வசனத்தைச் சான்றாகக் காட்டுவர். ‘என்னை மரணிக்கச் செய்த பின் அவர்களின் நடவடிக்கைக்கு நீயே பொறுப்பு” என்று ஈஸா நபியே கூறியுள்ளதிருந்து அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதை அறியலாம் என்று இவர்கள் வாதிடுகின்றனர்.
இது போல் அமைந்த மற்றொரு வசனத்தையும் எடுத்துக் காட்டுகின்றனர்.
‘ஈஸாவே! நான் உம்மைக் கைப்பற்றுபவனாகவும், என்னளவில் உம்மை உயர்த்துபவனாகவும், (என்னை) மறுப்போரிடமிருந்து உம்மைத் தூய்மைப்படுத்துபவனாகவும், உம்மைப் பின்பற்றுவோரை கியாமத் நாள் வரை (என்னை) மறுப்போரை விட மேல் நிலையில் வைப்பவனாக வும் இருக்கிறேன்” என்று அல்லாஹ் கூறியதை நினைவூட்டுவீராக! பின்னர் என்னிடமே உங்களின் திரும்புதல் உள்ளது. நீங்கள் முரண்பட்ட விஷயத்தில் உங்களுக்கிடையே தீர்ப்பு வழங்குவேன்.
(திருக்குர்ஆன் 3:55)
உம்மைக் கைப்பற்றுபவனாகவும் என்ற இடத்தில் முதவஃப்பீக என்ற அரபுச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சொல்லும் தவஃப்பாவிலிருந்து பிறந்த சொல்லாகும். எனவே ‘உம்மை மரணிக்கச் செய்பவனாகவும்” என்று தான் பொருள் கொள்ள வேண்டும் எனவும் இவர்கள் வாதிடுகின்றனர்.
அவர்கள் கூறுவது என்ன என்பதை அறிந்து விட்டு இதன் சரியான விளக்கத்தைக் காண்போம்.
‘தவஃப்பா” என்ற சொல் திருக்குர்ஆனில் 25 இடங்களில் இடம் பெற்றுள்ளது. அவற்றில் 23இடங்களில் மரணிக்கச் செய்தல் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே,இந்த வசனத்திலும் அவ்வாறே பொருள் கொள்ள வேண்டும் என்பது இவர்களின் வாதம்.
இவர்களின் இந்த வாதம் அறிவுடையோரால் நிராகரிக்கப்பட வேண்டிய வாதமாகும். இவர்களின் வாதத்திலேயே இவர்களின் வாதத்துக்கு மறுப்பும் அமைந்திருக்கிறது.
இவர்களின் வாதப்படி 23 இடங்களில் மரணிக்கச் செய்தல் என்று பொருள் கொள்ளப்பட்டிருந்தும் இரண்டு இடங்களில் கைப்பற்றுதல் என பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இவர்களின் வாதம் சரி என்று வைத்துக் கொண்டால் 23 இடங்களில் செய்த பொருளையே மீதி இரண்டு இடங்களுக்கும் செய்திருக்க வேண்டும்.
எனவே, அந்தந்த இடங்களில் எந்தப் பொருள் சரியானது என்பது தான் கவனிக்கப்பட வேண்டுமே தவிர, பெரும்பான்மை அடிப்படையில் எல்லா இடங்களுக்கும் ஒரே அர்த்தம் செய்வது ஏற்கத்தக்கது அல்ல.
இது குறித்து நாம் விரிவாகவே ஆராய்வோம். ‘தவஃப்பா” என்ற சொல்ன் நேரடிப் பொருள் மரணிக்கச் செய்தல் அல்ல; ‘முழுமையாக எடுத்துக் கொள்ளுதல்” என்பதே அதன் நேரடிப் பொருளாகும்.
மரணத்தின் மூலம் மனிதன் முழுமையாக எடுத்துக் கொள்ளப்படுவதால் மரணிக்கச் செய்வதை இச்சொல் மூலம் குறிப்பிடுவது வழக்கத்துக்கு வந்தது.
திருக்குர்ஆனில் 2:234, 2:240, 3:55, 3:193, 4:97, 6:61, 7:37, 7:126, 8:50, 10:46, 10:104, 12:101, 13:40, 16:28, 16:32, 16:70, 22:05, 32:11, 40:67, 40:77, 47:27 ஆகிய இடங்களில் மரணிக்கச் செய்தல் என்ற பொருளில் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அவன் தான் உங்களை இரவில் கைப்பற்றுகிறான் (திருக்குர்ஆன் 6:60)
இவ்வசனத்தில் அதே சொல் இடம் பெற்றாலும் மரணிக்கச் செய்தல் என்று இங்கே பொருள் இல்லை. தூக்கத்தில் ஒருவரைக் கைப்பற்றுதல் என்பதே இதன் பொருளாகவுள்ளது.
அவர்களை மரணம் கைப்பற்றும் வரை வீட்டில் தடுத்து வையுங்கள் (திருக்குர்ஆன் 4:15)
மரணம், மரணிக்கச் செய்யும் வரை என்று இவ்வசனத்திற்குப் பொருள் கொள்ள முடியாது.
உயிர்கள், மரணிக்கும் போதும் மரணிக்காதவைகளை அவற்றின் உறக்கத்தின் போதும் அல்லாஹ் கைப்பற்றுகிறான்
(திருக்குர்ஆன் 39:42)
கைப்பற்றுகிறான் என்று தான் அதே சொல்லுக்கு இந்த இடத்தில் பொருள் கொள்கிறோம். மரணிக்கச் செய்தல் என்று பொருள் கொள்வதில்லை.
இவை தவிர மறுமையில் முழுமையாகக் கூ தரப்படும் என்பதைக் கூறும் 2:281, 3:161, 3:185, 16:111 ஆகிய வசனங்களிலும் இதே சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. முழுமையாகக் கூ தரப்படும் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். மறுமையில் சாகடிக்கப்படுவார்கள் என்று பொருள் கொள்ள முடியாது.
மரணிக்கச் செய்தல், கைப்பற்றுதல், முழுமையாக வழங்குதல் ஆகிய பொருள் இச்சொல்லுக்கு உண்டு. எந்தெந்த இடத்துக்கு எது பொருத்தமானதோ அதை அந்த இடத்தில் செய்ய வேண்டும்.
தொழுகையைக் குறிக்கும் ‘ஸலாத்” என்ற சொல்லும் அதிருந்து பிறந்த சொற்களும் 109இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 102 இடங்களில் தொழுகையைக் குறிப்பதற்கும் 7 இடங்களில் அகராதியில் உள்ள அர்த்தத்துக்கும் பயன்படுத்தப் பட்டுள்ளது. இப்படி ஏராளமான சொற்களைக் காணலாம்.
இப்போது விவாதத்துக்கு எடுத்துக் கொண்ட வசனத்தில் இடம் பெற்ற ‘தவஃப்பா” என்ற சொல்லுக்கு எவ்வாறு பொருள் கொள்வது?
என்னை மரணிக்கச் செய்த போது என்று இந்த இடத்தில் நாம் பொருள் கொண்டால் ‘ஈஸா நபி கியாமத் நாளின் அடையாளமாக உள்ளார்” (திருக்குர்ஆன் 43:61) என்ற வசனத்துடனும், ‘ஈஸா நபி மரணிப்பதற்கு முன் வேதமுடையோர் அவரை நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள்” (திருக்குர்ஆன் 4:159) என்ற வசனத்துடனும் மோதுகின்றது. கைப்பற்றுதல் என்று பொருள் கொண்டால் அவ்விரு வசனங்களுடன் ஒத்துப் போகின்றது.
மரணிக்கச் செய்தல் என்பது எவ்வாறு தவஃப்பாவின் கருத்தாக இருக்கிறதோ அது போலவே கைப்பற்றுதல் என்பதும் அச்சொல்லுக் குரிய நேரடிப் பொருள் தான். அச்சொல்லுக்குரிய இரண்டு அர்த்தங்களில் எந்த அர்த்தம் ஏனைய வசனங்களுடன் முரண்படாத வகையில் ஒத்துப் போகிறதோ அதைக் கொள்வது தான் சரியானதாகும்.
மேலும், ஈஸா நபி கூறிய வாசக அமைப்பும் இக்கருத்துக்கு வலு சேர்க்கின்றது. ‘நான் உயிருடன் இருந்தவரை அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்; என்னை நீ கைப்பற்றிய போது நீயே அவர்களுக்குப் பொறுப்பாளன்” என்று ஈஸா நபி கூற மாட்டார்கள்.
‘நான் அவர்களுடன் இருந்த போது பார்த்துக் கொண்டிருந்தேன்; என்னை நீ கைப்பற்றிய போது நீயே அவர்களுக்குப் பொறுப்பாளன்” என்று தான் ஈஸா நபி கூறுவார்கள்.
‘நான் உயிருடன் இருந்த போது” எனக் கூறாமல் ‘நான் அவர்களுடன் இருந்த போது” என்று ஈஸா நபி கூறுவார்கள். இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை நாம் சிந்திக்க வேண்டும்.
‘நான் உயிருடன் இருந்த போது” என்று கூறி விட்டு ‘ஃபலம்மா தவஃப்பைதனீ” என்று அவர்கள் கூறினால், அந்த இடத்தில் ‘என்னை மரணிக்கச் செய்த போது” என்று தான் பொருள் கொள்ள முடியும்.
ஆனஈல் அல்லஈஹ் அந்த வார்த்தைகளைத் தவிர்த்து விட்டு ‘நான் அவர்களுடன் இருந்த போது” என்ற முற்றிலும் வித்தியாசமான வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளான்.
அதாவது ஈஸா நபியவர்கள் அவர்களுடன் இருந்து கண்காணிக்கும் நிலையையும் அடைவார்கள்; உயிருடன் இருந்தும் அவர்களுடன் இல்லாமல் இருக்கும் நிலையையும் அடைவார்கள் என்பது தான் இதன் கருத்தாகும்.
‘தவஃப்பா” என்ற சொல்லுக்கு ‘என்னைக் கைப்பற்றிய போது” என்று பொருள் கொள்ள வேண்டும் என்பதை இவ்வாசக அமைப்பும் உணர்த்துகின்றது.
அந்த மக்களுடன் ஈஸா (அலை) இவ்வுலகில் வாழ்ந்த போது அம்மக்களைக் கண்காணித்தார்கள். அம்மக்களை விட்டும் உயர்த்தப் பட்ட பின் கண்காணிக்க மாட்டார்கள் என்ற கருத்து, முன்னர் நாம் சுட்டிக் காட்டிய வசனங்களுடன் அழகாகப் பொருந்திப் போகின்றன.
இவை தவிர தர்க்க ரீதியான சில கேள்விகளையும் கேட்கின்றனர்.
இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒருவர் எப்படி உயிருடனிருக்க முடியும்? அவர் எதை உண்கிறார்? அவர் எப்படி மலஜலம் கழிக்கி றார்? என்பது போன்ற கேள்விகளை இத்தகையோர் கேட்கின்றனர்.
அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு விஷயத்தைப் பற்றி முடிவு செய்துவிட்டால் அந்த முடிவு நமக்கு விருப்பமில்லாததாக இருந்தாலும் நமது அறிவு அதை ஏற்கத் தயக்கம் காட்டினாலும் நம்ப வேண்டியது முஸ்லிம்களின் கடமையாகும். ஏனெனில் நமது அறிவு ஏற்க மறுப்பதையும் செய்து காட்டும் வல்லமை அவனுக்கு இருக்கின்றது.
சாதாரண நிலையில் இவ்வாறு நடப்பதில்லை என்பது உண்மை தான். அல்லாஹ் நாடினால் இவ்வாறு நடத்திக் காட்டுவது சந்தேகப்படக் கூடியதன்று. அதிசயமான ஒரு விஷயத்தைச் சாதாரண நிலையில் வைத்துப் பார்க்கக் கூடாது என்பதை உணர்ந்தால் இவ்வாறு கேட்க மாட்டார்கள்.
ஈஸா (அலை) அவர்கள் தொட்டில் குழந்தையாக இருந்த போது பேசியதாக அல்லாஹ் கூறுகிறான். (5:110)
இதுவும் சாதாரணமாக நடப்பது கிடையாது. ஆயினும் இறைவன் அவ்வாறு கூறுவதால் அதில் குதர்க்கம் செய்வதில் நியாயம் இல்லை.
இறந்தவர்களை உயிர்ப்பித்தல் சாதாரணமாக நடக்கக் கூடிய தன்று. ஆயினும் ஈஸா (அலை) அவ்வாறு செய்ததாக அல்லாஹ் கூறுவதால் (3:49, 5:110) அதை நம்பித் தான் ஆக வேண்டும். இறைவனின் வல்லமைக்கு முன்னே இது பெரிய விஷயமன்று.
களிமண்ணால் பறவை செய்து அதை நிஜப் பறவையாக மாற்றுவதும் நடைமுறையில் சாத்தியமற்றது தான். ஆனால் இதை அல்லாஹ் கூறுவதால் (3:49) நம்பித் தான் ஆக வேண்டும்.
இது போல் பல நூறு விஷயங்களில் குதர்க்கமான கேள்விகள் கேட்க வழியுண்டு. ஆயினும் அல்லாஹ்வின் வல்லமையை உணர்ந்து அல்லாஹ்வின் வேதத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இவற்றை நம்பத் தயங்க மாட்டார்கள். நம்பத் தயங்கினால் அல்லாஹ்வையும் அவனது வேதத்தையும் நம்பியவர்களாக முடியாது.
‘ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே தீரும்.” என்று அல்லாஹ் கூறுகிறான். (3:185, 21:35, 29:57) ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே தீரும் என்பதற்கு முரணாக ஈஸா (அலை) உயிருடன் உள்ளார்கள் என்பது அமைந்துள்ளது எனவும் அவர்கள் வாதிடுகின்றனர்.
ஈஸா (அலை) அவர்கள் ஒரு போதும் மரணிக்கவே மாட்டார்கள் என்று கூறினால் இவர்கள் கூறக்கூடிய முரண்பாடு ஏற்படும். ஈஸா (அலை) அவர்கள் உயிருடன் உள்ளார் என்று கூறக் கூடியவர்கள் ஈஸா (அலை) மரணிக்க மாட்டார்கள் என்று கூறுவதில்லை. அவர்கள் இவ்வுலகுக்கு வந்து வாழ்ந்து மரணத்தைத் தழுவுவார்கள் என்றே நம்புகின்றனர். மரணம் தாமதமாக வருகின்றது என்று தான் நம்புகின்றனரே தவிர மரணமே அவருக்கு வராது என நம்புவதில்லை. எனவே அந்த வசனத்தினடிப்படையில் ஈஸா (அலை) மரணித்து விட்டார் என வாதிக்க முடியாது.
ஈஸா நபி இன்றளவும் உயிருடன் இருக்கிறார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் இல்லை. எனவே எங்கள் ஈஸா நபியே உங்கள் நபியை விடச் சிறந்தவர்கள் என்று கிறித்தவர்கள் வாதம் செய்வதற்கு இந்த நம்பிக்கை உதவி செய்கிறது. எனவே கிறித்தவர்களின் வாயை அடைக்க ஈஸா நபியின் மரணத்தை நம்பியேயாக வேண்டும் என்பது அவர்களின் வாதம்.
இது முட்டாள்தனமான வாதமாகும். ஒரு நபிக்கு கொடுக்காத சில சிறப்பை வேறொரு நபிக்கு அல்லாஹ் கொடுக்கலாம். கொடுத்திருக்கிறான். ஓரிரு சிறப்பு உள்ளதால் எல்லா வகையிலும் ஒருவர் சிறந்தவராக முடியாது.
ஈஸா நபி தந்தையின்றி அற்புதமான முறையில் பிறந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ தந்தையின் விந்துத்துளி மூலம் பிறந்தார்கள். அதனால் ஈஸா நபியே சிறந்தவர் என்று கூட கிறித்தவர்கள் வாதிடலாம். இதனால் ஈஸா நபி தந்தைக்குத் தான் பிறந்தார் என்று கூற வேண்டுமா?
இவர்கள் கூறியது போல் கிறித்தவர்கள் வாதம் செய்தால் அந்த வாதத்தை அறிவுப்பூர்வமாகச் சந்திக்க இயலும்.
எவ்வளவு காலம் ஒருவர் உயிருடன் இருக்கிறார் என்பதில் சிறப்பு ஏதுமில்லை. என்ன செய்திருக்கிறார் என்பதிலேயே சிறப்பு உள்ளது. இது பகுத்தறிவுள்ள அனைவரும் ஏற்கக் கூடிய வாதம் தான். இதை விளக்கமாக எடுத்துச் சொல்லி அவர்களின் வாதத்தை முறியடிக்க முடியும்.
கர்த்தர் ஏசுவுக்கு அருளிய வேதம் இன்று வரை பாதுகாக்கப்படவில்லை.
ஏசு தீமைக்கு எதிராக ஏதும் போர் புரிந்ததாக வீர வரலாறு இல்லை.
வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் சரியான தீர்வைக் கூறியதாக பைபிள் கூறவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கோ இந்தச் சிறப்புகள் உள்ளன. இப்படி ஆயிரமாயிரம் சிறப்புகளைக் கூறி அவர்களின் வாதத்தை முறியடிக்க முடியும். அவர்களின் தவறான வாதத்திற்கான சரியான உண்மையை மறுக்கத் தேவையில்லை.
ஈஸா(அலை) அவர்களின் வருகை
இன்னும் மர்யமின் குமாரரும், அல்லாஹ்வின் தூதருமான மஸீஹ் எனும் ஈஸாவை நாங்கள் கொன்று விட்டோம் என்று அவர்கள் கூறுவதாலும் அவர்கள் சபிக்கப்பட்டனர். அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை; அவரைச் சிலுவையில் அறையவுமில்லை. எனினும் அவர் (ஈஸா) அவர்களுக்குக் குழப்பமாக்கப்பட்டார். நிச்சயமாக இதில் முரண்படுவோர் இது பற்றி சந்தேகத்திலேயே உள்ளனர். வெறும் யூகத்தைப் பின்பற்றுவோர் தவிர (சரியான) ஞானம் அவர்களிடம் இல்லை. நிச்சயமாக அவரை அவர்கள் கொல்லவே இல்லை. மாறாக அல்லாஹ் அவரைத் தன்னளவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கிறான்.
(அல்குர்ஆன் 4:157,158)
இவ்விரு வசனங்களையும், அல்லாஹ்வின் வல்லமையை உணர்ந்து, விதண்டாவாதமும், வார்த்தை ஜாலமும் செய்யாமல் சிந்தித்தால் இது கூறக்கூடிய உண்மையை யாரும் தெளிவாக அறியலாம்.
“அவரை அவர்கள் கொல்லவில்லை” என்பது அவர் மரணிக்கவில்லை என்பதை அறிவிக்காது. யூதர்கள் கொல்லவில்லை என்பதைத்தான் குறிக்கும். வேறு வழியில் அவர் மரணித்திருக்கலாம் என்பதை இவ்வசனம் மறுக்காது என்று இவர்கள் சமாதானம் கூறுகின்றனர். அத்துடன் அல்லாஹ் நிறுத்திக் கொண்டால் இவர்களது சமாதானம் பொருத்தமானதே. “மாறாக அவரைத் தன்னளவில் அல்லாஹ் உயர்த்திக் கொண்டான்” என்று அல்லாஹ் கூறுகிறான். அவர்களும் கொல்லவில்லை. அவரைத் தன்னளவிலும் உயர்த்திக் கொண்டான் என்பதையும் சேர்த்து சிந்தித்தால் அவர் மரணிக்கவில்லை என்பது தெளிவாகும்.
அவரை உயர்த்திக் கொண்டான் என்றால் அவரது அந்தஸ்தை உயர்த்திக் கொண்டான் என்று அவர்கள் விளக்கம் கூறி சமாளிக்கின்றனர்.
அவர்களுடைய உடல் சம்பந்தமாகப் பேசி வரும்போது திடீரென்று அந்தஸ்து என்று தாவுவது ஏற்புடையதாக இல்லை. அந்தஸ்து உயர்வு பற்றி இங்கே கூற வேண்டியதில்லை.
அவரைக் கொல்லவில்லை. (கொல்லாத வகையில்) உயர்த்திக் கொண்டான் என்பது பொருத்தமாக அமைகிறது.
ஒரு வாதத்துக்காக அந்தஸ்து உயர்வு என்றே வைத்துக் கொள்வோம். வேறு பல சான்றுகள் இந்த வாதத்தை உடைத்து எறிகின்றன.
நிச்சயமாக அவர் (ஈஸா) இறுதிநாளின் அடையாளமாவார். இதில் அறவே சந்தேகம் கொள்ளாதீர்கள்! என்னைப் பின்பற்றுங்கள். இதுதான் நேரான வழியாகும்.
(அல்குர்ஆன் 43:61)
ஈஸா(அலை) அவர்கள் இறுதிக்காலத்தின் அத்தாட்சியாவார் என்ற வாசகம் பலமுறை சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று. இது ஈஸா(அலை) அவர்களுக்கு முந்தைய வேதங்களில் சொல்லப்பட்டிருந்தால் எதையாவது கூறி சமாளிக்கலாம். இது நபி(ஸல்) அவர்களின் உம்மத்தினரை நோக்கி அல்லாஹ்வால் கூறப்படுகின்றது. கியாமத் நாளின் அடையாளம் என்றால் இனிமேல் அந்த அடையாளம் ஏற்பட வேண்டும் என்பதைத் தவிர வேறு அர்த்தம் அதற்கு இருக்க முடியாது. எப்போதோ இறந்து விட்ட ஒருவரைப் பற்றி இவ்வாறு கூற முடியாது.
கியாமத் நாளின் அடையாளமாக அவர் திகழ்கிறார் என்ற குர்ஆன் வசனத்தை மனதிலிருத்திக் கொண்டு அவரை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான் என்பதைச் சிந்தித்தால் அந்தஸ்து உயர்வு என்ற அர்த்தத்துக்கு வருவது பொருத்தமாக இராது. அந்தஸ்து உயர்வு என்று சாதித்தால் கூட “மறுமை நாளின் அடையாளமாக அவர் திகழ்கிறார்” என்பது மிகத்தெளிவாக இந்த உண்மையைக் கூறிவிடு கின்றது. ஈஸா நபி மரணித்துவிட்டார்கள் என்று கூறுவோர் இந்த வசனத்துக்கு ஏற்கத்தக்க எந்த விளக்கமும் கூற முடியவில்லை. இப்படி ஒரு வசனம் இருப்பதைக் கண்டு கொண்டதாகவே அவர்கள் காட்டிக் கொள்வதில்லை.
கியாமத் நாளின் அடையாளமாக அவர்கள் திகழ்கிறார்கள் என்பதை நபி(ஸல்) அவர்கள் மிகவும் அழகாக நமக்கு விளக்குகிறார்கள்.
“எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! மர்யமுடைய மகன் உங்களிடம் நீதி செலுத்து பவராக, தீர்ப்பு வழங்குபவராக இறங்குவார். சிலுவையை முறிப்பார். பன்றியைக் கொல்வார். ஜிஸ்யா வரியை நீக்குவார். வாங்குவதற்கு யாருமில்லாத அளவுக்குச் செல்வம் கொழிக்கும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
நூற்கள்: புகாரி, முஸ்லிம்
நானே ஈஸா நபி என்று கூறிய பொய்யர்கள் சிலர் தோன்றினர். சிலுவை, பன்றி, ஜிஸ்யா என்பதற்கெல்லாம் நவீனமான விளக்கம் கூறி அதைத் தாங்கள் செயல்படுத்தியதாகக் கதையளந்தனர். “யாரும் வாங்காத அளவுக்குச் செல்வம் கொழிக்கும்” என்பதற்கு எந்த சமாதானமும் அவர்களிடம் இல்லை. இந்தப் பொய்யர்களின் காலத்தில் இத்தகைய நிலை ஏற்படவேயில்லை.
முஸ்லிமில் இடம் பெறும் மற்றொரு அறிவிப்பில் “போட்டி, பொறாமை, கபடம் ஆகியவை எடுபட்டுப் போகும்” என்று நபி(ஸல்) கூறியதாக இடம்பெற்றுள்ளது. இந்தப் பொய்யர்கள் வந்தபோது இந்தத் தீயபண்புகள் முன்பை விட அதிகமானதே தவிர எடுபட்டுப் போகவில்லை.
அவர் இறங்கக் கூடிய காலத்தில் “இஸ்லாத்தைத் தவிர எல்லா மதங்களையும் அல்லாஹ் அழிப்பான்” என்று அபூதாவூதில் இடம் பெறும் ஹதீஸ் கூறுகிறது. அந்த பொய்யர்களின் காலத்தில் அப்படி நடக்கவில்லை.
தஜ்ஜால் கொடுமை தலைவிரித்தாடும் போது தான் ஈஸா(அலை) இறங்குவார்கள்.
தஜ்ஜாலின் நிலை இவ்வாறு இருக்கும்போது மர்யமின் மகன் மஸீஹை அல்லாஹ் அனுப்புவான். டமாஸ்கஸ் நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள வெள்ளை மினாரா (கோபுரம்) வின் அருகில் அவர் இறங்குவார். இரண்டு வானவர்களின் சிறகுகள் மீது தம் கைகளை வைத்தவராக இறங்குவார். அவர் தலை குனிந்தால் தலையில் நீர் கொட்டும். தலையை உயர்த்தினால் முத்துப் போல் தண்ணீர் சிதறும்! அவரது மூச்சுக்காற்று அவரது பார்வை எட்டும் தூரம் வரை செல்லும். அவரது மூச்சுக்காற்று படுகின்ற எந்த காஃபிரும் சாகாமல் இருப்பதில்லை. பின்னர் தஜ்ஜாலைத் தேடுவார்கள். லுத்’ (பைத்துல் முகத்தஸின் அருகிலுள்ள ஊர்) எனும் வாசலில் வைத்து அவனைக் கொல்வார்கள் என்றும் நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம் ஆன்(ரலி)
நூல்: திர்மிதீ
இந்தப் பொய்யர்கள் மூலம் இவற்றில் எதுவும் நிறைவேறவில்லை.
ஈஸா(அலை) மரணித்து சில காலத்தில் யுகமுடிவு நாள் வந்துவிடும் எனவும் நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.
யுகமுடிவு நாளின் மிக நெருக்கத்தில் ஏற்படவுள்ள நிகழ்ச்சிகளில் ஈஸா(அலை) அவர்களின் வருகையும் ஒன்றாகும் என்பதை முஸ்லிம்கள் நம்பியாக வேண்டும்.
ஈஸா(அலை) இன்று வரை மரணிக்கவில்லை; உடலுடன் உயர்த்தப்பட்ட அவர்கள் இறுதிக்காலத்தில் இறங்குவார்கள் என்பதற்குச் சான்றாக மற்றுமொரு தெளிவான திருக்குர்ஆன் வசனத்தைப் பாருங்கள்! “அல்லாஹ் அவரைத் தன்னளவில் உயர்த்திக் கொண்டான்” என்ற வசனத்திற்கு அடுத்த வசனமாக இந்த வசனம் இடம் பெற்றுள்ளது.
வேதமுடையவர்களில் எவரும் அவர்(ஈஸா) இறப்பதற்கு முன் அவர் (ஈஸா) மீது ஈமான் கொள்ளாமல் இருப்பதில்லை. ஆனால் மறுமை நாளில் அவர் அவர்களுக்கு எதிராகச் சாட்சி சொல்பவராக இருப்பார்.
(அல்குர்ஆன் 4:159)
ஈஸா(அலை) அவர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்பே மரணித்துவிட்டார்கள் என்று கூறக்கூடியவர்களின் நம்பிக்கைப்படியும் இந்த வசனத்திற்குப் பொருள் கொண்டு பார்ப்போம். ஈஸா(அலை) அவர்கள் இன்று வரை மரணிக்கவில்லை என்று கூறுவோரின் நம்பிக்கைப்படியும் பொருள் கொண்டு பார்ப்போம். எது சரியான பொருள் என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.
“ஈஸா நபியின் மரணத்திற்கு முன்” என்ற சொற்றொடருக்கு முதல் சாராரின் நம்பிக்கைப் பிரகாரம் எப்படிப் பொருள் வரும்? ஈஸா நபியின் மரணத்திற்கு முன் என்றால் அவர் இந்த உலகில் வாழ்ந்தபோது என்றுதான் இவர்கள் பொருள் கொள்ள முடியும். ஈஸா நபியின் மரணத்திற்கு முன் அதாவது அவர் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் என்பது தான் இந்தச் சொற்றொடரின் பொருளாகிறது.
வேதமுடையவர்கள் அனைவரும் ஈஸா(அலை) வாழ்ந்த காலத்தில் இனி ஈமான் கொள்வார்கள் என்பது மொத்த வசனத்தின் பொருளாகிறது. ஈஸா(அலை) வாழ்ந்த காலத்தில் இனி ஈமான் கொள்வார்கள் என்பதற்கு ஏதேனும் பொருளிருக்கிறதா? அல்லாஹ்வின் வசனம் எந்த அர்த்தமுமில்லாததாக அல்லவா ஆகிவிடும்?
ஈஸா(அலை) இனிமேல் மரணிப்பதற்கு முன் – இனி மேல் வேதமுடையவர்கள் ஈமான் கொள்வார்கள் என்பது தான் பொருத்தமாக உள்ளது. ஈஸா நபி வாழ்ந்த காலத்தில் இனி ஈமான் கொள்வார்கள் என்பதில் எவ்வளவு குழப்பம் என்று பாருங்கள். அவர் வாழ்ந்த காலத்தில் இனி ஈஸா(அலை) மீது ஈமான் கொள்வார்கள் என்று அவர் மரணித்த பிறகு அல்லாஹ் சொல்வானா?
இதைச் சிந்தித்தால், ஈஸா(அலை) இன்றுவரை மரணிக்கவில்லை; அவர் மரணிப்பதற்கு முன்னால் வேதமுடையோர் அனைவரும் அவரை நேரில் பார்த்து ஈமான் கொள்வார்கள் என்பது தெளிவாகும். எவ்வளவு அழுத்தமாக ஈஸா நபி மரணிக்கவில்லை என்பதைக் குர்ஆன் கூறுகிறது என்று சிந்தியுங்கள்! மேலும் அல்லாஹ் அவரைத் தன்னளவில் உயர்த்திக் கொண்டான் எனக் கூறப்படுவதால் உயர்த்திக் கொண்டான் என்பது உடலுடன்தான் என்பதை ஐயத்திற்கிடமின்றி அறிவிக்கின்றது.
புகை மூட்டம்
யுகமுடிவு நாளின் நெருக்கத்தில் வானத்திலிருந்து புகைப் படலம் இறங்கும். அது சாதாரண புகையாக இருக்காது. மாறாகக் கடுமையாக வேதனையளிப்பதாக அந்தப் புகை அமைந்திருக்கும் என்று திருக்குர்ஆனும் நபிமொழிகளும் அறிவிக்கின்றன.
வானம் தெளிவான புகையை வெளிப்படுத்தக் கூடிய நாளை எதிர்பார்ப்பீராக! அப்புகை மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும், இது கடுமையான வேதனையாக அமைந்திருக்கும்.
(அல்குர்ஆன் 44:10,11)
உங்கள் இறைவன் உங்களுக்கு மூன்று விஷயங்களைப் பற்றி எச்சரிக்கிறான். அவற்றில் ஒன்று புகை மூட்டம். முஃமினை இப்புகை ஜலதோஷம் பிடிப்பது போல் பிடிக்கும். காஃபிரைப் பிடிக்கும் போது அவன் ஊதிப்போவான். அவனது செவிப்பறை வழியாகப் புகை வெளிப்படும். இரண்டாவது (அதிசயப்)பிராணி. மூன்றாவது தஜ்ஜால் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூமாலிக்(ரலி)
நூல்: தப்ரானி
பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை கியாமத் நாள் ஏற்படாது என்று நபி(ஸல்) கூறிய ஹதீஸை முன்னர்(பக்கம் 17ல்) குறிப்பிட்டுள்ளோம். அந்தப் பத்து அடையாளங்களில் ஒன்றாக புகை மூட்டத்தையும் நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளதை இந்த இடத்தில் கவனத்தில் கொள்க!
அப்புகையை காஃபிர்கள் சுவாசிக்கும் போது அப்புகை அவர்களின் காதுகள் வழியாக வெளியேறும் என்றும் அதனால் அவர்களின் உடல் ஊதிவிடும் என்றும் அவர்களுக்கு அதனால் மிகப்பெரிய வேதனை ஏற்படுமென்றும் இந்த ஆதாரங்கள் கூறுகின்றன.
மூன்று பூகம்பங்கள்
யுகமுடிவு நாளின் நெருக்கத்தில் மிகப்பெரிய அளவில் நிலச்சரிவுகளும், பூகம்பங்களும் ஏற்படும். மனிதர்கள் உயிருடன் புதையுண்டு போவார்கள்.
(மதீனாவின்) கிழக்கே ஒரு பூகம்பம். மேற்கே ஒரு பூகம்பம், அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம் ஆகிய மூன்று பூகம்பங்களை நீங்கள் காண்பது வரை யுகமுடிவு நாள் ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி)
நூல்: முஸ்லிம்
உலகில் ஆங்காங்கே பூகம்பங்களும் அவ்வப்போது ஏற்பட்டு வருகின்றன என்றாலும் நபி(ஸல்) அவர்கள் குறிப்பிடக்கூடிய இந்த பூகம்பங்கள் மிகவும் பிரம்மாண்ட மானவையாக அமைந்திருக்கும்.
இம்மூன்று பூகம்பங்களையும் நபி(ஸல்) அவர்கள் மூன்று தனி அடையாளங்களாகக் கூறியுள்ளார்கள். இம்மூன்றையும் சேர்த்து இதுவரை ஒன்பது அடையாளங்களை நாம் விளக்கியுள்ளோம்.
பெரு நெருப்பு
எமன் நாட்டில் மிகப்பெரும் நெருப்பு ஏற்பட்டு அந்நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாக பரவி மொத்த உலகையும் சூழ்ந்து கொள்ளும். யாராலும் அணைக்கமுடியாத அந்நெருப்பு பரவ ஆரம்பித்ததும் மக்கள் தத்தமது ஊரைக்காலி செய்துவிட்டு ஓட ஆரம்பிப்பார்கள். நெருப்பும் அவர்களை விரட்டிச் செல்லும். முடிவில் எந்த இடத்தில் அவர்கள் ஒன்று சேர்க்கப்படுவார்களோ அந்த இடத்தை அடைவார்கள்.
எமனிலிருந்து நெருப்பு தோன்றி மக்களை அவர்களது மஹ்ஷரின்பால் விரட்டிச் செல்லும், அதுவரை கியாமத் நாள் ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி)
நூல்: முஸ்லிம்
யுக முடிவு நாளின் நெருக்கத்தில் ஏற்படக்கூடிய பத்து அடையாளங்களையும் ஓரளவு நாம் அறிந்து கொண்டோம்.
இந்தப் பத்து அடையாளங்கள் ஏற்பட்டு, பாவமன்னிப்பின் வாசல் அடைபடுவதற்கு முன் நமது வாழ்வைச் சீராக்கிக் கொள்ள வல்ல இறைவன் துணை செய்வானாக!.
– நன்றி: OnlinePJ
, ,