குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

11.8.16

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

மவ்லிதுகள் தீனுக்காகவா?
தமிழகத்தில் பல வருடங்கள் பக்தி பரவசத்துடன் ஓதிவரும் சுப்ஹான மவ்லித் இஸ்லாத்திற்கு எதிரானது என்று பல ஆதாரங்களை எடுத்துக்காட்டி மக்களை சிந்திக்க வைத்துள்ளோம். மவ்லித் என்பது நபிகளார் காலத்தில் இருந்ததில்லை என்பதையும் அவை மூடநம்பிக்கையை வளர்ப்பதற்காகவும் உலக நோக்கத்திற்காகவும் தொகுப்பப்பட்டதுதான் என்பதை மவ்லித் ஓத வேண்டும் என்று வலியுறுத்தும் மவ்லவி தேங்கை சர்புத்தீன் என்பவர் எழுதிய சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் என்ற புத்தகத்திலிருந்து எடுத்து எழுதியுள்ளோம் வாசகர்கள் கவனத்தில் கொள்க!

சுப்ஹான மவ்லிதை எழுதியவர் யார்?
தமிழகம் எங்கும் பரவலாக பாடப்படும் சுப்ஹான மவ்லிதை எழுதியவர் யார் என்பது தெரியாது. மகுடமாய்த் திகழும் சுப்ஹான் மவ்லிதை கல்விக்கடல் கஸ்ஸாலி இமாம் (ரஹ்) அவர்களோ, அல்இமாமுல் கத்தீப் முஹம்மதுல் மதனி (ரஹ்) அவர்களோ இயற்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ‘இயற்றியவர் யார்?’ என்று திட்டவட்டமாக தெரியவில்லை. (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 5)

சுப்ஹான மவ்லிதின் பெயர் காரணம்?
இந்த மவ்லித் ”ஸுப்ஹான அஸீஸில் ஃகஃப்பார் என்று தொடங்குவதால் இதன் முதல் சொல்லான ஸுப்ஹான என்பதே இந்த மவ்லிதுக்குரிய பெயராக அமைந்தது. (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 5)

‘மவ்லித்’ என்பதின் பொருள்
‘மவ்லிது’ எனும் அரபிச் சொல்லின் அகராதிப் பொருள் ‘பிறந்த நேரம்’ அல்லது ‘பிறந்த இடம்’ என்பதாகும். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித்)
மவ்லித் ஓதுதலை உருவாக்கியவர் யார்?
மவ்லிது ஓதும் அமலை அரசின் பெருவிழாக்களில் முக்கியம் வாய்ந்த ஒன்றாக முதலில் ஏற்படுத்திவர்,தலை சிறந்த-வள்ளல் தன்மை மிக்க-அரசர்களில் ஒருவரான ‘அல்மலிக்குல் முழஃப்ஃபர் அபூஸயீத் கவ்கப்ரீ – பின்- ஸைனுத்தீன் அலிய்யிப்னு புக்தகீன்’ என்பவர் ஆவார். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 13)
ஆஹா மெகா ஆஃபர்
உங்கள் நோக்கம் நிறைவேற உங்களுக்கு முழுயைக பாதுகாப்பு பெற வருடத்தில் ஒருமாதம் மெகா ஆஃபர் நாள் வந்துள்ளது என்று மவ்லித் பிரியர்கள் அறிவித்துள்ளனர்.
மவ்லிது ஓதுவது அந்த வருடம் முழுவதும் பாதுகாப்பாகவும் நாட்டத்தையும் நோக்கத்தையும் அடையச் செய்வதின் மூலமாக உடனடியான நற்செய்தியாகவும் அமைந்திருப்பது மவ்லிதின் தனித்தன்மைகளைச் சார்ந்ததென்று அனுபவத்தின் வாயிலாக அறியப்பட்டிருக்கின்றதென இமாம் கஸ்தலானி (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 11)

ஈமானின் வெற்றிக்கு இலகுவான வழி
மறுமையில் வெற்றிபெற தொழுகை நோன்பு போன்ற எந்த கடமையும் செய்யாமல் இலகுவாக செல்லும் வழியை சொல்லுகிறார்கள் மவ்லித் பிரியர்கள்.
”திருநபி (ஸல்) அவர்களின் மவ்லிது சபைக்கு ஒருவர் வருகை தந்து, அவர்களின் மகத்துவத்தை ஒருவர் கண்ணியப்படுத்தினால் அவர், ஈமானின் மூலம் வெற்றிபெற்றுவிட்டார்” (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 11)
ஆனால் அல்லாஹ்வின் வெற்றிப்பெற்றவர்களை யார்? அவர்களின் நடவடிக்கைள் என்ன? என்று கூறுவதை பாருங்கள் : நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர்,(அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். வீணானதைப் புறக்கணிப்பார்கள். ஸகாத்தையும் நிறைவேற்றுவார்கள். தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர, தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர்.இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள். தமது அமானிதங்களையும், தமது உடன்படிக்கையையும் அவர்கள் பேணுவார்கள். மேலும் அவர்கள் தமது தொழுகை களைப் பேணிக் கொள்வார்கள். பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்திற்கு அவர்களே உரிமையாளர்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.(23 : 1-11)
செலவு செய்யும் முறை
நம்மிடம் இருக்கும் செல்வத்தை எவ்வாறு செலவு செய்வது என்பதை மவ்லிது பிரியர்கள் கூறுவதை பாருங்கள் : ”உஹது மலையளவு தங்கம் என்னிடம் இருக்குமானால் நான் அதை நாயகம் (ஸல்) அவர்கள் மீது மவ்லிது ஓதுவதற்காகச் செலவு செய்ய விரும்புவேன்” என்று ஹஜ்ரத் ஹஸன் பஸரீ அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 11)
ஆனால் திருக்குர்ஆனும் நபி மொழிகளும் கூறுவதை பாருங்கள்
தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். “நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் (செலவிட வேண்டும்.) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்” எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் 2 : 214)

மவ்லித் சாப்பாடு கொடுத்தால் சுவர்க்கம்?
”மாநபி (ஸல்) மவ்லிது ஓதுவதற்காக ஒருவர் உணவு தயாரித்து முஸ்லிம் சகோதரர்களைத் திரட்டினார். அந்த மவ்லிதைக் கண்ணியப்படுத்துவதற்காக நறுமணம் பூசினார். புத்தாடை புனைந்தார். தன்னையும் சபையையும் அலங்கரித்தார். விளக்குகள் ஏற்றினாரென்றால் அத்தகையவரை மறுமை நாளில் நபிமார்கள் அடங்கிய முதல் பிரிவுடன் அல்லாஹ் எழுப்புவான். மேலும் அவர் நல்லோரின் ஆன்மா ஒதுங்கும் இல்லிய்யீன் திருத்தலத்தின் உயர்நிலையில் இருப்பார்” (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)

அமுத சுரபி மவ்லித்
அள்ள அள்ள குறையாத அமுத சுரபியாக செல்வத்தை அள்ளித்தரும் பாத்திரம் மவ்லிதாம். ”நாயகம் (ஸல்) அவர்கள் மீது மவ்லிது நிகழ்ச்சி நடத்துவதற்காக ஒருவர் தங்கம் அல்லது வெள்ளி நாணயங்களைத் தனியாக உண்டியலில் சேமித்து மவ்லிது நிகழ்ச்சி நடத்தியபின் எஞ்சிய நாணயங்களுடன் கலந்து விட்டாரெனில் இந்த நாணயங்களின் ‘பரக்கத்’ ஏனைய நாணயங்களிலும் ஏற்பட்டு விட்டது. இந்த நாணயம் வைத்திருப்பவர் வறுமை நிலை அடையமாட்டார்.மாநபி (ஸல்) மவ்லிதின் பரக்கத்தினால் இவரின் கை நாணயங்களை விட்டுக் காலியாகாது”. (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)

நல்லாடியர்களுடன் சுவர்க்கத்தில் இருக்க சுலபமான வழி
எந்த சிரமமும் இல்லாமல் சுவர்க்கத்திற்கு செல்ல அழகான ஒரு வழியை காட்டுகிறது மவ்லித். ”எந்த இடத்தில் எம்பெருமானார் (ஸல்) அவர்களின் மவ்லிது ஓதப்படுகிறதோ அந்த இடத்தை ஒருவர் நாடினால் நிச்சயமாக அவர் சுவனப்பூங்காக்களில் இருந்தும் ஒரு பூங்காவை நாடிவிட்டார். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)
”நாயகம் (ஸல்) அவர்களின் மவ்லிதுக்காக ஒருவர் தனியிடத்தை ஒதுக்கி, முஸ்லிம் சகோதரர்களைத் திரட்டி உணவு தயாரித்து வழங்கி உபகாரம் பல செய்து மாநபி (ஸல்) மவ்லிது ஓதுவதற்குக் காரணமாக இருந்தால் இத்தகையவரை மறுமைநாளில் மெய்யடியார்கள்,ஷுதாக்கள் ஸலாஹீன்கள் குழுவினருடன் , அல்லாஹ் எழுப்புவான் மேலும் ‘நயீம்’ எனும் சுவனத்தில் மறுமையில் இவர் இருப்பார்” என்று எமன் நாட்டு மாமேதை இமாம் யாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)
படைத்தவன் கூறும் வழிமுறையை கவனியுங்கள் : அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்கள், உண்மையாளர்கள், உயிர்த் தியாகிகள், மற்றும் நல்லோருடன் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள். (அல்குர்ஆன் 4 : 19)

மலக்குகளின் வருகை
”எந்தவொரு வீட்டிலோ பள்ளி வாசலிலோ மஹல்லாவிலோ மாநபி (ஸல்) மவ்லிது ஓதப்பட்டால் அவ்விடத்தைச் சார்ந்தவர்களை மலக்குகள் சூழ்ந்தே தவிர இல்லை. அவர்களைத் தன்கருணையினால் அல்லாஹ் சூழ வைத்துவிடுகிறான்” (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 13)
நபி (ஸல்) அவர்கள் கூறுவதைக் கேளுங்கள் : அல்லாஹ்வின் ஏதாவது ஒரு வீட்டில் ஒரு கூட்டத்தினர் ஒன்றிணைந்து அல்லாஹ்வின் வேதத்தை ஓதி அதை தங்களுக்குள் பாடம் நடத்தினால் அவர்கள் மீது அமைதி இறங்கும் அவர்களை ரஹ்மத் சூழ்ந்து கொள்ளும் மலக்குமார்கள் அவர்களை போர்த்திக் கொள்ளவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம் (4867)

மவ்லிதுகள் தீனுக்காக அல்ல! தீனிக்காக!
மாநபி (ஸல்) மவ்லிதையொட்டி இந்த (அல்மலிக்குல் முழஃப்ஃபர் அபூஸயீது கவ்கப்ரீ பின் ஸைனுத்தீன் அலிய்யிப்னு புக்தகீன்) மன்னர் ஏற்பாடு செய்த விருந்து வைபவத்தில் ஒரு முறை பங்கேற்றவர்களில் ஒருவர் கூறுகிறார்.’ அவ்விருந்தில் சமைக்கப்பட்ட ஐயாயிரம் ஆட்டுத் தலைகள், பத்தாயிரம் கோழிகள், ஒரு இலட்சதம் வெண்ணெய்ப் பலகாரங்கள் முப்பதாயிரம் ஹல்வா தட்டைகள் இருந்தன. அந்த விருந்தில் ஞானிகள் மற்றும் சூஃபிகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.அவர்களுக்கொல்லாம் மன்னர், பொன்னாடைகள் போர்த்திக் கவுரவித்தார்,மேலும் அன்பளிப்புகளும் வழங்கினார். லுஹர் முதல் சுபுஹ் வரை சூஃபிகளுக்காவே மன்னர் தனியாக ஒரு இசையரங்கம் ஏற்பாடு செய்தார். அதில் பாடப்பட்ட பேரின்பப்பாடல் கேட்டு குதித்துக் களித்த சூஃபிகளுடன் சேர்ந்து மன்னரும் பக்திப் பரவசத்துடன் ஆடினார்.ஆண்டு தோறும் மூன்று இலட்சம் ரூபாயை மன்னர் முழஃப்ஃபர் மாநபி (ஸல்) மவ்லிதுக்காவே செலவிட்டார். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 13)

தொகுப்பு:-எம்.ஐ சுலைமான்
, ,