குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அல் முஅத்தா நபிமொழித் தொகுப்பு
அத்தியாயம்: 1
தொழுகையின் நேரங்கள்

பாடம்: 1

தொழுகையின் நேரங்கள்

எண் 1: உமர் இப்னு அப்துல் அஜீஸ் அவர்கள் ஒருநாள் தொழுகையைத் தாமதப்படுத்தினார்கள். அவர்களிடம் உர்வா இப்னு ஸுபைர் வந்து (பின்வரும் நிகழ்ச்சியைக்) கூறினார்கள்.
முகீரா இப்னு ஷுஹ்பா(ரலி) அவர்கள் கூபாவில் இருக்கும் போது, ஒருநாள் தொழுகையை தாமதப்படுத்திய போது அவரிடம் அபூ மஸ்ஊத்(ரலி) அவர்கள் வந்து, ''முகீரா! இது என்ன? (தொழுகையைத் தாமதப்படுத்துகிறீரே என்று கூறி விட்டு), ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கி வந்து, தொழ வைத்தார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள். பின்பு ஜிப்ரீல் (அலை) தொழ வைத்தார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள். பின்பு ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கி வந்து, தொழ வைத்தார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள். பின்பு ஜிப்ரீல் (அலை) தொழ வைத்தார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள். பின்பு ஜிப்ரீல் (அலை) தொழ வைத்தார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள். பின்பு இப்படியே நீர் கட்டளையிடப்பட்டுள்ளீர் என ஜிப்ரீல் (அலை) கூறியதை நீர் அறியவில்லையா? என (அபூ மஸ்ஊத்(ரலி) கூறினார்கள் என உர்வா கூறினார்''.
அப்போது உமர் இப்னு அப்துல் அஜீஸ் அவர்கள், ''உர்வாவே! நீ என்ன சொல்கிறீர் என்பதை யோசித்துப் பாரும். தொழுகை நேரத்தில் நபி(ஸல்) அவர்களுக்குக் கற்றுத்தர ஜிப்ரீல் (அலை) தொழ வைத்தார்களா? என்று கேட்டார். இவ்வாறே, அபூமஸ்ஊத்(ரலி) அவர்களின் மகன் பஷீர், தன் தந்தை கூறியதாக அறிவித்துள்ளார்'' என உர்வா கூறினார். ''நபி(ஸல்) அர்கள் அஸரைத் தொழ வைத்தார்கள். அப்போது சூரியன் தன் இடத்தில் அது உயர்வதற்கு (மறைவதற்கு_ முன் இருந்தது என்று நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) என்னிடம் கூறினார்கள் எனவும் உர்வா கூறினார்.
இதை இப்னு ஷிஹாப் அறிவிக்கின்றார். (இது புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, தாரமீ ஆகிய நூற்களிலும் உள்ளது).


எண் 2: ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, சுப்ஹு தொழுகையின் நேரம் பற்றிக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள் அவருக்குப் பதில் கூறவில்லை. மறுநாள் காலை நேரம், பஜ்ர் (வைகறை) நேரம் ஏற்பட்டதுமே சுப்ஹுத் தொழ வைத்தார்கள். பின்பு (மறுநாள்) காலை கிழக்கு வெளுத்தப் பின் சுப்ஹைத் தொழ வைத்தார்கள். பின்பு தொழுகையின் நேரம் பற்றி கேட்டவர் எங்கே? என்று கேட்டார்கள். ''இறைத்தூதர் அவர்களே! இதோ நான் தான்'' என அவர் கூறினார். (நேற்றும் இன்றும் தொழ வைத்த) இந்த இடைப்பட்ட நேரம் தான் (சுப்ஹின்) நேரம் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை அதாஉ இப்னு யஸார் கூறுகின்றார்கள்.
(இந்த நபிமொழியானது, அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்து, நஸயீயில் உள்ளது)


எண் 3: நபி(ஸல்) அவர்கள் சுப்ஹை தொழ வைத்து விட்டால், பெண்கள் தங்களின் போர்வையால் போர்த்திக் கொண்டு (வீடு) திரும்புவார்கள். இருளின் காரணமாக அவர்கள் (யார் என்று) அறியப்பட மாட்டார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(இந்த நபிமொழியானது, புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், நஸயீ ஆகிய நூல்களில் உள்ளது).


எண் 4: சூரியன் உதயமாகும் முன் ஒருவர் சுப்ஹின் ஒரு ரக்அத்தை அடைந்து விட்டால் சுப்ஹையே அடைந்தவராவார். சூரியன் மறையும் முன் அஸரின் ஒரு ரக்அத்தை அடைந்து விட்டால் அஸரையே அடைந்வராவார் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(இந்த நபிமொழியானது, புகாரீ, முஸ்லிம், அபூதாவூது, நஸயீயிலும் உள்ளது).


எண் 5: என்னிடம் உங்களின் காரியங்களில் மிக முக்கியமானது, தொழுகை தான். ஒருவர் அதை (தானும்) பேணி, அதன் மீது (பிறரைப்) பேணச் செய்தால் தன் மார்க்கத்தை பேணியவராவார். ஒருவர் அதை பாழாக்கினால் அவர் அது அல்லாத மற்றவைகளை ரொம்ப பாழாக்கி விடுவார் என உமர்(ரலி) அவர்கள் தன் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினார்கள். மேலும், நிழல் ஒரு முழம் சாய்ந்து விட்டால், உங்களில் ஒருவரது நிழல் அவரைப் போன்று ஆகும் வரை அஸர் தொழுங்கள். சூரியன் மறையும்முன் ஆறு மைலோ அல்லது ஒன்பது மைலோ எளிதான பயணம் செல்பவரின் கால அளவுக்கு வெள்ளையாக சூரியன் உயர்ந்த நிலையில் அஸரையும், சூரியன் மறைந்து விட்டால் மஹ்ரிபையும், சூரியனின் மஞ்சள் நிறம் மறைந்து விட்டால், இரவின் மூன்றாவது பகுதி வரை இஷாவையும் (தொழுங்கள்). தூக்கம் வந்தால் (இஷாவை) தொழாமல் தூங்க வேண்டாம் என்று மூன்று முறை குறிப்பிட்டும், நட்சத்திரங்கள் ஒன்றோடு ஒன்று பிணைந்து தெளிவாக இருக்கும் நிலையில் சுப்ஹையும் (தொழுங்கள்) என்றும் (கடிதத்தில்) எழுதினார்கள் என அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களின் அடிமை நாபிஉ கூறுகின்றார்கள்.
(இந்த நபிமொழியை அறிவிக்கும் நாபிஉ, உமர்(ரலி) அவர்களை சந்தித்தில்லை)


எண் 6: சூரியன் சாய்ந்து விட்டால் லுஹரையும், சூரியன் வெண்மையாகி, மஞ்சனிக்கும் முன் அஸரையும், சூரியன் மறைந்து விட்டால் மஹ்ரிபையும் தொழுது கொள்வீராக! தூக்கம் வரும் வரை இஷாவை பிற்படுத்திச் செய். நெருக்கமாகவும், பிகாசமாகவும் நட்சத்திரங்கள் உள்ள போது சுப்ஹைத் தொழு. குர்ஆனில் நீண்ட இரண்டு அத்தியாயங்களை, அதில் ஓது என அபூமூஸா அல் அஷ்அரீ(ரலி) அவர்களுக்கு உமர்(ரலி) அவர்கள் கடிதம் எழுதினார்கள் என அபூ ஸுஹைல் தன் தந்தை கூறியதாகக் கூறுகிறார்கள்.


எண் 7: சூரியன் நன்கு வெண்மையாகியதும், ஒரு பயணி ஒன்பது மைல் தூரம் சாதாரண முறையில் பயணம் செய்யும் அளவு வரை அஸரைத் தொழு! (இரவின் முந்திய) உனது நேரத்திற்கும், இரவின் மூன்றாவது நேரத்திற்கும் இடைப்பட்ட நேரத்தில் இஷாவைத் தொழு! தாமதப்படுத்தினால் இரவின் இறுதிப் பகுதி வரை (தாமதப்படுத்திக் கொள்). ''தொழ அலுப்பாகக் கூடியவர்களில் ஒருவராகி விடாதே'' என்று அபூமூஸா அல் அஷ்அரீ(ரலி) அவர்களுக்கு உமர்(ரலி) அவர்கள் கடிதம் எழுதினார்கள். இதை உர்வா கூறுகின்றார்கள்.


எண் 8: தொழுகையின் நேரம் பற்றி அபூஹுரைரா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ''நான் உனக்கு அறிவிக்கிறேன். உன் நிழல் உன் போன்று ஆகி விட்டால் லுஹரையும், உனது நிழல் உன் போன்று இரண்டு மடங்காகி விட்டால் அஸரையும், சூரியன் மறைந்து விட்டால் மஹ்ரிபையும், உன(து ஆரம்ப இரவு)க்கும், இரவின் மூன்றாவது பகுதிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இஷாவையும் தொழுது கொள். இரவின் கடைசி இருளின் போது சுப்ஹையும் தொழுது கொள் என அபூஹுரைரா(ரலி) அவர்கள் கூறியதாக உம்மு சல்மா(ரலி) அவர்களின் அடிமை அப்துல்லா இப்னு ராபீஉ என்பவர் கூறுகின்றார்கள்.
(இது திர்மிதீ, நஸயீயிலும் உள்ளது).


எண் 9: நாங்கள் அஸர் தொழுவோம். பின்பு ஒருவர் அம்ரு இப்னு அவ்பு அவர்களின் கூட்டத்தினர் (வசிக்கும்) பக்கம் வருவார். அதுசமயம் அவர்களை அஸர் தொடுபவர்களாகக் காண்பார் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவிக்கின்றார்கள்.


எண் 10: நாங்கள் அஸர் தொழுவோம். பின்பு ஒருவர், 'குபா' என்ற பகுதிக்கு வருவார். அ(ங்குள்ள)வர்களை சூரியன் உயர்ந்த நிலையில் பெற்றுக் கொள்வார் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது வேறு வார்த்தைகளால் புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ யிலும் உள்ளது).


எண் 11: மாலை நேரத்தில் லுஹரைத் மக்களைத் தொழுபவர்களாக நான் அடையாமல் இருந்ததில்லை என காஸிம் இப்னு முஹம்மத் கூறுகின்றார்கள்.


பாடம்: 2

ஜும்ஆத் தொழுகையின் நேரங்கள்

எண் 12: ஜும்ஆ நாளன்று அகீல் இப்னு அபீதாலிப் உடைய ஆடைவிரிப்பை பள்ளியின் மேற்குப் புறத்து சுவற்றின் பக்கம் போடப்படுவதை நான் பார்த்துள்ளேன். அந்த ஆடை விரிப்பு முழுவதையும் சுவற்றின் நிழல் மூடி விட்டால் உமர்(ரலி) அவர்கள் (வீட்டை விட்டு) வெளியேறி வந்து, ஜும்ஆத் தொழுகை நடத்துவார்கள். பின்பு நாங்கள் ஜும்ஆத் தொழுகைக்குப் பின்பு வந்து லுஹா (பகல்) நேரத்தூக்கம் தூங்குவோம் என அபூஸுஹைல் அவர்களின் தந்தை மாலிக் கூறுகின்றார்கள்.


எண் 13: உதுமான்(ரலி) அவர்கள் மதீனாவில் ஜும்ஆத் தொழ வைப்பார்கள். பின்பு 'மலல்' என்ற இடத்தில் அஸரைத் தொழ வைப்பார்கள் என இப்னு அபீ ஸலீத் என்பார் கூறுகின்றார்கள்.


பாடம்: 3

தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்தவர்

எண் 14: தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்தவர், அந்தத் தொழுகையையே அடைந்தவராவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ யிலும் உள்ளது).


எண் 15: ருகூஉ உமக்கு கிடைக்கவில்லையானால், ஸஜ்தாவும் உமக்குக் கிடைக்காது என்று அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுவார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


எண் 16: ருகூஉ வை அடைந்தவர், ஸஜ்தாவை அடைந்தவராவார் என அப்துல்லா இப்னு உமர்(ரலி), ஸைது இப்னு ஸாபித்(ரலி) இருவரும் கூறினார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாகக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


எண் 17: ருகூஉ வை அடைந்தவர், ஸஜ்தாவை (அந்த ரக்அத்தை) அடைந்தவராவார். சூரா பாத்திஹா (கேட்க) கிடைக்கவில்லையானால் அதிக நன்மை அவருக்குத் தவறி விடும் என அபூஹுரைரா(ரலி) கூறினார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


பாடம்: 4

சூரியன் சாய்வது, இரவு சூழ்வது பற்றிய ஹதீஸ்கள்

எண் 18: 'துலூகி ஷம்சீ' என்பது, சூரியன் நன்றாக சாய்வது என்பதாகும் என அப்துல்லா இப்னு உமர்(ரலி) கூறுவார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


எண் 19: சூரியன் சாய்வது என்பது, அதன் நிழல் சாய்வது என்பதாகும். இரவு சூழ்வது என்பது, இரவு சூழ்ந்து, அதன் இருள் ஏற்படுவதாகும் என அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) கூறுவார்கள் என முக்பின் தனக்கு கூறியதாக தாவூத் இப்னு ஹுஸைன் என்பார் கூறுகின்றார்கள்.


பாடம்: 5

நேரங்களின் கட்டாயம்

எண் 20: எவருக்கு அஸர் த் தொழுகை தவறி விடுகிறதோ, அவர் தனது குடும்பத்தவரையும், செல்வத்தையும் இழந்தவர் போன்றவராவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(இது புகாரீ, முஸ்லிம், நஸயீ, அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜா ஆகிய நூல்களிலும் உள்ளது)


எண் 21: உமர்(ரலி) அவர்கள் அஸர் தொழுது விட்டு திரும்பும் வழியில் அஸர் தொழுகையில் கலந்து கொள்ளாத ஒரு நபரைச் சந்தித்தார்கள். அஸர் தொழுவதை விட்டும் உன்னை எது தடுத்தது? என்று கேட்டதும், அவர்களிடம் அவர் (கலந்து கொள்ளாததற்கு) ஒரு காரணம் கூறினார். அவரிடம் உமர்(ரலி) அவர்கள், நீர் குறைவு (தவறு) செய்து விட்டாய் என்று கூறினார்கள் என யஹ்யா இப்னு ஸயீத் அறிவிக்கின்றார்கள்.
ஒவ்வொரு செயலுக்கும் நிறைவேற்றுதலும், குறைவு ஏற்படுத்துதலும் உண்டு என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


எண் 22: தொழுகையாளி ஒருவர் ஒரு தொழுகையையும், தான் தவற விட்ட தொழுகையையும் தொழுகின்றார். அதே நேரத்தில் தவற விட்டவை அவரது குடும்பத்தை விட, அவரது பொருளை விட மிகச் சிறந்தது, மிக உயர்ந்தது என யஹ்யா இப்னு யஸீத் கூறுவார்கள் என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.
''பயணத்தில் இருப்பவர் ஒரு (தொழுகை) நேரம் வந்ததும், மறந்தோ அசட்டையாகவோ இருந்து தன் குடும்பத்திடம் வரும் வரை தொழுகையை தாமதப்படுத்தி விட்டு, தன் குடும்பத்திடம் அதே நேரத்திலேயே வந்து விட்டால் அவன் உள்ளூர் வாசி போலவே தொழுவான். அந்த நேரம் சென்ற பின் குடும்பத்தாரிடம் வந்தால் பயணியின் தொழுகை போல் தொழுவான். காரணம், அவன் மீது கடமையானபடியே அதை நிறைவேற்ற வேண்டும் என்பதால் தான்'' என மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.
இதுவே என் ஊர் அறிஞர்களும், மக்களும் கடைபிடிக்கும் சட்டமாகும் எனவும் அவர்கள் கூறுகின்றார்கள்.
மஹ்ரிபு நேரத்தில் ஏற்படும் மஞ்சள் நிறம் மறைந்து விட்டால், இஷாத் தொழுகை நேரம் ஏற்பட்டு விடும். அந்த மஹ்ரிபு நேரத்திலிருந்து நீ வெளியாகி விட்டாய் என்று மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.


எண் 23: அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டு, சுயநினைவற்று இருந்தார்கள். அப்போது, தொழுகையை அவர்கள் (தெளிவடைந்த பின்) களாச் செய்யவில்லை என நாபிஉ கூறுகிறார்கள்.
இது நாம் அறிந்தவரை இச்சம்பவம் நேரம் முடிந்து விட்ட பின், நடந்ததாகும். ஒருவர் உரிய நேரத்திலேயே தெளிவுற்றால் அப்போது அவர் தொழுவார். அல்லாஹ் மிக அறிந்தவன் என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


பாடம்: 6

தொழாமல் தூங்குதல்

எண் 24: கைபர் போரில் இருந்து நபி(ஸல்) அவர்கள் திரும்பும் போது, இரவின் இறுதிப் பகுதி வந்ததும் ஓய்வு எடுத்தார்கள். ''எங்களுக்காக வேண்டி சுப்ஹுக்காக (எழுப்பிட) நீர் விழித்திடு இரு!'' என்று பிலால்(ரலி) அவர்களிடம் கூறினார்கள். நபி(ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் தூங்கினார்கள். இறைவன் நாடிய அளவுக்கு பிலால்(ரலி) அவர்கள் பஜ்ரின் நேரத்தை எதிர்நோக்கியவர்களாக ஒட்டகத்தின் மீது காத்திருந்தார்கள். அவரை (மீறி) அவரது கண்கள் மிகைத்து விட்டன. சூரியன் ஒளி அடிக்கும் வரை நபி(ஸல்) அவர்களோ, பிலாலோ, உடனிருந்த பயணிகளில் எவருமே விழிக்கவில்லை. (சூரிய ஒளிபட்டதும்) நபி(ஸல்) அவர்கள் திடுக்குற்று, ''பிலாலே! இது என்ன?'' என்று கேட்க, ''இறைத்தூதர்(ஸல்) அவர்களே..! உங்களை பிடித்ததே (தூக்கமே) என்னையும் ஆட் கொண்டது'', என பிலால்(ரலி) கூறினார்கள்.
ஒட்டகத்தை ஓட்டுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபித் தோழர்கள் தங்கள் வாகனங்களை எழுப்பி ஓட்டலானார்கள். பின்பு (வேறு ஒரு இடத்தில்) பிலால்(ரலி) அவர்களை (பாங்கு கூற) கட்டளையிட்டார்கள். தொழுகைக்கு (பிலால்(ரலி)) இகாமத் கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள், தம் தோழர்களுக்கு சுப்ஹைத் தொழ வைத்தார்கள். தொழுகை முடிந்ததும், ''ஒருவர் தொழ மறந்து விட்டால் அதை நினைவு கூர்ந்ததும் அவர் தொழட்டும்!'', காரணம், அல்லாஹ் தன் வேதத்தில், ''என்னை நினைவு கூர்வதற்காகத் தொழுவீராக! (20:14) என்று கூறுகிறான்'' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை ஸயீத் இப்னு முஸய்யப் கூறுகின்றார்கள்.
(ஸயீத் இப்னு முஸய்யப் நபித் தோழர் அல்ல. எனினும் நபித்தோழர் அபூஹுரைரா(ரலி) அறிவித்து இது முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, நஸயீயிலும் உள்ளது).


எண் 25: மக்காவின் வழியில் ஒரு இரவு நபி(ஸல்) அவர்கள் ஓய்வெடுத்தார்கள். (சுப்ஹு)தொழுகைக்கு தங்களை எழுப்பி விடும்படி பிலாலிடம் பொறுப்பு ஒப்படைத்தார்கள். பிலால்(ரலி) தூங்கினார்கள். மக்களும் விழிக்கும் வரை தூங்கி விட்டனர். அவர்களில் சூரியன் உதயமானது. மக்கள் விழித்தனர். திடுக்குற்றார்கள். அந்த ஓடையில் இருந்து வெளியேறி புறப்படும்படி நபி(ஸல்) அவர்கள் மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். ''(வழிகெடுக்கும்) ஷைத்தான் உள்ள பள்ளத்தாக்கு இது'' என்றும் கூறினார்கள். அந்த பள்ளத்தாக்கில் இருந்து வெளியேற மக்கள் வாகனங்களில் ஏறினார்கள். (சிறிது தூரம் சென்றதும்) இறங்கி விடவும், ஒளுச் செய்திடவும் நபி(ஸல்) அவர்கள், அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். தொழுகைக்கு பாங்கு கூற அல்லது இகாமத் கூற பிலால்(ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழ வைத்தார்கள். பின்பு மக்களை நோக்கினார்கள். அவர்களின் (முகத்தில்) திடுக்குற்ற நிலையைக் கண்டார்கள்.
மனிதர்களே..! அல்லாஹ் நம்முடைய உயிர்களை (சிறிது நேரம்) கைப்பற்றிக் கொண்டான். அவன் நாடியிருந்தால் இது அல்லாத (முன்) நேரத்திலேயே அதைத் திருப்பித் தந்திருப்பான். உங்களில் ஒருவர் தொழாமல் தூங்கினால் அல்லது மறந்து விட்டால் பின்பு (நினைவு வந்து) அதிர்ச்சியுற்றால் உரிய நேரத்தில் எப்படித் தொழுவாரோ அது போலவே தொழட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்பு அபூபக்கர்(ரலி) பக்கம் திரும்பி, ''ஷைத்தான், நின்று கொண்டிருந்த பிலாலிடம் வந்து, அவரை படுக்கச் செய்தான், (தூங்கச் செய்ய) சிறுவனைத் தட்டிக் கொடுப்பது போல், பிலாலையும் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தான். முடிவில் பிலால் தூங்கி விட்டார்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, பிலாலை அழைத்தார்கள். அபூபக்கர்(ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் கூறியது போன்ற விஷயத்தையே பிலால்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அப்போது அபூபக்கர்(ரலி) அவர்கள், ''நிச்சயமாக, நீங்கள் இறைத்தூதர் என சாட்சி கூறுகிறேன்'' என்று கூறினார்கள். இதை ஸைத் இப்னு அஸ்லாம் கூறுகிறார்கள்.


பாடம் 7

தொழுகையைத் தாமதப்படுத்துவது

எண் 26: வெப்பத்தின் கடுமை நரகத்தின் ஜுவாலையில் உள்ளதாகும். வெப்பம் கடுமையாகி விட்டால் தொழுகையைத் தாமதப்படுத்துங்கள். நரக நெருப்பு தன் இறைவனிடம், இறைவா! (கடும் வெப்பத்தினால்) என்னில் சில பகுதி, சில பகுதிகளைச் சாப்பிடுகிறது எனக் கூறி முறையிட்டது. உடனே அதற்கு ஒவ்வொரு வருடமும், கோடை காலத்தில் ஒரு மூச்சும், குளிர்காலத்தில் ஒரு மூச்சும் என இரு மூச்சுக்கள் விட்டுக் கொள்ள அனுமதியளித்தான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அதாஉ இப்னு யஸார் கூறுகின்றார்கள்.


எண் 27: கோடை வெப்பம் அதிகமாகி விட்டால் தொழுகையை (வெயில் குறையும் வரை) தாமதப்படுத்துங்கள். நிச்சயமாக கோடையின் வெப்பம், நரகத்தின் ஜுவாலையிலிருந்து உள்ளதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறி விட்டு, நரக நெருப்பு தன் இறைவனிடம் முறையிட்டது. அப்போது அவன் ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தில் ஒரு மூச்சும், குளிர் காலத்தில் ஒரு மூச்சும் என இரு மூச்சுக்கள் விட அதற்கு அனுமதி தந்தான் என்று கூறி நினைவு கூர்ந்தார்கள். இதை அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், நஸயீ யிலும் உள்ளது).


எண் 28: கோடையின் வெப்பம் அதிகமாகி விட்டால், (வெயில் குறையும் வரை) தொழுகையைத் தாமதப்படுத்துங்கள். கோடையின் கடுமை என்பது, நரகத்தின் ஜுவாலையில் உள்ளதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.


பாடம்: 8

பூண்டு வாடையுடன் பள்ளியில் நுழைவதும், (தொழுகையில்) வாயை மூடிக் கொள்வதும் கூடாது

எண் 29: இந்த(ப் பூண்டு)ச் செடியிலிருந்து சாப்பிட்டால், பூண்டு வாடை மூலம் நம்மை சிரமத்திற்குள்ளாக்கும் வகையில் நம் பள்ளிக்கு வர வேண்டாம் என நபி(ஸல்) கூறினார்கள். இதை ஸயீத் இப்னு முஸய்யப் கூறுகின்றார்கள்.


எண் 30: ஸாலிம் இப்னு அப்துல்லா கூறினார்கள், எவரேனும் ஒருவர் தொழும் போது வாயை (துணியால்) மூடியிருக்கக் கூடாது. அவரின் வாயில் இருந்து அது சுழலும் அளவுக்கு அவரின் வாயில் உள்ள துணியை கடுமையாக உருவுவார்கள் என அப்துர் ரஹ்மான் இப்னு முஜப்பிர் கூறுகின்றார்கள்.


அத்தியாயம்: 2
பாடம்: 9
சுத்தம் - ஒளுச் செய்தல்

எண் 31: நபி(ஸல்) அவர்கள் எப்படி ஒளுச் செய்தார்கள் என்பதை எனக்கு கூற இயலுமா? என்று நபித்தோழர் அப்துல்லா இப்னு ஸைத்(ரலி) அவர்களிடம் என் தந்தை யஹ்யா கேட்டார்கள். இயலும் என்று கூறிய அப்துல்லா இப்னு ஸைத்(ரலி) அவர்கள் தண்ணீர் கொண்டு வரச் செய்து, தன் கையில் ஊற்றி இரண்டு முறை கைகளைக் கழுவினார்கள். பின்பு வாய் கொப்பளித்தார்கள். மூன்று தடவை மூக்கைச் சுத்தப்படுத்தினார்கள். பின்பு மூன்று தடவை தன் முகத்தைக் கழுவினார்கள். பின்பு இரண்டிரண்டு தடவை முழங்கை வரை கைகளைக் கழுவினார்கள். பின்பு தான் (ஈரக்) கைகளால் தன் தலைக்கு மஸஹ் செய்தார்கள். அப்போது அந்த (கை) இரண்டையும் (தலையில்) முன்னோக்கி பின்னாக்கினார்கள். (அதாவது) தன் தலையின் முன் பகுதியில் ஆரம்பித்து (கை) இரண்டையும் பிடரி வரைக் கொண்டு வந்து, மீண்டும் தான் ஆரம்பித்த (முன் நெற்றி) பகுதிக்கே கொண்டு அல் மாஸின் அவர்கள் கூறுகின்றார்கள்.
(இச் சம்பவம் வேறு வார்த்தைகளால் புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, திர்மிதீயில் உள்ளது).


எண் 32: உங்களில் ஒருவர் ஒளுச் செய்தால் தண்ணீரை தன் மூக்கில் செலுத்தி சுத்தம் செய்யட்டும்! கற்களால் சுத்தம் செய்தால், ஒற்றைப் படையாய் ஆக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது புகாரீ, முஸ்லிம், நஸயீ யில் உள்ளது).


எண் 33: ஒருவர் ஒளுச் செய்தால் (தன்) மூக்கை சுத்தம் செய்யட்டும். (மலம் கழித்தப்பின்) கற்களால் சுத்தம் செய்தால் ஒற்றைப் படையாய் ஆக்கட்டும் என்று நபி(ஸல்) கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா, அஹ்மதிலும் உள்ளது).


எண் 34: ஸஹ்து இப்னு அபீவக்காஸ்(ரலி) அவர்கள் மரணித்த அன்று, ஆயிஷா(ரலி) அவர்களிடம் (அவர்களின் சகோதரர்) அப்துர்ரஹ்மான் இப்னு அபீவக்காஸ்(ரலி) அவர்கள் வந்து, ஒளுச் செய்ய தண்ணீர் (கேட்டு) வரவழைத்தார்கள். ''அப்துர் ரஹ்மானே! ஒளுவை முழுமையாகச் செய்வீராக. (சரியான) நனையாத குதிங்கால்களுக்கு நரகம் எனும் கேடு உண்டு'' என நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள் எதை தனக்குச் செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) கூறுகிறார்கள்.
(இது முஸ்லிமிலும் உள்ளது).


எண் 35: உமர்(ரலி) அவர்கள் தன் வேட்டியின் கீழ் உள்ளதை (மலம் கழித்தப்பின்) தண்ணீரால் கழுவினார்கள் என தன் தந்தை அப்துர்ரஹ்மான்(ரலி) கூறியதாக உஸ்மான் கூறுகின்றார்கள்.
ஒருவர் ஒளுச் செய்யும் போது மறந்து வாய் கொப்பளிக்கும் முன் தன் முகத்தைக் கழுவினார். அல்லது முகத்தைக் கழுவும் முன் தன் கைகளைக் கழுவுகிறார். (இவர் ஒளுக் கூடுமா?) என்று மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது.
ஒருவர் வாய் கொப்பளிக்கு முன் தன் முகத்தை கழுவி விட்டால் பிறகு வாய் கொப்பளித்துக் கொள்ளட்டும். மீண்டும் முகத்தைக் கழுவத் தேவையில்லை. முகத்தை கழுவும் முன் தன் கைகளை கழுவி விட்டான். அவர் முகத்தை கழுவியப் பின் மீண்டும் கைகளைக் கழுவட்டும். இது அந்த இடத்தை விட்டும் விலகாத வரை தான் கூடும் என்று பதில் கூறினார்கள். யஹ்யா கூறுகின்றார்கள்.
ஒருவர் வாய் கொப்பளிக்க அல்லது மூக்கை சுத்தம் செய்ய மறந்து விட்டு தொழுதும் வருகிறார். (இவர் தொழுகை கூடுமா?) என்று மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. தான் தொழுத தொகையை மீண்டும் செய்ய அவர் மீது கடமை இல்லை. ஆனால் இனி விரும்பினால் அவர் வாய் கொப்பளிக்கட்டும் அல்லது மூக்கை சுத்தம் செய்யட்டும்'' என்று பதில் கூறினார்கள் என யஹ்யா கூறுகிறார்கள்.


பாடம்: 10

தூங்கியவன், தொழத் தாயரானால் ஒளுச் செய்வது

எண் 36: உங்களில் ஒருவர் தன் தூக்கத்திலிருந்து விழித்தால், தான் ஒளுச் செய்து கொள்ளட்டும். (ஏனெனில்) அவர் தூங்கும் போது தன் கை எங்கே சென்றது என்பதை அறிய மாட்டார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.
(புகாரீ, அபூதாவூத், திர்மிதீ, நஸயீயிலும் இக்கருத்துள்ள ஹதீஸ் உள்ளது)


எண் 37: உங்களில் ஒருவர் படுத்துத் தூங்கினால் அவர் ஒளுச் செய்யட்டும் என உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள் என ஸைத் இப்னு அஸ்லம் கூறுகின்றார்கள்.
(ஸைத் இப்னு அஸ்லம் அவர்கள், உமர்(ரலி) அவர்களைச் சந்தித்ததில்லை).


எண் 38: இறைவிசுவாசிகளே! தொழுகைக்கு நீங்கள் தயாரானால் உங்கள் முகங்களையும், உங்கள் கைகளையும் முழங்கை வரையிலும் கழுவுங்கள். உங்கள் தலைகளுக்கு மஸஹ் செய்யுங்கள். உங்கள் கால்களை கரண்டை வரையிலும் (கழுவுங்கள்) என்ற 5:9 வசனத்தில் உள்ள தொழுகைக்குத் தயாரானால்.. என்ற வார்த்தைக்கு ''படுக்கையிலிருந்து நீங்கள் எழுந்தால்..'' என்பதாகும் என ஸைத் இப்னு அஸ்லம் விளக்கம் கூறினார்கள்.
மூக்கில் இரத்தம் வருவதினாலோ, புண்ணிலிருந்து வெளி வரும் சீல்களினாலோ, இரத்தத்தினாலோ ஒளுச் செய்யத் தேவையில்லை. முன் பின் துவாரங்களிலிருந்து வெளிப்படும் அசுத்தம் மற்றும் தூக்கம் காரணமாகவே தவிர ஒளுச் செய்யத் தேவையில்லை என்பதே நம்மிடம் சட்டமாகும் என மாலிக் (ரஹ்) கூறுகிறார்கள்.


எண் 39: இப்னு உமர்(ரலி) அவர்கள் உட்கார்ந்த நிலையில் தூங்கி விட்டு, பின்பு ஒளுச் செய்யாமலேயே தொழுவார்கள் என்று நாபிஉ கூறுகிறார்கள்.


பாடம்: 11

ஒளுவிற்காக சுத்தமான தண்ணீர்

எண் 40: ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ''இறைத்தூதர்(ஸல்) அவர்களே..! நாங்கள் கடல் பயணம் செய்கிறோம். குறைந்த அளவு தண்ணீரையே எங்களுடன் எடுத்துச் செல்கின்றோம். அதன் மூலம் நாங்கள் ஒளுச் செய்தால் நாங்கள் தாகத்திற்கு ஆளாகுவோம். எனவே, கடல் நீரில் நாங்கள் ஒளுச் செய்யலாமா? என்று ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார். அந்த தண்ணீர் தூய்மை செய்யத் தக்கதே. அதில் செத்தவை ஆகும். (உண்ண) அனுமதிக்கப்பட்டுள்ளதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(இது அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜா, நஸயீ, இப்னு ஹிப்பான், இப்னு குஸைமா, ஹாகிம், தராகுத்னீ, பைஹகீ, இப்னு அபீ ஷைபா - விலும் உள்ளது).


எண் 41: அபூகதாதா(ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அவர்களுக்கு ஒளுச் செய்யும் நீரை நான் வார்த்துக் கொடுத்தேன். அப்போது ஒரு பூனை அதை குடிக்க வந்தது. அது குடித்து முடியும் வரை பாத்திரத்தை (குடிப்பதற்கு ஏற்றவாறு) சாய்த்துக் கொண்டிருந்தார். அவரை நான் கூர்ந்து நோக்குவதைக் கண்ட போது, '' என் சகோதரர் மகனே..! நீ வியப்படைகிறாயா?'', என்று கேடடார். 'ஆம்' என்றேன். ''பூனைகள் அசுத்தமானவைகள் அல்ல - அவை உங்களைச் சுற்றி வரக் கூடியவைகளே (அண்டி வாழ்பவைகளே)'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என அபூகதாதா(ரலி) கூறினார்கள். இதை கஹ்பு இப்னு மாலிக்(ரலி) அவர்களின் மகளும், அபூகதாதா(ரலி) அவர்களின் மகனின் மனைவியுமான கப்ஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது அஹ்மத், திர்மிதீ, இப்னு மாஜா, நஸயீயிலும் உள்ளது)
அந்தப் பூனையின் வாயில் அசுத்தம் காணப்பட்டாலே தவிர. இதனால் குற்றமில்லை என மாலிக் (ரஹ்) கூறியதாகக யஹ்யா கூறுகிறார்கள்.


எண் 42: உமர்(ரலி) அவர்கள், அம்ரு இப்னு ஆஸ்(ரலி) அவர்களும் இருந்த ஒரு பயணக் கூட்டத்தில் சேர்ந்து போனார்கள். ஒரு தண்ணீர் தடாகத்திற்கு வந்தார்கள். அத்தடாகத்தின் உரிமையாளரிடம், ''உரிமையாளரே..! உமது தாடகத்திற்கு மிருகங்கள் வருவதுண்டா?'' என அம்ரு இப்னுல் ஆஸ்(ரலி) அவர்கள் கேட்டார்கள். ''உரிமையாளரோ! எங்களிடம் ஏதும் கூற வேண்டாம். நாங்கள் மிருகங்களுடன் இருக்கிறோம். அவைகளும் எங்களுடன் வருகின்றன'' என்று உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள். இதை யஹ்யா இப்னு அப்துர் ரஹ்மான் இப்னு ஹாதிப் கூறுகின்றார்கள்.
(இதை அறிவிக்கும் யஹ்யா, உமர்(ரலி) அவர்களைச் சந்தித்ததில்லை).


எண் 43: நபி(ஸல்) அவர்களின் காலத்தில் ஆண்களும், பெண்களும் சேர்ந்து ஒளுச் செய்யக் கூடியவர்களாக இருந்தனர் என அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


பாடம்: 12

ஒளுவைக் கட்டாயமாக்காத செயல்கள்

எண் 44: நான் நீண்ட கீழாடை அணிந்த பெண்ணாக இருக்கிறேன். அசுத்தம் உள்ள இடத்திலே நடக்கவும் செய்கிறேன் என்று நான் உம்மு சல்மா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அசுத்தமான இடங்களை அடுத்து வருகின்ற (சுத்தமான) இடம் அதை சுத்தப்படுத்தும் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக உம்மு சல்மா(ரலி) அவர்கள் பதில் கூறினார்கள் என அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃபு(ரலி) அவர்களின் அடிமைப் பெண் கூறுகின்றார்கள்.

(இது திர்மிதீ, அபூதாவூதிலும் உள்ளது).


எண் 45: ரபீஆ இப்னு அபீ அப்துர் ரஹ்மான் அவர்களுக்கு பள்ளியில் இருந்த நிலையில் பல தடவை வாந்தி ஏற்பட்டது. (ஆனாலும்) அவர் (ஒளுச் செய்ய) புறப்படவும் இல்லை. ஒளுச் செய்யாமல் தொழுதார்கள் என மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஒருவர் உணவை வாந்தி எடுக்கிறார். அவர் மீது ஒளு கடமையா? என மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, ''அவர் மீது ஒளு கடமை இல்லை. அதற்காக அவர் வாய் கொப்பளித்து விட்டு, தன் வாயை கழுவிக் கொள்ளட்டும்'' என (பதில்) கூறினார்கள் என யஹ்யா கூறுகிறார்கள்.


எண் 46: அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள், ஸயீத் இப்னு ஸைத் அவர்களின் மகனுக்கு 'தஹ்னீக்' செய்தார்கள். அக் குழந்தையை தூக்கி வைத்து இருந்தார்கள். பின்பு பள்ளிக்குள் நுழைந்து, ஒளுச் செய்யாமலேயே தொழுதார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.
(சிறு குழந்தைகளுக்கு திடமான உணவை மென்று கொடுப்பதற்கே, 'தஹ்னீக்' என்று கூறப்படும்).
வாந்திக்காக ஒளுச் செய்வது அவசியமா? என்று மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, இல்லை. எனினும், அதற்காக வாய் கொப்பளித்து, தன் வாயைக் கழுவட்டும். அவர் மீது ஒளு கடமை இல்லை என்று பதில் கூறினார்கள்.


பாடம்: 13

சமைத்த உணவிற்காக ஒளுச் செய்யாதிருத்தல்

எண் 47: நபி(ஸல்) அவர்கள் ஆட்டின் முன் சப்பையைச் சாப்பிட்டார்கள். பின்பு ஒளுச் செய்யாமலேயே தொழுதார்கள் என அப்துல்லா இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், நஸயீயில் இக்கருத்துள்ள ஹதீஸ்கள் உள்ளன).


எண் 48: கைபர் போர் வருடம், கைபரை அடுத்த 'ஸஹபாஹ்' என்ற இடத்தில் நபி(ஸல்) அவர்கள் (இளைப்பாற) இறங்கினார்கள். அஸரைத் தொழுதார்கள். பின்பு பயண உணவைக் கொண்டு வரும்படி கூறினார்கள். மணிக் கோதுமைத் தவிர (வேறு எதுவும்) கொண்டு வரப்படவில்லை. (அதை இழைக்கும்படி) ஏவினார்கள். குழைக்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் சாப்பிட்டார்கள். நாங்களும் சாப்பிட்டோம். பின்பு மஹ்ரிபு தொழுகைக்காக நின்றார்கள். வாய் கொப்பளித்தார்கள். நாங்களும் வாய் கொப்பளித்தோம். பின்பு ஒளுச் செய்யாமலேயே தொழ வைத்தார்கள் என சுவைத் இப்னு நுஹ்மான்(ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது புகாரீ, நஸயீ யில் உள்ளது).


எண் 49: உமர்(ரலி) அவர்களுடன் தான் இரவு உணவு சாப்பிட்டதாகவும், பின்பு அவர்கள் ஒளுச் செய்யாமலேயே தொழுதார்கள் எனவும் ரபீஆ இப்னு அப்துல்லாஹ் இப்னு ஹுதைர் அறிவிக்கின்றார்கள்.


எண் 50: உதுமான்(ரலி) அவர்கள் ரொட்டி, கறி சாப்பிட்டார்கள். பின்பு வாய் கொப்பளித்தார்கள். ஒரு கைகளையும் கழுவி விட்டு, அவ்விரண்டினால் தன் முகத்தையும் தடவினார்கள். பின்பு ஒளுச் செய்யாமலேயே தொழுதார்கள் என அபான் இப்னு உதுமான் கூறுகின்றார்கள்.


எண் 51: அலீ(ரலி) அவர்களும், அப்துல்லா இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும் சமைத்த உணவு வகைகளை சாப்பிட்டால், ஒளுச் செய்ய மாட்டார்கள் என தன்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) அவர்கள் கூகின்றார்கள்.


எண் 52: ஒருவர் தொழுகைக்காக ஒளுச் செய்கிறார். பின்பு சமைக்கப்பட்ட உணவை பெற்றுக் கொள்கின்றார். (சாப்பிடுகிறார்). இவர் ஒளுச் செய்ய வேண்டுமா? என அப்துல்லா இப்னு ஆமிர் இப்னு ரபீஆ அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, '' என் தந்தை இவ்வாறு சாப்பிட்டு விட்டு ஒளுச் செய்யாமலேயே தொழுததை நான் பார்த்தேன்'' என (பதில்) கூறினார் என யஹ்யா இப்னு ஸயீத் அவர்கள் கூறுகின்றார்கள்.


எண் 53: அபூபக்கர்(ரலி) அவர்கள், கறி சாப்பிட்டு விட்டு ஒளுச் செய்யாமலேயே தொழுததை நான் பார்த்தேன் என ஜாபிர் அப்துல்லா அன்சாரீ(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


எண் 54: நபி(ஸல்) அவர்கள் விருந்துக்கு அழைக்கப்பட்டார்கள். அவர்களுக்கு ரொட்டியும், கறியும் தரப்பட்டது. அதைச் சாப்பிட்டார்கள். பின்பு ஒளுச் செய்து விட்டு தொழுதார்கள். பின்பு அதே உணவின் மீதம் கொண்டு வரப்பட்டது. அதைச் சாப்பிட்டார்கள். பின்பு ஒளுச் செய்யாமலேயே தொழுதார்கள் என முஹம்மதுஇப்னு முன்கதீர் அவர்கள் கூறுகின்றார்கள்.
(இந்த முஹம்மது இப்னு முன்கதீர் என்பவர் நபித்தோழர் அல்லர். ஜாபிர் இப்னு அப்துல்லா(ரலி) அறிவித்து இது, திர்மிதீ, அபூதாவூது, நஸயீ யில் உள்ளது).


எண் 55: அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் ஈராக்கில் இருந்து வந்தார்கள். அவர்களிடம் அபு தல்ஹா(ரலி), உபை இப்னு கஹ்பு(ரலி) இருவரும் வந்தனர். அவ்விருவருக்கும் சமைக்கப்பட்ட உணவு தரப்பட்டது. அதை (மூவரும்) சாப்பிட்டார்கள். அனஸ் அவர்கள் எழுந்து ஒளுச் செய்தார்கள். அப்போது அபூ தல்ஹா அவர்களும், உஸை இப்னு கஹ்பு(ரலி), ''இது என்ன அனஸே..! ஈராக் நாட்டின் செயலா?'' என்று கேட்டனர். ''நான் அப்படிச் செய்யாமல் இருந்திருக்கலாம்'' என அனஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள். அபூதல்ஹா(ரலி), உபை இப்னு கஹ்பு(ரலி) ஆகிய இருவரும் எழுந்து, ஒளுச் செய்யாமலேயே தொழுதார்கள். இதை அப்துர் ரஹ்மான் இப்னு ஸைதுல் அன்சாரீ கூறுகின்றார்கள்.


பாடம்: 14

ஒளுவைக் கட்டாயமாக்குபவை
எண் 56: (மலம் கழித்தபின்) சுத்தம் செய்து கொள்வது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள், ''உங்களில் ஒருவர் மூன்று கற்களைப் பெற்றுக் கொள்ளவில்லையா? (அது போதுமே) என்று (பதில்) கூறினார்கள். இதை உர்வா கூறுகின்றார்கள்.
(இதே கருத்தில் நபித்தோழர் அறிவித்து புகாரீ, திர்மிதீ, நஸயீ, அபூதாவூதில் உள்ளது).


எண் 58: உதுமான்(ரலி) அவர்கள் திண்ணையில் அமர்ந்திருந்தார்கள். அதுசமயம் பாங்கு கூறுபவர் வந்து அவர்களை அஸர் தொழுகைக்காக அழைத்தார். உடனே தண்ணீர் வரவழைத்து ஒளுச் செய்தார்கள். அலலாஹ்வின் மீது சத்தியமாக, நான் உங்களுக்கு ஒரு ஹதீஸைத் தெரிவிக்கிறேன். அல்லாஹ்வின் வேதத்தில் அது இல்லை என்றால் நான் இதை உங்களுக்கு தெரிவித்திருக்க மாட்டேன் என்று உதுமான்(ரலி) கூறினார்கள். பின்பு, ''ஒருவர் ஒளுச் செய்து, அந்த ஒளுவையும் அழகாகச் செய்து, பின்பு தொழுதால், அந்த தொழுகைக்கும், அந்தத் தொழுகைக்கு இடைப்பட்ட (நேரத்)தில் உள்ள (குற்றத்)தை மன்னிக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறி, தான் கேட்டதாக உதுமான்(ரலி) அவர்கள் கூறினார்கள் என அவர்களின் அடிமை ஹம்ரான் கூறுகின்றார்கள்.


எண் 59: ''ஒரு அடியான் ஒளுச் செய்யும் போது வாய் கொப்பளித்தால் அவனது வாயிலிருந்து குற்றங்கள் வெளியேறி விடும். மூக்கை கழுவினால் அவனது மூக்கிலிருந்து குற்றங்கள் வெளியேறி விடும். தன் முகத்தைக் கழுவினால் அவனின் முத்திலிருந்து குற்றங்கள் வெளியேறி விடும். அவனின் இரு கண்களின் இமைகளிலிருந்தும் வெளியேறும். தன் கைகளைக் கழுவினால் அவனது கைகளில் இருந்து குற்றங்கள் வெளியேறி விடும். அவனது கைகளின் நகக் கண்கள் வழியாகவும் வெளியேறி விடும். தன் தலைக்கு மஸஹ் செய்தால் அவனின் தலையில் இருந்து குற்றங்கள் வெளியேறி விடும். தன் கால்களை கழுவினால் அவனின் கால்களிலிருந்து குற்றங்கள் வெளியேறி விடும். அவனது கால்களின் நகக் கண்களின் கீழிலிருந்தும் வெளியாகும். பின்பு, பள்ளியின் பக்கம் அவன் நடந்து வருவதும், அவனது தொழுகையும் உபரியாக அமையும்'' என்று நபி(ஸல்) அவாகள் கூறினார்கள் என அப்துல்லா ஸனாபிஹி(ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது நஸயீ, இப்னுமாஜா, ஹாகிமியில் உள்ளது).


எண் 60: ஒரு முஸ்லிம் அடியான் ஒளுச் செய்யும் சமயம் முகத்தைக் கழுவினால் அவன் தன் இரு கண்களால் பார்த்த தவறுகள் அனைத்தும் (கழுவிய) தண்ணீருடன் முகத்தில் இருந்து வெளியேறி விடும். அவன் தன் இரு கைகளைக் கழுவினால் (கழுவிய) தண்ணீருடன் அவன் தன் கைகளால் செய்த தவறுகள் அனைத்தும் அவனது கைகளில் இருந்து வெளியேறி விடும். இறுதியில் பாவங்களில் இருந்து சுத்தமாக வெளியேறுவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.
(குறிப்பு: ''ஒரு முஸ்லிம்'' என்ற வார்த்தைக்குப் பதிலாக ''ஒரு முஃமின்'' என்றும், ''தண்ணீருடன்'' என்ற வார்த்தைக்குப் பதிலாக ''தண்ணீரின் கடைசிச் சொட்டுடன்'' என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறி இருக்கலாம் என அறிவிப்பாளர் தன் சந்தேகத்தை இங்கே வெளிப்படுத்துகிறார். (இது முஸ்லிம், திர்மிதியில் உள்ளது).


எண் 61: அஸர் தொழுகை நேரம் நெருங்கிய சமயத்தில் நபி(ஸல்) அவர்களை நான் பார்த்தேன். உடனே மக்கள் தண்ணீரைத் தேடினார்கள். அதை அவர்கள் பெற்றுக் கொள்ளவில்லை. அப்போது ஒரு பாத்திரத்தில் ஒளுச் செய்யும் தண்ணீர் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. அந்த பாத்திரத்தில் தன் கையை நபி(ஸல்) அவர்கள் வைத்தார்கள். பின்பு அதில் அவர்களை ஒளுச் செய்ய மக்களுக்கு ஏவினார்கள் என்று கூறிய அனஸ்(ரலி) அவர்கள், ''நபி(ஸல்) அவர்களின் விரல்களின் கீழிலிருந்து தண்ணீர் வெளியேறியதை நான் பார்த்தேன். அவர்களில் இருந்த கடைசி நபர் உட்பட அனைவரும் ஒளுச் செய்தார்கள்'' என்றும் அனஸ்(ரலி) கூறினார்கள்.


எண் 62: ஒருவர் ஒளுச் செய்து, அந்த ஒளுவையும் அழகாகச் செய்து பின்பு தொழுகையை விரும்பியவராக வந்தால், அவர் தொழுகையை விரும்பி வரும் வரை தொழுகையில் உள்ளவர் போலாவார். அவரின் காலடி எட்டுக்களில் ஒன்றுக்கு அவருக்கு ஒரு நன்மை எழுதப்படும். மற்றொரு அடிக்கு ஒரு தீமை அவரை விட்டும் அழிக்கப்படும். உங்களில் ஒருவர் இகாமத் கூறுவதைக் கேட்டால் அவர் விரைந்து வர வேண்டாம். கூலி பெறுவதில் உங்களில் மேன்மையானவர், வீட்டால் உங்களில் தூரமாக இருப்பவரே என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ''அபூஹுரைரா அவர்களே! ஏன் இப்படி? என்று மக்கள் கேட்டனர். 'அதிகமான காலடிகள் தான் காரணம்' என்று அபூஹுரைரா(ரலி) அவர்கள் பதில் கூறினார்கள். இதை நுஐம் இப்னு அப்துல்லா மதனி அல் முஜ்மிரி கூறுகின்றார்கள்.


எண் 63: கழிவறைக்கு தண்ணீர் எடுத்துச் சென்று கழுவுவது பற்றி நான் கேட்ட போது, ''அது, பெண்களின் கழுவும் முறை'' என்று ஸயீத் இப்னு முஸய்யப் பதில் கூறினார்கள் என யஹ்யா இப்னு ஸயீத் கூறுகின்றார்கள்.


எண் 64: உங்களில் ஒருவரின் பாத்திரத்தில் நாய் குடித்தால் அதை 7 தடவை கழுவட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(இதே கருத்து முஸ்லிம், நஸயீயில் உள்ளது).


எண் 65: நீங்கள் ஈமானில் உறுதியாக இருங்கள். நீங்கள் (நன்மையில்) கணக்கிடப்பட மாட்டீர்கள். நற்செயல் செய்யுங்கள். உங்களின் செயல்களில் சிறந்தது, தொழுகை தான். ஒளுவில் முஃமின் தான் பேணுதலாக இருப்பான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்ற செய்தி தனக்குக் கிடைத்ததாக மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.


பாடம் 15

தலைக்கும் காதுகளுக்கும் மஸஹ் செய்தல்

எண் 66: அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் தன் காதுகளுக்கு (மஸஹ் செய்ய) தன் விரல்களில் தண்ணீர் எடுப்பார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


எண் 67: தலைப்பாகை மீது மஸஹ் செய்வது பற்றி கேட்கப்பட்ட போது, ''கூடாது'', ''தண்ணீரால் முடியை மஸஹ் செய்ய வேண்டும்'' என ஜாபிர் இப்னு அப்துல்லா(ரலி) பதில் கூறினார்கள் என தனக்கு தகவல் கிடைத்ததாக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


எண் 68: உர்வா இப்னு ஸுபைர் அவர்கள் தன் தலைப்பாகையைக் கழற்றி தன் தலைக்கு தண்ணீரால் மஸஹ் செய்வார்கள் என ஹிஷாம் இப்னு உர்வா கூறுகின்றார்கள்.


எண் 69: அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களின் மனைவியும், அபூஉபைத்(ரலி) அவர்களின் மகளுமான ஸபிய்யா(ரலி) அவர்கள் தனது முக்காட்டைக் கழற்றி, தன் தலைக்கு தண்ணீரால் மஸஹ் செய்வதைப் பார்த்ததாக நாபிஉ அவர்கள் கூறுகின்றார்கள்.நாபிஉ அந்நாளில் சிறுவராவார்.
தலைப்பாகை, முக்காடு மீது மஸஹ் செய்யலாமா? என மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ''ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ தலைப்பாகை, முக்காடு மீது மஸஹ் செய்ய அனுமதி இல்லை. அவ்விருவரும் தங்களின் தலைகள் மீதே மஸஹ் செய்வார்கள்'' என்று பதில் கூறினார்கள்.
ஒருவர் ஒளுச் செய்கிறார். தன் தலைக்கு மஸஹ் செய்ய மறந்து விடுகிறார். அவர் தன் ஒளுவை முடித்தம் விடுகிறார். (இவர் நிலை எப்படி?) என்று மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ''தன் தலைக்கு அவர் மஸஹ் செய்ய வேண்டும். தொழுதிருந்தால், தன் தொழுகையை திரும்ப நிறைவேற்ற வேண்டும்'' என்று பதில் கூறினார்கள்.


பாடம்: 16

காலுறைகள் மீது மஸஹ் செய்தல்

எண் 70: தபூக் போர் சமயம் நபி(ஸல்) அவர்கள் தனது (மல ஜலம் கழிக்கும்) தேவைக்காக சென்றார்கள். நான் அவர்களுடன் தண்ணீர் எடுத்துச் சென்றேன். நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். அவர்களுக்கு தண்ணீர் ஊற்றினேன். தன் முகத்தைக் கழுவினார்கள். பின்பு (கைகளை கழுவுவதற்காக) குளிர் ஆடையின் கைப்பகுதியிலிருந்து கைகளை வெளிப்படுத்த முயன்றார்கள். குளிர் ஆடை இறுக்கமாக இருந்ததால் இயலவில்லை. உடனே குளிர் ஆடையின் கீழ்ப்பகுதியில் இருந்து இரு கைகளையும் வெளியாக்கிக் கழுவினார்கள். தன் தலைக்கு மஸஹ் செய்தார்கள். காலுறைகள் மீதும் மஸஹ் செய்தார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்கள் மக்களுக்கு இகாமத் செய்து, ஒரு ரக்அத்தை முடித்து விட்டார். அவர்களுக்கு மீதம் இருந்த ஒரு ரக்அத்தை நபி(ஸல்) அவர்கள் தொழ வைத்தார்கள். (நபி(ஸல்) அவர்களை முந்தி விட்டதன் காரணமாக மக்கள் அதிர்ச்சியில் இருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும், ''நீங்கள் நல்லது செய்தீர்கள்'' என்று கூறினார்கள் என முகீரா இப்னு ஷீஹ்பா(ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ யில் உள்ளது).


எண் 71: அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் கூபாவின் தலைவரான ஸஃது இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களிடம் வந்த போது, அவர்கள் தன் காலுறைகள் மீது மஸஹ் செய்வதை அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் பார்த்து விட்டு, அவர்களிடம் இதை ஆட்சேபித்தார்கள். 'உன் தந்தை (உமர்) அவர்களிடம் சென்றால் அவரிடம் கேள்' என்று ஸஃது(ரலி) அவர்கள் கூறினார்கள். ஸஃது(ரலி) அவர்கள் (கூபாவிலிருந்து மதீனாவிற்கு) வரும் வரை இ விஷயமாக தன் தந்தை உமர்(ரலி) அவர்களிடம் கேட்க, அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் மறந்து விட்டார்கள். உன் தந்தையிடம் கேட்டீரா? என்று ஸஃது(ரலி) அவர்கள் கேட்கவும், இல்லை என்று கூறினார்கள்.
அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் தன் தந்தையிடம் (இது விஷயமாக) கேட்க, 'உன் கால்களை சுத்தமான நிலையில் காலுறைகளுக்குள் நுழைத்தால் அவ்விரண்டின் மீது மஸஹ் செய்து கொள்' என்று உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள். மலம் ஜலம் கழிக்கப் போய் வந்தாலுமா? என்று அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் கேட்க, மலம் ஜலம் கழிக்கப் போய் வந்தாலும் தான் என பதில் கூறினார்கள். இதை நாபிஉ, அப்துல்லா இப்னு தீனார் இருவரும் கூறுகின்றார்கள்.
(இச்சம்பவம் வேறு வார்த்தைகளால் புகாரீ, நஸயீ யில் உள்ளது).


எண் 72: அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் கடை வீதியில் சிறுநீர் கழித்தார்கள். பின்பு ஒளுச் செய்தார்கள். பின்பு முகத்தையும், கைகளையும் கழுவி விட்டு, தன் தலைக்கு மஸஹ் செய்தார்கள். பின்பு பள்ளியில் நுழைந்ததம் (அங்கிருந்த) ஜனாஸாவிற்கு தொழ வைக்க வரும்படி அழைக்கப்பட்டார்கள். உடனே தன் காலுறைகள் மீது மஸஹ் செய்தார்கள். பின்பு ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


எண் 73: அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் 'குபா' என்ற இடத்திற்கு வந்து சிறுநீர் கழித்தார்கள். பின்பு தண்ணீர் தரப்பட்டது. ஒளுச் செய்தார்கள். (அதாவது முகத்தையும், முழங்கை உட்பட கைகளையும் கழுவினார்கள். தன் தலைக்கு மஸஹ் செய்தார்கள். காலுறைகள் மீதும் மஸஹ் செய்தார்கள். பின்பு பள்ளிக்கு வந்து அவர்கள் தொழ வைத்ததைப் பார்த்ததாக ஸயீத் இப்னு அப்துர் ரஹ்மான் இப்னு ருகைஹ் அல் அஷ்அரீ அவர்கள் கூறுகின்றார்கள்.
ஒருவர் தொழுகைக்கு ஒளுச் செய்கின்றார். பின்பு தன் காலுறைகளை அணிந்து கொண்டார். பின்பு சிறுநீர் கழித்தார். பின்பு காலுறை இரண்டையும் கழட்டிய பிறகு தன் கால்களில் மீண்டும் மாட்டிக் கொண்டார். இவர் ஒளுவை முறையாகச் செய்தவர் ஆவாரா? என்று மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ''தன் காலுறைகளை கழற்றி விட்டு, தன் கால்களைக் கழுவட்டும்! ஒளுச் செய்த நிலையில் தன் கால்களை காலுறைகளில் நுழைத்தவாரே காலுறை மீது மஸஹ் செய்ய வேண்டும். ஒளு இல்லாமல் தன் கால்களை காலுறைகளுக்குள் நுழைத்தவர், காலுறைகள் மீது மஸஹ் செய்ய மாட்டார்'' என்று பதில் கூறினார்கள் என யஹ்யா கூறுகின்றார்கள்.
ஒருவர் ஒளுச் செய்கிறார். அவரிடம் காலுறைகள் உள்ளது. அந்த காலுறைகள் மீது மஸஹ் செய்ய மறந்து விட்டார். தன் ஒளுவையும் முடித்து விட்டு தொழுதும் விடுகிறார். (இவர் என்ன செய்வது?) என்று மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ''அவர் தன் காலுறை மீது மஸஹ் செய்யட்டும். தொழுகையை மீண்டும் தொழட்டும்! ''ஒளு மீண்டும் செய்ய வேண்டியதில்லை'' என பதில் கூறினார்கள். மேலும் அவர்களிடம் ''ஒரு மனிதர் தன் கால்களை கழுவுகிறார். பின்பு தன் காலுறைகளை அணிகிறார். பின்பு ஒளுச் செய்ய விரும்புகிறார். (சரியா?) என்று கேட்கப்பட்டது. உடனே அவர்கள், ''அவர் தன் காலுறைகளைக் கழற்றட்டும். பின்பு அவர் ஒளுச் செய்யட்டும்! தன் கால்களைக் கழுவட்டும்'' என்று பதில் கூறினார்கள் என யஹ்யா கூறுகிறார்கள்.


பாடம் 17

காலுறைகள் மீது மஸஹ் செய்யும் முறை

எண் 74: தன் தந்தை (உர்வா அவர்கள்) காலுறைகள் மீது மஸஹ் செய்யும் பொது அதன் மேற்பகுதியிலேயே மஸஹ் செய்வார்கள். உட்பகுதியில் மஸஹ் செய்ய மாட்டார்கள். (இதைவிட) அதிகப்படுத்தாமல் இருந்தமையும் தான் பார்த்ததாக ஹிஷாம் இப்னு உர்வா அவர்கள் கூறுகின்றார்கள்.


எண் 75: காலுறைகள் மீது மஸஹ் செய்வது எப்படி? என்று கேட்ட போது, இப்னு ஷிஹாப் அவர்கள், தன் கைகளில் ஒன்றை காலுறையின் அடிப்பாகத்தில் நுழைத்து மற்றொன்றை மேற்புறத்திலும் வைத்து, தடவிக் காட்டினார்கள் என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


பாடம் 18

மூக்கில் இரத்தம் வழிதல்

எண் 76: அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களுக்கு மூக்கில் இரத்தம் வந்தால் (தொழுகையில் இருந்து) திரும்பி, ஒளுச் செய்வார்கள். பின்பு, (யாருடனும்) பேசாமல் திரும்பி வந்து, (விட்ட தொழுகையை) தொடர்வார்கள் என நாபிஉ கூறுகிறார்கள்.


எண் 77: அப்துல்லா இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களுக்கு மூக்கில் இரத்தம் வந்தது. (உடனே தொழுகையில் இருந்து) வெளியேறி, ரத்தத்தைக் கழுவினார்கள். பின்பு திரும்பி வந்து, தான் தொழுத (தொழுகையில் விட்ட)தில் இருந்து தொடர்ந்தார்கள் என தனக்கு செய்தி கிடைத்தாக மாலிக் (ரஹ்) கூறுகிறார்கள்.


எண் 78: ஸயீத் இப்னு முஸய்யிப் அவர்கள் தொழுது கொண்டிருந்த போது (அவர்களுக்கு) மூக்கில் ரத்தம் வந்தது. உடனே அவர்கள், நபி(ஸல்) அவர்களின் மனைவி உம்மு ஸல்மா(ரலி) அவர்களின் வீட்டிற்கு வந்தார்கள். (ஒளுச் செய்யும்) தண்ணீர் குவளை தரப்பட்டது. உடனே ஒளுச் செய்தார்கள். இதை யஸீத் இப்னு அப்துல்லா இப்னு குஸைத்துல் லைஸீ கூறுகின்றார்கள்.


பாடம் 19

காயத்திலிருந்து வரும் இரத்தம், மூக்கில் வரும் இரத்தம் அதிக அளவில் வருபவர் செய்ய வேண்டியவை

எண் 79: உமர்(ரலி) அவர்களிடம், அவர்கள் தாக்கப்பட்டிருந்த இரவில் சென்றிருந்தேன். உமர்(ரலி) அவர்கள் சுப்ஹு தொழுகைக்காக விழித்தார்கள். அப்போது உமர்(ரலி) அவர்கள், ''தொழுகையை விட்டவனுக்கு இஸ்லாத்தில் எந்தப் பங்கும் இல்லை'' என்று கூறினார்கள். அவர்களின் காயம், இரத்தத்தை வெளியேற்றிய நிலையில் உமர்(ரலி) அவர்கள் தொழுதார்கள் என் மிஸ்வர் இப்னு மக்ரமா கூறுகின்றார்கள்.



பாடம் 20

மூக்கில் இரத்தம் வந்தால்..?

எண் 81: ஸயீத் இப்னு முஸய்யிப் அவர்களுக்கு சில் மூக்கு உடைந்ததைப் பார்த்தேன். அதிலிருந்து இரத்தம் வெளியேறியது. மூக்கிலிருந்து வெளியேறிய இரத்தம் காரணமாக அவர்களின் விரல்களோ நிறம் மாறி விட்டது. (ஆனால்) அவர்கள் ஒளுச் செய்யாமலேயே தொழுதார்கள் என அப்துர் ரஹ்மான் இப்னு ஹர்முலா அல் அஸ்லமீ கூறுகிறார்கள்.


எண் 82: ஸாலிம் இப்னு அப்துல்லா அவர்களின் மூக்கிலிருந்து ரத்தம் வெளியேறியதைப் பார்த்தேன். அவர்களது விரல்களின் நிறம் மாறியது. பின்பு அதை அவர்கள் துடைத்து விட்டு, (ஒளுச் செய்யாமல்) தொழுதார்கள் என அப்துர்ரஹ்மான் இப்னு முஜ்பிர் கூறுகின்றார்கள்.


பாடம் 21

மதீ எனும் இச்சை நீருக்கு ஒளுச் செய்தல்

எண் 83: ஒருவர் தன் மனைவியிடம் நெருங்கி இருக்கிறார். அப்போது, மதீ வெளியாகியது. இவர் என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்வியை நபி(ஸல்) அவர்களிடம் கேட்கும்படி, என்னிடம் நபி(ஸல்) அவர்களின் மகள் (மனைவியாக) இருப்பதால் நான் இக்கேள்வி கேட்க வெட்கப்படுவதாகவும் அலீ(ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள். நான் இதை நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு, ''உங்களில் ஒருவர் இந்த நிலையை அடைந்தால் மறைவுறுப்பில் தண்ணீர் தெளித்து விட்டு, தொழுகைக்காக ஒளுச் செய்வது போல் ஒளுச் செய்யட்டும்'' என்று (பதில்) கூறினார்கள். இதை மிக்தாத் இப்னு அஸ்வத்(ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இதே கருத்து புகாரீ, முஸ்லிம், அபூதாவூது, நஸயீ, திர்மிதீ யில் உள்ளது).


எண் 84: (நிறத்தில்) முத்துப் போல் என்னிடம் (தொடர்ந்து மதீ) இறங்குகிறது. உங்களில் ஒருவர் இந்நிலையை அடைந்தால், ''தனது மறைவுறுப்பைக் கழுவி விட்டு, தொழுகைக்கான ஒளுச் செய்வது போல் ஒளுச் செய்யட்டும்'' என உமர்(ரலி) கூறினார்கள்.


எண் 85: மதீ பற்றி அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதை நீ அடைந்தால் உன் மறைவுறுப்பைக் கழுவு! தொழுகைக்காக ஒளுச் செய்வது போல் ஒளுச் செய்து கொள் என்று பதில் கூறினார்கள். இதை அப்துல்லா இப்னு அய்யாழ் அவர்களின் அடிமை ஜுன்துப் கூறுகின்றார்கள்.


பாடம் 22

'' மதி '' காரணமாக

எண் 86: நான் தொழுது கொண்டிருக்கும் போதும் ஈரம் வெளிப்படுவதாக உணர்ந்து உடனே தொழுகையை முறித்து விடுகின்றேன். (இது சரியா?) என்று ஒருவர் ஸயீத் இப்னு முஸய்யப் அவர்களிடம் கேட்டார். ''என் தொடையில் அது ஓடினால் நான் தொழுகையை முழுமையாக நிறைவேற்றும் வரை முடிக்க மாட்டேன்'' என்று (பதில்) கூறினார்கள். இதை யஹ்யா இப்னு ஸயீத் கூறுகின்றார்கள்.


எண் 87: வெட்டை நீர் வெளியாகுவது பற்றி நான் தசுலைமான் இப்னு யஸார் அவர்களிடம் கேட்டேன், ''உன் ஆடையில் தண்ணீரைத் தெளித்துக் கொள். அதை மறந்துவிடு'' என்று (பதில்) கூறினாhகள். தை ஸலத் இப்னு ஸுபைர் கூறுகின்றார்கள்.
(குறிப்பு: மேற்கண்ட இரண்டுமே நபி மொழி அல்ல! தாயியீன்களின் கருத்து. மேலும் இது இச்சை நீருக்குரிய சட்டமல்ல! இது, உடல் சூட்டினால் வெளியாகும், 'வெட்டை நீர்' பற்றி சட்டமாகும்).


பாடம் 23

மறைவுறுப்பைத் தொடுவதால் ஒளு?

எண் 88: நான் மர்வான் இப்னு ஹகம் அவர்களிடம்சென்றேன். அப்போது எதனால் ஒளு நீங்கும்? எனப் பேசிக் கொண்டிருந்தோம். மறைவுறுப்பை தொடுவதினால் ஒளுச் செய்தல் வேண்டும் என் மர்வான் கூறினார். இது எனக்குத் தெரியாது என நான் கூறினேன். அப்போது மர்வான் அவர்கள், ''ஒருவர் தன் மறைவுறுப்பைத் தொட்டால் அவர் ஒளுச் செய்யட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் என புஸ்ரா பின்த் ஸப்வான் (ரலி அவர்கள் தனக்குக் கூறியதாக கூறினார்கள். இதை உர்வா இப்னுஸ் ஸுபைர் அறிவிக்கின்றார்கள்.
(இது திர்மிதீ, அபூதாவூத், நஸயீ, அஹ்மத், இப்னு குஸைமா, இப்னு ஹிப்பான் ல் உள்ளது).


எண் 89: ஸஹீது இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்கள் முன் நான் குர்ஆனைப் படித்து இருந்தேன். அதுசமயம் நான் சொறிந்தேன். ''உன் மறைவுறுப்பைத் தொட்டிருக்க வேண்டுமே'' என ஸஹ்து(ரலி) கேட்க, நான் ஆம் என்றேன். 'நீ எழுந்து (போய்) ஒளுச் செய்' என்று ஸஹ்து(ரலி) கூறினார்கள். நான் எழுந்து போய் ஒளுச் செய்து விட்டுத் திரும்பினேன் என முஸ்அப் அவர்கள் கூறுகின்றார்கள்.


எண் 90: உங்களில் ஒருவர் தன் மறைவுறுப்பைத் தொட்டு விட்டால் ஒளுச் செய்யட்டும் என அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.


எண் 91: ஒருவன் தன் மறைவுறுப்பைத் தொட்டு விட்டால் ஒளுச் செய்யட்டும் என அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.


எண் 92: என் தந்தை அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்ளக் குளித்து விட்டு பின்பு ஒளுச் செய்வதையும் பார்த்தேன். தந்தையவர்களே! குளித்ததே ஒளுவிற்கும் பகரமாகி விடுமே என்று நான் கேட்டேன். 'ஆம்'. பகரமாகி விடும் தான் என்றும், நான் மறைவுறுப்பை சில சமயம் தொட்டிருக்கக் கூடும். எனவே ஒளுச் செய்தேன் என்று (பதில்) கூறினார்கள். இதை ஸாலிம் கூறுகின்றார்கள்.


எண் 93: அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களுடன் நான் ஒரு பயணத்தில் இருந்தேன். அப்போது அவர்கள் சூரியன் உதயமாகிய பின் ஒளுச் செய்து, பின்பு தொழுததைப் பார்த்தேன். இந்தத் தொழுகையைத் தான் (சற்று முன்) தொழுதீர்களே! என்றேன். சுப்ஹுத் தொழுகைக்காக நான் ஒளுச் செய்து விட்டு, என் மறைவுறுப்பைத் தொட்டேன். எனவே (மீண்டும்) ஒளுச் செய்தேன். மீண்டும் தொழுதேன் என்று பதில் கூறினார்கள். இதை ஸாலிம் கூறுகின்றார்கள்.
(குறிப்பு: சதாரணமாக மறைவுறுப்பைத் தொட்டால் ஒளு முறியாது. ஆசையுடன் தொட்டு, அதன் மூலம் மதீ வெளிப்பட்டாலே ஒளு முறியும். மறைவுறுப்பைத் தொட்டால் ஒளு முறியாது என்று வந்துள்ள ஆதாரப்பூர்வமான நபிமொழியையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்).


பாடம் 24

ஒருவன் தன் மனைவியை முத்தமிட்டால் ஒளு..?

எண் 94: ஒருவன் தன் மனைவியை முத்தமிடுவதும், தன் கையால் அவளைத் தொடுவதும், 5:6 வசனத்தில் உள்ள ''பெண்களைத் தீண்டினால்'' என்பதில் உள்ளதாகும். ஒருவன் தன் மனைவியை முத்தமிட்டால் அல்லது தன் கையால் அவளைத் தொட்டால் அவன் மீது ஒளுச் செய்வது கடமையாகும்'' என்று அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.


எண் 95: ஒருவன் தன் மனைவியை முத்தமிடுவதனால் ஒளுச் செய்தல் அவசியம் என்று அப்துல்லா இப்னு மஸ்ஊத்(ரலி) கூறுகின்றார்கள்.
(குறிப்பு: மேற்கண்டவைகள் நபிமொழிகள் அல்ல என்பதை கவனத்தில் கொள்க. நபி(ஸல்) அவர்கள் தொழும் போது படுத்திருந்த ஆயிஷா(ரலி) அவர்களின் காலை சுரண்டுவது மூலம் அவர்களைத் தொட்டுள்ளார்கள். மேலும் 5:6 வசனத்தில் உள்ள ''முலாமஸத்'' என்ற வாசகத்திற்கு, 'உடலுறவு கொள்வது' என்பதே பொருளாகும்).


பாடம் 25

குளிப்பு முறை

எண் 96: நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பைக் குளிக்கும் போது தன் கைகளை கழுவ ஆரம்பிப்பார்கள். பின்பு தொழுகைக்காக ஒளுச் செய்வது போல் ஒளுச் செய்வார்கள். பின்பு தன் விரல்களை தண்ணீருக்குள் நுழைத்து அவைகளை தன் (தலை) முடியின் அடிப்பாகத்தைக் கோதுவார்கள். பின்பு தன் தலை மீது கைகளால் மூன்று முறை (தண்ணீர்) ஊற்றுவார்கள். பின்பு தன் உடல் முழுவதும் தண்ணீரை (ஊற்றி) ஓட விடுவார்கள் என அன்னை ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது புகாரீ, முஸ்லிம், அபூதாவூது, திர்மிதீ, நஸயீ யில் உள்ளது).


எண் 97: குளிப்புக் கடமைக்காக (12 முத்து கொள்ளளவு) ஃபரக் என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்.


எண் 98: அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் கடமையான குளிப்பைக் குளித்தால் தன் வலது கையில் (தண்ணீர்) ஊற்றி, அதைக் கழுவ ஆரம்பிப்பார்கள். பின்பு தனது மறைவுறுப்பைக் கழுவுவார்கள். பின்பு வாய் கொப்பளித்து மூக்கிற்கு நீர் செலுத்தி மூக்கைச் சிந்துவார்கள். பின்பு முகத்தைக் கழுவி விட்டு, தன் கண்களில் தெளிப்பார்கள். பின்பு வலது கையைக் கழுவி, இடது கையையும் கழுவுவார்கள். பின்பு தன் தலையை கழுவி விட்டு குளிப்பார்கள். தண்ணீரைத் தன் மீது (ஊற்றி) ஓட விடுவார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


எண் 99: குளிப்புக் கடமையான பெண் குளிப்பது பற்றி கேட்கப்பட்ட போது, ''தண்ணீரில் இருந்து தன் தலையின் மீது அவள் மூன்று முறை ஊற்றட்டும். பின்பு தன் கைகளால் அவள் தன் தலையை கோதி விடட்டும் என்று ஆயிஷா(ரலி) பதில் கூறினார்கள், என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.
(புகாரீ, அபூதாவூதில் இது இடம் பெற்றுள்ளது).


பாடம் 27

மறைவுறுப்பு இரண்டு இணைந்து விடடால் குளிப்புக் கடமையாகும்

எண் 100: பெண்ணுறுப்பை ஆணுறுப்பு அடைந்தால் குளிப்பது கடமையாகும் என உமர்(ரலி), உதுமான்(ரலி) ஆயிஷா(ரலி) ஆகியோர் கூறியதாக ஸயீத் இப்னு முஸய்யப் கூறுகின்றார்கள்.


எண் 101: குளிப்பது எப்போது கடமையாகும்? என ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அபூ ஸலமாவே! கோழிகளுடன் சேர்ந்து சப்தமிடும் கோழிக் குஞ்சு போன்றவர் நீர் என்பது உமக்குத் தெரியுமா? பெண்ணுறுப்புடன் ஆணுறுப்பு சேர்ந்து விட்டால் குளிப்பது கடமையாகும் என பதில் கூறினார்கள் என்று அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களின் மகன் அபூ ஸலமா கூறினார்கள்.


எண் 102: ஒரு விஷயத்தில் நபித் தோழர்கள் கொண்ட கருத்து வேறுபாடு என்னைக் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டது. அதை உங்கள் முன் (தீர்ப்புக்காக?) வைப்பதே சிறந்தது எனக் கருதுகிறேன் என்று நபி(ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா(ரலி) அவர்களிடம் வந்து அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) கூறினார்கள். அது என்ன? ''உன் தாயிடம் எதைப் பற்றிக் கேட்பீரோ, அதை என்னிடம் நீர் கேட்பீராக'' என்று ஆயிஷா(ரலி) கூறினார்கள். 'ஒருவர் தன் மனைவியிடம் (உடல் உறவு மூலம்) இணைகிறார். பின்பு விந்து வெளியாகாமலேயே பிரிந்தார். (இவர் குளிக்க வேண்டுமா?) என்று கேட்டார். 'பெண்ணுறுப்புடன் ஆணுறுப்பு இணைந்து விட்டால் குளிப்பது கடமை' என்று ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதும், உங்களுக்குப் பின்னால் யாரிடமும் இது பற்றி எப்போதும் கேட்க மாட்டேன் என அபூ மூஸா அல் அஷ் அரீ(ரலி) கூறினார்கள் என ஸயீத் இப்னு முஸய்யப் கூறுகின்றார்கள்.
(இதன் கருத்து முஸ்லிம், திர்மிதி யில் இடம் பெற்றுள்ளது).


எண் 103: ஒருவர் தன் மனைவியிடம் உடலுறவு மூலம் இணைகிறார். பின்பு விந்து வெளியாகாமலேயே பிரிந்து விடுகிறார். (இவர் நிலை என்ன?) என்று ஸைத் இப்னு ஸாபித் அன்சாரீ(ரலி) அவர்களிடம் மஹ்மூத் இப்னு லுபைதுல் அன்சாரீ கேட்க, குளிக்க வேண்டும் என்று ஸைத்(ரலி) கூறினார்கள். உபை இப்னு கஹ்பு(ரலி) அவர்கள் குளிக்கத் தேவையில்லை என்ற முடிவில் இருந்தார் என மஹ்மூத் கூறினார்கள். உபை இப்னு கஹ்பு(ரலி) அவர்கள் இறக்கும் பொது அந்த முடிவில் இருந்து மாறி விட்டார் என ஸைத்(ரலி) அவர்கள் கூறினார்கள். இதை அப்துல்லா இப்னு கஹ்பு(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.


எண் 104: பெண்ணுறுப்பை ஆணுறுப்பு அடைந்தால் குளிப்பது கடமையாகும் என அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுவார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


பாடம் 27

குளிப்புக் கடமையானவர் குளிக்கும் முன் உண்ண, உறங்க விரும்பினால் ஒளுச் செய்து கொள்ளுதல்!

எண் 105: ஒரு இரவில் தனக்குக் குளிப்புக் கடமை ஏற்பட்டது. குளித்து நபி(ஸல்) அவர்களிடம் உமர்(ரலி) கூறினார்கள். ''உன் மறைவுறுப்பைக் கழுவி விட்டு ஒளுச் செய். பின்பு தூங்கு'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(இது புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், நஸயீ யில் இடம் பெற்றுள்ளது)


எண் 106: உங்களில் ஒருவர் பெண்ணிடம் உடலுறவு கொண்டு, பின்பு குளிக்கும் முன்பே தூங்க விரும்பினால் அவர் தொழுகைக்காக செய்யும் ஒளுவைப் போல் ஒளுச் செய்யும் வரை தூங்க வேண்டாம் என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்.


எண் 107: அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் குளிப்புக் கடமையாக இருக்கும் போது உண்ண அல்லது உறங்க விரும்பினால் தன் முகத்தையும், முழங்கை உட்பட கைகளையும் கழுவுவார்கள். தன் தலைக்கு மஸஹ் செய்வார்கள் (அதன்) பின்பு உண்பார்கள் அல்லது உறங்குவார்கள் என நாபிஉ கூறுகிறார்கள்.


பாடம் 28

குளிப்புக் கடமையானவன் குளிக்க மறந்து விட்டு தொழுது விட்டால் நினைவு வந்ததும் குளித்து விட்டு, தொழுவான். தன் ஆடையையும் கழுவிக் கொள்வான்
எண் 108: ஒருமுறை ஒரு தொழுகைக்காக நபி(ஸல்) அவர்கள் தக்பீர் கூறினார்கள். பின்பு, சிறிது பொறுங்கள் என்று மக்களிடம் கையில் சமிக்ஞை செய்தார்கள். பின்பு (குளித்த) தண்ணீரின் அடையாளம் அவர்களின் தோளில் இருக்கும் நிலையில் திரும்பி வந்தார்கள் என அதாஉ இப்னு யஸார் கூறுகின்றார்கள்.
(இது முர்ஸலாக இடம் பெற்றாலும், நபித்தோழர்கள் அறிவித்து புகாரீ, முஸ்லிம், நஸயீ, அபூதாவூது லும் இடம் பெற்றுள்ளது),


எண் 110: உமர்(ரலி) அவர்கள் 'ஜுர்ப்' என்ற இடத்தில் உள்ள தனது நிலத்திற்கு வந்தார்கள். அப்போது தனது ஆடையில் ஸ்கலிதம் ஆகியுள்ள(அடையாளத்)தைக் கண்டார்கள். 'மக்களின் காரியமாக நான் ஈடுபட்டு இருக்கும் போது ஸ்கலிதம் மூலம் சோதிக்கப்பட்டு விட்டேன்' என்று கூறி விட்டு, குளித்தார்கள். ஸ்கலிதம் மூலம் தன் ஆடையில் பார்த்ததை (விந்துவை) கழுவினார்கள். பின்பு சூரியன் உதயமாகிய பின்பே (மீண்டும்) அதே ஆடையுடன் தொழுதார்கள். இதை சுலைமான் யஸார் கூறுகின்றார்கள்.


எண் 111: உமர்(ரலி) அவர்கள் சுப்ஹை மக்களுக்குத் தொழ வைத்தார்கள். பின்பு ஜுர்ப் என்ற இடத்தில் உள்ள தன் நில்ததிற்கு காலையில் வந்தார்கள். தன் ஆடையில் விந்து கொட்டி உள்ளதைக் கண்டார்கள். உடனே, அவர்கள் 'கொழுப்பு நமக்கு ஏற்பட்டதால் விந்து வெளியாகி விட்டது' என்று கூறிவிட்டு, குளித்தார்கள். தன் ஆடையில் இருந்த விந்துவைக் கழுவினார்கள். தன் தொழுகையை மீண்டும் தொழுதார்கள் என சுலைமான் இப்னு யஸார் கூறுகிறார்கள்.


எண் 112: அம்ரு இப்னுல் ஆஸ்(ரலி) அவர்களும் உள்ளடக்கிய உம்ராவுக்குச் சென்ற பயணக் கூட்டத்தில் உமர்(ரலி) அவர்களுடன் நானும் இருந்தேன். உமர்(ரலி) அவர்கள் வழியில் தண்ணீருக்கு சற்று அருகே தூங்கி ஸ்கலிதமாகி விடடார்கள். கூட்டத்தில் தண்ணீர் ஏதும் இல்லாத நிலையில் விடிய ஆரம்பித்தது. தண்ணீர் கிடைக்கும் இடத்திற்குச் சென்றார்கள். விடிந்ததும் விந்து பட்ட ஈரத்தைக் கழுவினார்கள்.
''சுப்ஹு ஆகி விட்டது. எங்களிடம் நிறைய ஆடைகள் உள்ளன. கழுவிய உங்கள் ஆடையைக் கழற்றுங்கள் என அம்ரு இப்னுல் ஆஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள். அம்ரு இப்னுல் ஆஸ் அவர்களே! பல ஆடைகள் நீ பெற்றுக் கொண்டதால் மற்ற மனிதர்களிடமும் பல ஆடைகள் இருக்குமா? என்ன! உமக்கு வந்த ஆச்சரியமே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அதை நான் செய்தால் சுன்னத் ஆகி விடும். எனினும் நான் விந்தைப் பார்த்த இடத்தைக் கழுவுவேன். நான் பார்க்காத இடத்தை (தண்ணீரால்) தெளிப்பேன் என்று உமர்(ரலி) கூறினார்கள். இதை யஹ்யா இப்னு அப்துர் ரஹ்மான் கூறியதாக உர்வா கூறுகின்றார்கள்.
ஒருவர் விந்து கொட்டியுள்ள அடையாளத்தைக் காண்கிறார். எப்போது ஏற்பட்டது என்பதை அவர் அறியவில்லை. கனவில் கண்டதையும் அவன் நினைவு கொள்ள முடியவில்லை. இவர் விஷயமாக மாலிக் (ரஹ்) அவர்கள் கூறும் போது, ''அவர் இறுதியில் தூங்கிய தூக்கத்திற்காக அவர் குளிக்கட்டும். அந்தத் தூக்கத்திற்குப் பின் தொழுதிருந்தால், ஒருவன் கனவு காணாமலேயே விந்து வெளியாகி இருக்கும். விந்து வெளியாகாமலேயே கனவு கண்டிருப்பான் என்பதால் அவன் இறுதியாக தூங்கிய பின் தொழுததை மட்டும் மீண்டும் தொழட்டும். தன் ஆடையில் ஈரத்தைக் கண்டால் அவன் மீது குளிப்பது கடமையாகும். இவ்வாறே உமர்(ரலி) அவர்கள் தன் தூக்கத்தின் இறுதியில் தொழுததையே மீண்டும் தொழுதுள்ளார்கள். அதற்கு முன்னுள்ளதை மீண்டும் தொழவில்லை என்று மாலிக் (ரஹ்) குறிப்பிட்டார்கள்.


பாடம் 29

ஆணைப் போலவே பெண்ணும் பார்த்தால் குளிப்புக் கடமை!

எண் 113: இறைத்தூதர் அவர்களே! ஒரு ஆண் பார்ப்பது போல் கனவில் பார்த்த பெண்ணும் குளிக்க வேண்டுமா? என்று நபி(ஸல்) அவர்களிடம் உம்மு ஸுலைம்(ரலி) கேட்டார்கள்! ஆம்! அவள் குளிக்க வேண்டும்' என்று அவர்களுக்கு நபி(ஸல்) கூறினார்கள். அதுசமயம் (உம்மு ஸுலைம்) அவர்களிடம் ஆயிஷா(ரலி) அவர்கள், ''சீ! உனக்கு என்ன? ஒரு பெண் அப்படிப் பார்ப்பாளா?'', என்று கேட்டார்கள். ''உனது வந்து கை நாசமாகட்டும்! அவ்வாறு இல்லையானால், அவளைப் போலவே குழந்தை பிறப்பது எப்படி?'' என்று நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களிடம் (திருப்பிக்) கேட்டார்கள். இதை உர்வா இப்னு சுபைர் கூறுகின்றார்கள்.
(வேறு வார்த்தைகளால் இது முஸ்லிம், அபூதாவூத், நஸயீ யில் உள்ளது).


எண் 114: அபூதல்ஹா(ரலி) அவர்களின் மனைவி உம்மு ஸுலைம்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ''இறைத்தூதர்(ஸல்) அவர்களே! நிச்சயமாக அல்லாஹ் உண்மை விஷயத்தில் வெட்கமடைய மாட்டான். ஒரு பெண்ணுக்கு விந்து வெளியானால் அவள் மீது குளிப்பது கடமையா?'' என்று கேட்க, ஆம்! அவள் நீரை (விந்தை)ப் பார்த்தால் (கடமையே) என்று பதில் கூறினார்கள். இதை உம்மு ஸல்மா(ரலி) அறிவிக்கின்றார்கள்.


பாடம் 30

குளிப்புக் கடமையை நிறைவேற்றல்

எண் 115: மாத விடாய் காரியாகவோ, அல்லது குளிப்புக் கடமையானவளாகவோ இல்லாத பெண் வைத்த மீதித் தண்ணீரால் குளிப்பதால் குற்றமில்லை என அப்துல்லா இப்னு உமர்(ரலி) கூறுவார்கள் என நாபிஉ கூறுகிறார்கள்.


எண் 116: அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் குளிப்புக் கடமையான நிலையில், அவர்களின் ஆடை வியர்வையாகி விடும். (குளித்து விட்டு) அந்த (வியர்வை உள்ள) ஆடையிலேயே தொழுவார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


எண் 117: அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களின் கால்களை அவரின் அடிமைப் பெண்கள் கழுவுவார்கள். அவர்கள் மாதவிடாய் பெண்களாக இருக்கும் நிலையிலேயே அவர்களுக்கு நெற்றிக்கும் கீழ் (ஸஜ்தாவின் போது) வைக்கும் துண்டாடையையே கொடுப்பார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.
ஒரு மனிதருக்கு மனைவியர் மற்றும் அடிமைப் பெண்கள் உள்ளனர். இவர்கள் அனைவரிடமும் குளிப்பதற்கு முன் உடலுறவு கொள்ளலாமா? என்று மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் ''ஒரு மனிதன் குளிப்பதற்கு முன் தன் அடிமைப் பெண்ணை உடலுறவு கொள்வது குற்றமில்லை. அடிமைப் பெண் அல்லாத பெண்களில் ஒருவரிடம் உடலுறவு கொண்டு விட்டு, அதேநாளில் மற்றொரு பெண்ணிடம் உடலுறவு கொள்வது வெறுக்கத்தக்கதாகும். பின்பு அடிமைப் பெண்ணிடம் உடலுறவு கொண்டு, அவர் குளிப்புக் கடமையானவராக இருக்கும் நிலையில் மற்றொரு அடிமைப் பெண்ணிடம் உடலுறவு கொள்வது குற்றமில்லை என்று பதில் கூறினார்கள்.
மேலும், குளிப்புக் கடமையானவர்கள் குளிப்பதற்காக தண்ணீர் வைக்கப்படுகிறது. அவர் மறந்து, தன் விரலை அதில் அது சூடாக உள்ளதா? என்பதை அறிவதற்காக உள்ளே விடுகிறார். அந்த தண்ணீர் சுத்தமானதா? என்று மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அவரின் விரல் அசிங்கத்துடன் இல்லாத வரை அந்த தண்ணீர் அசுத்தமாகும் என நான் எண்ணவில்லை என மாலிக் (ரஹ்) அவர்கள் பதில் கூறினார்கள்.


பாடம் 31

தயம்மும் பற்றி...
எண் 118: நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். 'பைதா' அல்லது 'தாதுல் ஜைத்' என்ற இடத்தை நாங்கள் அடைந்த போது எனது கழுத்து நகை ஒன்று தொலைந்து விட்டது. அதைத் தேடுவதற்காக நபி(ஸல்) அவர்கள் (அவ்விடத்தில்) தங்கினார். அவர்களுடன் மக்களும் தங்கி விட்டனர். அவ்விடத்திலும் தண்ணீர் இல்லை. அவர்களிடமும் தண்ணீர் இல்லை.
மக்கள் அபூபக்கர்(ரலி) அவர்களிடம் வந்து, (உங்கள் மகள்) ஆயிஸஷா செய்ததைப் பார்த்தீர்களா? நபி(ஸல்) அவர்களையும், மக்களையும் (தண்ணீர் இல்லாத இடத்தில்) தங்க வைத்து விட்டார். அவர்கள் வசமும் தண்ணீர் இல்லை. இவ்விடத்திலும் தண்ணீர் இல்லை என்று கூறினார்கள்.
நபி(ஸல்) அவர்கள் என் மடியி; தூங்கும் பொது என்னிடம் அபூபக்கர்(ரலி) வந்து, ''நபி(ஸல்) அவர்களையும், மக்களையும் தங்க வைத்து விட்டாயே! இந்த இடத்திலும் தண்ணீர் இல்லை. மக்களிடமும் தண்ணீர் இல்லை'' என்று கூறி என்னை கண்டித்தார்கள். தன் கையால் என் இடுப்பில் குத்தினார்கள். என் தொடையில் நபி(ஸல்) அவர்களின் தலை இருந்ததே தவிர நான் அசைவதைத் தடுக்கவில்லை. தண்ணீர் கிடைக்காத நிலையிலேயே நபி(ஸல்) அவர்கள் சுப்ஹு நேரத்தை அடைந்தார்கள். உடனே அல்லாஹ் தயம்மும் பற்றிய வசனத்தை இறக்கி வைத்தான். பின்பு நான் அமர்ந்திருந்த ஒட்டகத்தை எழுப்பினோம். அதன் கீழே என் கழுத்து நகையைப் பெற்றுக் கொண்டோம் என ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்.
இது பற்றி உஸைத் இப்னு ஹுழைர் அவர்கள், ''அபூபக்கர் குடும்பத்தினரே! உங்கள் மூலம் (மக்களுக்கு) ஏற்பட்ட முதல் பரக்கத் இதுவல்ல, (இன்னும் பல) என்று கூறுவார்கள்.
(இது புகாரீ, முஸ்லிம், நஸயீ, அபூதாவூதிலும் இடம் பெற்றுள்ளது).
ஒரு ஒரு தொழுகைக்காக தயம்மும் செய்கிறார். பின்பு அடுத்த தொழுகை நேரம் வந்து விடுகிறது. அதற்காகவும் தயம்மும் செய்ய வேண்டுமா? அல்லது முன்பே செய்த தயம்மும் போதுமா? என மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ஒவ்வொரு தொழுகையின் போதும் தண்ணீர் தேடுவது கடமை என்பதாகும். ஒவ்வொரு தொழுகைக்கும் தயம்மும் செய்வான். தண்ணீரைத் தேடிப் பெற்றுக் கொள்ளவில்லையானால் அவன் தயம்மும் செய்வான் என பதில் கூறினார்கள்.
தயம்மும் செய்த ஒருவர், ஒளுச் செய்துள்ள தன் தோழர்களுக்கு இமாமத் செய்யலாமா? என்று மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ''அவர் அல்லாத மற்றொருவர் அவர்களுக்கு இமாமத் செய்வதே எனக்கு விருப்பமானதாகும். அவர்களுக்கு இவர் இமாமத் செய்தால் அதை குற்றமாக நான் கருதவில்லை'' என்று பதில் கூறினார்கள்.
ஒருவர் தண்ணீர் கிடைக்காமல் தயம்மும் செய்து, எழுந்து, தக்பீர் கூறி, தொழ ஆரம்பித்து விட்டார். அதுசமயம் தண்ணீருடன் ஒருவன் வருகிறான். (அப்போது இவர் தன் தொழுகையை முறிக்க வேண்டுமா?) என்று மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ''அவர் தன் தொழுகையை முறிக்க வேண்டாம். எனினும் தயம்மும் மூலமே அதைப் பூர்த்தி செய்து விட்டு, அடுத்து வரும் தொழுகைகளுக்காக ஒளுச் செய்ய வேண்டும்'' என்று பதிலளித்தார்கள்.
ஒருவர் தொழுகைக்காக தயாராகி தண்ணீர் கிடைக்கவில்லை. அது சமயம் தயம்மும் செய்தல் என்ற அல்லாஹ்வின் சட்டத்தைச் செய்தால் அவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு விட்டார். தண்ணீர் பெற்றவன் தயம்மும் செய்தவனை விட அதிகத் தூய்மை ஆனவன் என்பதும், பூரணமான தொழுகையுடையவன் என்பதுமில்லை. ஏனெனில், இரு காரியங்களும் இறைவனால் உத்தரவிடப்பட்டவையே! ஒவ்வொரு அமல்களும் அல்லாஹ்வின் கட்டளையின் படியே உள்ளதாகும். தண்ணீர் கிடைத்தால் ஒளுச் செய்வது என்பதும், தொழ ஆரம்பிக்கு முன் தண்ணீர் கிடைக்கவில்லையானால் தயம்மும் செய்வது என்பதும் அல்லாஹ் ஏவிய கடமைகள் தான் என மாலிக் (ரஹ்) கூறுகிறார்கள்.


பாடம் 32

தயம்மும் செய்யும் முறை..

எண் 119: அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களும், நானும் ஜுர்ப் என்ற இடத்திற்கு செல்லும் வழியில் 'மர்பத்' என்ற இடத்திற்கு அப்துல்லா(ரலி) இறங்கினார்கள். தூய்மையான மண்ணில் தயம்மும் செய்தார்கள். தன் முகத்தையும் முழங்கை உட்பட கைகளையும் தடவினார்கள். பின்பு தொழுதார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.
(இது புகாரீயில் பாடத் தலைப்பாக இடம் பெற்றுள்ளது).


எண் 120: அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் முழங்கை வரை தயம்மும் செய்வார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.
தயம்மும் செய்வது எப்படி? அதை எதில் செய்வது? என மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ''தன் முகத்துக்காக ஒரு முறையும், கைகளுக்காக ஒரு முறையும் (மண்ணில்) அடித்து முழங்கை உட்பட அவ்விரண்டையும் மஸஹு செய்வது என பதில் கூறினார்கள்.


பாடம் 31

குளிப்புக் கடமைக்காக தயம்மும் செய்தல்

எண் 121: குளிப்புக் கடமையான ஒருவர் தயம்மும் செய்கிறார். பின்பு தண்ணீரைப் பெற்றுக் கொள்கிறார். (இவர் நிலை என்ன?) என ஸயீத் இப்னு முஸய்யப் அவர்களிடம் கேட்டார். அவர் தண்ணீரைப் பெற்றுக் கொண்டால் (இனி செய்யவிருக்கும்) வரும் அமல்களுக்காக குளிப்பது அவர் மீது கடமை என ஸயீத் கூறினார்கள்.
பயணத்தில் உள்ள ஒருவர் கனவில் விந்து வெளியாகிறது. ஒளுவிற்குரிய அளவுக்கே தவிர தண்ணீர் அவரிடம் இல்லை. வேறு தண்ணீர் கிடைக்கும் வரை அவன் தாகித்தும் இருக்க முடியாது. (இப்போது அவர் என்ன செய்வது?) என்று கேட்டதற்கு, ''அந்த தண்ணீர் மூலம் தன் மறைவுறுப்பையும், அதில் உள்ள அசுத்தத்தையும் கழுவுவார். பின்பு அல்லாஹ் கட்டளையிட்டது போல் தூய்மையான மண்ணால் தயம்மும் செய்வார்'' என்று மாலிக் (ரஹ்) கூறினார்கள்.
குளிப்புக்கடமையான ஒருவர் தயம்மும் செய்ய விரும்புகிறார். உப்பு மண்ணைத் தவிர வேறு மண்ணை அவர் பெற்றுக் கொள்ளவில்லை. இவர் உப்பு மண் மூலம் தயம்மும் செய்யலாமா? உப்பு மணலில் தொழுவது வெறுக்கத்தக்க செயலா? என்று மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ''உப்பு மண்ணில் தொழுவதோ, அதில் தயம்மும் செய்வதோ குற்றமில்லை, ஏனெனில், தூய்மையான மண்ணால் தயம்மும் செய்யுங்கள்'' என்று தான் அல்லாஹ் கூறியுள்ளான். உப்பு மண்ணாயினும், அது அல்லாததாயினும் தூய்மையான அனைத்திலும் அவன் தயம்மும் செய்யலாம்'' என்று பதில் கூறினார்கள்.


பாடம் 34

மாதவிடாய் பெண்னான தன் மனைவியிடம் ஒரு ஆணுக்குள் அனுமதி!

எண் 122: ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம், மாதவிடாய் காரியான என் மனைவியுடன் எனக்கு அனுமதிக்கப்பட்டது எது? என்று கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள், அவளின் கீழாடையை அவள் இறுக்கிக் கட்டிக் கொள்ளட்டும். பின்பு அதன் மேலாக உன் காரியம் உனக்குண்டு என்று கூறினார்கள். இதை ஸைத் இப்னு அஸ்லம் கூறுகின்றார்கள்.


எண் 123: ஆயிஷா(ரலி) அவர்கள், ஒரே ஆடை விரிப்பில் படுத்திருந்தார்கள். அவர்களுக்கு கடும் ரத்தக் கசிவு ஏற்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களிடம், உனக்கு என்ன நேர்ந்தது? மாதவிடாய் ஏற்பட்டு விட்டதா? என்று கேட்டார்கள். ஆம்! என்று ஆயிஷா(ரலி) கூறினார்கள். உன் கீழாடையை நீ இறுக்கமாகக் கட்டிக் கொள். பின் உன் படுக்கையில் படுத்துக் கொள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.


எண் 124: மாதவிடாய் காரியான தன் மனைவியை ஒருவன் கட்டி அணைக்கலாமா? என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்க ஒருவரை உபைதுல்லாஹ் இப்னு அப்துல்லா இப்னு உமர் அனுப்பினார்கள். அப்போது ஆயிஷா(ரலி) அவர்கள், அவளின் கீழே அவள் தன் கீழாடையை அவள் இறுக்கிக் கொள்ளட்டும்! பின் அவன் விரும்பினால் அவளைக் கட்டி அணைக்கலாம் எனக் கூறினார்கள். இதை நாபிஉ கூறுகின்றார்கள்.


எண் 125: மாதவிடாய்ப் பெண் ஒருத்தி, அவள் சுத்தமாகி, அவள் குளிக்கும் முன் தன் கணவனிடம் உடலுறவு கொள்ளலாமா? என்று ஸலாம் இப்னு அப்துல்லா, சுலைமான் இப்னு யஸார் ஆகிய இருவரிடம் கேட்கப்பட்டது. அவ்விருவரும், அவள் குளிக்கும் வரை கூடாது என்று பதில் கூறினார்கள்.


பாடம்: 35

மாதவிடாய் பெண் சுத்தமாகுதல்?

எண் 126: சில பெண்கள் மாதவிடாய் ரத்தத்தினால் மஞ்சளான பஞ்சு வைக்கப்பட்ட பெட்டியை அன்னை ஆயிஷா(ரலி) அவர்களிடம் அனுப்பி (இதுபோல் இருக்கும் போது தொழுதல்) பற்றிக் கேட்டார்கள். அந்த பஞ்சு வெள்ளையாக ஆகும் வரை நீங்கள் அவசரப்பட வேண்டாம் என அவர்களிடம் கூறினார்கள். வெள்ளைப் பஞ்சு என்பது மூலம் அவர்கள் மாதவிடாய் இருந்து சுத்தமானதையே நாடினார்கள் என அல்கமா அவர்களின் தாய் (ஆயிஷா(ரலி) அவர்களின் அடிமைப் பெண்_ மர்ஜானா(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.


எண் 127: இரவின் ஒரு பகுதியில் (எழுந்து) சில பெண்கள் விளக்குகளை எடுத்து, (மாதவிடாய்) சுத்தமாகி விட்டதா? எனப் பார்ப்பார்கள் என (ஆயிஷா(ரலி)க்கு) செய்தி கிடைத்ததும், அப்பெண்களைக் குறை கூறி விட்டு, இவ்வாறு பெண்கள் செய்ய வேண்டியதில்லை எனக் கூறியதாக ஸைத் இப்னு ஸாமித்(ரலி) அவர்களின் மகள் கூறினார்கள்.
(குறிப்பு: இதன் அறிவிப்பாளரான ஸைத்(ரலி) அவர்கள் மகள் யார் என்று குறிப்பு வரவில்லை. எனினும் இதை புகாரீ இமாம் அறிவிப்பாளர் வரிசi ஏதுமின்றிக் கூறுகின்றார்கள்).
மாதவிடாய்க் காரி சுத்தமாகின்றாள். தண்ணீரை அவள் பெறவில்லை. தயம்மும் செய்யலாமா? என்று மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ஆம்! அவள் தயம்மும் செய்யலாம். அவள், தண்ணீர் கிடைக்காமல் தயம்மும் செய்யும் குளிப்புக் கடமையானவன் போலாவாள் என்று பதில் கூறினார்கள்.


பாடம் 37

மாதவிடாய் பற்றி இதர சட்டங்கள்

எண் 128: இரத்தத்தைக் கண்ட கர்ப்பிணிப் பெண், தொழுகையை விட்டு விடுவாள் என ஆயிஷா(ரலி) கூறினார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.


எண் 129: இரத்தத்தைக் கண்ட கர்ப்பிணிப் பெண் (என்ன செய்வாள்) என இப்னு ஷிஹாப் அவர்களிடம் தான் கேடட போது, அவள் தொழுகையை விட்டும் ஒதுங்கி விடுவாள் எனக் கூறினார்கள் என மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.


எண் 130: நான் மாதவிடாய்க் காரியாக இருந்த நிலையில், நபி(ஸல்) அவர்களின் தலையை நான் வாரி விடுபவளாக இருந்தேன் என ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள். (இதன் கருத்து புகாரீ, முஸ்லிம், அஹ்மத், நஸயீ யில் இடம் பெற்றுள்ளது).


எண் 131: நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பெண், எங்களின் ஒரு பெண் தன் ஆடையில் மாதவிடாய் இரத்தத்தைக் கண்டால், அவள் எப்படி நடந்து கொள்வாள் என்று கூறுங்கள்? என்று கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள், உங்களில் ஒரு பெண் ஆடையில் மாதவிடாய் இரத்தம் இருந்தால், அதை அவள் சுரண்டி விட்டு, பின்பு அதை தண்ணீரால் கழுவட்டம்! பின்பு அதில் தொழட்டும் என்று கூறினார்கள் என அஸ்மா பின்த் அபுபக்கர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


பாடம் 38

தொடர் இரத்தப் போக்கு ஏற்பட்டவள்?

எண் 132: நபி(ஸல்) அவர்களின் காலத்தில் ஒருவர் இரத்தப் போக்குடையவராக இருந்தார். (அவர் என்ன செய்வது? என) அவருக்காக நபி(ஸல்) அவர்களிடம் நான் மார்க்கத் தீர்ப்பு கேட்டேன். இந்நிலை ஏற்படும் முன்னாள் மாதத்தின் அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்ட இரவு – பகலை (நாட்களை) எண்ணட்டும்! அந்த நாள் சென்றதும் குளிக்கட்டும்! பின்பு துணியால் இறுகக் கட்டிக் கொள்ளட்;டும்! பின்பு தொழட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று உம்மு சலமா(ரலி) அறிவிக்கின்றார்கள்.
இது அபூதாவூத், நஸயீ யில் இடம் பெற்றுள்ளது).


எண் 133: அல்லாஹ்வின் தூதரே! நான் (இரத்தப் போக்கிலிருந்து) சுத்தமாகுவதே இல்லை. நர்ன தொழுகையை விடடு விடவா? என அபூஹுரைரா அவர்களின் மகள் பாத்திமா(ரலி) அவர்கள் கேட்க, இது ஒரு நோய் தான்.மாதவிடாய் அல்ல. மாதவிடாய் (காலம்) வந்தால் தொழுகையை விட்டு விடு! மாதவிடாயின் (கால) அளவு முடிந்து விட்டால், உன்னில் இருந்து ரத்தத்தைச் சுத்தப்படுத்து. தொழுது கொள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(இது புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ யில் இடம் பெற்றுள்ளது).


எண் 134: அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃபு(ரலி) அவர்களின் மனைவியும், ஜஹ்ஷ் அவர்களின் மகளுமான ஜைனப்(ரலி) அவர்கள் (தொடர்) இரத்தப் போக்கு ஏற்பட்டவர்களாக இருந்தார்கள். குளித்து விட்டு, தொழவும் செய்வார்கள் என அபூ ஸலமா(ரலி) வின் மகள் ஜைனப்(ரலி) கூறுகின்றார்கள்.


எண் 135: இரத்தப் போக்கு ஏற்பட்டவள் எப்படி குளிப்பாள் என ஸயீத் இப்னு முஸய்யப் அவர்களிடம் கேட்டு வரும்படி என்னை காகா இப்னு ஹகீம், ஸைய்யித் இப்னு அஸ்லம் ஆகிய இருவரும் அனுப்பி வைத்தனர். ஒரு சுத்தத்தில் இருந்து மறு சுத்தத்திற்காக குளிப்பாள். ஒவ்வொரு தொழுகைக்காகவும் ஒளுச் செய்வாள். அவளுக்கு இரத்தம் (வருவது) மிகைத்தர்ல (துணியால்) இறுகக் கட்டிக் கொள்வாள் என பதில் கூறினார்கள் என்று அபூபக்கர்(ரலி) அவர்களின் அடிமை சுமையா கூறுகின்றார்.


எண் 136: தொடர்ந்து இரத்தப் போக்கு ஏற்பட்டவள் மீது ஒரு தடவை (மட்டும்) குளிப்பதைத் தவிர வேறு (எதுவும்) இல்லை. (ஆனாலும்) பின்பு ஒவ்வொரு தொழுகைக்கும் ஒளுச் செய்து கொள்வாய் என உர்வா கூறுகின்றார்கள்.
தொடர் இரத்தப் போக்கு உள்ள பெண் தொழுது விட்டால், அவளின் கணவனுக்கு அவளிடம் உடலுறவு கொள்வது கூடும். இவ்வாறே, குழந்தை பெற்ற பெண்கள், அவளுக்கு வெளிப்படும் இரத்தம் முடியும் நாள் அடைந்ததும், அத்ன பின்னும் ரத்தத்தை அவள் பார்த்தால், அவளை அவளது கணவன் உடலுறவு கொள்ளலாம். அவள், இரத்தப் போக்குடையவளின் நிலையில் உள்ளவள் ஆவாள். இதுவே எம்மிடம் உள்ள சட்டமாகும் என மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாக யஹ்யா கூறுகின்றார்கள்.
ஹிஸாம் இப்னு உர்வா என்பவர் தன் தந்தை உர்வா வழியாக அறிவிக்கும் இந்த ஹதீஸே, நான் கேட்டதில் எனக்கு மிக விருப்பமானது. இரத்தப் போக்குடையவள் விஷயமாக நம்மிடமு; இதுவே சட்டமாகும் என மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.


பாடம் 38

சிறுவரின் சிறுநீர் பற்றி..

எண் 137: நபி(ஸல்) அவர்களிடம் சிறுவர் கொண்டு வரப்பட்டார். அவர்களின் ஆடை மீது சிறுநீர் கழித்தார். உடனே நபி(ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டு வரச் செய்து தெளித்துக் கொண்டார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(இது புகாரீ, முஸ்லிம் ல் இடம் பெற்றுள்ளது).


எண் 138: (திட) உணவு சாப்பிடாத தன் சிறு வயது மகனை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வந்ததாகவம், அக்குழந்தையை தன் மடியின் மீது நபி(ஸல்) அவர்கள் உட்கார வைத்ததும் அவர்களின் ஆடை மீது அது சிறுநீர் கழித்தது. த்ணீர் வரவழைத்த நபி(ஸல்) அவர்க்ள அதை (தன் மடியில்) தெளித்தார்கள். கழுவவில்லை எனவும் மிஹ்ஸன் அவர்களின் மகள் உம்மு கைஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(இது புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ யில் இடம் பெற்றுள்ளது).


பாடம் 39

நின்று கொண்டு சிறுநீர் கழிப்பது பற்றி..

எண் 139: ஒரு கிராமவாசி பள்ளிக்கு வந்து சிறுநீர் கழித்திட தன் மறைவுறுப்பைத் திறந்தார். சப்தத்தை உயர்த்தி மக்கள் (ஸஹாபாக்கள்) கூச்சலிட்டனர். அவரை விட்டு விடுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதும், (மக்களும்) அவரை விட்டு விட்டனர். அவரும் சிறுநீர் கழித்தார். ஒரு வாளி தண்ணீர் கொண்டு வந்து, அந்த இடத்தில் ஊற்றும்படி நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அவ்வாறே ஊற்றப்பட்டது என யஹ்யா இப்னு ஸயீத் கூறுகின்றார்கள்.


எண் 140: அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் நின்று கொண்டு சிறுநீர் கழித்ததை நான் பார்த்தேன் என் அப்துல்லா இப்னு தீனார் அவர்கள் கூறுகின்றார்கள்.
சிறுநீர் மற்றும் மலம் கழித்தல் காரணமாக மறைவுறுப்பை கழுவியும், அதிலே ஏதேனும் சிறிதளவு இருந்தால் என்னை செய்வது? என்பது பற்றி மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. முன் சென்றோரில் சிலர், மலம் கழித்தல் காரணமாக ஒளுச் செய்தார்கள். நான் சிறுநீர் காரணமாக மறைவுறுப்பைக் கழுவுவதையே விரும்புகின்றேன் என்று மாலிக் (ரஹ்) அவர்கள் பதில் கூறியதாக யஹ்யா கூறுகிறார்கள்.


பாடம் 40

பல்துலக்குதல் பற்றி..

எண் 141: முஸ்லிம்களே! நிச்சமயாக இந்நாளை (ஜும்ஆவை) அல்லாஹ் பெருநாளாக ஆக்கி உள்ளான். எனவே நீங்கள் குளியுங்கள். ஒருவரிடம் நறுமணம் இருப்பின் அதைப் பூசிக் கொள்ள தவற வேண்டாம். மேலும் நீங்கள் பல் துலக்குவதைப் பற்றிக் கொள்ளுங்கள் என்று ஜும்ஆ வின் போது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு சிபாக் அவர்கள் கூறுகின்றார்கள்.


எண் 142: எனது சமுதாயம் மீது கஷ்டமாகிப் போகும் என்று இல்லையானால் பல் துலக்கும்படி நான் அவர்களுக்கு கட்டளையிட்டிருப்பேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


எண் 143: நபி(ஸல்) அவர்கள் தன் சமுதாயத்தின் மீது பயப்படவில்லையானால், ஒவ்வொரு ஒளுவின் போதும் பல்துலக்க அவர்களை கட்டளையிட்டிருப்பார்கள் என்று அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(இந்த இரண்டு ஹதீஸ்களும் புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ யில் இடம் பெற்றுள்ளது).


அத்தியாயம்: 3
தொழுகை

பாடம் 41

தொழுகைக்குப் பாங்கு கூறுதல் பற்றி

எண் 144: இரண்டு முரசுகளை தயார் செய்து, தொழுகைக்காக மக்களை ஒன்று சேர்க்க அவ்விரண்டையும் அடிப்பது என நபி(ஸல்) அவர்கள் விரும்பினார்கள். அப்துல்லா இப்ன ஸைது(ரலி) அவர்களுக்கு கனவில் இரண்டு முரசுகளைக் காண்பிக்கப்பட்டது. இவ்விரண்டும் நபி(ஸல்) அவர்கள் விரும்பியது போல் இருக்கிறதே என தன்னுள் சொல்லிக் கொண்டார். அதுசமயம், தொழுகைக்காக நீங்கள் அழைப்புக் கொடுக்கவில்லையா? என அவருக்குச் சொல்லப்பட்டது. விழித்ததும் நபி(ஸல்) அவர்களிடம் வந்து தான் (கனவில்) கண்டதை விளக்கினார். உடனே நபி(ஸல்) அவர்கள் பாங்கு கூறும்படி கட்டளையிட்டார்கள் என யஹ்யா இப்னு ஸயீத்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


எண் 145: பாங்கை நீங்கள் கேட்டால், பாங்கு கூறுபவர் கூறுவது போல் நீங்களும் கூறுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஸயீத் அல் குத்ரீ(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(இது புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ யில் இடம் பெற்றுள்ளது).


எண் 146: பாங்கிலும், முதல் வரிசையிலும் உள்ளதை (அதன் சிறப்பை) மக்கள் விளங்கி, அதை குலுக்கல் முறையிலே தவிர அடைய முடியாது என்று அவர்கள் அறிந்தால் குலுக்கல் போட்டுக் கொள்வார்கள். பகல் நேரத் தொழுகையில் உள்ளதை (சிறப்பை) அவர்கள் அறிந்து கொண்டால், அதற்கும் அவர்கள் முந்தி இருப்பார்கள். இஷாவிலும் சுப்ஹுத் தொழுகையிலும் உள்ளதை (அதன் சிறப்பை) அவர்கள் அறிந்து கொண்டால் தவழ்ந்தாவது அந்த இரண்டுக்கும் அவர்கள் வருவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(இது புகாரீ, முஸ்லிம், நஸயீ யில் இடம் பெற்றுள்ளது).


எண் 147: தொழுகைக்கு இகாமத் கூறப்பட்டால், நீங்கள் விரைந்தவர்களாக அதற்கு வராதீர்கள். நீங்கள் அமைதியை கடைபிடித்தவர்களாக அதற்கு வாருங்கள். நீங்கள் (இமாமிடம்) பெற்றுக் கொண்டதை நீங்கள் தொழுங்கள். உங்களுக்கு தவறி விட்டதை நீங்கள் பூர்த்தி செய்யுங்கள். தொழுகைக்கு உங்களில் ஒருவர் முயற்சிக்கும் காலமெல்லாம் அவர் தொழுகையில் உள்ளவர் போலாவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் கூறினார்கள்.


எண் 148: ஆட்டையும், ஓடையையும் நீர் விரும்புவதாக உன்னைக் காண்கின்றேன். உன் ஆடுகளுடனோ, உன் ஓடையிலே நீ இருந்து, தொழுகைக்காக நீ பாங்கு கூறினால், பாங்கில் உன் சப்தத்தை உயர்த்து. பாங்கு கூறுபவனின் சப்தத்தில் (இறுதி) ஒலியைக் கேட்கும் ஜின், மனிதன் இன்ன பிற பொருள்கள் அனைத்தும் அவனுக்காக மறுமையில் சாட்சி கூறுவர் என்றும், இதை நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என்றும் அபூ ஸயீதில் குத்ரீ(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.
(இது புகாரீ, நஸயீயில் இடம் பெற்றுள்ளது).


எண் 149: தொழுகைக்காக பாங்கு கூறப்பட்டால், பாங்கை கேட்க முடியாத (தூர) அளவுக்கு தன் பின் துவாரத்தில் சப்தமுடைய காற்றை வெளியாக்கிக் கொண்டே ஷைத்hன் பின்னோக்கி ஓடுவான். பாங்கு கூறி முடிக்கப்பட்டதும் முன்னோக்கி ஓடுவான். தொழுகைக்காக இகாமத் கூறப்பட்டால் பின்னோக்கி ஓடுவான். இகாமத் கூறி முடிக்கப்பட்டு விட்டால் முன்னோக்கி வந்து ஒருவனின் உள்ளத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இப்படி நினை, அப்படி நினை என்று கூறுவான். இந்த மனிதனும் தான் எத்தனையாவது ரக்அத் தொழுகிறோம் என அறிய முடியவில்லையே எனக் கூறும் வரை நினைவுபடுத்திக் கொண்டே இரு;பபான் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(இது புகாரீ, முஸ்லிம், அபூதாவூது, நஸயீ யில் இடம் பெற்றுள்ளது).


எண் 150: இரண்டு நேரங்கள் உண்டு. அதுசமயம் வானத்தின் வாசல்கள் திறக்கப்படும். துஆ ஏற்கப்படாதவர்கள் (அந்நேரங்களில்) மிகவும் குறைவே! (அவைகள்) 1. தொழுகைக்காக பாங்கு சொல்ல தயாராகுவது. 2. அல்லாஹ்வின் பாதையில் அணிவகுத்து நிற்பது என ஸஹ்ல் இப்னு ஸஃது அஸ்ஸாஇதீ(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
ஜும்ஆ நாளில், நேரம் வரும் முன்னர் பாங்கு கூறுவது கூடுமா? என மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, சூரியன் உச்சிக்கு வந்தப் பின்னாலேயே தவிர கூடாது என்று கூறினார்கள்.
பாங்கு இகாமத்தில் இரண்டிரண்டு வாசகங்களாக கூறுவது பற்றி கேட்கப்பட்டதற்கு, மதீனாவாசிகள் பாங்கு - இகாமத் விஷயத்தில் கடைபிடிப்பதே எனக்கு செய்தியாகக் கிடைத்தது. இகாமத்தின் வாசகம் இரண்டிரண்டாகக் கூறப்படக் கூடாது. இது தான் நம் ஊர் அறிஞர்களின் நிலையாகும்.
தொழுகைக்காக இகாமத் கூறப்படும் போது மக்கள் எழுவது என்பது. இது விஷயமாக இதற்கான அளவு எதையும் நான் கேட்கவில்லை. எனினும் இதில் மக்களுக்கு இயலும் நிலை தான் நேரம் என்றே கருதுகின்றேன். காரணம் அவர்களில் வலிமையானவரும், பலவீனரும் உள்ளனர். ஒரே மனிதன் போல் எல்லோரும் இருக்க இயல மாட்டார்கள் என்று மாலிக் (ரஹ்) கூறினார்கள்.
பர்ளான தொழுகையை நிறைவேற்ற தயாராகும் சிலர் பாங்கு கூறாமல், இகாமத் மட்டும் கூறுவதை விரும்புகிறார்கள் (சரியா) என்று மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதுவே அவர்களுக்கு போதும். தொழுகைக்காக ஒன்று கூடப்படும் பள்ளிவாசல்களில் தான் பாங்கு கூறுவது கடமையாகும் என மாலிக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
பாங்கு கூறுபவர், இமாமிடம் ஸலாம் கூறுவது பற்றியும், தொழுகைக்கு அவரை அவர் அழைப்பது பற்றியும், பாங்கு கூறுபவர் எவருக்கு ஸலாம் கொடுப்பவரே யார் முதன்மையானவர்? என்று மாலிக் (ரஹ்) கேட்கப்பட்டதற்கு, முந்திய காலத்தில் ஸலாம் கூறியது இருந்ததாக எனக்கு தெரியவில்லை என்று கூறினார்கள்.
பாங்கு கூறுபவர், மக்களுக்கு பாங்கு கூறுகிறார். பின்பு எவரேனும் அவரிடம் வருவாரா? என எதிர்பார்க்கிறார். ஆனால் அவரிடம் எவரும் வரவில்லை. உடனே தொழுகைக்கு அவர் இகாமத் கூறி, தனித்துத் தொழுகிறார். பின்பு அவர் தொழுகையை முடித்த பின் மக்கள் வந்தனர். அவர்களுடன் தொழுகையை இவர் மீண்டும் தொழ வேண்டுமா? என்று மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, அவர் தொழுகையை மீண்டும் தொழ வேண்டியதில்லை. அவர் தொழுகையை முடித்தபின் ஒருவர் வந்தார். அவர் தனக்கு மட்டுமே தொழுது கொள்ளட்டும் என்று பதில் கூறினார்கள் என யஹ்யா கூறுகின்றார்கள்.
பாங்கு கூறுபவர் மக்களுக்கு பாங்கு கூறுகிறார். பின்பு நபில் தொழுகிறார்.அப்போது மக்களோ அது அல்லாத மற்றொரு இகாமத் மூலம் தொழுதிட விரும்புகிறார்கள். (இது சரியா) என்று மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, அதனால் குற்றமில்லை. அவரின் இகாமத்தும், அவர் அல்லாத இகாமத்தும் சமமானதே! என்று பதில் கூறினார்கள் என யஹ்யா கூறுகிறார்கள்.
பஜ்ர் நேரம் தோன்றும் முன்பே சுப்ஹு தொழுகைக்காக பாங்கு கூறுவது இருந்து வந்தது. சுப்ஹு அல்லாத மற்றத் தொழுகைகளில் அவர்களின் நேரம் வந்த பின்பே தவிர பாங்கு கூறுவதை நாம் பார்த்ததில்லை என மாலிக் (ரஹ்) கூறியதாக யஹ்யா கூறுகிறார்கள்.


எண் 151: சுப்ஹுத் தொழுகைக்காக உமர்(ரலி) அவர்களை அழைத்திட முஅத்தின் (பாங்கு கூறுபவர்) வந்தார். அப்போது உமர்(ரலி) அவர்கள் தூங்குவதைக் கண்ட அவர், முஃமின்களின் தலைவரே! அஸ்ஸலாது கைரும் மினன் நவ்ம் (தூக்கத்தை விட தொழுகை மேலானது) என்று கூறினார்கள். உடனே, உமர்(ரலி) அவர்கள் அந்த வாசகத்தை சுப்ஹின் பாங்கில் சேர்க்கும்படி கட்டளையிட்டார்கள் என்று தனக்கு செய்தி கிடைத்தது என்று மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.


எண் 152: தொழுகைக்கான பாங்கைத் தவிர (வேறு எதையும்) மதீனா வாசிகளின் செயல் முறையில் (இரண்டு தடவை கூறுவதை) நான் அறியவில்லை. (அதாவது இகாமத்தின் வாசகங்கள் இரு தடவை இல்லை) என அபூஹுஹைலின் தந்தை மாலிக் கூறுகிறார்கள்.


எண் 153: அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள், பகீஹ் என்ற இடத்தில் இருந்த போது இகாமத் கூறுவதைக் கேட்டார்கள். பள்ளிக்கு நடையை தீவிரப்படுத்தினார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


பாடம் 42

பயணத்தின் போது பாங்கு கூறுதல், ஒளுவின்றியும் பாங்கு கூறுதல்

எண் 154: அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் குளிரும், காற்றும் நிறைந்த இரவில் தொழுகைக்கு பாங்கு கூறி விட்டு, அறிந்து கொள்ளுங்கள். உங்கள் இருப்பிடங்களில் தொழுங்கள் என்று கூறி விட்டு, நபி(ஸல்) அவர்கள் மழை காலத்தில் குளிர் நிறைந்த இரவில் பாங்கு கூறுபவருக்கு (பாங்கு கூற) கட்டளையிட்ட அவர்கள், அறிந்து கொள்ளுங்கள், (உங்கள்) இருப்பிடங்களில் தொழுங்கள் என்று கூறினார்கள் என்றும் அப்துல்லா இப்னு உமர்(ரலி) கூறினார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


எண் 155: அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் பயணத்தின் போது சுப்ஹில் தவிர (வேறு தொழுகையில்) இகாமத்தை விட அதிகப்படுத்த மாட்டார்கள். சுப்ஹில் மட்டும் பாங்கு கூறுவார்கள். இகாமத்தும் கூறுவார்கள். (தொழுகைக்காக) எவரிடம் ஒன்று கூடுவார்களோ அந்த இமாமுக்கு மட்டும்தான் பாங்கு கூறுவது என்பது உண்டு என்று கூறுவார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


எண் 156: நீ பயணம் செய்யும் போதும், பாங்கும் இகாமத்தும் கூற விரும்பினால் அப்படியே செய்து கொள். விரும்பினால் இகாமத் மட்டும் கூறு. பாங்கு கூறாதே என தனக்கு தன் தந்தை உர்வா கூறியதாக ஹிஷாம் அறிவிக்கின்றார்கள்.
(குறிப்பு: பயணத்தின் போதும் பாங்கு, இகாமத் கூற வேண்டுமென 24, 25 வது ஹதீஸ்கள் கூறுகின்றன).
பயணம் செய்பவர் பாங்கு கூறுவது குற்றமில்லை என மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாக யஹ்யா கூறுகின்றார்கள்.


எண் 157: ஒருவன் தனித்து திறந்த வெளிக்காட்டில் தொழுதால் அவனது வலப்புறத்திலும், இடது புறத்திலும் தலா ஒரு வானவர் தொழுவார்கள். அவர் பாங்கு கூறி, இகாமத் கூறி தொழுதால் அவருக்குப் பின்னால் மலையைப் போன்று வானவர்கள் தொழுவார்கள் என ஸயீத் இப்னு முஸய்யப் கூறுகின்றார்கள்.


பாடம் 43

பாங்கின் மூலம் ஸஹர் நேர அளவு

எண் 158: பிலால்(ரலி) அவர்கள் இரவில் பாங்கு கூறுவார். (அப்போதிருந்து) இப்னு உம்மி மக்தூம்(ரலி) அவர்கள் பாங்கும் கூறும் வரை நீங்கள் உண்ணுங்கள், பருகுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(இது புகாரீ, முஸ்லிம், அஹ்மதிலும் இடம் பெற்றுள்ளது).


எண் 159: பிலால்(ரலி) அவர்கள் இரவின் பாங்கு கூறுவார். (அப்போதிருந்து) இப்னு உம்மி மக்தூம்(ரலி) அவர்கள் பாங்கு கூறும் வரை உண்ணுங்கள், பருகுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஸாலிம் இப்னு அப்துல்லா கூறுகின்றார்கள். மேலும், இப்னு உம்மி மக்தூம்(ரலி) கண் தெரியாதவராக இருந்தார். அவர் சுப்ஹு நேரம் வந்து விட்டது. சுப்ஹு நேரம் வந்து விட்டது என அவரிடம் கூறப்படும் வரை பாங்கு கூற மாட்டார் என்றும் ஸாலிம் கூறுகிறார்கள்.


பாடம் 44

தொழுகையை ஆரம்பிப்பத பற்றி..



எண் 160: நபி(ஸல்) அவர்கள் தொழுகையை ஆரம்பித்தால் தன் தோல் புஜத்திற்கு நேராக தன் கைகளை உயர்த்துவார்கள். ருகூவிலிருந்து தன் தலையை உயர்த்தினால் மீண்டும் அவ்வாறே கைகளிரண்டையும் உயர்த்துவார்கள். மேலும், ஸமிஅல்லாஹுலிமன் ஹமிதா – ரப்பனா வலகல் ஹம்து என்றும் கூறுவார்கள். ஸஜ்தா செய்யும் சமயம் (கைகளை உயர்த்தும்) அந்த செயலை செய்ய மாட்டார்கள் என அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(இது புகாரீ, முஸ்லிம், அபூதாவூது, நஸயீ, திர்மிதி, அஹ்மதிலும் இடம் பெற்றுள்ளது).


எண் 161: நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் குனியும் போதும், நிமிரும் போதும் தக்பீர் கூறுவார்கள். அல்லாஹ்வைச் சந்திக்கும் வரை (மரணிக்கும் வரை) அவர்களின் தொழுகை அப்படியே இருந்தது என்று அலீ(ரலி) அவர்களின் பேரர் அலீ இப்னு ஹுஸைன் கூறுகின்றார்கள்.
(நபி(ஸல்) அவர்களை இந்த அலீ சந்தித்ததில்லை)


எண் 162: நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் தன் கைகளை உயர்த்துபவர்களாக இருந்தனர் என சுலைமான் இப்னு யஸார் அறிவிக்கின்றார்கள். (இவர் நபித்தோழர் அல்ல).


எண் 163: அபூஹுரைரா(ரலி) அவர்கள், மக்களுக்கு தொழ வைக்கும் போது, குனியும் போதும், நிமிரும் போதும் தக்பீர் கூறுவார்கள். தொழுது முடித்ததும், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நபி(ஸல்) அவர்களின் தொழுகையைத் தான் உங்களுக்குக் காண்பித்தேன், என்றும் கூறுவார்கள் என அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃபு(ரலி) அவர்களின் மகன் அபூஸலமா கூறுகின்றார்கள்.


எண் 164: அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் தொழுகையில் குனியும் போதும், நிமிரும் போதும் தக்பீர் கூறுவார்கள் என ஸாலிம் இப்னு அப்துல்லா கூறுகின்றார்கள்.


எண் 165: அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள், தொழுகையை ஆரம்பிக்கும் போது தன் தோள் புஜத்திற்கு நேராக தன் கைகளை உயர்த்துவார்கள். ருகூஉ வில் இருந்து தலையை உயர்த்தும் போதும், அதை விட கொஞ்சம் குறைவாக உயர்த்துவார்கள் என நாபிஉ அவர்கள் கூறுகின்றார்கள்.
(இது புகாரீ யில் உள்ளது).


எண் 166: தொழுகையில் தக்பீர் கூறுவதை மக்களுக்குக் கற்றுத் தந்த ஜாபிர் இப்னு அப்துல்லா(ரலி) அவர்கள், நாங்கள் (தொழுகையில்) குனியும் போதும் உயரும் போதும் தக்பீர் கூற எங்களுக்கு கட்டளையிடுபவர்களாக இருந்தார்கள். (இதன் அறிவிப்பாளர் வஹ்பு இப்னு கைஸான் அவர்கள் இதைக் கூறுகின்றார்கள்).


எண் 167: ஒரு மனிதன் ருகூஉ வை அடைந்து அவர் ஒரே தக்பீர் மட்டும் (தொழுகையை ஆரம்பிக்கவும், ருகூஉ வுக்கும் சேர்த்து) கூறினால், அவனுக்கு இந்த (ஒரு) தக்பீர் போதுமாகும் என இப்னு ஷிஹாப் கூறுவார்கள்.
தொழுகையை ஆரம்பிக்கவும் இந்த தக்பீர் மூலம் என எண்ணி இருந்தால் இது போதும், என மாலிக் (ரஹ்) கூறுகிறார்கள்.
(தொழுகையில்) இமாமுடன் ஒருவர் சேர்கிறார். ஆரம்பத் தக்பீரையும், ருகூஉ வின் தக்பீரையும் மறந்து, ஒரு ரக்அத்தை தொழுதும் முடிக்கிறார். பின்பு தான் தக்பீர் கூறாததை நினைவு கூர்கிறார். இரண்டாவது ரக்அத்திலும் தக்பீர் கூறிக் கொள்ளலாமா? என்று மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. தன் தொழுகையை அவர்மீண்டும் ஆரம்பிப்பதே எனக்கு மிக விருப்பமானதாகும். மேலும் ஆரம்ப தக்பீரை இமாமுடன் சேர்ந்தவர் மறந்து, முதல் ருகூஉ வின் தக்பீர் கூறினால், ஆரம்ப தக்பீருக்கும் சேர்த்து அவர் (நிய்யத்) எண்ணி இருந்தால் அதுவே அவருக்குப் போதுமாகும் என்று பதில் கூறினார்கள்.
தனித்துத் தொழுபவர் ஆரம்பத் தக்பீரை மறந்து விட்டால், அவர்தன் தொழுகையை முழுமைப்படுத்துவார் என் மாலிக் (ரஹ்) கூறுகிறார்கள்.
ஆரம்ப தக்பீர் கூறாமல், தொழுதும் முடித்த இமாமும் அவருக்குப் பின்னாலுள்ளோரும் தொழுகையை திருப்பித் தொழ வேண்டும். இமாமுக்கு பின்னுள்ளோர் தக்பீர் கூறி இருந்தாலும் அவர்களும் திருப்பித் தொழ வேண்டும் என மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.


பாடம் 46

மஹ்ரிப், இஷாத் தொழுகையில் ஓத வேண்டியவை

எண் 168: மஹ்ரிபுத் தொழுகையில் அத்தூர் என்ற (52 வது) அத்தியாயத்தை நபி(ஸல்) அவர்கள் ஓதிட நான் கேட்டுள்ளேன் என ஜுபைர் இப்னு முத்இம்(ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது புகாரீ, முஸ்லிம், அபூதாவூது, நஸயீ யில் இடம் பெற்றுள்ளது).


எண் 169: வல் முர்ஸலாத்தில் உர்ஃபன் எனத் துவங்கும் (77 வது) அத்தியாயத்தை நான் ஓதியதைக் கேட்ட ஹாரித் அவர்களின் மகள் உம்முல் ஃபழ்லு(ரலி) அவர்கள், மகனே இந்த சூரா தான் நான், நபி(ஸல்) அவாகள் மஹ்ரிபு தொழுகையில்ஓதியதாக இறுதியாகக் கேட்டதாகும். இதை உன் கிராஅத் நினைவுபடுத்தி விட்;டது என்று கூறினார்கள் என அப்துல்லா இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கின்றார்கள்.

எண் 170: அபூபக்கர்(ரலி) அவர்களது ஆட்சியின் போது நான் மதீனாவிற்கு வந்தேன். அவருக்குப் பின்னால் மஹ்ரிபைத் தொழுதேன். முந்திய இரண்டு ரக்அத் திலும் அல்ஹம்து சூராவையும், கிஸார் முஃபஸ்ஸலில் இருந்து இரண்டு சூராக்களையும் ஓதினார்கள். பின்பு மூன்றாவது ரக்அத்துக்காக எழுந்து நின்றார்கள். என்னுடைய ஆடை அவர்களின் ஆடையை தொடும் அளவுக்கு நான் அவர்களை நெருங்கி இருந்தேன். அது சமயம் அவர்கள் அல்ஹம்து சூராவையும், 3 வது அத்தியாயத்தின் 8 வது வசனத்தையும் ஓதியதை நான் கேட்டேன் என அபூ அப்துல்லா அஸ்ஸுனாபிஹ் அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


எண் 171: அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் நான்கு ரக்அத் தொழுகையில் ஒவ்வொரு ரக்அத்திலும், அல்ஹம்து சூராவையும் குர்ஆனின் மற்றொரு சூராவையும் ஓதுவார்கள். சில சமயம் பர்ளான தொழுகைகளில் முதல் ரக்அத்தில் இரண்டு மூன்று சூராக்கள் ஓதுவார்கள். மஹ்ரிபின் (முந்தின) இரண்டு ரக்அத்திலும் இது போல் அல்ஹம்து சூராவுடன் மற்ற இரண்டு சூராக்கள் ஓதுவார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


எண் 172: நபி(ஸல்) அவர்களுடன் நான் இஷாத் தொழுகைக்குப் பின்னால் தொழுதேன். அதிலே, அத்தீன் என்ற (95 வது) அத்தியாயத்தை ஓதினார்கள் என பரா இப்னு ஆஸிப்(ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது புகாரீ, முஸ்லிம், அபூதாவூது, நஸயீ யில் இடம் பெற்றுள்ளது).


பாடம் 46

ஓத வேண்டிய முறை

எண் 173: பட்டு கலந்த ஆடையை உடுத்தவும், தங்க மோதிரம் அணியவும், ருகூஉ வில் குர்ஆன் ஓதிடவும் நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என அலீ(ரலி) அறிவிக்கின்றார்கள்.


எண் 174: நபி(ஸல்) அவர்கள் மக்களிடம் வந்தார்கள். அவர்கள் அதிகம சப்தமிட்டு ஓதிய நிலையில் தொழுது கொண்டிருந்தார்கள். தொழுது கொண்டிருப்பவர் தன் இறைவனிடம் உரையாடுகிறார். எதன் மூலம் அவனிடம் உரையாடுவத என்பது பற்றி அவன் சிந்திக்கட்டும்! உங்களில் சிலரை விட (சப்தம் உயர்த்துவது போல்) குர்ஆனை சப்தமிட்டு ஓத வேண்டாம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை பயாழிய்யி(ரலி) அறிவிக்கின்றார்கள்.


எண் 175: அபூபக்கர்(ரலி), உமர்(ரலி), உதுமான்(ரலி) அவர்கள் பின்னால் (தொழ) நான் நின்றுள்ளேன். அவர்கள் ஒவ்வொருவரும் தொழுகையை ஆரம்பிக்கும் போது, பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் ஓத மாட்டார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது புகாரீ, முஸ்லிம், அபூதாவூது, நஸயீ யில் இடம் பெற்றுள்ளது).


எண் 176: பிலாத் என்ற இடத்தில் உள்ள அபூஜஹ்ம் அவர்களின் வீடு வரை உமர்(ரலி) அவர்களின் கிராஅத்தை நாங்கள் கேட்போம் என அபூஸுஹைல் அவர்கள் தன் தந்தை மாலிக் கூறியதாக கூறுகிறார்கள்.


எண் 177: அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களுக்கு இமாம் சப்தமிட்டு கிராஅத் ஓதும் தொழுகையில் ஒரு ரக்அத் தவறி விட்டால் இமாம் ஸலாம் கொடுத்ததும் அப்துல்லா(ரலி) அவர்கள் எழுந்து நின்று (தனக்குத் தவறிய தொழுகையை) நிறைவேற்றும் சமயத்தில் சப்தமிட்டு கிராஅத் ஓதுவார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


எண் 178: நாபிஉ இப்னு ஜுபைர் மத்இம் அவர்களின் அருகே தொழுது கொண்டிருந்தேன். (தனக்கு ஆயத் தொடர் மறந்து விட்டால்) அவர் என்னைச் சுரண்டுவார். நாங்ளக் தொழுது கொண்டிருக்கும் போதே அவருக்கு எடுத்துக் கூறுவேன் என யஸீத் இப்னு ரூமான் கூறுகிறார்கள்.


பாடம் 47

சுப்ஹுத் தொழுகையில் கிராஅத் ஓதுதல்

எண் 179: அபூபக்கர்(ரலி) அவர்கள் சுப்ஹைத் தொழ வைக்கும் போது, அதில் இரண்டு ரக்அத்திலும் (குர்ஆனின்) பகரா என்ற (இரண்டாவது) அத்தியாயத்தை ஓதுவார்கள் என உர்வா கூறுகின்றார்கள்.
(இதைக் கூறும் உர்வா, அபூபக்கர்(ரலி) அவர்களைப் பார்த்ததில்லை).


எண் 180: நாங்கள் உமர்(ரலி) அவர்களுக்குப் பின்னால் சுபுஹுத் தொழுதோம். அது சமயம் அவர்கள் அதில் சூரா யூசுஃப் (என்ற 12 வது) அத்தியாயத்தையும், சூரா ஹஜ் (என்ற 22 வது) அத்தியாயத்தையும் நிதானமாக ஒதினார்கள் என அப்துல்லா இப்னு ஆமிர் இப்னு ரபீஆ(ரலி) அவர்கள் கூறினார்கள். அப்படியானால் உமர்(ரலி) அவர்கள் சுப்ஹு நேரம் வந்ததுமே தொழுகைக்கு நின்றிருக்க வேண்டுமே என்று கேட்டேன். ஆம்! என்று கூறினார்கள் என உர்வா கூறுகின்றார்கள்.


எண் 181: உதுமான் இப்னு அஃபான்(ரலி) அவர்கள் சுப்ஹு தொழுகையில் திருப்பி, திருப்பி அதிகமாக ஓதியதில் இருந்து தான் சூரா யூசுஃப் அத்தியாயத்தை நான் மனனம் செய்துள்ளேன் என ஃபராபிஸா இப்னு உமைர் அல் ஹன்பீ அவாகள் கூறினார்கள்.


எண் 182: அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் பயண காலத்தில் சுப்ஹுத் தொழுகையில் குர்ஆனில் இருந்து முதல் 10 சூராக்களை ஒவ்வொரு ரக்அத்திலும் அல்ஹம்து சூராவையும் மற்றொரு சூராவையும் ஓதுவார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


பாடம் 48

உம்முல் குர்ஆன் பற்றி..

எண் 183: நபி(ஸல்) அவர்கள் உபை இப்னு கஃஹ்பு(ரலி) அவர்களை அழைத்தார்கள். அவர் தொழுது கொண்டிருந்தார். தன் தொழுகையை அவர் முடித்ததும், நபி(ஸல்) அவர்களை சந்தித்தார். நபி(ஸல்) அவர்கள் தன் கையை அவரின் கை மீது வைத்தார்கள். பள்ளிவாசலின் வாசல் வரை வருவதற்கு நபி(ஸல்) அவர்கள் விரும்பினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், தவ்றாத்திலும், இன்ஜீலிலும் அல்லாஹ் இறக்கிய ஒரு சூராவை குர்ஆனிலும் அது போன்று உள்ளதை நீ அறிந்து கொள்ளும் வரை பள்ளியிலிருந்து நீ வெளியேறாமல் இருக்க நான் விரும்புகின்றேன்; என்று கூறினார்கள். அவர்கள் விரும்பியபடி நான் என் நடையை சுருக்கினேன். பின்பு, இறைத்தூதர் அவர்களே! என்னிடம் வாக்குறுதி தந்தபடி அந்த சூரா பற்றி (கூறுங்கள்) என்று கேட்டேன். தொழுகையை ஆரம்பிக்கும் போது எப்படி ஓதுவாய்? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்... என ஓதினேன். அதன் இறுதிக்கு நான் வந்ததும், அது இந்த சூரா தான். இது, புகழுக்குரிய 7 வசனங்களை உள்ளடக்கியதாகும். எனக்கு கொடுக்கப்பட்டுள்ள மகத்தான குர்ஆன் ஆகும் என்று நபி (ஸல) அவர்கள் கூறினார்கள்.


எண் 184: இமாமுக்குப் பின்னாலேயே தவிர உம்முல் குர்ஆனை ஒரு ரக்அத்தில் ஓதாமல் ஒருவன் தொழுதால், அவன் தொழுதவனாக ஆக மாட்டான் என்று ஜாபிர்(ரலி) கூறியதாக வஹ்பு இப்னு கய்ஸான் கூறுகின்றார்கள்.


பாடம் 49

சப்தமிட்டு ஓதாத தொழுகையில் இமாமுக்குப் பின்னால் ஓதுவது

எண் 185: உம்முல் குர்ஆனை (பாத்திஹா சூராவை) ஓதாமல் தொழுதால் அது குறைபாடு உடையதாகும். அது குறைபாடு உடையதாகும். பூர்த்தியாகாத குறைபாடு உடையதாகும் என நபி(ஸல்) அவாகள் கூற நான் கேட்டதாக அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா(ரலி) அவர்களே, இமாமுக்குப் பின்னே பல் சமயங்களில் தொழுகிறேனே (என்ன செய்வது) என்று கேட்டேன். உடனே அவர்கள் என் கையில் விரலைக் குத்தி விட்டு, நீ உன் மனதிற்குள் ஓதிக் கொள் (காரணம்) எனக்கும் என் அடியானுக்கும் மத்தியில் சரி பாதியாக தொழுகையைப் பங்கிட்டுள்ளேன். ஒரு பாதி எனக்கும், மற்றொரு பாதி என் அடியானுக்குமாயிருக்கும். அதில் அவன் கேட்பது, என் அடியானுக்கு உண்டு என்று அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும்ஒரு அடியான், அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.. என்று கூறினால் அப்போது அல்லாஹ் என் அடியான் புகழ்கிறான் என்று கூறுவான். அடியான் அர்ரஹ்மானிர் ரஹீம் என்று கூறுவான். அப்போது அல்லாஹ், என் அடியான என்னை போற்றுகிறான் என்று கூறுவான்.மாலிகி யவ்மித்தீன் என அடியான் கூறுவான். அப்போது அல்லாஹ் என் அடியான் என்னை மகத்துவப்படுத்தி விட்டான் என்று கூறுவான். இய்யாக்க நஃபுது வ இய்யாக நஸ்தஈன் என அடியான் கூறுவான். இந்த வசனம் எனக்கும் என் அடியானுக்கும் இடையே உள்ளதாகும். என் அடியானுக்கு அவன் கேட்டது உண்டு என்று அல்லாஹ் கூறுவான். இஹ்தினஸ் ஸிராதல் முஸ்தகீம், ஸீராதல்லதீன அன் அம்த அலய்ஹிம் அய்ரில் மஹ்ழூபி அலைஹிம் வலழ்ழாலீன் என்று அடியான் கூறுவான். இவைகள் என் அடியானுக்குரியவைகளாகும். என் அடியானுக்கு அவன் கேட்பது உண்டு என்று அல்லாஹ் கூறுவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாகவும் அபூஹுரைரா(ரலி) அவர்கள் கூறினார்கள். இதை ஹிஷாம் இப்னு ஸுஹ்ரா அவர்களின் அடிமை அபூஸாஇப் என்பவர் கூறிகின்றார்.
(இது புகாரீ, முஸ்லிமிலும் இடம் பெற்றுள்ளது).


எண் 186: இமாம் சப்தமிட்டு ஓதாத தொழுகையில் இமாமுக்குப் பின்னால் (தொழுதால் என்தந்தை) உர்வா அவாகள் (கிராஅத்) ஓதுவார்கள் என ஹிஷாம் கூறுகின்றார்கள்.


எண் 187: இமாம் சப்தமிட்டு ஓதாத தொழுகையில் இமாமுக்குப் பின்னால் காஸிம் இப்னு முஹம்மத் அவர்கள் ஓதுவார்கள் என ரபீஆ இப்னு அபூ அப்துர் ரஹ்மான் கூறுகின்றார்கள்.


எண் 188: இமாம் சப்தமிட்டு ஓதாத தொழுகையில் இமாமின் பின்னே நாபிஉ இப்னு ஜுபைர் இப்னு முத்இம் அவர்கள் ஓதுவார்கள் என யஸீத் இப்னு ரூமான் கூறுகின்றார்கள்.
இந்த நிலை தான் இது விஷயமாக நான் கேட்டவற்றில் மிக விருப்பமானது என மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.


பாடம் 50

சப்தமிட்டு ஓதும் தொழுகையில் இமாமுக்குப் பின்னால் ஓதாமல் இருப்பது

எண் 189: இமாமுக்குப் பின்னால் தொழுபவர் ஓதலமா? எனக் கேட்கப்பட்டால், உங்களில் ஒருவர் இமாமுக்குப் பின்னால் தொழுதால் அவருக்கு இமாமின் கிராஅத்தே போதும். தனித்துத் தொழுதால் அவர் ஓதட்டும் என்ற அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுவார்கள். மேலும் அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவாகள் இமாமுக்குப் பின்னே தொழுதால் ஓத மாட்டார்கள் ன நாபிஉ கூறுகின்றார்கள்.
இமாமுக்குப் பின்னே அவர் சப்தமிட்டு ஓதாத தொழுகையில் ஒருவர் சேர்ந்தால் அவர்ஓத வேண்டும். சப்தமிட்டு தொழும் தொழுகையில் ஓதுவதை விட்டு விட வேண்டும் என்பதே எம்மிடம் உள்ள சட்டமாகும் என மாலிக் (ரஹ்) அவர்கள் கூறி தான் கேட்டதாக யஹ்யா கூறுகிறார்கள்.


எண் 190: சப்தமிட்டு ஓதித் தொழுத தொழுகையை முடித்த நபி(ஸல்) அவர்கள், உங்களில் எவரேனும்சற்று முன் என்னுடன் ஓதினாரா? என்று கேட்டார்கள். ஒருவர், இறைத்தூதர் அவர்களே! ஆம்! நான் தான் என்றார். உடனே நபி(ஸல்) அவர்கள், நான் குர்ஆன் ஓதுவதற்கு (இது) இடையூறாக உள்ளது என நான் கூறிக் கொண்டிருக்கின்றேன். (பிறகு ஏன் ஓதுகின்றீர்கள்?) என்று கேட்டார்கள். உடனே நபித்தோழர்கள் நபி(ஸல்) அவர்கள் சப்தமிட்டு தொழுகையில் ஓதும் கிராஅத்தைக் கேட்டதும், தாங்களும் ஓதுவதை விட்டு விட்டனர் என அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(இது அபூதாவூது, நஸயீ, அஹ்மத், இப்னுமாஜா, இப்னு ஹிப்பான், முஸ்னதுஷ்ஷாபி ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது).


பாடம் 51

இமாமுக்கு பின்னே ஆமீன் கூறுதல்

எண் 191: இமாம் ஆமீன் கூறினால் நீங்களும் ஆமீன் கூறுங்கள். ஒருவரது ஆமீன் மலக்குகளின் ஆமீனுக்கு சரியாக அமைந்து விட்டால் அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபி(ஸல்) அவர்களும் ஆமீன் கூறுவார்கள் என (இதன் அறிவிப்பாளரில் ஒருவரான) இப்னு ஷிஹாப் கூறுகிறார்.
இது புகாரீ, முஸ்னத் அஹ்மத், அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜாவில் இடம் பெற்றுள்ளது. இப்னு ஷிஹாமின் வார்த்தை இல்லாமல் திர்மிதியிலும் இடம் பெற்றுள்ளது).


எண் 192: அய்ரில் மஹ்ழூபி அலய்ஹிம் வலழ்ழால்லீன் என்று இமாம் கூறினால் நீங்களும் ஆமீன் கூறுங்கள். ஒருவர் தன் ஆமினை மலக்குகளின் ஆமினுடன் சரியாக கூறி விட்டால் அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது அஹ்மத், நஸயீ யில் இடம் பெற்றுள்ளது).


எண் 193: உங்களில் ஒருவர் ஆமீன் கூறுவதும், அதேசமயம் வானில் உள்ள வானவர்கள் ஆமீன் கூறுவதும் ஒன்றோடு மற்றொன்று இணைந்து விட்டால் அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


எண் 194: ஸமிஅல்லாஹுலிம் ஹமிதா என்று இமாம் கூறினால் உடனே நீங்கள் அல்லாஹும்ம ரப்பனா வலகல் ஹம்து என்று கூறுங்கள். இப்படி ஒருவர் சொல்வது, மலக்குகளின் இந்தச் சொல்லுடன் இணைந்து விட்டால் அவரது முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


பாடம்: 52

தொழுகை இருப்பில் அமரும் முறை
எண் 195: தொழுகையில் பொடிக் கற்களால் நான் சுண்டிக் கொண்டிருந்தேன். இதைக் கண்ட அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவாகள் தொழுகை முடிந்ததும், என்னைத் தடுத்தார்கள். ''நபி(ஸல்) அவர்கள்; செய்தது போல் செய்'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் (இருப்பில்) அமர்ந்தால் தனது வலது தொடை மீது தனது உள்ளங்கையை வைப்பார்கள். தன் விரல்களை வளைத்து பெரு விரலை அடுத்துள்ள விரலால் இஷாரா செய்வார்கள். தனது இடது தொடை மீது இடது உள்ளங்கையை வைப்பார்கள். இவ்வாறே அவர்கள் செய்வார்கள் என அப்துல்லா இப்னு உமர்(ரலி) கூறினார்கள்.
இதை அலீ இப்னு அப்துர் ரஹ்மான் அல் மஆதி கூறுகின்றார்கள்.


எண் 196: அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் அருகில் தொழுத ஒருவர் 4 வது ரக்அத்தில் உட்கார்ந்த போது தன் கால்களை உள் கொடுத்து, சம்மணமிட்டு அமர்ந்தார்கள். தொழுது முடிந்த அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவாகள் அவரிடம் இது பற்றி குறை கூறினார். நீங்கள் இப்படித் தானே அமர்ந்தீர்கள் என அம்மனிதர் கூறியதும் 'நான் நோயாளி' என்று கூறினார்கள். இதை அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களிடமிருந்து கேட்டதாகக அப்துல்லா இப்னு தீனார் கூறுகின்றார்கள்.


எண் 197: அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் தொழுகைகளில் இரு ஸஜ்தாக்களுக்கும் இடையே தங்கள் பாதங்களின் முனையை ஊண்றி அதன் மீது அமர்ந்தார்கள். தொழுகை முடிந்ததும் இது பற்றி அவர்களிடம் நான் கேட்டேன். 'இது தொழுகையின் சுன்னத்தல்ல! நான் நோயாளி என்பதாலேயே அப்படிச் செய்தேன்' என்று பதில் கூறினார்கள் என முகீரா இப்னு ஹகீம் கூறுகின்றார்கள்.


எண் 198: அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் தொழுகையில் சம்மணமிட்டு அமர்ந்தார்கள். நானும் அவ்வாறே அமர்ந்தேன். அதுசமயம் நான் சிறுவனாக இருந்தேன். அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் (நான் அப்படி உட்கார) தடை செய்து விட்டு, 'உனது வலது காலை நட்டு வைத்தும் கடது காலை வெளியாக்குவது தான் தொழுகையின் சுன்னத் என்று கூறினார்கள். அப்படியானால் நீங்கள் இப்படி அமர்ந்தீர்களே எனக் கேட்டேன். என் கால்கள் என்னை சுமக்க வலுவிழந்து போய் விட்டன. (எனவே சம்மணமிட்டேன்) என்று கூறினார்கள். இதை அவர்களின் மகன் உபைதுல்லாஹ் கூறுகிறார்கள்.


எண் 199: காஸிம் பின் இப்னு முஹம்மது அவர்கள் மக்களுக்கு தொழுகையின் தஷஹ்ஹுது இருப்பின் முறையை (செய்து) காட்டினார்கள். (அது சமயம்) தன் பின் பாகத்தின் இடது பகுதியை தரையில்படுமாறு அமர்ந்தார்கள். தன் பாதம் மீது அமரவில்லை. பின்பு, தன்தந்தை அப்துல்லா இப்னு உமர்(ரலி) செய்தார்கள் என அவர்களின் மகன் உபைதுல்லாஹ் என்னிடம் கூறினார்கள் என்று கூறினார்கள். இதை யஹ்யா இப்னு ஸயீத் அவர்கள் கூறுகின்றார்கள்.


எண் 200: அத்தியஹிய்யாத்து லில்லாஹி அஸ்ஸாக்கியாத்து லில்லாஹி அத்தய்யிபாத்து ஸலாத்து லில்லாஹி அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு வரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில் லாஹிஸ் ஸாலிஹீன். அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு என்று தஷஹ்ஹுது இருப்பில் கூறுங்கள் என மின்பரில் இருந்து கொண்டு உமர்(ரலி) அவர்கள் மக்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள் என அப்துர் ரஹ்மான் இப்னு அப்துல்கரி அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


எண் 201: 'பிஸ்மில்லாஹ், அத்தஹிய்யாத்து லில்லாஹி அஸ்ஸலவாத்து லில்லாஹி, அஸ்ஸாக்கியாத்து லில்லாஹி, அஸ்ஸலாமு அலன் னபிய்யி வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு, அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன் அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லல்லாஹ், வ அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்' என்று அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் இருப்பில் தஷஹ்ஹுது கூறுவார்கள். இதை இரண்டாவது ரக்அத்தில் கூறுவார்கள். பின்பு தஷஹ்ஹுதுக்குப் பின் தனக்குத் தோன்றியதை எல்லாம் துஆச் செய்வார்கள்.
தன் தொழுகையில் கடைசியாக அமர்ந்தால் இவ்வாறே தஷஹ்ஹுதை ஓதுவார்கள் - என்றாலும் தஷஹ்ஹுதை முற்படுத்துவார்கள். பின்பு தனக்குத் தோன்றியதை துஆச் செய்வார்கள். தஷஹ்ஹுத் ஓதுவதை முடித்து, ஸலாம் கூறிட விரும்பினால், 'அஸ்ஸலாமு அலன்னபிய்யி வரஹ்மதுல்லாஹி, வ பரக்காத்துஹு, அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதிஹிஸ் ஸாலிஹீன்' என்று கூறி விட்டு, தன் வலது புறத்தில், 'அஸ்ஸலாமு அலைக்கும்' என்று கூறுவார்கள். பின்பு இமாமுக்கு பதில் கூறுவார்கள். அவர்களுக்கு இடது புறத்திலுள்ள யாராவது ஒருவர் அவர்களுக்கு ஸலாம் கூறினால் அவருக்குப்பதில் கூறுவார்கள் என நாபிஉ கூறுகிறார்கள்.


எண் 202: ஆயிஷா(ரலி) அவர்கள் இருப்பில் தஷஹ்ஹுத் ஓதினால், 'அத்தஹிய்யாத்து தய்யிபாத்துஸ் ஸலவாத்துஸ் ஸாகியாத்து லில்லாஹி, அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லல்லாஹ் வஹ்தஹு லா ஷரீகலஹு வ அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்னபிய்யி வரஹ்மதுல்லாஹி, வ பரகாதுஹு, அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதிஹிஸ்ஸாலிஹீன், அஸ்ஸலாமு அலைக்கும்' என்று கூறுவார்கள்.


எண் 203: ஆயிஷா(ரலி) அவர்கள் இருப்பில் தஷஹ்ஹுது ஓதினால் அத்தஹிய்யாத்து தய்யிபாத்துஸ் ஸலவாத்துஸ் ஸாகியாத்து லில்லாஹ், அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீகலஹு வ அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்னபிய்யு வரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு, அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதிஹிஸ்ஸாலிஹீன், அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறுவார்களாம். இப்னு முஹம்மது கூறுகின்றார்கள்.


எண் 204: ஒருவர் தொழுகையில் இமாம் ஒரு ரக்அத்தை முடித்த நிலையில் சேர்கிறார். சேர்ந்தவருக்கு ஒற்றையாக ரக்அத் இருக்கும் நிலையில், இமாமின் இரண்டாவது, நான்காவது ரக்அத்தின் இருப்பில் தஷஹ்ஹுது ஓதலாமா? என்று இப்னு ஷிஹாப் அவர்களிடமும், நாபிஉ அவர்களிடமும் கேட்டேன். அவரும் அவருடன் தஷஹ்ஹுத் ஓத வேண்டும் என்ற இருவரும் கூறினார்கள் என்று கூறி விட்டு, இதுவே நம்மிடம் உள்ள சட்டமாகும் என்று மாலிக் (ரஹ்) கூறுகிறார்கள்.


பாடம் 54

இமாமுக்கு முன் தன் தலையை உயர்த்துதல்?

எண் 205: இமாமுக்கு முன் தன் தலையை உயர்த்தவோ, தாழ்த்தவோ செய்பவனின் முன் நெற்றி முடியோ ஷைத்தானின் கைப்பிடியில் உள்ளது என்று அபூஹுரைரா(ரலி) (கூறியதாக மலீஹ்) கூறுகின்றார்கள்.
ருகூஉவில் அல்லது ஸஜ்தாவில் இமாமுக்கு முன்னால் தன் தலையை மறந்து உயர்த்துபவன் விஷயத்தில் (பின்வருமாறு) மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.
ருகூஉவில் இமாமுக்கு மன் தன் தலையை உயர்த்தியவன் இமாமை எதிர் பார்க்காமல் திரும்பவும் ருகூஉவுக்குச் செல்லட்டும். இதுபோலவே ஸஜ்தாவிலும் செய்யட்டும். இதுவே சுன்னத்.
இமாமை முந்தி அவன் செய்தது தவறாகும். ஏனென்றால் நபி(ஸல்) அவர்கள், இமாமை ஏற்படுத்தப்பட்டுள்ளது, அவரைப் பின்பற்றுவதற்காகவே. எனவே, அவருக்கு மாறு செய்யாதீர்கள் என்று கூறி உள்ளார்கள். மேலும் அபூஹுரைரா(ரலி) அவர்கள், ''இமாமுக்கு முன் தன் தலையை உயர்த்துபவன் அல்லது தாழ்த்துபவனின் முன் நெற்றி முடி ஷைத்தானின் கைப்பிடியில் உள்ளது' என்று கூறியுள்ளார்கள்.



பாடம் 55

மறந்தவராக இரண்டாவது ரக்அத்தில் ஸலாம் கொடுத்தவர் செய்ய வேண்டியவை

எண் 206: நபி(ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்துடன் (தொழுகையை) முடித்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! தொழுகை குறைக்கப்பட்டு விட்டதா? மறந்து விட்டீர்களா? என (நீண்ட கைகள் உடைய) துல்யதைன் என்ற நபித்தோழர் கேட்டார். துல்யதைன் கூறுவது உண்மையா? என்று நபி(ஸல்) அவர்ள் கேட்டதும் நபித்தோழர்கள், 'ஆம்' என்றனர். பின்பு நபி(ஸல்) எழுந்து பிந்திய இரண்டு ரக்அத்துக்களையும் தொழ வைத்தார்கள். பின்பு ஸலாம் கூறினார்கள். பின்பு தக்பீர் கூறி எப்போதும் செய்யும் ஸஜ்தா போலவோ அல்லது நீண்டதாகவோ ஸஜ்தா செய்தார்கள். பின்பு தலையை உயர்த்தி விட்டு, தக்பீர் கூறி, எப்போதும் செய்யும் ஸஜ்தா போன்றோ அல்லது அதைவிட அதிக நேரமோ ஸஜ்தா செய்தார்கள். பின்பு தலையை உயர்த்தினார்கள் என அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இது புகாரீ, முஸ்லிமிலும் உள்ளது.


எண் 207: அஸர் தொழுகையை நபி(ஸல்) அவர்கள் தொழ வைத்தார்கள். இரண்டாவது ரக்அத்திலேயே ஸலாம் கொடுத்தார்கள். துல்யதைன் என்ற நபித்தோழர் அல்லாஹ்வின் தூதரே! தொழுகை குறைக்கப்பட்டு விட்டதா? மறந்து விட்டீர்களா? என்று கேட்டார். அப்படியொன்றும் இல்லை என நபி(ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்களே! அப்படித்தான் நடந்தது! என்று அவர் கூறியதும் மக்களை நோக்கி துல்யதைன் கூறுவத உண்மையா? எனக் கேட்டார்கள். நபித்தோழர்கள் ஆம் எனக் கூறியதும், தொழுகையின் மற்ற ரக்அத்துக்களை பூர்த்தி செய்தார்கள். பின்பு இருப்பில் இருந்தவாறே ஸலாம் கொடுத்தப் பின்பு இரண்டு ஸஜ்தா செய்தார்கள் என அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


எண் 208: நபி(ஸல்) அவர்கள் பகல் நேரத் தொழுகை ஒன்றில் லுஹரை அல்லது அஸரை இரண்டு ரக்அத்துக்கள் தொழ வைத்தார்கள். இரண்டாவது ரக்அத்திலேயே ஸலாம் கொடுத்தார்கள். துல்யதைன் என்பவர், இறைத்தூதர்(ஸல்) அவர்களே! தொழுகை குறைக்கப்பட்டதா? அல்லது மறந்தீர்களா? என்று கேட்டார். உடனே நபி(ஸல்) அவர்கள், தொழுகை குறைக்கப்படவும் இல்லை. நான் மறக்கவும் இல்லை என்று கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்களே! அது போலவே நடந்தது ன்று துல்யதைன் கூறினார். நபி(ஸல்) அவர்கள் மக்களை நோக்கி, துல்யதைன் உண்மை கூறுகிறாரா? என்று கேட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்களே! ஆம் என்று கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் விடுபட்ட தொழுகையை முழுமைப்படுத்தினார்கள். பின்பு ஸலாம் கூறினார்கள் என்று தனக்கு செய்தி கிடைத்ததாக அபூபக்கர் இப்னு சுலைமான் இப்னு அபீ ஹஸ்மா கூறுகிறார்.


எண் 209: இதே போல் அபூஸலமா இப்னு அப்துர் ரஹ்மான் அவர்களும் அறிவிக்கின்றார்கள்.

தொழுகையில் குறைவை ஏற்படுத்தும் மறதிக்கு, சலாம் கூறும் முன் ஸஜ்தா செய்ய வேண்டும். தொழுகையில் அதிகம் ஏற்படுத்தும் மறதிக்கு ஸலாம் கூறிய பின் ஸஜ்தா செய்ய வேண்டும் என்று மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.


பாடம் 56

தொழுகையில் சந்தேகம் ஏற்பட்டால், தொழுபவர் அதனை முழுமைப்படுத்துதல்

எண் 210: உங்களில் ஒருவருக்கு தொழுகையில் தான் தொழுதது மூன்றா? நான்கா? என அவரால் அறியாத அளவுக்கு சந்தேகம் ஏற்பட்டால் அவர் மற்றொரு ரக்அத் தொழட்டும்! பின்பு ஸலாம் கொடுக்கு முன் உட்கார்ந்த நிலையில் இரண்டு சஜ்தா செய்யட்டும். அவர் தொழுதது ஐந்தாவது ரக்அதாக இருந்தால் அவர் செய்த இரண்டு ஸஜ்தாக்களும் (ஐந்தாவது ரக்அத்தும் சேர்ந்து) இரண்டு ரக்அத்தாக ஆகி விடும். அது நான்காவதாக இருந்தால் அந்த இரண்டு ஸஜ்தாக்களும் ஷைத்தானுக்கு மூக்குடைப்பாக அமையும் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அதாஉ இப்னு யஸார் கூறுகிறார்கள்.
(இது அபூ ஸயீதில் குத்ரீ(ரலி) அவர்கள் அறிவிப்பதாக முஸ்லிம், அஹ்மதில் உள்ளது).


எண் 211: உங்களில் ஒருவருக்கு தொழுகையில் சந்தேகம் ஏற்பட்டால் தொழுகையில் மறந்ததாக கருதுபவர் நினைவுபடுத்தி தீர்மானம் செய்யட்டும். அதை தொழட்டும். பின்பு உட்கார்ந்த நிலையில் மறதிக்கான இரண்டு ஸஜ்தாக்கள் செய்யட்டும் என்று அப்துல்லா இப்னு உமர்(ரலி) கூறினார்கள் என ஸாலிம் இப்னு அப்துல்லாஹ் கூறுகிறார்கள்.


எண் 212: தன் தொழுகையில் ஒருவர் தான் தொழுதது எத்தனை முறை மூன்றா? நான்கா? என அறியாமல் சந்தேகம் கொண்டால் என்ன செய்வார்? என அப்துல்லா இப்னு அம்ருப்னுல் ஆஸ்(ரலி) அவர்களிடமும், கஹ்புல் அஹ்பார்(ரலி) அவர்களிடமும் கேட்டேன். அவர்மற்றொரு ரக்அத் தொழட்டும். இருப்பில் இருந்தவாறே இரண்டு ஸஜ்தா செய்யட்டும் என இருவரும் பதில் கூறினார்கள் என அதாஉ இப்னு யஸார் கூறுகின்றார்கள்.


எண் 213: தொழுகையில் மறதி ஏற்படுவது பற்றி கேட்கப்பட்டால், மறதியானவா நினைபடுத்தி தீர்மானம் செய்து, தீர்மானப்படி தொழட்டும் என்று அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் பதில் கூறுவார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


பாடம் 57

நான்காவது ரக்அத்தில் அல்லது இரண்;டாவது ரக்அத்தில் உட்காராமல் நிலைக்கு வந்து விட்டால்..

எண் 214: நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கே இரண்டு ரக்அத் தொழ வைத்தார்கள். பின்பு உட்காராமல் நிலைக்கு வந்து விட்டார்கள். அவர்களுடன் மக்களும் நிலைக்கு வந்து விட்டனர். நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடிக்கும் சமயம் ஸலாம் கொடுப்பார்கள் என எதிர்பார்த்தோம். (ஆனால் அவர்களோ) தக்பீர் கூறினார்கள். பின்பு ஸலாம் கொடுக்கும் முன்பே இரண்டு ஸஜ்தாச் செய்தனர். பின்பு ஸலாம் கொடுத்தார்கள் என அப்துல்லா இப்னு புஹைனா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


எண் 215: நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு லுஹர் தொழ வைத்தார்கள் இரண்டாவது ரக்அத்தில் உட்காராமல் எழுந்து நின்றார்கள். தன் தொழுகையை முடித்த போது, இரண்டு ஸஜ்தா செய்தார்கள். பின்பு அதன்பின் ஸலாம் கொடுத்தார்கள் என்று அப்துல்லாஹ் இப்னு புஹைனா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
ஒருவன் தன் தொழுகையை மறந்து, நான்கு ரக்அத் தொழுதப் பின்பும் எழுந்து நின்று, கிராஅத் ஓதி ருகூஉ வும் செய்கிறான். தன் தலையை ருகூஉ வில் இருந்து உயர்த்திய போது, தான் ஏற்கனவே நான்கை முடித்து விட்டதை உணர்கிறான். இவன் விஷயத்தில் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறும் போது, அவன் ஸஜ்தா செய்யாமல் வந்து உட்கார வேண்டும். இரண்டு ஸஜ்தாவில் ஒன்றை செய்து விட்டால் மற்றொரு ஸஜ்தா செய்ய வேண்டியதில்லை. தன் தொழுகையை முடிக்கும் போது ஸலாம் கொடுத்த பின்பு, இரண்டு ஸஜ்தா அவன் செய்யட்டும் என்று குறிப்பிட்டார்கள்.


பாடம் 58

கவனத்தை திசைதிருப்பும் ஒன்றை தொழுபவன் பார்த்தால்..?

எண் 216: அபூ ஜஹ்ம் இப்னு ஹுதைபா(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு (கவர்ச்சியான) வேலைப்பாடு உள்ள ஸாம் தேசத்து பஞ்சாடையை அன்பாகக் கொடுத்தார்கள். அதை உடுத்தி தொழுகையில் கலந்து கொண்டார்கள். தொழுது முடித்ததும் (ஆயிஷா) இந்த ஆடையை அபூ ஜஹ்மிடம் கொடுத்து விடு. தொழும் போது இந்த ஆடையின் வேலைப்பாடு செய்யப்பட்டுள்ளதைப் பார்த்தேன். என்னை அது குழப்பத்திலாழ்த்தியது என்று நபி(ஸல்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது புகாரீ, முஸ்லிம், நஸயீ, அபூதாவூதில் உள்ளது)


எண் 217: வேலைப்பாடுடைய ஷாம் தேசத்து ஆடையை நபி(ஸல்) அவர்கள் அணிந்தார்கள். பின்பு தை அபூஜஹ்ம் அவர்களிடம் கொடுத்தார்கள். அவருக்குரிய மதீனா நகர ஆடையை அவரிடமிருந்து (பதிலுக்கு) எடுத்துக் கொண்டார்கள். இறைத்தூதர் அவர்களே! ஏன்? (கொடுத்து விட்டீர்கள்) எனக் கேட்டார். நான் தொழும் போது வேலைப்பாடடின் பக்கம் பார்த்து விட்டேன், (குழப்பி விட்டது) என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள என உர்வா கூறுகின்றார்கள்.


எண் 218: அபூதல்ஹா அன்சாரீ(ரலி) அவர்கள், தன் தோட்டத்தில் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது துப்ஷீ என்ற பறவை பறந்து வந்தது. அதை இவர் உற்று நோக்கினார். அது வட்டமிட்டு பறந்து, தன் கூண்டில் அடைந்தது. அது அவரைக் கவர்ந்தது. சிறிது நேரம் அதையே அவர் பார்த்துக் கொண்டிருந்தார். பின்பு மீண்டும் தொழுகையில் கவனம் செலுத்தினார். தான் எத்தனை தொழுதோம் என்பது அவருக்கு நினைவில்லை. இந்த சொத்து எனக்கு குழப்பத்தை ஏற்படுத்தி விட்டதே என்று கூறிக் கொண்டார். உடனே அவர், நபி(ஸல்) அவர்களிடம் வந்து, தன் தோட்டத்தில் தனக்கு ஏற்பட்ட குழப்பம் பற்றிக் கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்களே! இந்த தோட்டம் அல்லாஹ்வுக்காக தர்மம் செய்கிறேன். நீங்கள் விரும்பியபடி இதே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். இதை அப்துல்லா இப்னு அபூபக்கர் கூறுகின்றார்.


எண் 219: அன்சாரீ நபித்தோழர் ஒருவர் மதீனாவின் ஒரு ஓடை அருகே உள்ள 'குஃப்' என்ற தன் தோட்டத்தில் தொழுது கொண்டிருந்தார். அது பேரீத்தம்பழமும், மற்ற கனிகளும் விளையும் காலம் அது. கனிகள் காய்ந்து தொங்கிக் கொண்டிருந்தது. அதை அவர் பார்த்தார். அந்த கனிகளைப் பார்த்து, அவரின் கவனத்தை ஈர்த்தது. பின்பு மீண்டும் தன் தொழுகையில் கவனம் செலுத்தினார். தான் எத்தனை தொழுதோம் என்பதை மறந்து விட்டார். 'என் சொத்து காரணமாக எனக்கு இந்த குழப்பம் ஏற்பட்டு விட்டது' என்று கூறிக் கொண்டார். அன்றை நாளில் கலீபாவாக இருந்த உதுமான் பின் அஃப்பான்(ரலி) அவர்களிடம் வந்தார். இது பற்றி அவர்களிடம் கூறினார். இந்த தோட்டம் தர்மப் பொருளாகும். நல்வழியில் அதை நீங்கள் (செலவுக்கு) வையுங்கள் என்று கூறினார். உடனே உதுமான்(ரலி) அவர்கள் அதை 50 ஆயிரம் தினாருக்கு விற்றார்கள். அந்த சொத்துக்கு 'ஐம்பது' என்று பெயர் வந்தது. இதை அப்துல்லா இப்னு அபுபக்கர் கூறுகின்றார்கள்.


பாடம் 59

மறதிக்காக செய்ய வேண்டியது

எண் 220: உங்களில் ஒருவர் தொழும் சமயம் அவரிடம் ஷைத்தான் வந்து, அவர் தான் தொழுதது எத்தனை? என்று அறியாத அளவுக்கு அவருள் ஊடறுவுவான். அந்நிலை உங்களில் ஒருவருக்கு ஏற்பட்டால் (ஸலாம் கொடுக்கும் முன்) உட்கார்ந்த நிலையில் இரண்டு ஸஜ்தா செய்யட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.


எண் 221: (தொழுகையில் மறந்து விட்டால் என்ன செய்வது என்பதற்கு_ நான் முன் மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே மறந்து விடுகிறேன் அல்லது மறக்கடிக்கப்படுகிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக தனக்கு செய்தி கிடைத்தது என்று மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.


எண் 222: தொழும் போது நான் சந்தேகமுருகிறேன். எனக்கு அதிகமாக இது ஏற்படுகின்றன. ஒருவர் காஸிம் இப்னு முஹம்மது அவர்களிடம் கேட்டார். 'நீர் த தொழுகையைத் தொடர்வீராக! ஏனெனில், தொழுகையை முடிக்கும் வரை அந்த சந்தேகம் உன்னை விட்டுப் போவதில்லை. என் தொழுகையை நான் முழுமையாக்கவில்லை எனச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியது தான்.(அதாவது, சந்தேகங்கள் தவிர்க்க இயலாதவை என்பதே இதன் கருத்தாகும்) எனப் பதில் கூறியதாக தனக்கு செய்தி கிடைத்தது என்று மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


பாடம் 60

வெள்ளிக் கிழமை குளித்தல்

எண் 223: ஒருவர் ஜும்ஆ நாளன்று கடமையான குளிப்பு போல் குளித்து விட்டு முதல் நேரத்திலேயே வந்தால் அவர் ஒட்டகத்தை அறுத்(துத் தர்மம் செய்)தவர் போலாவார். இரண்டாவதாக வருபவர் மாட்டை அறுத்தவர் போலாவார். மூன்றாவதாக வருபவர் கொம்புள்ள ஆட்டை அறுத்தவர் போலாவார். நான்காவதாக வருபவர் கோழியை அறுத்தவர் போலாவார். ஐந்தாவதாக வருபவர் முட்டையை தர்மம் செய்தவர் போலாவார். இமாம் அவர்கள் (பிரசங்கம் செய்ய) வந்து விட்டால் (கணக்கு எடுத்த) வானவர்கள் பயானை (உரையை) கேட்க ஆரம்பித்து விடுவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


எண் 224: ஜும்ஆ நாளன்று குளிப்புக் கடமைக்காக குளிப்பது போல் குளிப்பது, வயதிற்கு வந்த அனைவர் மீதும் கடமையாகும் என்று அபூஹுரைரா(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.


எண் 225: ஜும்ஆ நான்று ஒரு நபித்தோழர் உமர்(ரலி) அவர்கள் பிரசங்கம் செய்யும் போது பள்ளிக்கு வந்தார். இன்று எந்த நாள்? (குளிக்காமல் வருகிறீர்களே) என்று உமர்(ரலி) கேட்டதும், அமீருல் முஹ்மினீன் அவர்களே! கடைவீதியில் இருந்து விட்டேன். பாங்கைக் கேட்டதும் என்னால் ஒளுவைத் தவிர அதிகப்படுத்த முடியவில்லை என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் குளிக்கும்படி கட்டளையிட்டுள்ளார்கள் என்பதை நீ அறிந்துள்ள நிலையில் ஒளு மட்டும் தான் (செய்தீரா) என்று உமர்(ரலி) அவர்கள் கேட்டார்கள். இதை ஸாலிம் இப்னு அப்துல்லா கூறுகின்றார்கள்.


எண் 226: ஜும்ஆ நாளன்று குளிப்பது, வயதுக்கு வந்த அனைவர் மீதும் கடமையாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


எண் 227: ஜும்ஆ விற்கு வரும் உங்களில் ஒருவர் குளிக்கட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
ஜும்ஆ நாளன்று ஜும்ஆ விற்கு என்று நாடி ஒருவன் காலையிலேயே குளித்தால் ஜும்ஆ விற்கு புறப்படுவதற்காக குளிக்கும் வரை அந்த குளிப்பு செல்லாது. காரணம் ஜும்ஆ விற்கு வரும் போதே குளிக்க வேண்டம். இதையே இந்த இப்னு உமர்(ரலி) அவர்களின் ஹதீஸ் கூறுகிறது என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.
ஜும்ஆ நாளன்று முன் கூட்டியோ தாமதித்தோ ஜும்ஆ வின் குளிப்பை நாடி ஒருவன் குளித்தப்பின் ஒளுவை முறிக்கும் செயல் நிகழ்ந்தால் அவன் மீது ஒளு மட்டுமே கடமையாகும். அவன் ஒரு முறை குளிப்பதே போதுமாகும் என மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.


பாடம் 61

ஜும்ஆ நாளில் இமாம் உரை நிகழ்த்தும் போது மவுனமாக இருத்தல்

எண் 228: ஜும்ஆ நாளன்று இமாம் பிரசங்கம் செய்யும் போது (பேசிக் கொண்டிருக்கும் ஒருவரிடம்) அமைதியாக இரு என்று நீ கூறினால் தவறு செய்தவனாவாய் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


எண் 229: உமர்(ரலி) அவர்கள் காலத்தில் ஜும்ஆ நாளன்று உமர்(ரலி) அவர்கள் (பள்ளிக்கு) வரும் வரை மக்கள் தொழுது கொண்டிருப்பார்கள். உமர்(ரலி) அவர்கள் வந்து மேடையில் அமர்ந்ததும் பாங்கு கூறுவார்களேயானால் நாங்கள் பேசிக் கொண்டே தான் உட்கார்ந்திருப்போம். பாங்கு கூறுபவர் பாங்கை முடித்ததும் உமர்(ரலி) அவர்கள் எழுந்து உரை நிகழ்த்த ஆரம்பித்து விட்டால் நாங்கள எவருமே பேச மாட்டோம் என தஹ்லபா இப்னு மாலிக் அல் குரளீ கூறுகின்றார்கள். இமாம் வருவதே தொழுகையை நிறுத்தி விடும். அவர் பேசுவது, பேச்சை நிறுத்தி விடும் என்று இப்னு ஷிஹாப் கூறுகின்றார்கள்.


எண் 230: ஜும்ஆ நாளன்று இமாம் பிரசங்கம் செய்ய ஆரம்பித்து விட்டால் அமைதியாக இருந்து, அதைக் கேளுங்கள். உரையைக் கேட்பதற்காகவே அமைதியாக இருப்பவனுக்கு கிடைக்கும் நன்மையைப் போன்றே உரையைக் கேட்காமல் (அது சமயம்) அமைதியாக இருப்பவனுக்கும் உண்டு. தொழுகைக்கு நின்றால், வரிசைகளை சரி செய்து கொள்வது, தொழுகையைப் பூர்த்தி செய்வதில் உள்ளதாகும் என்று உதுமான்(ரலி) அவர்கள் தன் உரையில் கூறுவார்கள். பிரசங்கம் செய்யும் போது இப்படி அவர்கள் கூறாமல் இருப்பது மிகக் குறைவாகவே இருந்தது. பின்பு வரிசைகளை சரி செய்ய அவர்கள் நியமித்திருந்தவர்கள் வந்து கூறும் வரை தக்பீர் கூற மாட்டார்கள். வரிசைகள் சரியாக உள்ளன என அவர்களிடம் அவர்கள் கூறிய பின்பே தக்பீர் கூறுவார்கள்.


எண் 231: இமாம் ஜும்ஆ நாளன்று பிரசங்கம் செய்யும் போது பேசிக் கொண்டிருந்த இரண்டு நபர்களைக் கண்ட அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் அவ்விருவருக்கும் சிறு கல்லால் எறிந்து சமிக்ஞை செய்தார்கள் என நாபிஉ கூறுகிறார்கள்.


எண் 232: இமாம் பிரசங்கம் செய்யும் போது ஒருவர் தும்மினால் (அல்ஹம்து லில்லாஹி கூறினார்) அருகில் இருந்தவர் யர்ஹமுகுமுல்லாஹ் என்று கூறினார். (இப்படிச் செய்யலாமா?) என்று ஸயீத் இப்னு முஸய்யப்(ரலி) அவர்களிடம் கேட்ட போது, இனி இவ்வாறு செய்யாதே, என்று கூறித் தடுத்தார்கள் என்று தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.
ஜும்ஆ நாளன்று இமாம் மேடையை விட்டு இறங்கியதும் தொழுகையை ஆரம்பிக்கு முன் பேசலாமா? என்று கேட்ட போது, அதனால் குற்றமில்லை என இப்னு ஷிஹாப் பதில் கூறினார்கள் என மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.


பாடம் 62

ஜும்ஆத் தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்தவர்

எண் 233: ஜும்ஆத் தொழுகையின் ஒரு ரக்அத்தைப் பெற்றுக் கொண்டவர், மற்றொரு ரக்அத்தை அவர் தொழட்டும் என்று இப்னு ஷிஹாப் கூறுகின்றார்கள். இது தான் நபிவழி என்றும் இப்னு ஷிஹாப் கூறுகிறார்கள்.
எங்கள் ஊரின் அறிஞர்கள் இந்த முடிவு மீது உள்ளதைக் கண்டேன். தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்தவர் தொழுகையை அடைந்தவராவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபடி உள்ள முடிவே இது என்று இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.


பாடம் 63

ஜும்ஆவின் பொழுது மூக்கில் இரத்தம் வந்தால்..!

எண் 234: இமாம் உரை நிகழ்த்தும் போது, ஜும்ஆ நாளில் மூக்கில் இரத்தம் வந்தவர், உடனே வெளியேறி, இமாம் தொழுகையை முடிக்கும் வரை அவர் திரும்பா விட்டால், அவர் நான்கு ரக்அத் (லுஹராக) தொழுவார் என மாலிக் இமாம் (ரஹ்) கூறுகிறார்கள்.
ஜும்ஆ நாளில் இமாமுடன் ஒரு ரக்அத் தொழுதவருக்கு, பின்பு மூக்கில் ரத்தம் வந்து, உடனே வெளியேறி. இமாம் இரண்டு ரக்அத்தையும் தொழுது விட்டப்பின் வந்தால், அவர் பேசாமலிருந்தால் மற்றொரு ரக்அத்தை நிறைவேற்றுவார் என இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
மூக்கில் இரத்தம் வந்தோ அல்லது ஏதேனும் தேவை ஏற்பட்டோ பள்ளியை விட்டு வெளியேற விரும்பினால் ஜும்ஆ நாளன்று இமாமின் அனுமதி பெற வேண்டியதில்லை என மாலிக் (ரஹ்) கூறுகிறார்கள்.


பாடம் 64

ஜும்ஆ நாளன்;று விரைவாக வருதல்
எண் 235: 63:9 வசனத்தில் வரும், 'பஸ்அல்' (விரைந்து வாருங்கள்) என்ற வார்த்தை பற்றி இப்னு ஷிஹாப் அவர்களிடம் கேட்ட போது, 'உமர்(ரலி) அவர்கள் அந்த வார்த்தைக்கு ஃபம்லு (தயாராகி வாருங்கள்) என்று விளக்கம் தருவார்கள்' என்று இப்னு ஷிஹாப் பதில் கூறினார்கள் என இமாம் மாலிக் (ரஹ்) கூறுகிறார்கள்.
அல்லாஹ்வின் வேதத்தில் ஸஹ்யு என்ற வார்த்தைக்கு, செயல் தான் பொருளாகும். 2:205, 79:22, 80:8, 92:4 ஆகிய வசனங்களில் உள்ள ஸஹ்யு என்ற வார்த்தைக்குப் பொருள் செயல்பாடு தான். இதற்கு அல்லாஹ் தன் வேதத்தில் ஓடுவதையும், நடப்பதையும் குறிப்பிடவில்லை. அவன் கூறுவது செயல் முறையைத் தான் என மாலிக் (ரஹ்) கூறினார்கள்.


பாடம் 65

பயணம் செல்லும் இமாம், ஜும்ஆ நாளில் ஒரு ஊரில் இருந்தால்..

எண் 236: ஒரு ஊருக்கு இமாம் சென்றால் இமாம் பயணியாக இருக்கும் போதே அந்த ஊரில் ஜும்ஆ கடமையாகும். அவர் பிரசங்கம் செய்து அவர்களுக்கு ஜும்ஆ நடத்துவார். அவ்வூர் மக்களும், மற்றவர்களும் அவருடன் ஜும்ஆத் தொழுவார்கள் என மாலிக் (ரஹ்) கூறுகிறார்கள்.
ஜும்ஆ கடமையில்லாத ஒரு ஊருக்கு வந்த பிரயாணியான இமாம் ஜும்ஆ நடத்தினால் அவருக்கோ, அவ்வூர் வாசிகளுக்கோ, அவர்கள் அல்லாத மற்றவர்களுக்கோ ஜும்ஆ கடமையில்லை. அவ்வூர் வாசிகளும் பயணி என்ற நிலையில் இல்லாத மற்றவர்களும் லுஹர் தொழுகையை நிறைவேற்றட்டும் என்றும், பயணிக்கு ஜும்ஆ இல்லை என்றும் மாலிக் (ரஹ்) கூறினார்கள்.


பாடம் 66

ஜும்ஆ நாளில் உள்ள ஒரு குறிப்பிட்ட நேரம்

எண் 237: ஜும்ஆ நாளில் ஒரு நேரம் உண்டு. அந்த நேரத்தில் அல்லாஹ்விடம் ஏதேனும் கேட்டவனாக தொழுது கொண்டிருக்கும் ஒரு முஸ்லிமான அடியானுக்கு அவன் கேட்டதை கொடுத்த நிலையில் தான் அந்த நேரத்தை அவன் அடைந்து கொள்வான் என்று ஜும்ஆ வைப் பற்றி குறிப்பிடும் போது கூறிய நபி(ஸல்) அவர்கள், தன் கையினால் அந் நேரத்தை குறைந்த நேரம் எனக் குறிப்பிட்டு சமிக்ஞை செய்து கூறினார்கள். இதை அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(இது புகாரீ, முஸ்லிமிலும் உள்ளது).


எண் 238: நான் தூர் மலைப்பகுதிக்கு வந்தேன். கஹ்புல் அஹ்பார் அவர்களைச் சந்தித்தேன். அவருடன் அமர்ந்திருந்த சமயம், அவர் எனக்கு தவ்ராத் வேதம் பற்றிக் கூறினார். நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை பற்றி அவருக்கு நான் கூறினேன்.
சூரியன் உதயமாகும் நாளிலேயே சிறந்த நாள் ஜும்ஆ நாளாகும். அந்நாளில் தான் ஆதம் (அலை) படைக்கப்பட்டார்கள். அந்நாளில் தான் பூமியில் இறக்கப்பட்டார்கள். அன்று தான் அவர்களின் பாவம் பன்னிக்கப்பட்டது. அன்று தான் இறந்தார்கள். அன்று தான் கியாமத் நாளும் ஏற்படும். ஜும்ஆ நாளன்று சுப்ஹு முதல் சூரியன் உதயமாகும் வரை மனித, ஜின் இனத்தைத் தவிர மற்ற பிராணிகள் அனைத்தும் கியாமத் நாளை அஞ்சியதாக சப்தமிட்டபடி இருக்கும். அன்று ஒரு நேரம் உண்டு. (அந்நேரத்தில்) அல்லாஹ்விடம் ஏதேனும் கேட்டவனாக தொழுது கொண்டிருக்கும் ஒரு முஸ்லிமுக்கு அவன் கேட்டதைக் கொடுத்த நிலையில் தான் அந்த நேரத்தை அவன் அடைந்து கொள்வான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக நான் கூறியதும் அவரிடம் நான் பேசியபற்றில் ஒன்றாக இருந்தது.
அது ஒவ்வொரு வருடத்திலும் உள்ள ஏதேனும் ஒரு ஜும்ஆ நாளில் தான் என கஹ்பு கூறினார். 'இல்லை ஒவ்வொரு ஜும்ஆ விலும் தான்' என்று நான் கூறினேன். உடனே கஹ்பு அவர்கள் தவ்ராத்தை எடுத்துப் படித்து விட்டு, நபி(ஸல்) அவர்கள் உண்மையைக் கூறியுள்ளார்கள் என்று கூறினார்.
அடுத்து பஸரா இப்னு அபீ பஸ்ரா அல்கிபாரீ அவர்களைச் சந்தித்தேன். எங்கிருந்து வருகிறீர்? எனக் கேட்டார். தூர் பகுதியில் இருந்த வருவதாகக் கூறினேன். நீர் அங்கே செல்லும் முன் உன்னை நான் பார்த்திருந்தால் நீர் அங்கே போயிருக்க மாட்டாய். காரணம், 'கஃபா, எனது இந்த பள்ளிவாசல் (மதீனத்துந் நபவி), ஜெருஸலம் எனும் பைத்துல் முகத்தஸ் ஆகிய மூன்று பள்ளிகளுக்கே தவிர, பயணத்திற்கு தயார் ஆகக் கூடாது' என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என்று பஸரா கூறினார்கள்.
பின்பு அப்துல்லா இப்னு ஸலாம் அவர்களைச் சந்தித்தேன். அவர்களுடன் கஹ்புல் அஹ்பார் அவர்களிடம் ஜும்ஆ பற்றி பேசியதை எடுத்துக் கூறினேன். 'அது ஒவ்வொரு வருடத்தில் உள்ள ஒரு நாளில் தான்' என்று கஹ்பு கூறியதாகக் கூறினேன். கஹ்பு பொய் கூறியுள்ளார் என்று அப்துல்லா இப்னு ஸலாம் கூறியதும், கஹ்பு அவர்கள் தவ்ராத்தைப் படித்து விட்டு ஒவ்வொரு ஜும்ஆ விலும் தான் என்று கூறி விட்டார் என்று கூறினேன். கஹ்பு உண்மையே கூறினார் என அப்துல்லா இப்னு ஸலாம் கூறினார்கள்.
அந்த நேரம் எது என அறிவீரா? என அப்துல்லா இப்னு ஸலாம் அவர்கள் கேட்டதும், 'அந்த நேரத்தைக் கூறுங்கள், சுருக்கி விட வேண்டாம்' என்று கூறினேன். அது ஜும்ஆ நாளின் கடைசி நேரம் தான் என்று அப்துல்லா இப்னு ஸலாம் கூறினார்கள். 'தொழுதவனாக ஒரு முஸ்லிம் அந்த நேரத்தை அடைய மாட்டான்' என்றல்லவா நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அந்த நேரத்தில் தொழ முடியாதே! (அப்படியிருக்க) ஜும்ஆ நாளின் கடைசி நேரமாக அது எப்படி இருக்க முடியும்? என்று நான் கேட்டேன்.
மறு தொழுகையை எதிர்பார்த்து ஒருவர் ஒரு இடத்தில் அமர்ந்து இருப்பதே அவன் மறு தொழுகை தொழும் வரை தொழுகையில் இருப்பவன் போல் தான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறவில்லையா? என அப்துல்லா இப்னு ஸலாம் அவர்கள் கேட்டார்கள். நான் ஆம் என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள் கூறியிருப்பதும் அடிப்பப்பட்டது தான் என்று அப்துல்லா இப்னு ஸலாம் கூறினார்கள் என்று (இந்த நீண்ட சம்பவத்தை) அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.


பாடம் 67

ஜும்ஆ நாளன்று, நல்ல ஆடை அணிதல், இமாமை முன்னோக்கி இருத்தல்

எண் 239: வழக்கமான இரண்டு ஆடையைத் தவிர ஜும்ஆவிற்காக இரண்டு ஆடைகளை வைத்துக் கொண்டால் என்ன? என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக தனக்கு செய்தி கிடைத்ததாக யஹ்யா இப்னு ஸயீத் கூறுகின்றார்கள்.


எண் 240: இஹ்ராம் கட்டியிருந்தாலே தவிர அனுமதிக்கப்பட்ட எண்ணெய் தேய்த்தல், நறுமணம் பூசுதல் இவைகளைச் செய்தே, ஜும்ஆ விற்கு அப்துல்லா இப்னு உமர்(ரலி) வருவார்கள் என நாபிஉ கூறுகிறார்கள்.


எண் 241: இமாம், மக்களுக்கு பிரசங்கம் செய்யும் போது ஜும்ஆ வில் மக்களைத் தாண்டி வந்து உட்கார்ந்து இருப்பதை விட சூடான பூமியில் தொழுவது சிறந்தது என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.
இமாம் ஜும்ஆ நாளன்று பிரசங்கம் செய்யும் போது மக்களை அதாவது கிப்லாவை அடுத்து அமர்ந்திருப்போரையும், அதன் அடுத்து உள்ளோரையும் முன்னோக்கி இருத்தல் நபி வழியாகும் என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


பாடம் 68

ஜும்ஆத் தொழுகையில் ஓத வேண்டியவை மற்றும் காரணமின்றி ஜும்ஆவை விடுதல்

எண் 242: ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ என்ற 63வது அத்தியாயத்தை ஓதி விட்டு, அடுத்து என்ன ஓதுவார்கள்? என நுஃமான் இப்னு பஷீர் ரலி) அவர்களிடம் கேட்ட போது, 88 வது அத்தியாயத்தை ஓதுவார்கள் என பதில் கூறினார்கள் என்று லஹ்ஹான் இப்னு கைஸ் அறிவிக்கின்றார்கள்.


எண் 243: எவ்வித காரணமும் தடையின்றி மூன்று தடவை ஒருவன் ஜும்ஆவை விட்டு விட்டால் அவனது இதயத்தில் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான் என ஸஃப்வான் சுலைம்(ரலி) அறிவிக்கின்றார்கள்.
இதை நபி(ஸல்) அவர்களிடமிருந்து ஸஃப்வான் அறிவித்தாரா? இல்லையா? என்பதை நான் அறிய மாட்டேன் என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


எண் 244: நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளன்று இரண்டு பிரசங்கம் செய்தார்கள். அவ்விரண்டுக்கும் மத்தியில் உட்காருவார்கள் என முஹம்மத் கூறுகிறார்கள்.


பாடம் 69

ரமளானில் தொழுவது பற்றி ஆர்வமூட்டல்

எண் 245: நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் இரவு பள்ளியில் தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி சில மக்களும் தொழுதார்கள். மறுநாளும் தொழுதார்கள். அப்போது மக்கள்கூட்டம் அதிகமாக இருந்தது. மூன்றாம் இரவோ, நான்காவது இரவிலோ மக்கள் (தொழ) ஒன்று கூடிய போது, நபி(ஸல்) அவர்கள் (அவர்களுக்குத் தொழ வைக்க) அவர்களிடம் வரவில்லை. (மறுநாள்) காலையில், 'நீங்கள் (ஒன்று கூடி) இருந்ததைப் பார்த்தேன். எங்கே இந்த (இரவுத்) தொழுகை உங்கள் மீது கடமையாகி விடுமோ என்று அஞ்சியே நான் உங்களுக்குத் தொழ வைக்க வரவில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இது ரமளானில் நடந்தது என ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்.


எண் 246: நபி(ஸல்) அவர்கள் ரமளானின் இரவு வணக்கத்திற்கு ஆர்வமூட்டினார்கள். ஆனால் அவர்கள் வலியுறுத்தி கட்டளையிடவில்லை. ஒருவர் மன உறுதியுடனும், நன்மையை நாடியும் ரமளானின் இரவில் வணங்கினால், அவரது முன் பாவங்களும் மன்னிக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இஷ்டப்பட்டவர்கள் தொழலாம் என்ற) இந்த அடிப்படையில் தான் சட்டம் இருந்த நிலையிலேயே நபி(ஸல்) அவர்கள் மரணித்தார்கள். அபூபக்கர்(ரலி) ஆட்சியிலும் இப்படியே இருந்தது. உமர்(ரலி) அவர்களின் ஆட்சியின் ஆரம்ப காலத்திலும் இவ்வாறே இருந்தது என இப்னு ஷிஹாப் அவர்கள் கூறுகிறார்கள்.


பாடம் 70

ரமளானில் நின்று வணங்குவது பற்றி..

எண் 247: ரமளான் மாதத்தில் உமர்(ரலி) அவர்களுடன் ஒரு பள்ளிக்குச் சென்றேன். ஒருவன் தனித்துத் தொழுதார். மற்றொருவர் (தனித்துத்) தொழுத தொழுகையை ஒரு கூட்டம் (பின்பற்றியவராக) தொழுதது. இவ்வாறு மக்கள் பலவாறாக இருந்தனர். 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக, இவர்களனைவரையும் ஒரு இமாமின் கீழ் ஒன்று சேர்த்தால் மிக சிறப்பாக அமையும் எனக் கருதுகிறேன் என்று கூறிய உமர்(ரலி), உபை இப்னு கஹ்பு(ரலி) என்ற நபித்தோழரின் தலைமையில் மக்களை ஒன்று சேர்த்(து தொழச் செய்)தார்கள்.
பின்பு ஒருநாள் இரவு அவர்களுடன் நான் வந்த போது மக்கள் ஒரு இமாமைப் பின்பற்றி தொழுது கொண்டிருந்தனர். மக்கள் இரவின் ஆரம்ப நேரத்திலேயே தொழ ஆரம்பித்து விட்டார்கள். இந்த புதிய ஏற்பாடு நல்லதாகி விட்டது. இப்போது தொழுவது சிறந்ததாகும் என உமர்(ரலி) கூறியதாக அப்துர் ரஹ்மான் இப்னு அப்துல் காரீ கூறுகின்றார்கள்.


எண் 248: உமர்(ரலி) அவர்கள் உபை இப்னு கஃஹ்பு(ரலி) அவர்களையும், தமீமுத்தாரி(ரலி) அவர்களையும் மக்களுக்கு 11 ரக்அத் தொழ வைக்கும்படி கட்டளையிட்டார்கள். தொழுகையில் நீண்ட நேரம் நிற்பதால் (இயலாது போய்) கம்பின் மீது நாங்கள் சாய்ந்து கொள்ளும் அளவுக்கு நூற்றுக்கணக்கான வசனங்களை ஓதுவார். நாங்கள் சுபுஹின் நேரம் சமீபிக்கும் போது வீடு திரும்புவோம் என் ஸாயில் இப்னு யஸீத் கூறுகின்றார்கள்.


எண் 249: உமர்(ரலி) அவர்களின் காலத்தில் ரமளானில் மக்கள் 23 ரக்அத் தொழுவார்கள் என யஸீத் இப்னு ரூமான் கூறுகின்றார்கள்.


எண் 250: மக்கள் ரமளானில் காபிர்களை அதிகமாக சந்திக்க நான் பார்த்துள்ளேன். (ரமளானில் இரவுத் தொழுகையில்) எட்டு ரக்அத்தில் தொழ வைப்பவர் பகரா என்ற இரண்டாவது அத்தியாயத்தை ஓதுவார். அதே பகராவை 12 ரக்அத்களில் ஓதி தொழ வைத்தால் மக்கள் அதை இலகுவாகக் கருதுவார்கள் என அஹ்ரஜ் கூறியதாக தாவூத் இப்னு ஹுஸைன் கூறுகின்றார்கள்.

எண் 251: ரமளானில் (இரவுத் தொழுகையை முடித்து விட்டு) நாங்கள் திரும்ப வந்து, சுப்ஹ் நேரம் வந்து விடுமோ என அஞ்சி சீக்கிரமாக உணவைத் தயாரிக்கும்படி ஊழியர்களை அவசரப்படுத்துவோம். அபூபக்கர்(ரலி) அவர்கள் கூறியதாக அப்துல்லா இப்னு அபூபக்கர் கூறுகின்றார்கள்.


எண் 252: ஆயிஷா(ரலி) அவர்களிடம் ஆரம்பத்தில் அடிமையாக இருந்து, பின்பு அவர்களால் உரிமை விடப்பட்ட அபூ அம்ரு என்ற தக்வான்(ரலி) அவர்கள் ரமளானில் ஆயிஷா(ரலி) அவர்கள் கேட்பதற்காக குர்ஆன் ஓதுவார்கள் என உர்வா(ரலி) அறிவிக்கின்றார்கள்.


பாடம் 71
இரவுத் தொழுகை பற்றி..
எண் 253: ஒருவர் இரவுத் தொழுகை தொழ நினைத்து இருந்து, அவருக்கு தூக்கம் வந்து தூங்கி விட்டால் அல்லாஹ் அவருக்கு தொழ கூலியையும் நல்குவான். அவரின் தூக்கமும் அவருக்கு தர்மம் (செய்த கூலி) ஆகி விடம் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்.


எண் 254: நபி(ஸல்) அவர்களின் முன் (அவர்கள் தொழும் போது) நான் தூங்கிக் கொண்டிருந்தேன். அதுசமயம் என் கால்கள் அவர்களின் தொழும் திசையில் இருந்தது. அவர்கள் ஸஜ்தா செய்யும் போ என்னைச் சுரண்டுவார்கள். நான் கால்களைச் சுருக்கிக் கொள்வேன். அவர்கள் நிலைக்கு வந்து விட்டால் நான் கால்களை நீட்டிக் கொள்வேன். அன்றைய காலத்தில் வீடுகளில் விளக்கு இருந்ததில்லை என ஆயிஷா(ரலி) அவர்கள் (கூறியதாக அபூ ஸலமா இப்னு அப்துர் ரஹ்மான்) அறிவிக்கின்றார்கள்.


எண் 255: தொழும் போது உங்களில் ஒருவருக்கேனும் தூக்கம் வந்தால் அவரை விட்டும் தூக்கம் கலையும் வரை அவர் (படுத்துத்) தூங்கட்டும். ஏனென்றால் தூங்கியவாறே தொழுபவர், (தொழுகையில்) பாவமன்னிப்புக் கேட்பதற்கு பதிலாக தன்னையே திட்டவே நேரிடும் என்பதை அவர் அறிய மாட்டார். (எனவே முதலில் தூங்கட்டும்) என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்.


எண் 256: இரவில் தொழுது கொண்டிருந்த ஒரு பெண்ணை சுட்டிக் காட்டி, இப்பெண் யார்? என நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். இப்பெண் துவைத் அவர்களின் மகள் ஹவ்லா ஆகும். இவர் இரவில் தூங்குவதே இல்லை. (தொழுது கொண்டே இருப்பார்) என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறப்பட்டது. (இதைக் கேட்ட) அவர்களின் முகத்தில் வெறுப்பின் அடையாளத்தை நான் பார்க்கும் அளவிற்கு அவர்கள் வெறுப்படைந்தார்கள். பின்பு, 'நிச்சயமாக நீங்கள் சடையும் அளவுக்கு (நற்செயல் செய்யுங்கள் என்று கூறி) சடைவு அடையச் செய்யவில்லை. உங்களால் இயன்ற அளவுக்கு வணக்கத்தைச் செய்யுங்கள் என்று கூறினார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாக இஸ்மாயீல் இப்னு ஹகீம் கூறுகின்றார்கள்.


எண் 257: உமர்(ரலி) அவர்கள் அல்லாஹ் நாடிய அளவுக்கு இரவில் தொழுவார்கள். இரவின் இறுதிப்பகுதி வந்து விட்டால் தன் குடும்பத்தினரை தொழுதிட எழுப்புவார்கள். அவர்களிடம் தொழுகை, தொழுகை (வாருங்கள்) என்று கூறுவார்கள். பின்பு தாஹா அத்தியாயத்தில் உள்ள 133 வசனத்தை ஓதுவார்கள் என அஸ்லம் கூறுகின்றார்கள்.


எண் 258: இஷாவுக்கு முன் தூங்குவதும், அதன் பின் பேசுவதும் வெறுக்கத்தக்கதாகும் என ஸயீத் இப்னு முஸய்யப் கூறுபவர்களாக இருந்தனர் என தனக்குச் செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


எண் 259: இரவு மற்றும் பகலில் (உபரித்) தொழுகை தொழுவது இரண்டிரண்டாகத் தான் ஒவ்வொரு இரண்டு ரக்அத்துக்குமிடையே ஸலாம் கொடுக்கப்பட வேண்டும் என உமர்(ரலி) அவர்கள் கூறிய செய்தி தனக்குக் கிடைத்ததாக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.
இதுவே எம்மிடத்திலும் சட்டம் எனவும் மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


பாடம் 72
நபி(ஸல்) அவர்களின் வித்ருத் தொழுகை
எண் 260: நபி(ஸல்) அவர்கள் இரவில் 11 ரக்அத் தொழுவார்கள். அதில் ஒரு ரக்அத் வித்ராகும். தொழுது முடித்ததம் வலது புறமாக (ஒருக்களித்துப்) படுத்துக் கொள்வார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்.


எண் 261: ரமளானில் நபி(ஸல்) அவர்களின் தொழுகை எப்படி இருந்தது? என்று நான் கேட்டேன். ரமளானிலும், மற்ற நாட்களிலும் நபி(ஸல்) அவர்கள் 11 ரக்அத்தை விட அதிகப்படுத்தியதில்லை. (முதலில்) நான்கு ரக்அத் தொழுவார்கள். அவைகளின் நீளம் அதன் அழகு எப்படி இருந்தது என்று நீ கேட்க வேண்டாம். (அந்த அளவுக்கு அழகாகவும் நீளமானதாகவும் இருந்தது). பின்பு நான்கு ரக்அத் தொழுவார்கள். அதன் நீளமும், அழகும் (எப்படி இருந்தது பற்றி நீ கேட்கவே வேண்டாம். பின்பு மூன்று ரக்அத் தொழுவார்கள். (எட்டு ரக்அத்க்களுக்கும், மூன்று ரக்அத்துக்களுக்குமிடையே தூங்கி விட்டு, ஒளுச் செய்யாமல் வித்ருத் தொழுத நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர்(ஸல்) அவர்களே! வித்ருக்கு முன் தூங்கினீர்களே!' என்று கேட்டேன். 'ஆயிஷா! என் கண்கள் தூங்கின. என் இதயம் தூங்கவில்லை' என்று பதில் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள். இதை அபூ ஸலமா இப்னு அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃபு கூறுகின்றார்கள்.


எண் 262: நபி(ஸல்) அவர்கள் வித்ரு உள்பட) இரவில் 13 ரக்அத் தொழுவார்கள். பின்பு சுபுஹுக்கான பாங்கைக் கேட்டதும் சிறிய அளவில் இரண்டு ரக்அத் தொழுவார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்.


எண் 263: நபி(ஸல்) அவர்களின் மனைவியும் எனது சிறிய தாயாருமான மைமூனா(ரலி) அவர்களது இல்லத்தில் ஒரு இரவு தங்கியிருந்தேன். அப்போது நான் தலையணையின் குறுக்கு வாட்டில் படுத்திருந்தேன். நபி(ஸல்) அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் அதன் நீள வாட்டில் படுத்திருந்தனர். நபி(ஸல்) அவர்கள் இரவின் பாதிநேரம் முடிந்தோ, அல்லது அதற்கும் சற்று நேரம் முன்போ, பின்போ, தூக்கத்தில் இருந்து விழித்து அமர்ந்தார்கள். தன் கையால் தன் முகத்தைத் தடவினார்கள். பின்பு குர்ஆனின் 3 வது அத்தியாயமான ஆல இம்ரான் சூராவின் கடைசிப் பத்து வசனங்களை ஓதினார்கள். தண்ணீர்ப் பாத்திரம் பக்கம் போய் நின்று அமைதியாக ஒளுச் செய்தார்கள். பின்பு தொழுகைக்குத் தயாரானார்கள். நானும் எழுந்து அவர்கள் செய்தது போல் செய்து விட்டுப் போய் அவர்களின் அருகில் (இடப்புறம்) நின்றேன். நபி(ஸல்) அவர்கள் என் தலையில் தனது வலது கையை வைத்து, என் வலது காதைப் பிடித்துத் திருகி (வலது புறத்தில் நிறுத்தி)னார்கள். நபி(ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத், பின்பு இரண்டு, பின்பு இரண்டு, பின்பு இரண்டு, பின்புஇரண்டு, பின்பு இரண்டு (ஆக 12) ரக்அத்கள் தொழுதார்கள். பின்பு (சிறிது நேரம்) படுத்திருந்தார்கள். பின்பு வித்ருத் தொழுதார்கள். பாங்கு கூறுபவர் வந்ததும், சிறிய அளவில் இரண்டு ரக்அத் தொழுதார்கள். பின்பு (வீட்டை விட்டு) வெளியேறி (பள்ளிக்குச்) சென்று சுபுஹ் தொழ வைத்தார்கள் என அப்துல்லா இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கின்றார்கள்.


எண் 264: நபி(ஸல்) அவர்களின் தொழுகையை இரவில் நான் உற்று கவனித்துள்ளேன். கட்டையிலான அவர்களது நிலைப்படியை தலையணையாக்கிக் கொண்டேன். நபி(ஸல்) அவர்கள் எழுந்து மிக மிக நீண்ட இரண்டு ரக்அத் தொழுதார்கள்;. பின்பு முன்பு இருந்தது போன்றில்லாமல் இரண்டு ரக்அத் தொழுவார்கள். அதன் பின்பும் முன்பு போன்று (நீண்ட அளவில்) இல்லாமல் இரண்டு ரக்அத் தொழுதார்கள். பின்பு முன்பு போன்று, (சற்று நீண்டதாக) இல்லாமல் (சிறிய அளவில்) இரண்டு ரக்அத் தொழுதார்கள்.அதற்குப் பிறகு முன்பு போன்று இல்லாமல் (மிகச் சிறிய அளவில்) இரண்டு ரக்அத் தொழுதார்கள். அதற்குப் பிறகும் முன்பு போல் இல்லாமல் (மிக மிக சிறிய அளவில்) இரண்டு ரக்அத் தொழுதார்கள். பின்பு (ஒரு ரக்அத்) வித்ருத் தொழுதார்கள். இந்த ரக்அத் (எண்ணிக்கை) 13 ஆகும் என ஸைத் இப்னு காலித் அல் ஜுஹ்னீ கூறுகின்றார்கள்.


பாடம் 73
வித்ருத் தொழுகை

எண் 265: இரவுத் தொழுகை (தொழும் முறை) பற்றி நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் கேட்டார். இரவுத் தொழுகை இரண்டிரண்டாக தொழுவதாகும். உங்களில் ஒருவர் சுப்ஹு நேரத்தை பயந்தால் ஒரு ரக்அத்தை அவர் தொழட்டும்.அவர் தொழுத ஒரு ரக்அத் அவருக்கு வித்ராகி விடும் என நபி(ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள் என அப்துல்லா இப்னு உமர்(ரலி) அறிவிக்கின்றார்கள்.


எண் 266: சிரியா நாட்டைச் சேர்ந்த அபூ முஹம்மத் என்பவர் 'வித்ருத் தொழுகை' கடமையானதாகும் என்று கூறியதாக பனு கினானாவைச் சார்ந்த ஒருவர் என்னிடம் வந்து கூறினார். நான் (இது விஷயமாகக் கேட்க) உபாதா இப்னு ஸாமித்(ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்கள் பள்ளியில் ஓய்வு பெற்றுக் கொண்டிருந்த போது அவர்களிடம் போய்ச் சேர்ந்தேன். அபூ முஹம்மத் அவர்கள் கூறிய செய்தியை அவர்களிடம் தெரிவித்தேன். 'ஐந்து நேரத் தொழுகையை அல்லாஹ் தன் அடியார் மீது கடமையாக்கி உள்ளான். யார் அந்தக் கடமையை லேசாகக் கருதி அவற்றில் எதையும் பாழாக்கி விடாமல் நிறைவேற்றுகின்றாரோ அவரை சொர்க்கத்தில் நுழையச் செய்வது அல்லாஹ்வின் மீது பொறுப்பாகி விடுகிறது. ஒருவர் அவைகளை நிறைவேற்றவில்லையாயின் அல்லாஹ்வின் மீது (எவ்விதப்) பொறுப்பும் இல்லை. அவன் விரும்பினால் அவனைத் தண்டிக்கலாம். விரும்பினால் சொர்க்கத்தில் நுழையச் செய்வான் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே, (ஐந்து நேரத் தொழுகை தவிர மற்ற தொழுகைகள் சுன்னத் என்பதால்) அபூ முஹம்மத் அவர்கள் (வித்ரு கடமை என்று கூறியதன் மூலம்) பொய் கூறி விட்டார் என உபாதா(ரலி) கூறினார்கள். இதை முக்தஜ்ஜி என்பார் கூறுகிறார்கள்.


எண் 267: அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களுடன் நான் (இரவில்) மக்காவிற்கு பயணம் செய்து கொண்டிருந்தேன். சுப்ஹு நேரத்தை அது வந்தால் வித்ருத் தவறி விடுமே எனப்பயந்து நான் (என் வாகனத்தில் இருந்து) இறங்கினேன், வித்ருத் தொழுதேன். பின்பு இப்னு உமர்(ரலி) அவர்களைப் போய்ச் சேர்ந்தேன். எங்கு சென்றீர்? என அப்துல்லா இப்னு உமர்(ரலி) என்னிடம் கேட்டார்கள். சுப்ஹு நேரத்தை பயந்து நான் (அங்கே) இறங்கி வித்ருத் தொழுதேன் என்று கூறினேன். நபி(ஸல்) அவாகளிடம் (இது விஷயத்தில்) அழகிய முன்மாதிரி இருக்கிறது உமக்குத் தெரியாதா? என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! தெரியாது' என்றேன். நபி(ஸல்) அவர்கள் (பயணத்தின் போது) ஒட்டகத்திலேயே வித்ருத் தொழுவார்கள் என அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள் என்பதாக ஸயீத் இப்னு யஸார் கூறுகின்றார்கள்.


எண் 268: அபூபக்கர்(ரலி) அவர்கள் படுக்கைக்கு வந்து (தூங்க விரும்பி) விடடால் வித்ருத் தொழுது விடுவார்கள். உமர்(ரலி) அவர்கள் இரவின் பிற்பகுதியில் வித்ருத் தொழுவார்கள். நானோ என் படுக்கைக்கு (தூங்க) வந்து விட்டால் வித்ரு தொழுது விடுவேன் என்று ஸயீத் இப்னு முஸய்யப் கூறுகின்றார்கள்.


எண் 269: ஒருவர் அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களிடம் 'வித்ருத் தொழுகை கடமையானதா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்களும் வித்ருத் தொழுதுள்ளார்கள். நபித் தோழர்களும் வித்ருத் தொழுதுள்ளார்கள் என்று பதில் கூறினார்கள். மீண்டும் அம்மனிதர் அதே கேள்வியைக் கேட்க அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களும் அதே பதிலைக் கூறியதாக தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


எண் 270: ஒருவர் தூங்கினால் சுப்ஹு வந்து விடும் என அஞ்சினால் அவர் தூங்கும் முன்பே வித்ருத் தொழட்டும். இரவின் பிற்பகுதியில் ஒருவர் விழிக்க முடியும் என்று இருந்தால் அவர் தன் வித்ரை இறுதி நேரத்திலேயே தொழட்டும் என்று ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்ளக் என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.


எண் 271: அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களுடன் மக்காவிற்கு போகும் வழியில் நானும் இருந்தேன். அதுசமயம் வானத்தை மேகம் மூடியது. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் சுப்ஹு நேரம் வந்து விடுமோ என எண்ணி, ஒரு ரக்அத் வித்ருத் தொழுதார்கள். பின்பு மேகம் விலகியதும் இது இரவு நேரம் தான். (இன்னும் சுப்ஹு வரவில்லை) என அறிந்தார்கள். உடனே இன்னுமொரு ரக்அத் தொழுது (முந்தி தொழுத ஒரு ரக்அத்தை) இரண்டாக்கினார்கள். பின்பு அதற்குப் பிறகு இரண்டு, இரண்டு ரக்அத்களாக தொழுதார்கள். அதன் பின் சுப்ஹு நேரம் வந்து விடும் என எண்ணி, ஒரு ரக்அத் வித்ருத் தொழுதார்கள் என நாபிஉ(ரலி) அறிவிக்கின்றார்கள்.


எண் 272: தனது தேவைகளை நிறைவேற்றுவதற்காக அப்துல்லா இப்ன உமர்(ரலி) அவர்கள் இரண்டு ரக்அத் (தொழுகை)க்கும் வித்ரின் ஒரு ரக்அத் (தொழுகை)க்கும் இடையே ஸலாம் கொடுப்பார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


எண் 273: ஸஹ்து இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்கள் இஷாத் தொழுகைக்குப் பின் ஒரு ரக்அத் வித்ருத் தொழுவார்கள் என இப்னு ஷிஹாப் அறிவிக்கின்றார்கள்.
நம்மிடத்தில் ஒரு ரக்அத் தொழ அனுமதியில்லை. வித்ரின் குறைந்த பட்சம் மூன்று ரக்அத்களே என்று மாலிக் (ரஹ்( கூறுகின்றார்கள்.


எண் 274: மஹ்ரிப் தொழுகை தான் பகல் நேரத் தொழுகையின் வித்ராகும் என அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுவார்கள் என அப்துல்லா இப்னு தீனார் கூறுகின்றார்கள்.
'இரவின் ஆரம்பத்தில் ஒருவர் வித்ருத் தொழுது, பின்பு தூங்கி விட்டு, பின்பு எழுந்து, அவர் தொழத் துவங்கினால், இரண்டிரண்டாக அவர் தொழட்டும். இது தான் நான் கேள்விப்பட்டதிலே மிக விருப்பமானது' என்று மாலிக் (ரஹ்) கூறுகிறார்கள்.


பாடம் 74
பஜ்ருத் தொழுகைக்குப் பின் வித்ருத் தொழுகை
எண் 275: அப்துல்லா இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கண் தெரியாது போன் போது, ஒருமுறை தூங்கி விழித்ததும், தன் ஊழியரை அழைத்து, ''மக்கள் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள்'' என்று கூறினார்கள். ஊழியர் வெளியே போய் விட்டு, திரும்ப வந்து, '' மக்கள் சுப்ஹு தொழுது முடித்து விட்டனர்'' என்று கூறினார். உடனே அப்துல்லா இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் எழுந்து வித்ருத் தொழுதார்கள். பின்பு சுபுஹுத் தொழுதார்கள் என ஸயீத் இப்னு ஜுபைர் கூறுகின்றார்கள்.


எண் 276: அப்துல்லா இப்னு அப்பாஸ்(ரலி), உபாதா இப்னு ஸாமித்(ரலி), காஸிம் இப்னு முஹம்மத்(ரலி), அப்துல்லா இப்னு ஆமிர் இப்னு ராபிஆ(ரலி) ஆகியோர் (வித்ரைத் தவற விட்டு விட்டார்கள்) பஜ்ரு தொழுகைக்குப் பின் வித்ருத் தொழுவார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) அறிவிக்கின்றார்கள்.


எண் 277: நான் வித்ருத் தொழும் போது சுப்ஹ் தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டு விட்டால் நான் அதில் தொடர்ந்து இருப்பேன் என அப்துல்லா இப்னு மஸ்ஊத்(ரலி) அறிவிக்கின்றார்கள்.


எண் 278: மக்களுக்கு (தொழுகையில்) இமாமத் செய்து கொண்டு இருந்த உபாதா இப்னு ஸாமித்(ரலி) அவர்கள் ஒருநாள் சுப்ஹுத் தொழுகைக்கு வந்தார்கள். அதுசமயம் சுப்ஹுத் தொழுகைக்கு வந்தார்கள். அதுசமயம் சுப்ஹுத் தொழுகைக்காக 'முஅத்தின்' இகாமத் கூறினார். தான் வித்ருத் தொழுது கொள்வதற்காகக் கூறி அவரை உபாதா(ரலி) அவர்கள் இகாமத் கூறுவதை நிறுத்தும் படி கூறினார்கள். (வித்ருத் தொழுததும்) பின்பு மக்களுக்கு சுப்ஹ் தொழ வைத்தார்கள் என யஹ்யா இப்னு ஸயீத் கூறுகின்றார்கள்.


எண் 279: நான் இகாமத் (கூறப்படும் சபதத்)தை கேட்டவனாக வித்ருத் தொழுது விடுவேன் என அப்துல்லா இப்னு ஆமிர் இப்னு ரபீஆ(ரலி) அவர்கள் கூறியதாக அறிவிக்கும் அப்துர்ரஹ்மான் இப்னு காஸிம் அவர்கள், ''இகாமத் கூறும் போதும்'' என்றோ, ''சுப்ஹுத் தொழுகைக்குப் பின் வித்ருத் தொழுவேன்'' என்றோ அப்துல்லா இப்னு ஆமிர்(ரலி) அவர்கள் கூறினார்கள் என்று தன் சந்தேகத்தைக் கூறுகிறார்கள்.
(வித்ரை தவற விடடு விட்டால்) பஜ்ருத் தொழுகைக்குப் பின் வித்ருத் தொழுவேன் என காஸிம் இப்னு முஹம்மது கூறியதாக அவர்களின் மகன் அப்துர் ரஹ்மான் கூறினார் என்று மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.
வித்ரைப் பஜ்ருக்குப் பின் தொழுவது என்பது, வித்ருத் தொழாமல் தூங்கி விட்டால் தான் பஜ்ருக்குப் பின் தொழலாம் என வேண்டுமென்றே அதை தொழாமல் இருக்க எவருக்கும் அனுமதி இல்லை என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


பாடம் 75
ஃபஜ்ரின் இரண்டு ரக்அத்கள்
எண் 280: சுப்ஹு தொழுகைக்காக பாங்கு கூறுபவர் பாங்கு கூறி முடித்து விட்டால், (கடமையான) தொழுகைக்கு இகாமத் சொல்லும் முன் இரண்டு ரக்அத்தை நபி(ஸல்) அவர்கள் தொழுவார்கள் என ஹபஸா(ரலி) அறிவிக்கின்றார்கள்.


எண் 281: ஃபாத்திஹா சூரா ஓதினார்களா? இல்லையா? என நான் கருதும் அளவுக்கு நபி(ஸல்) அவர்களது பஜ்ரின் முன் சுன்னத் சுருக்கமாக இருந்தது என ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்.


எண் 282: நபித்தோழர்கள்! இகாமத் தைக் கேட்ட பின்பு (முன் சுன்னத்) தொழுவதற்காக நின்றார்கள். அவர்களிடம் வந்த நபி(ஸல்) அவாகள் இரண்டு தொழுகைகளா? என்று கேட்டார்கள். சுப்ஹுத் தொழுகையின் போது சுப்ஹி(ன் பர்லு)க்கு முன்னால் உள்ள இரண்டு ரக்அத் தொழுகையை தொழுத போதே இப்படி நடந்தது என அபூ ஸலமா இப்னு அப்துர் ரஹ்மான் கூறுகின்றார்கள்.


எண் 283: அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களுக்கு பஜ்ரின் சுன்னத் தொழ முடியாமல் போய் விட்டது. சூரியன் உதயமான பிறகு அதை அவர்கள் திரும்பத் தொழுதார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


எண் 284: அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் செய்தது போலவே காஸிம் இப்னு முஹம்மத் (ரஹ்) அவர்களும் செய்வார்கள் என அப்துர்ரஹ்மான் இப்னு காஸிம் கூறுகின்றார்கள்.


பாடம் 76
தனித்துத் தொழுவதை விட கூட்டுத் தொழுகையின் சிறப்பு
எண் 285: ஒரு மனிதன் தனித்துத் தொழுவதை விட கூட்டாகத் தொழுவது 27 மடங்கு சிறந்ததாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லா இப்னு உமர்(ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது புகாரீ, முஸ்லிம், திர்மிதீயில் இடம் பெற்றுள்ளது).


எண் 286: உங்களில் ஒருவர் தனித்துத் தொழுவதை விட கூட்டாகத் தொழுவது 25 மடங்கு அதிக மதிப்புப் பெற்றதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, இப்னுமாஜா வில் இடம் பெற்றுள்ளது).


எண் 287: என் உயிரை தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! விறகைச் சேகரித்து, அதை எரிக்கும்படி நான் கட்டளையிட்டு விட்டு, பின்பு தொழுகைக்கு பாங்கு கூறிடவும், ஒருவரை மக்களுக்கு இமாமத் செய்யும்படி கட்டளையிட்டும் அதற்கு வரமறுக்கும் ஆண்களின் வீட்டை எரித்திட நான் விரும்புகின்றேன். எனது உயிரை தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! அவர்களில் ஒருவர் எலும்பையோ அல்லது ஆட்டின் இரண்டு குளம்புத் துண்டுகளோ கிடைக்கும் என அறிந்து கொண்டால் அவர் இஷாத் தொழுகையில் வந்து சேருவார் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.


எண் 288: கடமையான தொழுகைகளைத் தவிர மற்ற (உபரியான) உங்களின் தொழுகைகளை உங்கள் வீடுகளில் நீங்கள் தொழுவது மிகச் சிறந்ததாகும் என்று ஸைத் இப்னு தாபித்(ரலி) கூறியதாக புஸ்ர் இப்னு ஸயீத் கூறுகின்றார்கள்.


பாடம் 77
இஷாவிலும், சுப்ஹிலும் வந்து கலந்து கொள்ளுதல்
எண் 289: நமக்கும், நயவஞ்சகர்களுக்கும் வித்தியாசம், இஷாவிலும், சுப்ஹிலும் கலந்து கொள்வது தான். அவர்கள் அவ்விரண்டிலும் (கலந்து கொள்ள) சக்தி பெற மாட்டார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஸயித் இப்னு முஸய்யப்(ரலி) அவர்கள் கூறினார்கள்.


எண் 290: பாதையில் நடந்து சென்று கொண்டிருக்கும் ஒருவர், பாதையில் கண்ட ஒரு முள்ளை அப்புறப்படுத்தினால் அவருக்கு அல்லாஹ் கூலி கொடுத்து, அவரை மன்னிக்கின்றான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உயிரை தியாகம் செய்தவர்கள் ஐவராவார்கள். (1) பிளேக் நோயால் இறந்தவர், (2) காலரா நோயால் இறந்தவர் (3)
பாங்கு கூறுவதிலும், (தொழுகையின்) முதல் வரிசையிலும் உள்ளதை (சிறப்பை) மக்கள் அறிந்து. சீட்டுக் குலுக்கிப் போட்டேதவிர அதை அடைய முடியாத நிலை ஏற்பட்டால், சீட்டுக் குலுக்கி போட்டுக் கொள்வார்கள். மேலும் கோடை காலத்திலும் (பகல் தொழுகைக்கு வருவதின்) சிறப்பை அவர்கள் அறிந்து கொண்டால், அதற்காக முந்திக் கொள்வார்கள். மேலும் இஷாவிலும், சுப்ஹிலும் உள்ளதை (சிறப்பை) அவர்கள் அறிந்து கொண்டால், தவழ்ந்தாவது அவர்கள் வருவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.


எண் 291: சுலைமான் இப்னு அபீ ஹம்ஸா அவர்களை சுப்ஹுத் தொழுகையில் உமர்(ரலி) அவர்கள் பார்க்கவில்லை. உமர்(ரலி) அவர்கள் காலையில் கடை வீதிக்கு வந்தார்கள். கடைக்கும், பள்ளிக்கும் இடையில் தான் சுலைமான் அவர்களின் வீடு இருந்தது. சுலைமான் அ வர்களின் தாய் ஷிபாவைக் கண்ட உமர்(ரலி) அவர்கள், 'நான் சுப்ஹில் சுலைமானைப் பார்க்கவில்லையே! என்று கேட்;டார்கள். ''அவர் இரவெல்லர் விழித்துத் தொழுதார். அவருக்கு தூக்கம் மிகைத்து விட்டது'' என்று அவரின் தாயார் கூறினார். ''சுப்ஹுத் தொழுகைக்காக ஜமாஅத்தில் கலந்து கொள்வது, இரவெல்லாம் நின்று தொழுவதை விட எனக்கு மிக விருப்பமானதாக உள்ளது என்று உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள். இதை அபூபக்கர் இப்னு சுலைமான் இப்னு அபீ ஹம்ஸா கூறுகின்றார்கள்.


எண் 292: உதுமான்(ரலி) அவர்கள் இஷாத் தொழுகைக்காக வந்த போது, பள்ளியில் மக்கள் குறைவாக இருக்கக் கண்டார்கள். மக்கள் அதிகமாக வரட்டும் என எதிர்பார்த்து பள்ளியின் பின் வளாகத்தில் ஒருக்களித்துப் படுத்தார்கள். அதுசமயம் அவர்களிடம் இப்னு அபீ அம்ரா வந்து அருகில் அமர்ந்தார். அவர் யார்? என்று அவரிடம் கேட்டார். தான் யார்? என்று கூறியதும், உனக்கு குர்ஆன் தெரியுமா? என்று கேட்டார்கள். தெரியம் என்று கூறினார். அவரிடம் ''ஒருவர் இஷாத் தொழுகைக்கு வந்தால், அவர் பாதி இரவு நின்று தொழுதவராவார். சுப்ஹுத் தொழுகைக்கு வந்தால் அவர் முழு இரவை நின்று தொழுதவர் போலாவார்'' என உதுமான்(ரலி) கூறினார்கள். இதை அப்துர் ரஹ்மான் இப்னு அபீ அம்ரா அல் அன்சாரீ கூறுகின்றார்கள்.


பாடம் 78
தொழுத தொழுகையை மீண்டும் இமாமுடன் சேர்ந்து தொழுவது
எண் 293: நபி(ஸல்) அவர்களுடன் நான் ஒரு இடத்தில் இருந்தேன். அதுசமயம் பாங்கு கூறியதும், நபி(ஸல்) அவர்கள் நின்று தொழ வைத்தார்கள். நான் தொழாமல் அமர்ந்திருந்தேன். மக்களுடன் நீ சேர்ந்து தொழாமல் இருக்கக் காரணம் என்ன? நீர் முஸ்லிம் இல்லையா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்களே..! நான் முஸ்லிம் தான். எனினும் ''நான் என் வீட்டிலேயே தொழுது விட்டேன்'' என்று கூறினேன். நீ வீட்டிலே தொழுதிருந்தாலும் (ஜமாஅத் நடக்கும் இடத்திற்கு) நீ வந்தால் மக்களுடன் தொழுது கொள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக மிஹ்ஜன்(ரலி) அறிவிக்கின்றார்கள்.


எண் 294: நான் என் வீட்டிலே தொழுது வருகிறேன். பின்பு இமாமுடன் தொழுகையை அடைந்து கொள்கின்றேன். அவருடன் சேர்ந்த நான் தொழ வேண்டுமா? என்று அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களிடம் ஒருவர் கேட்டார். தொழ வேண்டும் என பதில் கூறினார்கள். இந்த இரண்டு தொழுகை(களில்) எதை (பர்லான) என் தொழுகையாக ஆக்குவேன்? என அவர் கேட்டார். அந்த வேலை உனக்கு ஏன்? அது அல்லாஹ்வின் வேலையாகும். அவன் விரும்பியதை (பர்லாக) ஆக்குவான் என்று இப்னு உமர்(ரலி) கூறியதாக நாபிஉ கூறுகின்றார்கள்.


எண் 295: என் வீட்டில் நான் தொழு விட்டேன். பின்பு பள்ளிக்கு வருகிறேன். அப்போது இமாமை தொழ வைக்கக் காண்கிறேன். அவருடன் நான் தொழ வேண்டுமா? என்று ஸயீத் இப்னு முஸய்யப் அவர்களிடம் ஒருவர் கேட்டார். 'ஆம்' என்று ஸயீத் கூறினார்கள். அந்த இரண்டில் எது (பர்லான) என் தொழுகை'' என்பது அந்த மனிதர் கேட்டார். அவ்விரண்டையும் நீரா பொறுப்பேற்கப் போகிறீர்? அது அல்லாஹ் வின் பொறுப்பில் உள்ளது என ஸயீத் இப்னு முஸய்யப் பதில் கூறினார்கள். இதை யஹ்யா இப்னு ஸயீத் கூறுகின்றார்கள்.


எண் 296: பனீ அஸத் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அபூ அய்யூப் அன்சாரீ(ரலி) அவர்களிடம் நான் என் வீட்டில் தொழுகிறேன். பின்பு பள்ளிக்கு வருகிறேன். அங்கு இமாம் தொழ வைப்பதைப் பார்க்கின்றேன். அவருடன் நான் தொழ வேண்டுமா? எனக் கேட்டார். 'ஆம்' அவருடன் தொழு.அவ்வாறு ஒருவர் செய்தால் அவருக்கு ஜமாஅத்தின் பங்குண்டு அல்லது ஜமாஅத்தைப் போன்ற பங்குண்டு என அபூ அய்யூப்(ரலி) கூறினார்கள் என அஃபீஃப் இப்னு அம்ருஸ் ஸஹ்மீ கூறுகின்றார்கள்.


எண் 297: ஒருவர் மஹ்ரிபையோ அல்லது சுப்ஹையோ தொழுது விட்டு, பின்பு அவ்விரண்டையும் இமாம் தொழ வைக்கக் கண்டால் மீண்டும் தொழ வேண்டாம் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறியதாக நாபிஉ கூறுகின்றார்கள்.
வீட்டில் தொழுது கொண்ட ஒருவர் இமாமுடன் சேர்ந்த மீண்டும் தொடுவது குற்றமில்லை என்றே கருதுகின்றேன். ஆனால் மஹ்ரிபுத் தொழுகையைத் தவிர, அதை மீண்டும் தொழுதால் அது இரட்டையாக ஆகி விடும் என மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.


பாடம் 79
கூட்டுத் தொழுகையின் ஒழுங்கு
எண் 298: உங்களில் ஒருவர் மக்களுக்குத் தொழ வைத்தால் அவர் இலகுவாக்கட்டும். ஏனெனில், பின்பற்றித் தொழுவோரில் பலவீனரும், நோயாளிகளும், முதியவர்களும் உள்ளனர். உங்களில் ஒருவர் தனித்துத் தொழுதால் விருப்பப்படி நீட்டிக் கொள்ளட்டும் என நபி(ஸல்) அவாகள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.


எண் 299: ஒரு தொழுகையின் போது அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களின் பின்னால் நான் நின்றேன். என்னைத் தவிர வேறு எவரும் அவர்களுடன் இல்லை. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் தன் கையைப் பின்னோக்கி (என்னைப் பிடித்து) தன் வலது புறத்தில் நேராக என்னை ஆக்கினார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


எண் 300: 'அகீக்' என்ற இடத்தில் ஒருவர் மக்களுக்கு இமாமத் செய்து கொண்டிருந்தார். உமர் இப்னு அப்து;ல அஜீஸ் அவர்கள் அவரிடம் ஆள் அனுப்பி அவரை (தொழ வைக்க வேண்டாம் என) தடை செய்தார்கள் என யஹ்யா இப்னு ஸாமித் கூறுகின்றார்கள்.
அவரைத் தடுத்ததற்கு அவரின் தந்தை யாரென்றே அறியப்படாததே காரணமாகும் என மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.


பாடம் 80
உட்கார்ந்தவராக இமாம் தொழ வைப்பது
எண் 301: நபி(ஸல்) அவர்கள் குதிரையில் ஏறினார்கள். அவர்களை அது கீழே தள்ளி விட்டது. அதனால் அவர்களின் வலது புறத்தில் சிராய்ப்பு ஏற்பட்டது. நபி(ஸல்) அவாகள் உட்கார்ந்தவாறே தொழ வைத்தார்கள். அவர்களுக்குப் பின்னால் நாங்கள் உட்கார்ந்து தொழுதோம். தொழுகையை முடித்த போது, ''இமாம் என்பவர் அவரைப் பின்பற்றவே நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நின்று தொழ வைத்தால் நீங்களும் நின்று தொழுங்கள். அவர் ருகூஉ செய்தால் நீங்களும் ருகூஉச் செய்யுங்கள். அவர் (தலையை) உயர்த்தினால் நீங்களும் உயர்த்துங்கள். அவர், ஸமியல்லாஹுலிமன் ஹமிதாஹ்'' என்று கூறினால், ''ரப்பனா வலக்கல் ஹம்து'' என்று நீங்கள் கூறுங்கள். அவர் உட்கார்ந்து தொழுதால் நீங்கள் உட்கார்ந்து தொழுங்கள் என்று நபி(ஸல்) அவாகள் கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவிக்கின்றார்கள்.


எண் 302: நபி(ஸல்) அவர்கள் நோயுற்று இருந்த போது, உட்கார்ந்தவர்களாக தொழ வைத்தார்கள். அவர்களுக்குப் பின்னால் இருந்தோர் (மக்கள்) நின்று தொழுதனர். ''உட்காருங்கள்'' என அவர்களிடம் சமிக்ஞை செய்தார்கள். தொழுகையை முடித்ததும், ''இமாம் என்பவர் அவரைப் பின்பற்றவே ஏற்படுத்தப்பட்டுள்ளார். அவர் ருகூஉ செய்தால் நீங்களும் ருகூஉ செய்யுங்கள். அவர் (தலையை) உயர்த்தினால் நீங்களும் உயர்த்துங்கள். உட்கார்ந்து அவர் தொழுதால் நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள்'' என்று கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்.


எண் 303: நபி(ஸல்) அவர்கள் நோயுற்ற போது பள்ளிக்கு வந்தார்கள். அதுசமயம் மக்களுக்கு நின்றவாறு அபூபக்கர்(ரலி) அவர்கள் தொழ வைத்தார்கள். அபூபக்கர்(ரலி) பின் வாங்கினார்கள். 'நீர் முன் போல் இருக்கவும்' என்று அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் சமிக்ஞை செய்தார்கள். அபூபக்கர்(ரலி) அருகில் நபி(ஸல்) அவர்கள் அமர்ந்தார்கள். அபூபக்கர்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் தொழுகையைப் பின்பற்றித் தொழுதார்கள். மக்கள், அபூபக்கர்(ரலி) அவர்களின் தொழுகையைப் பின்பற்றித் தொழுதார்கள் என்று உர்வா கூறுகின்றார்கள்.


பாடம் 81
உட்கார்ந்து தொழும் தொழுகையை விட நின்று தொழும் தொழுகையின் சிறப்பு
எண் 304: உங்களில் ஒருவர் உட்கார்ந்தவராகத் தொழுவது, நின்று தொழுபவரின் தொழுகையில் பாதியைப் போன்றது தான் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ இப்னு அம்ரு இப்னுல் ஆஸ்(ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது முஸ்லிம், அபூதாவூது, நஸயீ - ல் இடம் பெற்றுள்ளது).


எண் 305: மதீனாவிற்கு நாங்கள் வந்த போது கடுமையான காய்ச்சில் எங்களுக்கு ஏற்பட்டது. மக்கள் தங்களின் தொழும் தோல் விரிப்பில் உட்கார்ந்து தொழும் போது அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். உட்கார்ந்து தொழுபவனின் தொழுகை, நின்று தொழுபவனின் தொழுகையில் பாதி போன்றது தான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அப்துல்லா இப்னு அம்ரு இப்னுல் ஆஸ்(ரலி) அறிவிக்கின்றார்கள்.


பாடம் 82
நபில் தொழுகையில் நின்று தொழுவது பற்றி..
எண் 306: நபி(ஸல்) அவர்கள் இறப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன் வரை தன் தொழுகை விரிப்பில் அவர்கள் உட்கார்ந்து தொழுதததை நான் பார்ததே இல்லை. (இறக்கும் ஒரு வருடத்திற்கு முன்பு) தன் தொழுகையின் விரிப்பில் உட்கார்ந்து தொழுவார்கள். ஒரு சூராவை ஓதுவார்கள். அதை அழகாகவும் ஓதுவார்கள் என ஹபஸா(ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது முஸ்லிம், திர்மிதீ, நஸயீ - யில் இடம் பெற்றுள்ளது)


எண் 307: இரவுத் தொழுகையை நபி(ஸல்) அவர்ள் முதுமை அடையும் வரை அமர்ந்து தொழுததை நான் பார்த்ததே இல்லை. (முதுமை ஏற்பட்டதற்குப் பிறகு) உட்கார்ந்து கிராஅத் ஓதுவார்கள். பின்பு ருகூஉ செய்ய விரும்பினால் எழுந்து நின்று முப்பது அல்லது நாற்பது அளவுக்கு கிராஅத் ஓதுவார்கள். பின்பு ருகூஉ செய்வார்கள் என்று ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(இது அபூதாவூத், திர்மிதீயில் இடம் பெற்றுள்ளது).


எண் 308: நபி(ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுவார்கள். உட்கார்ந்து கிராஅத் ஓதும் போது முப்பது அல்லது நாற்பது அளவுக்கு வசனங்கள் மீதம் இருக்கும் போது எழுந்து நிற்பார்கள். நின்றவர்களாக ஓதுவார்கள். பின்பு ருகூஉ செய்வார்கள். ஸஜ்தா செய்வார்கள். பின்பு இது போலவே இரண்டாவது ரக்அத்திலும் செய்வார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(இது புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, நஸயீ யில் இடம் பெற்றுள்ளது).


எண் 309: உர்வா இப்னு சுபைர், ஸயீத் இப்னு முஸய்யப் இருவரும் குத்தலிட்டு அமர்ந்து தொழுதார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.


பாடம் 84
நடுத்தொழுகை
எண் 310: ஆயிஷா(ரலி) அவர்கள், தனக்கு குர்ஆன் ஒன்று எழுதித் தரும்படி எனக்குக் கட்டளையிட்டார்கள். 2:238 வது வசனம் வந்ததும் என்னைக் கூப்பிடுங்கள் என்று கூறினார்கள். அந்த வசனம் வந்ததும் அவர்களை அழைத்தேன். 2:238 வசனத்தின் ''வஸ்ஸலாத்தில் வுஸ்தா'' (நடுத்தொழுகை என்ற) வாசகத்திற்குப் பின்னால் வஸ்ஸலாத்தில் அஸர் (அஸர்த் தொழுகை) என்று எழுதிட கட்டளையிட்டார்கள். இப்படியே நபி(ஸல்) அவர்களிடம் இருந்து நான் கேட்டுள்ளேன் என்று கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அவர்களின் அடிமை அபூயூனுஸ்(ரலி) கூறுகின்றார்கள்.
(இது முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, நஸயீ யில் இடம் பெற்றுள்ளது).


எண் 311: ஹபஸா(ரலி) அவர்களுக்காக நான் குர்ஆனை எழுதிக் கொண்டிருந்தேன். 2:238 வது வசனம் வந்ததும் என்னை அழையுங்கள் என அவர்கள் என்னிடம் கூறினார்கள். அந்த வசனம் வந்ததும், அவர்களை அழைத்தேன். வஸ்ஸலாத்தில் வுஸ்தா என்ற வார்த்தைக்கு அடுத்து, ஸலாத்தில் அஸ்ரி என்று எழுதிடும்படி என்னிடம் கூறினார்கள் என அம்ரு இப்னு ராஃபிஉ கூறுகின்றார்கள்.


எண் 312: நடுத்தொழுகை என்பது லுஹர் தொழுகை தான் என அப்துல்லா இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என இப்னு யர்பூஉல் மக்சூமி கூறுகின்றார்கள்.


எண் 313: நடுத்தொழுகை என்பது சுப்ஹுத் தொழுகை தான் என அப்துல்லா இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள், அலீ இப்னு அபீதாலிப்(ரலி) இருவரும் கூறியதாக தனக்கு செய்தி கிடைத்தது என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.
இது விஷயமாக அலீ(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி) இருவரும் கூறியதே நான் கேட்டதில் எனக்கு மிக விருப்பமானதாக உள்ளது என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


பாடம் 84
ஒரே ஆடையில் தொழ அனுமதி
எண் 314: (என் தாய்) உம்மு சல்மா(ரலி) அவர்கள், வீட்டில் ஒரே ஆடையில் அதைச் சுற்றியவர்களாக, அத்ன ஓரப் பகுதிகளை தன் ஒரு தோள் புஜத்தில் போட்டவர்களாகத் நபி(ஸல்) அவர்கள் தொழுததைப் பார்த்ததாக அபூஸலமா வின் மகன் உமர்(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.
(இதன் கருத்து புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், நஸயீ ஆகியவற்றில் இடம் பெற்றுள்ளது).


எண் 315: ஒரே ஆடையில் தொழுதால் (கூடுமா?) என்பது பற்றி நபி(ஸல்) அவர்களை ஒருவர் கேட்டார். ''உங்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு ஆடைகள் உண்டா? என்ன? என நபி(ஸல்) அவர்கள் (திருப்பிக்) கேட்டார்கள் என்று அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத், இப்னு மாஜா, நஸயீ யில் இடம் பெற்றுள்ளது).


எண் 316: ஒரே ஆடையில் ஒரு ம னிதர் தொழலாமா? என அபூஹுரைரா(ரலி) அவர்களிம் கேட்கப்பட்டது. ''தொழுலாம்'' என்ற பதில் கூறினார்கள். அதை நீங்கள் செய்வீர்களா? என அவர்களிடம் கேட்கப்பட்டது. ஆம்! எது (உபரியான) ஆடைகள் மரச்சட்டத்தில் இருக்கும் போதே நானும் ஒரே ஆடையில் தொழுகிறேன் என அபூஹுரைரா(ரலி) அவர்கள் கூறினார்கள் என்று ஸயீத் இப்னு முஸய்யப் கூறுகின்றார்கள்.


எண் 317: ஜாபிர் இப்னு அப்துல்லா(ரலி) அவர்கள் ஒரேஆடையில் தொழக் கூடியவர்களாக இருந்தார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.


எண் 318: முஹம்மது இப்னு ஹஸ்ம் அவர்கள் ஒரே சட்டையிலேயே தொழுவார்கள் என ரபீஆ இப்னு அபீ அப்துர் ரஹ்மான் கூறுகின்றார்கள்.


எண் 319: இரண்டு ஆடைகள் இல்லாதவர். ஒரே ஆடையிலேயே அதை (தன்மீது) சுற்றியவராகத் தொழட்டும். அந்த ஆடையும் சிறியதாகக இருந்தால் அதை இருப்பில் கட்டிக் கொள்ளட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் இப்னு அப்துல்லா(ரலி) அறிவிக்கின்றார்கள்.
தன் தோள் புஜங்களின் மீது ஒரு ஆடையாக அல்லது தலைப்பாகையாக ஒரே ஆடையில் தொழுவது என்பது எனக்கு விருப்பமானது என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


பாடம் 85
பெண்ணிற்குரிய தொழுகை ஆடை
எண் 320: பெரிய மேலாடையையும், தலையை மறைக்கும் ஆடையையும் உடுத்தி ஆயிஷா(ரலி) அவாகள் தொழுவார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


எண் 321: ஒரு பெண் தொழும் ஆடைகள் எவை? என உம்மு ஸல்மா (ரி) அவர்களிடம் என் தாய் கேட்டார்கள். அதற்கு அவர்கள் '' தiயை மறைக்கும் ஆடையிலும், காலின் மேற்பகுதியை மறைக்கும்படியாக விசாலமான மேலாடையிலும் அவள் தொழட்டும் என பதில் கூறினார்கள் என்று முஹம்மத் இப்னு ஸைத் இப்னு குன்புத் அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


எண் 322: மைமூனா(ரலி) அவர்கள் இடுப்பாடை ஏதுமின்றி, பெரிய மேலாடை ஒன்றையும் தலைமறைப்பு ஆடையையம் உடுத்தித் தொழுதார்கள் என மைமூனா(ரலி) அவர்களது வீட்டில் இருந்த உபைதுல்லா அல் கவ்லாஸ் கூறுகின்றார்கள்.


எண் 323: எனக்கு இடுப்பாடை (அணிய) கஷ்டமாக உள்ளது. எனவே நான் தலைமறைப்பு அடையிலும் மேலாடையிலும் தொழட்டுமா? என ஒரு பெண் மார்க்கத் தீர்ப்பு கேட்டார். அதற்கு, மேலாடை விசாலமானதாக இருப்பின் தொழலாம் என உர்வா பதில் கூறினார்கள் என்று ஹிஷாம் கூறுகின்றார்கள்.


பாடம் 87
பயணத்திலும் பயணம் இல்லாத காலத்திலும் இரண்டு தொழுகைகளைச் சேர்த்துத் தொழுதல்
எண் 324: நபி(ஸல்) அவர்கள் 'தபூக்' போருக்குப் பயணம் சென்ற போது லுஹரையும், அஸரையும் 'ஜம்உ' செய்தார்கள் என அஹ்ரஜ்(ரலி) கூறுகின்றார்கள்.


எண் 325: நபி(ஸல்) அவர்களுடன் நபித்தோழர்கள், 'தபூக்' போருக்குச் சென்ற சமயம் நபி(ஸல்) அவர்கள் ''லுஹரையும், அஸரையும்'' - ''மஹ்ரிபையும், இஷாவையும்'' 'ஜம்உ' செய்தார்கள். அந்நாளில் தொழுகையை தாமதப்படுத்தி (போர்க்களத்தில் இருந்து) வெளியேறி லுஹரையும், அஸரையும் இணைத்துத் தொழுதார்கள். பின்பு (போர்க்களத்தில்) நுழைந்து (பின்பு அங்கிருந்து) வெளியேறி மஹ்ரிபையும், இஷாவையும் இணைத்துத் தொழுதார்கள். பின்பு, நீங்கள் அல்லாஹ்வினால் தபூக் அருகே உள்ள ஊற்றுக் கண் அருதே நாளை வருவீர்கள். பகல் நேரம் வரும் வரை அங்கே நீங்கள் வராதீர்கள். அங்கே ஒருவர் வந்து விட்டால், அதன் தண்ணீரில் சிறிதளவு கூட எவரும், நான் வரும் வரை தொட வேண்டாம். அங்கே நாங்கள் வந்தோம் - அதன் பக்கம் எங்களில் இருவர் மட்டும் முந்தி (தொட்டு) விட்டனர். ஊற்றுக் கண், சிறிதளவு தண்ணீரையே வெளிப்படுத்தியது.அந்த தண்ணீரை நீங்கள் இருவரும் தொட்டீர்களா? ன்று அவ்விருவரிடமும் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர்கள், 'ஆம்' என்றனர். ''அல்லாஹ் தான் நாடியதை கூறுவான்'' என் அந்த இருவரிடமும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்பு மக்கள் தங்கள் கைகளினால் ஊற்றிலிருந்து சிறிதளவு எடுத்து, ஒன்றில் ஒன்று சேர்த்தார்கள். பின்பு அதில் நபி(ஸல்) அவர்கள் தன் முகத்தை, தன் கைகளைக் கழுவினார்கள். பின்பு அதிலேயே அதை மீண்டும் ஊற்றினார்கள். அதிக தண்ணீரை ஊற்றுக் கண் வெளியாக்கியது. உடனே மக்கள் தண்ணீர் குடித்தார்கள். பின்பு, ''முஆதே! உனக்கு ஆயுள் நீடித்திருந்தால் இந்த இடத்தில் தோட்டங்கள் நிரம்பி இருப்பதை நீர் காண்பாய்'' என்;று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


எண் 326: நபி(ஸல்) அவர்கள் தன் (பயணத்தில்) வேகத்தை விரும்பினால் மஹ்ரிபையும், இஷாவையும் 'ஜம்உ' செய்வார்கள் என அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.


எண் 327: பயம் அல்லாத காலத்திலும், பயணம் அல்லாத காலத்திலும் நபி(ஸல்) அவர்கள் லுஹர், அஸரைச் சேர்த்தும், மஹ்ரிபு - இஷாவைச் சேர்த்தும் தொழுதார்கள் என்று அப்துல்லா இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கின்றார்கள்.
மழைக் காலத்திலும் இது கூடும் என்று கருதுகிறேன் என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


எண் 328: மழைக்காலத்தில் தலைவர்கள் மஹ்ரிபையும் இஷாவையும் ஜம்உ செய்யும் போது அவர்களுடன் சேர்ந்து அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களும் ஜம்உ செய்வார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


எண் 329: பயணத்தின் போது லுஹரையும், அஸரையும், ஜம்உ செய்யலாமா? என ஸாலிம் இப்னு அப்து;லா அவர்களிடம் கேட்ட போது, செய்யலாம். ஆனால் குற்றமில்லை. 'அரபா' வில் மக்கள் அவ்வாறு தொழுவதை நீர் பார்க்கவில்லையா? என பதில் கூறியதாக இப்னு ஷிஹாப் கூறுகின்றார்கள்.


எண் 330: நபி(ஸல்) அவர்கள் பகலில் பயணம் செல்ல விரும்பினால் லுஹரையும், அஸரையும் ஜம்உ செய்வார்கள். இரவில் பயணம் செல்வதை விரும்பினால் மஹ்ரிபையும் இஷாவையும் ஜம்உ செய்வார்கள் என அலீ இப்னு ஹுஸைன்(ரலி) கூறுகின்றார்கள்.


பாடம் 87
பயணத்தில் தொழுகையை சுருக்கித் தெழுதல்
எண் 331: அபூ அப்துர் ரஹ்மான் அவர்களே! ஊரில் இருக்கும் போது தொழும் தொழுகையை,பயத் தொழுகையை குர்ஆனில் கண்டு கொண்டோம். ஆனால் பயணத் தொழுகை பற்றி குர்ஆனில் நாம் அறியவில்லையே என காலித் இப்னு உஸைதின் குடும்பத்தினரில் ஒருவர் கேட்ட போது ''என் சகோதரனின் மகனே! அல்லாஹ் நம்மின் பக்கம் முஹம்மது(ஸல்) அவர்களை (த் தூதராக) அனுப்பினான். நாமாக எதையும் கற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் எதைச் செய்ய நாம் கண்டோமோ அதையே நாமும் செய்கிறோம் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் பதில் கூறினார்கள் என்று இப்னு ஷிஹாப் கூறுகின்றார்கள்.


எண் 332: பயணத்தின் போதும், உள்ளூரில் இருக்கும் போதும் (ஒவ்வொரு நேரத்திற்கும்) இரண்டு ரக்அத் களாக தொழுகை கடமையாக்கப்பட்டது. பின்பு அது பயணத் தொழுகையில் உறுதி செய்யப்பட்டு, ஊரில் தங்கி தொழப்படும் தொழுகையில் (ரக்அத்) அதிகப்படுத்தப்பட்டது என ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்.


எண் 333: உங்களின் தந்தை (அப்துல்லா இப்னு உமர்) பயணத்தின் போது மஹ்ரிபுத் தொழுகையை மிகவும் தாமதப்படுத்திய சம்பவம் எது? என ஸாலிம் இப்னு அப்துல்லாவிடம் கேட்ட போது, நாங்கள் 'தாத்ஜைத்' என்ற இடத்தில் இருந்த போது சூரியன் மறைந்து, (ஆனால்) 'அகீக்' என்ற இடத்திற்கு வந்த போது (தான்) மஹ்ரிபை அவர்கள் தொழ வைத்தார்கள் என ஸாலிம் பதில் கூறியதாக யஹ்யா இப்னு ஸயீத் கூறுகின்றார்கள்.


பாடம் 88
தொழுகையை சுருக்கிட வேண்டிய அவசியம்
எண் 334: அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் ஹஜ்ஜோ, உம்ராவோ செய்யக் கிளம்பினால் 'துல்ஹுலைஃபா' என்ற இடத்திலேயே 'கஸ்ர்' செய்வார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


எண் 335: அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் 'ரய்ம்' எனும் ஊருக்கு பயணம் செய்தார்கள். அதற்குப் போகும் வழியிலேயே 'கஸ்ர்' தொழுதார்கள் என அவர்களின் மகன் ஸாலிம் அறிவிக்கின்றார்கள்.
''கஸ்ர்'' என்பது 48 மைல் தூர அளவுக்குத் தான் என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


எண் 336: அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் 'தாது நஸ்பு' என்ற இடத்திற்கு பயணம் செய்தார்கள். அது சமயம் 'அதன் வழியிலேயே தொழுகையை கஸ்ர் செய்தார்கள் என ஸாலிம் அறிவிக்கின்றார்கள்.
மதீனாவிற்கும், தாத் நஸ்புக்கும் மத்தியில் 48 மைல் தூரமாகும் என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


எண் 337: அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் கைபருக்கு பயணம் மேற்கொண்டால் (தொழுகையை) கஸ்ர் செய்வார்கள்.


எண் 338: அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் ஒருநாள் முழுவதும் பயணம் செல்லும் தூரத்தில் கஸ்ர் செய்வார்கள் என அவர்களின் மகன் ஸாலிம் கூறுகின்றார்கள்.


எண் 339: அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களுடன் தான் 'பரீத்' என்ற இடத்திற்கு சென்ற போது அவர்கள் தொழுகையை கஸ்ர் செய்யவில்லை என நாபிஉ கூறுகின்றார்கள்.


எண் 340: அப்துல்லா இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் மக்காவுக்கும், தாயிபுக்கும் இடைப்பட்ட அளவிலும், மக்காவுக்கும் அஸபானுக்கும் இடைப்பட்ட தூர அளவிலும், மக்காவுக்கும், ஜித்தாவுக்கும் இடைப்பட்ட தூர அளவிலும் தொழுகையை 'கஸ்ர்' செய்வார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.
அதன் தூரம் 48 மைல் என்றும், தொழுகையை கஸ்ர் செய்வதின் தூர அளவில் நான் கேட்டதில் எனக்கு இதுவே விருப்பமானது என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.
பயணத்தை விரும்புவர் தன் ஊரில் (எல்கையில் உள்ள) வீட்டைக் கடக்கும் வரை தொழுகையை 'கஸ்ர்' செய்யவும் கூடாது. (இது போல்) தன் ஊரின் (எல்லையில் உள்ள) வீட்டில் ஒன்றைத் தூண்டவோ அல்லது நெருங்கவோ செய்யும் வரை பூர்த்தி செய்யவும் கூடாது என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


பாடம் 89
சில நாட்கள் சேர்ந்து தங்காத பயணி தொழுகையை சுருக்குதல்
எண் 341: 12 இரவுகள் நான் தங்கினாலும் சேர்ந்தாற் போல் (ஒரு ஊரில்) நான் தங்க முடிவு செய்யவில்லையாயின் பயணத் தொழுகையே தொழுவேன் என அப்துல்லா இப்னு உமர்(ரலி) கூறியதாக அவர்களின் மகன் ஸாலிம் கூறுகின்றார்கள்.


எண் 342: அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் பத்து இரவுகள் மக்காவில் தங்கி இருந்த போது, தொழுகையை கஸ்ர் செய்வார்கள். ஆனால் அதே தொழுகையை ஜமாத்துடன் தொழுதாலோ, இமாமின் தொழுகையாகவே தொழுவார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


பாடம் 90
சேர்ந்து (சில நாட்கள்) தங்கும் பயணி 'கஸ்ர்' செய்யாமல் தொழுவது
எண் 343: ஒரு பயணி நான்கு இரவுகள் சேர்ந்து தங்க முடிவு செய்து விட்டால் அவன் தொழுகையை முழுமையாக்கட்டும் என ஸயீத் இப்னு முஸய்யப் கூறியதாக அதாஉ அல் ரோஸானீ அறிவிக்கின்றார்.
இது நான் கேட்டதில் எனக்கு விருப்பமானது என மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.
கைதியின் தொழுகை பற்றி மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அவன், ஊரில் தங்கி உள்ளவன் போலாவான். எனினும் அவன் பயணியாக இருந்தால் தவிர என்று பதில் கூறினார்கள்.


பாடம் 91
ஒரு பயணி இமாமாக தொழ வைத்தால் அல்லது உள்ளூர்வாசி பின்னே நின்று தொழுதால்..
எண் 344: உமர்(ரலி) அவர்கள் மக்காவிற்கு வந்தர் மக்களுக்கு (நான்கில்) இரண்டு ரக்அத் தொழ வைப்பார்கள். பின்பு, மக்காவாசிகளே! நாங்கள் பயணிகள். எனவே, நீங்கள் உங்கள் தொழுகையைப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள் என உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள் என்று அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.


எண் 345: உமர்(ரலி) அவர்கள் பற்றிய இந்தச் செய்தியை அஸ்லம் அவர்கள் கூறுகின்றார்கள்.


எண் 346: அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் மினாவில் இமாமுக்குப் பின்னே நான்கு ரக்அத் களாக தொழுவார்கள். அதையே தனித்துத் தொழுதால் இரண்டு ரக்அத்தாக தொழுவார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


எண் 347: அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள், அப்துல்லா இப்னு ஸஃப்வான்(ரலி) அவர்களை நோய் விசாரிக்க வந்தார்கள். அது சமயம் எங்களுக்கு (நான்கு ரக்அத்தில்) இரண்டு ரக்அத்தை தொழ வைத்ததும் தொழுகையை முடித்துக் கொண்டார்கள். நாங்கள் எழுந்து (மற்ற ரக்அத்களைப் ) பூர்த்தி செய்தோம் என அப்துல்லா இப்னு ஸஃப்வான்(ரலி) அவர்களின் மகன் ஸஃப்வான் கூறுகின்றார்கள்.


பாடம் 92
பயணத்தில் இரவும் பகலும் நபில் தொழுதல், வாகனத்தில் தொழுதல்

எண் 348: அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் பயணத்தில் பர்லுத் தொழுகைக்கு முன்போ பின்போ எதையும் தொழ மாட்டார்கள். ஆனால் இரவின் நடுப் பகுதியிலோ அவர்கள் தரை மீதும் தொழுவார்கள். வாகனத்தின் மீதும் அது செல்லும் திசை நோக்கித் தொழுவார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


எண் 349: காஸிம் இப்னு முஹம்மத், உர்வா இப்னு சுபைர், அபூபக்கர் இப்னு அப்துர் ரஹ்மான் ஆகியோர் பயணத்தில் நபில் தொழுவார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.
பயணத்தில் நபில் தொழுவது பற்றிக் கேட்கப்பட்ட போது, இரவானாலும், பகலானாலும் அதனால் குற்றமில்லை. சில அறிஞர்கள் அப்படித் தொழுதுள்ளார்கள் என எனக்கு செய்தி கிட்டியது என மாலிக் (ரஹ்) அவர்கள் பதில் கூறினார்கள் என்று யஹ்யா கூறுகின்றார்கள்.


எண் 350: தன் மகன் உபைதுல்லா பயணத்தின் போதும் நபில் தொழுததைக் கண்ட அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் ஏதும் ஆட்சேபணை செய்யவில்லை என நாபிஉ கூறுகின்றார்கள்.


எண் 351: நபி(ஸல்) அவர்கள் கழுதையின் மீதமர்ந்து, 'கைபர்' திசை நோக்கி தொழுததை நான் பார்த்தேன் என அப்துல்லா இப்னு உமர்(ரலி) அறிவிக்கின்றார்கள்.


எண் 352: நபி(ஸல்) அவர்கள் பயணத்தின் போது தன் வாகனத்தில் எத்திசை நோக்கியேனும் தொழுவார்கள என அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறியதாக கூறி விட்டு, இவ்வாறு தான் அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களும் செய்வார்கள் என அப்துல்லா இப்னு தினார் கூறுகின்றார்கள்.


எண் 353: அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் பிரயாணம் செய்யும் போது கழுதையின் மீதமர்ந்து கிப்லா அல்லாத திசை நோக்கித் தொழும் போது அவர்கள் லேசாக தலையை குனிவது மூலம் ருகூஉ வும், எப் பொருள் மீதும் நெற்றியை வைக்காமல் (தலையைச் சாய்த்து) ஸஜ்தாவும் செய்ததை நான் பார்த்தேன் என யஹ்யா இப்னு ஸயீத் கூறுகின்றார்கள்.


பாடம் 93
லுஹாத் தொழுகை
எண் 354: நபி(ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி பெற்ற வருடத்தில் ஒரே ஆடையை (தன்மீது) சுற்றிய(ணிந்த)வர்களாக எட்டு ரக்அத் தொழுதார்கள் என அபூதாலிபின் மகள் உம்மு ஹானீ(ரலி) அறிவிக்கின்றார்கள்.


எண் 355: நான் மக்கா வெற்றி வருடத்தில் ஒருநாள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்களின் மகள் பாத்திமா அவர்கள் ஒரு ஆடையால் மறைத்துக் கொண்டிருக்க நபி(ஸல்) அவர்கள் குளிக்கக் கண்டேன். நான் ஸலாம் கூறியதும், ''யார் அப்பெண்?'' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான், அபூதாலிபின் மகள் உம்மு ஹானீ என்றேன். உம்மு ஹானிக்கு எனது வாழ்த்துக்கள் என்று நபி(ஸல்) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்பு அவர்கள் குளித்து முடித்ததும், ஒரு ஆடையை தன் மீது சுற்றிக் கொண்டு, எட்டு ரக்அத் தொழுதார்கள். தொழுது முடித்ததும் இறைத்தூதர் அவர்களே! நான் அடைக்கலம் கொடுத்த புலான் இப்னு ஹுபைராவைக் கொல்ல வேண்டும் என என் தாய் வழிச் சகோதரர் எண்ணுகிறார் என்றேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், உம்மு ஹானியே! நீர் அடைக்கலம் கொடுத்தவருக்கு நாமும் அடைக்கலம் கொடுத்தோம் என்றார்கள். இது நடந்தது லுஹா நேரத்திலாகும் என்று உம்மு ஹானீ(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


எண் 356: லுஹாத் தொழுகையை நான் தொழுவேன். ஆனால் நபி(ஸல்) அவர்கள் அதைத் தொழுக நான் கண்டதில்லை. நபி(ஸல்) அவர்கள் தாங்கள் ஒரு செயலை செய்ய விருப்பம் கொண்டு அதைச் செய்யாமல் விட்டு விடுவார்கள். மக்கள் தங்கள் மீது அதைக் கடமையாக்கிக் கொள்வார்களோ என்ற அச்சம் தான் காரணம் என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்.


எண் 357: ஆயிஷா(ரலி) அவர்கள் எட்டு ரக்அத் லுஹாத் தொழுவார்கள். பின்பு (அத்தொழுகையை தொழாதிருந்த போது) என் பெற்றோர் என்னோடு (உயிருடன்) இருந்திருந்தால் அவைகளை விட்டிருக்க மாட்டேன் என்றும் கூறினார்கள் என ஸைத் இப்னு அஸ்லம் கூறுகிறார்கள்.


பாடம் 94
லுஹாத் தொழுகை முறை
எண் 358: எனது பாட்டி முலைகா அவர்கள் நபி(ஸல்) அவர்களை விருந்துக்கு அழைத்தார். நபி(ஸல்) அர்கள் சாப்பிட்டார்கள். பின்பு, எழுந்திருங்கள், உங்களுக்கு நான் தொழ வைக்கிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நீண்ட நாட்களாக பயன்படுத்திய இற்றுப் போன (பழைய) பாயில் நான் நின்றேன். பாயில் தண்ணீர் தெளித்துப் பயன்படுத்தினேன். அவர்கள் தொழ வைக்கத் தயாரானார்கள். அவர்களுக்குப் பின்னால் (எங்கள் வீட்டில் இருந்து) அனாதையான ஒருவருடன் நான் அணிவகுத்து நின்றேன். எங்களுக்குப்பின் என் பாட்டி இருந்தார். எங்களுக்கு இரண்டு ரக்அத் தொழ வைத்து முடித்தார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவிக்கின்றார்கள்.


எண் 359: நண்பகல் நேரத்தில் உமர்(ரலி) அவர்களிடம் வந்தேன். அவர்களை தொழக் கண்டேன். (நானும் தொழ) அவர்கள் பின்னே நின்றேன். அவர்களின் வலது புறத்தின் நேராக என்னை ஆக்கும் அளவுக்கு என்னை நெருங்கினார்கள். யர்பஉ என்பவர் வந்த போது, நான் பின்னோக்கி வந்தேன். அவர்களுக்குப் பின்னால் வரிசையாக நின்றோம் என அப்துல்லா இப்னு உத்பா இப்னு மஸ்ஊத் கூறுகின்றார்கள்.


பாடம் 95
தொழுபவர் தன் முன்னே எவரும் நடக்காமலிருக்கச் செய்தல்
எண் 360: உங்களில் ஒருவர் தொழுதால் அவனுக்கு முன் நடந்து செல்ல ஒருவனையும் அனுமதிக்க வேண்டாம். இயன்றவரை அவனை தடுக்கட்டும். அவன் மறுத்தால் அவனிடம் சண்டை பிடிக்கட்டும். (காரணம்) அவனே ஷைத்தான் என நபி(ஸல்) கூறியதாக அபூஸய்துல் குத்ரீ(ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ யில் உள்ளது).


எண் 361: தொழுபவனின் குறுக்கே நடப்பவன் விஷயமாக நபி(ஸல்) அவர்களின் இருந்து அறிந்து என்ன? என அபூஜுஹைம்(ரலி) அவர்களிடம் கேட்க வரும்படி என்னை ஜைத் இப்னு காலித் அனுப்பி வைத்தார்கள்.
''தொழுபவனின் குறுக்கே நடந்து செல்பவன், அவன் மீது உள்ளதை (தண்டனையை) அறிந்தால், அவன் முன் நடந்து செல்வதை விட நாற்பது நாள் கூட (தொழுகையை முடிக்கட்டும் என எதிர்பார்த்து) நிற்பது அவனுக்கு சிறப்பாகி விடும்'' என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஜுஹைம் கூறினார்கள்.
(என்னிடம்) கூறியவர் நாற்பது நாள் அல்லது நாற்பது மாதம் அல்லது நாற்பது வருடம் என்பதில் எதைக் கூறினார் என்பதை நான் அறிய மாட்டேன் என இதன் அறிவிப்பாளரில் ஒருவரான அபூ நஸ்ர் கூறுகின்றார்கள்.


எண் 362: தொழுகையாளியின் குறுக்கே நடந்து செல்பவன், அவன் மீது உள்ளதை அறிந்தால் அவன் குறுக்கெ செல்வதை விட பூமிக்குள் உயிருடன் புதையுண்டு போவது அவனுக்கு சிறப்பாகி விடும் என கஃபுல் அஹ்பார் கூறியதாக அதாஉ இப்னு யஸார் கூறுகின்றார்கள்.


எண் 363: பெண்கள் தொழுது கொண்டிருக்கும் போது, அவர்கள் முன்னே நடந்து செல்வதை அப்துல்லா இப்னு உமர்(ரலி) வெறுத்தார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


எண் 364: அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் (தொழும்) ஒருவரின் குறுக்கே செல்லவும் மாட்டார்கள். தன் முன்னேயும் யாரையும் நடக்கவும் விடவும் மாட்டார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


பாடம் 96
தொழுபவனின் முன்னே நடந்து செல்ல அனுமதி
எண் 365: நான் பருவ வயதை நெருங்கிய காலத்தில், மினாவில் மக்களுக்கு நபி(ஸல்) அவர்கள் தொழ வைக்கும் நிலையில் கழுதையின் மீது ஏறி நான் வந்து கொண்டிருந்தேன். ஸப்புகளுக்கு மத்தியில் குறுக்கே சென்று, பின்பு வாகனத்தில் இறங்கி கழுதையை மேய அனுப்பினேன். ஸஃபில் நுழைந்தேன். யாரும் எனக்கு ஆட்சேபணை தெரிவிக்கவில்லை என அப்துல்லா இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(இதே கருத்து புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ யில் இடம் பெற்றுள்ளது).


எண் 366: தொழுகை நடந்து கொண்டிருக்கும் போது. ஸஹ்து இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்கள் ஸஃப்புகளுக்கு மத்தியில் நடந்து செல்வார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.
தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு, இமாமும் (தக்பீர் கூறி) ஹரமாக்கிய பின், ஒருவர் பள்ளிக்கு நுழைய ஸப்புகளுக்கு மத்தியில் நுழைவதைத் தவிர வேறு ஒன்றை பெற்றுக் கொள்ளவில்லையானால், ஸஃப்புகளுக்குள் நுழையக் கூடும் என்றே கருதுகின்றேன் என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


எண் 367: தொழுகையாளின் குறுக்கே நடப்பதினால் தொழுகை முறிந்து விடாது என அலீ இப்னு அபீதாலிப்(ரலி) அறிவித்தார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


எண் 368: தொழுகையாளியின் குறுக்கே நடப்பதினால் தொழுகையை முறித்து விடாது என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள் என ஸாலிம் இப்னு அப்துல்லா கூறுகின்றார்கள்.


பாடம் 97
பயணி தன் தொழுகையின் போது முன்னே தடுப்பை ஏற்படுத்துதல் !
எண் 369: அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் தொழுதால் தன் வாகனத்தையே தடுப்பாக்கிக் கொள்வார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


எண் 370: திறந்த வெளியில் தடுப்பேதுமின்றி தன் தந்தை உர்வா தொழுவார்கள் என ஹிஷாம் கூறுகின்றார்கள்.


பாடம் 98
தொழுகையில் பொடிக் கற்களை தடவுதல்
எண் 371: அப்துல்லா இப்னு உமர் (ரல) அவர்கள் ஸஜ்தா செய்யும் போது தன் நெற்றியை வைப்பதற்காக (தரையில் உள்ள) பொடிக் கற்களை லேசாகத் தடவுவதை நான் பார்த்தேன் என அபூ ஜஹ்ஃபர் காரீ கூறுகின்றார்கள்.


எண் 372: பொடிக் கற்களை அப்புறப்படுத்துவது என்பது ஒரு தடவை தான் அதை விடுவது சிவப்பு ஒட்டகங்களை விட (அதாவது அவை கிடைப்பதை விட) சிறந்ததாகும் என்று அபூதர்(ரலி) அவர்கள் கூறியதாக தனக்கு செய்தி கிடைத்தது என யஹ்யா இப்னு ஸயீத் கூறுகின்றார்கள்.


பாடம் 99
ஸஃப்பு(வரிசை)களைச் சரி செய்தல்
எண் 373: உமர்(ரலி) அவர்கள் ஸஃப்புகளைச் சரி செய்யும்படி (சிலருக்குக்) கட்டளையிட்டார்கள். அவர்கள், அவர்களிடம் வந்து ஸஃப்பு சரியாக உள்ளது என தகவல் கூறியதுமே தக்பீர் (தஹ்ரீமா) கூறுவார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


எண் 374: உதுமான்(ரலி) அவர்களுடன் நான் இருந்தேன். தொழுகை நேரம் வந்தது. நான் எனக்குரிய கடமைகள் பற்றி அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். தன் செருப்புகளால் பொடிக் கற்களை சரிசமப்படுத்திய அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். ஸஃப்புகளைச் சரி செய்யும்படி அவர்கள் நியமித்த சிலர் அவர்களிடம் வந்து ஸஃப்புகள் சரியாகி விட்டது என தகவல் கூறினார்கள். ''ஸஃப்பில் சேர்ந்து கொள்'' என என்னிடம் கூறினார்கள். பின்பு தக்பீர் கூறினார்கள் என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


பாடம் 100
தொழுகையில் கைகளை ஒன்றின் மீது ஒன்று வைத்தல்
எண் 375: உனக்கு வெட்கமில்லையானால் நீ விரும்பியதை செய்து கொள் என்பது நபி(ஸல்) அவர்களின் சொல்லில் உள்ளதாகும். இரண்டு கைகளில் ஒன்றை மற்றொன்றின் மீது தொழுகையில் வைப்பதும், வலது கையை இடது கையின் மீது வைப்பதும், நோன்பு திறப்பதை சீக்கிரம் செய்வதும், ஸஹர் செய்வதை தாமதமாகச் செய்வதும் நபிவழியாகும் என அபூமகாரிகல் பஸ்ரீ அவர்களின் மகன் அப்துல் கரீம் கூறுகிறார்கள்.


எண் 376: தொழுகையில் ஒருவர் தன் வலது கையை இடது குடங்கையில் வைக்க வேண்டும் என மக்கள் ஏவப்பட்டிருந்தனர் என்று ஸஹ்ல் இப்னு ஸஹ்து அஸ்ஸுஇதி(ரலி) அறிவிக்கின்றார்கள்.
இந்த ஹதீஸ் (நபி(ஸல்) வரை) உயர்த்தப்பட்டதாகவே தவிர நான் அறியவில்லை என அபூ ஹாஸிம் கூறுகின்றார்கள்.
(இது புகாரியில் இடம் பெற்றுள்ளது).


பாடம் 101
சுப்ஹில் குனூத் ஓதுதல் !
எண் 377: அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் தொழுகை எதிலும் குனூத் ஓத மாட்டார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


பாடம் 102
தேவைகளை நாடிய நிலையில் ஒரு மனிதன் தொழாதிருத்தல் !
எண் 378: அப்துல்லா இப்னு அர்கம்(ரலி) அவர்கள் தன் தோழர்களுக்கு இமாமத் செய்பவர்களாக இருந்தனர். ஒரு நாள் தொழுகை நேரம் வந்ததம், தன்னுடைய (மலம் ஜலம் கழிக்கும்) தேவைக்காகச் சென்றார்கள். பின்பு திரும்பி வந்து, ''ஒருவர் மலம் ஜலம் கழிக்க விரும்பினால் தொழுகைக்கு முன்னால் அதை முதலில் செய்யட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என்று கூறினார்கள். இதை உர்வா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


எண் 379: தன் தொடைகளுக்கு மத்தியில் அடக்கியவராக உங்களில் ஒருவர்தொழ வேண்டாம் என உமர்(ரலி) அவர்கள் கூறியதாக ஸைத் இப்னு அஸ்லம் கூறுகின்றார்கள்.


பாடம் 103
தொழுகையை எதிர்பார்த்திருத்தல், அதற்காக நடந்து செல்லுதல்
எண் 380: எங்கே தொழுதாரோ அதே தொழுகை இடத்தில் ஒளு முறியாத நிலையில் அடுத்த தொழுகையை எதிர்பார்த்து இருப்பவருக்காக, ''இறைவா! அவரை மன்னிப்பாயாக! அவருக்கு அருள் புரிவாயாக!'' என மலக்குகள் துஆச் செய்வார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(இது புகாரீ யில் இடம் பெற்றுள்ளது).
''ஒளு முறியாத வரை என்ற வார்த்தைக்கு, ஒளுவை முறிக்கம் காரியங்கள் தான்'' என்றே கருதுகிறேன் என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


எண் 381: தொழுகை ஒருவரை (பள்ளியிலேயே) தடுத்திருக்கும் காலமெல்லாம் அவர் தொழுகையிலேயே இருக்கிறார். (அதாவது) அவர் தன் குடும்பத்தாரிடம் திரும்பிச் செல்வதை விட்டும் தொழுகையே தவிர வேறெதுவும் அவரைத் தடுக்கவில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(இது புகாரீ, முஸ்லிமிலும் உள்ளது. இதன் கருத்து அபூதாவூத், திர்மிதீ, நஸயீ யிலும் இடம் பெற்றுள்ளது).


எண் 382: ஒருவர் பள்ளியில் வந்து, நல்லதைக் கற்க அல்லது கற்றுக் கொடுக்க என தங்கி விட்டு. பின்பு தன் வீட்டிற்கு வந்தால், அவர் இறைவழியில் போரிட்டு வெற்றி பெற்று) போர்த்தளவாட பொருட்களுடன் திரும்பி வந்தவர் போலாவார் என்று அபூபக்கர் இப்னு அப்துர்ரஹ்மான் கூறுவார்கள் என அவர்களின் அடிமை சுமையா கூறுகின்றார்.


எண் 383: உங்களில் ஒருவர் தொழுது, பின்பு தொழுத இடத்திலேயே அமர்ந்திருந்தால், '' இறைவா! இவரை மன்னிப்பாயாக! அவருக்கு அருள்புரிவாயாக'' என்று வானவர்கள் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பார்கள்.அவர் தன் தொழுமிடத்தை விட்டும் எழுந்து, அடுத்த தொழுகையை எதிர்பார்த்தவராக பள்ளி யில் உட்கார்ந்திருந்தால், அவர்(அடுத்த தொழுகையை) தொழும் வரை தொழுகையில் இருப்பவர் போலாவார் என்று அபூஹுரைரா(ரலி) அவர்கள் கூறியதாக, நுஐம் இப்னு அப்தில்லாஹ் அல் முஜ்மில் கூறுகின்றார்கள்.


எண் 384: அல்லாஹ் தவறுகளை மன்னித்து, அந்தஸ்;தை உயர்த்துகின்ற காரியங்களை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? (அவைகள்) கஷ்டமான நேரத்தில் முழுமையாக ஒளுச் செய்வது, பள்ளியின் பக்கம் அதிமாக நடந்து வருவது, தொழுகைக்குப் பின் மறுதொழுகையை எதிர்பார்ப்பது என்று கூறி விட்டு,இது தான் மாபெரும் போராட்டம் என மும்முறை நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(இது முஸ்லிம், திர்மிதி, இப்னு மாஜா, நஸயீ யில் இடம் பெற்றுள்ளது).


எண் 385: பாங்கு கூறிய பின் பள்ளியில் இருந்து மீண்டும் வர விரும்புபவனைத் தவிர, முனாபிக்கைத் தவிர வேறு யாரும் வெளியேற வேண்டாம் என சொல்லப்பட வேண்டும் என ஸயீத் இப்னு முஸய்யப் கூறுகின்றார்கள்.


எண் 386: உங்களில் ஒருவர் பள்ளியில் நுழைந்தால் உட்காரும் முன் இரண்டு ரக்அத் தொழட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூகதாதா(ரலி) அறிவிக்கின்றார்கள்.
இது புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, இப்னு மாஜா, அஹ்மத், திர்மிதி யில் இடம் பெற்றுள்ளது).


எண் 387: பள்ளியில் நுழைந்தால் தொழும் முன் உட்காருவதை உமது தோழரிடம் நான் பார்க்கின்றேன் அல்லவா? என்று அபூ ஸலமா இப்னு அப்துர் ரஹ்மான் அவர்கள் என்னிடம் கூறினார்கள். அவர்கள் என் தோழர் என்று குறிப்பிட்டது, உமர் இப்னு உபைதுல்லா அவர்களைத் தான். அவர்கள் தான் இவ்வாறு ''பள்ளியில் நுழைந்து தொழும் முன்னால் உட்கார்வதை குறை கண்டார்'' என அபுந் நள்ர் (உமர் இப்னு உபைதுல்லாஹ் அவர்களின் அடிமை) கூறுகின்றார்கள்.
'இது நல்ல நடைமுறை. ஆனால் கட்டாயமல்ல என மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.


பாடம் 104
ஸஜ்தாவில் முகத்தை வைக்கும் இடத்தில் கைகளை வைத்தல்
எண் 388: அப்துல்;லா இப்னு உமர்(ரலி) அவர்கள் ஸஜ்தா செய்தால் தன் முகத்தை எதன் மீது வைக்கின்றார்களோ அதன் மீது உள்ளங்கைகளை வைப்பார்கள். கடும் குளிர் காலத்தில் மணல் பகுதியில் (தன் உள்ளங்கைகளை) வைப்பதற்காக ''பர்னஸ்'' என்ற ஆடையில் இருந்து அவ்விரண்டையும் வெளியாக்குவார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


எண் 389: (ஸஜ்தாவின் போது) நெற்றியை பூமியில் வைத்தால் அதை வைக்கும் இடத்தில் தன் உள்ளங்கைகளை வைக்கட்டும். பின்பு நெற்றியை உயர்த்தினால் கைகளையும் உயர்த்தட்டும். ஏனென்றால் முகம் ஸஜ்தா செய்வத போன்றே இரு கைகளும் ஸஜ்தா செய்கின்றன என அப்துல்லா இப்னு உமர்(ரலி) கூறியதாக நாபிஉ கூறுகின்றார்கள்.


பாடம்: 105
தொழுகையில் அவசியம் ஏற்பட்டால் திரும்புவது, கை தட்டுவது
எண் 390: நபி(ஸல்) அவர்கள் அம்ரு இப்னு அவ்ஃபு(ரலி) அவர்களின் குடும்பத்தாரிடையே சமாதானப்படுத்துவதற்காக அவர்களிடம் சென்று விட்டார்கள். அதுசமயம் தொழுகை நேரம் வந்தது. அபூபக்கர்(ரலி) அவர்களிடம் முஅத்தின் வந்து, நான் இகாமத் கூறுகிறேன். மக்களுக்கு தொழ வைக்கின்றீர்களா? எனக் கேட்டார். சரி என்று கூறிய அபூபக்கர்(ரலி) தொழ வைத்தார்கள். மக்கள் தொழுகையில் இருக்கும் போது நபி(ஸல்) அவாகள் வந்தார்கள். ஸஃப்பில் (வரிசையில்) நிற்பதற்காக ஊடுறுவினார்கள். (நபி(ஸல்) அவர்களின் வருகையை அபூபக்கர்(ரலி) அவர்களுக்கு உணர்த்த) மக்கள் கையொலி எழுப்பினார்கள். அபூபக்கர்(ரலி) அவர்கள் தன் தொழுகையில் இருந்து திரும்பிப் பார்க்காதவர்களாக இருந்தார்கள். மக்களின் கரவொலி அதிகமானதுமே அபூபக்கர்(ரலி) திரும்பி, நபி(ஸல்) அவர்களைக் கண்டார்கள். ''நீர் உன் இடத்தில் நிற்பீராக'' என அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் சமிக்ஞை செய்தார்கள். உடனே அபூபக்கர்(ரலி) அவர்கள் தன் கைகளை உயர்த்தி, நபி(ஸல்) அவர்ள் தன்னை (தொழ வைக்க) கட்டளையிட்டதற்காக அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். பின்பு பின் வாங்கி வந்து (ஸஃப்பில்) சரிசமமாக நின்று கொண்டார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் முன்னோக்கிப் போய் தொழ வைத்தார்கள்.
பின்பு தொழுது முடிந்ததும், அபூபக்கர் அவர்களே! நான் அனுமதித்தப் பின்பும் (நீர் தொழ வைக்க) நிற்காததற்கு காரணம் என்ன? என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்களின் முன் நின்று தொழ வைக்க அபூ குஹஃபாவின் மகனுக்கு தகுதி இல்லை என்று அபூபக்கர்(ரலி) அவர்கள் கூறினார்கள். கரவொலி அதிகரித்திட நான் கண்டேன். தொழுகையில் இது போன்ற நிலை ஒருவருக்கு ஏற்பட்டால் அவர் சுப்ஹானல்லாஹ் என தஸ்பீஹ் கூறட்டும். ஒருவர் தஸ்பீஹ் கூறினால் அவரின் பக்கம் (இமாமான) நீர் திரும்பவும். கரவொலி எழுப்பும் செயல் பெண்களுக்குரியதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை ஸஹ்ல் இப்னு ஸஹ்துஸ் ஸாஇதி(ரலி) அறிவிக்கின்றார்கள்.


எண் 391: இப்னு உமர்(ரலி) அவர்கள் த ன் தொழுகையில் திரும்பிட மாட்டார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.

எண் 392: நான் தொழ வைத்துக் கொண்டிருந்தேன். எனக்குப் பின்னால் அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் இருந்ததை நான் அறியவில்லை. பின்பு (தெரிந்ததும்) திரும்பினேன். என்னை அவர்கள் (திரும்பாதிருக்கும்படி) சுரண்டினார்கள் என அபூ ஜஹ்ஃபர் அல்காரீ கூறுகின்றார்கள்.


பாடம் 106
இமாம் ருகூஉ வில் இருக்கும் போது வந்தவர் செய்ய வேண்டியது
எண் 393: ஸைது இப்னு ஸாபித்(ரலி) அர்கள் பள்ளிக்கு வந்தார்கள். அது சமயம் ருகூஉ வில் மக்களைக் கண்டதும், உடனே ருகூஉ செய்தார்கள். குனிந்தவாறே நடந்து சென்று ஸஃப்பில் இணைந்து கொண்டார்கள் என அபூ உமாமா இப்னு ஸஹ்ல் இப்னு ஹுனைஃப் கூறுகின்றார்கள்.


எண் 394: (ஸஃப்பில் சேர்ந்து கொள்வதற்காக ருகூஉ செய்தவாறே) குனிந்தவாறே அப்துல்லா இப்னு மஸ்ஊது(ரலி) நடந்து செல்வார்கள் என தனக்கு செய்தி கிடைத்தாக மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.


பாடம் 107
நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறுவது
எண் 395: இறைத்தூதர்(ஸல்) அவர்களே! (தொழும் போது) நாங்கள் உங்கள் மீது ஸலவாத் கூறுவது எப்படி? என நபித்தோழர்கள் கேட்டார்கள். ''அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அஸ்வாஜிஹி, வ துர்ரியாத்திஹி, கமா ஸல்லய்த அலா இப்றாஹீம வ பாரிக் அலா முஹம்மதின் வ அஸ்வாஜிஹி. வ துர்ரியத்திஹி கமா பாரக்த அலா ஆலி இப்றாஹீம இன்னக்க ஹமீதுன் மஜீத்'' என்று கூறுங்கள் என்று கூறினார்கள்.


எண் 396: ஸஹ்து இப்னு உபாதா(ரலி) அவர்களது வீட்டில் இருந்த எங்களிடம் நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்களே! உங்கள் மீது ஸலவாத் கூறும்படி அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். நாங்கள் எப்படி ஸலவாத் கூறுவோம் என்று அவர்களிடம் பஷீர் இப்னு ஸஹ்து(ரலி) அவர்கள் கேட்டார்கள். அவர் இதைக் கேட்டிருக்கக் கூடாது என்று நாங்கள் எண்ணும் அளவுக்கு நபி(ஸல்) அவர்கள் மௌனமாக இரந்தார்கள். பின்பு அவர்கள், ''அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லய்த அலா இப்றாஹீம வ பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா ஆலி இப்றாஹீம ஃபில் ஆலமீன், இன்னக்க ஹமீதுன் மஜீத்'', என்று கூறுங்கள். ஸலாம் கூறுவது, நீங்கள் அறிந்தது போல் தான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ மஸ்ஊத் அன்சாரீ(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


எண் 397: நபி(ஸல்) அவர்களின் கப்ரு அருகே அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களைக் கண்டேன். அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கும், அபூபக்கர்(ரலி), உமர்(ரலி) ஆகியோருக்கும் துஆச் செய்தார்கள் என அப்துல்லா இப்னு தீனார் கூறுகின்றார்கள்.


பாடம் 108
தொழுகையின் இதர சட்டங்கள்
எண் 398: நபி(ஸல்) அவர்கள் லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்தும், லுஹருக்குப் பின் இரண்டு ரக்அத்தும், மஹ்ரிபுக்குப் பின் தன் வீட்டில் இரண்டு ரக்அத்தும், இஷாத் தொழுகைக்குப் பின் இரண்டு ரக்அத்தும் தொழுவார்கள். ஜும்ஆவிற்குப் பின் தொழ மாட்டார்கள். ஆனால் (வீட்டிற்கு) திரும்பியதும் இரண்டு ரக்அத் தொழுவார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கின்றார்கள்.


எண் 399: ''இங்கே என் கிப்லாவை நீங்கள் அறிவீர்களா? அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்களின் பக்தியோ, உங்களின் ருகூஉ களோ எனக்கு மறைந்து விடவில்லை. நிச்சயமாக நான் என் முதுகுக்குப் பின்னேயும் உங்களை நான் அறிவேன்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.


எண் 400: நபி(ஸல்) அவர்கள் வாகனத்திலோ, நடந்தோ 'குபா' விற்கு வருவார்கள் என அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

எண் 401: மதுக்குடிப்பவன், திருடுபவன், விபச்சாரம் செய்பவன் இவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். இவர்கள் சம்பந்தமான தண்டனை பற்றிய வசனங்கள் அருளப்படுவதற்கு மன்பு இது நடந்ததாகும். அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் மிக அறிந்தவர்கள் என நபித்தோழர்கள் கூறினார்கள். ''அவைகள் மோசமான செயல்கள். அவைகளுக்கு தண்டனையுண்டு.தன்னுடைய தொழுகையில் ஒருவன் திருடுவதே திருட்டில் மிகக் கெட்டது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதும், ''இறைத்தூதர்(ஸல்) அவர்களே! தொழுகையில் எப்படித் திருட முடியும்?'' என்று நபித்தோழர்கள் கேட்டனர். ''தொழுகையின் ருகூஉ வையும், ஸஜ்தாவையும் பூர்த்தி செய்யாததே! (திருட்டாகும்)'' என்று நபி(ஸல்) அவாகள் கூறினார்கள் என்று நுஃமான் இப்னு முர்ரத்துல் அன்சாரி(ரலி) அறிவிக்கின்றார்கள்.


எண் 402: ''உங்கள் வீட்டிலும் சில தொழுகைகளை நீங்கள் தொழுது கொள்ளுங்கள்'', என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக உர்வா கூறுகின்றார்கள்.


எண் 403: நோயாளிக்கு ஸஜ்தா செய்ய இயலவில்லையானால் தன் தலையால் அவன் சைகை செய்வான். தன் நெற்றியின் பக்கம் எதையும் உயர்த்த வேண்டாம் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறியதாக நாபிஉ கூறுகின்றார்கள்.


எண் 404: மக்கள் தொழுது முடித்த நிலையில் அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் பள்ளிக்கு வந்தால் அதற்கு முன்னால் எதையும் தொழாமல் கடமையான தொழுகையைத் தொழ ஆரம்பித்து விடுவார்கள். இதை ரபீஆ இப்னு அபூ அப்துர் ரஹ்மான் கூறுகின்றார்கள்.


எண் 405: அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் தொழுது கொண்டிருந்த ஒருவரைத் தாண்டி செல்லும் போது, அவருக்கு ஸலாம் கூறினார்கள். அவர் வார்த்தையால்( வ அலைக்குமுஸ் ஸலாம்) என்று பதில் கூறினார்கள். அவரிடம் திரும்பி வந்த அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் தொழுகின்ற உங்களில் ஒருவருக்கு ஸலாம் கூறினால் அவர் பேச வேண்டாம், தன் கையால் சமிக்ஞை செய்யட்டும் எனக் கூறினார்கள் என்று நாபிஉ கூறுகின்றார்கள்.


எண் 406: ஒருவர் தொழுகையைத் (தொழ) மறந்து அவர் (மற்றnhரு தொழுகையை) இமாமுடன் தொழும் போதே நினைவு வருமாயின் இமாம் சலாம் கொடுத்ததும் ஏற்கனவே மறந்த தொழுகையைத் தொழட்டும். பின்பு (அந்த நேரத்;திற்குரிய தொழுகையான) மற்றொன்றை மீண்டும் தொழட்டும் என அப்துல்லா இப்னு உமர்(ரலி) கூறியதாக நாபிஉ கூறுகின்றார்கள்.


எண் 407: அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் கிப்லாவின் சுவற்றில் தன் முதுகை சாய்த்து (அமர்ந்து) இருந்த போது, நான் தொழுது கொண்டிருந்தேன். என் தொழுகையை நான் முடித்ததும், (என்) இடது புறத்தில் இருந்த அவர்களை நோக்கித் திரும்பினேன். ''நீ உன் வலது புறம் திரும்பாமல் இருக்கக் காரணம் என்ன?'' என அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவாகள் கேட்டார்கள். உங்களை (இடதுபுறம்) பார்த்தேன். அதனால் உங்கள் பக்கம் திரும்பினேன் என்று நான் கூறினேன். ''நிச்சயமாக நீ சரியாகச் சொன்னாய். சில பேர் வலது பக்கம் (மட்டும்) திரும்பு'' என்கின்றனர். (அவ்வாறு அல்ல). நீ தொழுதால் நீ உன் வலத புறம் (திரும்ப) விரும்பினாலும், இடப்புறம் (திரும்ப) விரும்பினாலும் நீ விரும்பும் பக்கம் திரும்பு என்னு அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறியதாக வாயிஉ இப்னு ஹிப்பான் கூறுகின்றார்கள்.


எண் 408: அப்துல்லா இப்னு அம்ருப்னுல் ஆஸ்(ரலி) அவர்களிடம் ''ஒட்டகம் கட்டுமிடத்தில் நான் தொழலாமா? என அங்கே தொழுவதை தவறாக கருதாத முஹாஜிரீன்கள் ஒருவர் கேட்டார். அதற்கு அப்துல்லா(ரலி) அவர்கள் ''கூடாது''. எனினும் ஆட்டுத் தொழுவத்தில் தொழுது கொள்'' என்று கூறினார்கள் என உர்வா கூறுகின்றார்கள்.


எண் 409: ஒவ்வொரு ரக்அத்திலும் (இருப்பில்) உட்கார வேண்டிய தொழுகை எது? எனக் கேட்ட ஸயீத் இப்னு முஸய்யப் அவர்கள், பின்பு அவர்களாகவே, ''அது மஹ்ரிப் தான்''.உமக்கு அதில் ஒரு ரக்அத் தவறி விட்டால் தான் (அந்நிலை ஏற்படும்) என்றும் கூறினார்கள் என இப்னு ஷிஹாப் கூறுகின்றார்கள்.


பாடம் 109
தொழுகையின் இதரச் சட்டங்கள்

எண் 410: தனது மகள் ஜைனப்(ரலி) - அபுல் ஆஸ் இப்னு ரபீஆ(ரலி) ஆகியோரின் மகளான (தனது பேத்தி) உமாமா அவர்களைச் சுமந்த நிலையில் நபி(ஸல்) அவாகள் தொழ வைத்தார்கள். அவர்கள் ஸஜ்தா செய்தால் கீழே பேத்தியை வைப்பார்கள்.எழுந்து விட்டால், சுமந்து கொள்வார்கள் என அபூ கதாதா அன்சாரி(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


எண் 411: இரவின் மலக்குகளும், பகலின் மலக்குகளும் உங்களிடையே மாறி, மாறி வருவார்கள். அவர்கள் அஸர் தொழுகையிலும், பஜ்ர் தொழுகையிலும் ஒன்று சேர்வார்கள். பின்பு உங்களுடன் இரவுத் தங்கியிருப்பவர்கள் உயர்வார்கள். அவர்களிடம் அவர்களை நன்கறிந்தவனான அல்லாஹ், ''என் அடியார்களை எப்படி விட்டு வந்தீர்கள் என்று கேட்பான். அதற்கு அவர்கள், அவர்கள் தொழும் நிலையிலேயே விட்டு விட்டு வந்தோம். அவாகள் தொழும் நிலையிலேயே அவர்களிடம் சென்றோம் என பதில் கூறுவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


எண் 412: நபி(ஸல்) அவர்கள் அபூபக்கருக்கு கட்டளையிடுங்கள். மக்களுக்கு அவர் தொழ வைக்கட்டும்' என்று கூறினார்கள். அப்போது நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களே! உங்களின் இடத்தில் அபூபக்கர்(ரலி) அவர்கள் இருந்தால், அவர்களை மக்களுக்கு தன் அழுகை காரணமாக (ஓதுதல் எதையும்) கேட்கச் செய்ய மாட்டார். எனவே, உமருக்குக் கட்டளையிடுங்கள். அவர்கள் மக்களுக்கு தொழ வைக்கட்டும்'' என்று கூறினேன். உடனே நபி(ஸல்) அவர்கள் (மீண்டும்), ''அபூபக்கரை மக்களுக்கு தொழ வைக்கக் கட்டளையிடுங்கள்'' என்று கூறினார்கள். உடனே நான் ஹபஸா(ரலி) அவர்களிடம் வந்து, ''அபூபக்கர் அவர்கள் உங்கள் இடத்தில் இருந்தால் தன் அழுகை காரணமாக மக்களைக் கேட்கச் செய்ய மாட்டார். உமர்(ரலி) க்கு ஏவுங்கள். மக்களுக்கு அவர்கள் தொழ வைக்கட்டும்'' என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறுங்கள் என்று கூறினேன். ஹபஸாவும் அப்படியே செய்தார். உடனே நபி(ஸல்) அவர்கள், ''நீங்கள் என்ன யூசுஃப் நபியைச் சேர்ந்தவர்களா? ''அபூபக்கர்(ரலி) அவர்களை மக்களுக்குத் தொழ வைக்கக் கட்டளையிடுங்கள்'' என்று (மீண்டும்) கூறினார்கள். அப்போது ஹபஸா(ரலி) அவர்கள் என்னிடம், ''உம்மிடம் இருந்து சிறந்ததை நான் அடையவில்லையே'' என்று கூறினார்கள். இதை ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்.


எண் 413: மக்களுக்கு மத்தியில் நபி(ஸல்) அவர்கள் உட்கார்ந்திருந்த போது, அவர்களிடம் ஒருவர் வந்து, அவர்களிடம் ரகசியமாகக் கூறினார். எதை அவர் ரகசியமாகக் கூறினார் என்பது விளங்கப்படவில்லை. ஆனால் நபி(ஸல்) அவர்கள் சப்தமிட்டு கூறியதன்பின்பே தெரிந்தது. அவர். நயவஞ்சகர்களில் ஒருவரைக் கொலை செய்ய நபி(ஸல்) அவர்களிடம் அனுமதி வேண்டி உள்ளர். (நயவஞ்சகரான) அவர், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை முஹம்மது(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்'' என்று சாட்சி கூறவில்லையா? என்று நபி(ஸல்) அவாகள் சப்தமிட்டுக் கேட்டார்கள். ''ஆம், (சாட்சி கூறினார்) ஆனால் அதன் சாட்சி பகர்தலாக அவருக்கு இல்லை'' என்று கூறினார். '' அவர் தொழவில்லையா?'' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ''ஆம் (தொழுதார்). ஆனால் அவருக்கு தொழுகையே இல்லை'' என்று அவர் கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள், இவர்களைத் தான் கொல்வதை விட்டும் அலல்hஹ் எனக்குத் தடை விதித்துள்ளான்'' என்று கூறினார்கள். இதை உபைதுல்லாஹ் இப்னு அதீ இப்னுல் கியார் அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


எண் 414: 'அல்லாஹும்ம லா தஜ்அல் கப்ரீ வஸனய் யுஹ்பது' (இறைவா! என் கப்;ரை வணங்குமிடமாக ஆக்கி விடாதே) என்று நபி(ஸல்) அவர்கள் கூறி விட்டு, தங்கள் நபிமார்களின் கப்ருகளை பள்ளிகளாக ஆக்கிக் கொண்ட சிலர் மீது அல்லாஹ்வின் கோபம் அதிகரித்தது என்றும் கூறினார்கள். இதை அதாஉ இப்னு யஸார் கூறுகின்றார்கள்.


எண் 415: குருடரான நிலையில் தன் மக்களுக்கு இமாமாக தொழுகை நடத்தக் கூடிய கத்பான் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம், 'இவ்வூர் கடும் இருளும் மழையும், தண்ணீரும் கூடுதலாக உள்ளது. நானோ பார்வையற்ற மனிதன். எனவே, இறைத்தூதர் அவர்களே! என் வீட்டில் ஒரு இடத்தில் தொழுங்கள். நான் அதை என் தொழுமிடமாக நான் ஆக்கிக் கொள்வேனே?' என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள் (அவரது வீட்டுக்கு) வந்து, 'நான் எங்கு தொழ விரும்புகிறீர்?' எனக் கேட்டார்கள். வீட்டின் ஒரு இடத்தை சுட்டிக் காட்டினார். அதில் நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள் என் மஹ்மூத் இப்னு ரபீஉ அன்சாரீ(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(இது புகாரீ, நஸயீ யில் இடம் பெற்றுள்ளது).


எண் 416: நபி(ஸல்) அவர்கள் பள்ளியில் கால் மேல் கால் போட்டு, மல்லாந்து படுத்திருக்க தான் கண்டதாக அப்பாத் இப்னு தமீம் அவர்களின் சிறிய தந்தை கூறுகின்றார்கள்.

(இது புகாரீ, முஸ்லிமிலும் இடம் பெற்றுள்ளது).


எண் 417: உமர்(ரலி), உதுமான்(ரலி), இருவரும் இவ்வாறே செய்வார்கள் என ஸயீத் இப்னு முஸய்யப் கூறுகின்றார்கள்.


எண் 418: அப்துல்லா இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் ஒரு மனிதரிடம், 'நீ அறிஞர்கள் அதிகம் உள்ள காலத்தில் உள்ளாய். மேலும் ஓதுபவர்கள் குறைவாக உள்ளனர். இக்காலத்தில் குர்ஆன் சட்டங்கள் பேணப்படும். அதக் எழுத்து வடிவம் கவனத்தில் விடப்படும். யாசகம் கேட்போர் குறைவாக உள்ளனர். நன்கொடை வழங்குவோர் அதிகம் உள்ளனர். இக்காலத்தில் தொழுகையை நீட்டுவார்கள். (குத்பா) உரையை குறைத்து விடுவார்கள். தங்களின் மனோ இச்சைகளுக்கு முன்பு தங்களின் செயல்களை முற்படுத்துவார்கள். இனி மக்களிடையே ஒரு காலம் வரும். அதில் அறிஞர்கள் குறைவாக இருப்பர். ஓதுபவர்கள் அதிகம் இருப்பார்கள். குர்ஆனின் எழுத்து வடிவம் பேணப்படும். அதன் சட்டங்கள் வீணடிக்கப்படும். யாசகம் கேட்போர் அதிகம் இருப்பார்கள். (நன்கொடை) வழங்குவோர் குறைவாக இருப்பார்கள். அதில் உரையை நீட்டுவார்கள். தொழுகையை குறைப்பார்கள். தங்களின் செயல்களுக்கு முன்பு தங்களின் மனோ இச்சைகளை முற்படுத்துவார்கள்' என்று கூறினார்கள். இதை யஹ்யா இப்னு ஸயீத் கூறுகின்றார்கள்.


எண் 419: ஒரு அடியானின் செயலில் எதிர்ப்பார்க்கப்படுவதில் முதன்மையானது தொழுகை தான். அதை ஏற்கப்பட்டு விட்டால், அவனின் இதரச் செயல்கள் கவனத்தில் கொள்ளப்படும். அது ஏற்கப்படா விட்;டால்அவனின் செயல்கள் எதுவும் கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது என்று தான் செய்தி அறிந்ததாக யஹ்யா இப்னு ஸயீத் கூறுகின்றார்கள்.


எண் 420: எவர் தான் செய்யும் (வணக்க வழிபாட்டுச்) செயலில் நிரந்தரமாக இருக்கிறாரோ அவரின் அந்தச் செயலே நபி(ஸல்) அவர்களுக்கு மிக விருப்பமாகும் என்று ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


எண் 421: இரண்டு சகோதரர்கள் இருந்தனர். அவ்விருவரில் ஒருவர் மற்றவருக்கு 40 நாட்களுக்கு (இரவுகளுக்கு) முன் இறந்து விட்டார். நபி(ஸல்) அவர்களிடம் முதல் நபரின் சிறப்புப் பற்றி எடுத்துக் கூறப்பட்டது. இரண்டாம் நபர் முஸ்லிமாக இருக்கவில்லையா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்களே! ஆம். அவர் குற்றமற்றவராக இருந்தார் என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அவரின் தொழுகை எதை ஏற்படுத்தும் என்பதை உங்களுக்கு அறிவித்தது எது?' நிச்சயமாக தொழுகையின் உதாரணம், உங்களிருவரின் வாசலில் நிறைந்து ஓடும் ஆறு உதாரணமாகும். அதில் அவர் ஐந்து தடவை ஒவ்வொரு நாளும் குளிக்கிறார். அவரின் அழுக்கு ஏதும் இருக்காது என அறிவீர்கள் தானே. (இவ்வாறு தான்) அவரின் தொழுகை எதைப் பெற்றுத்தந்தது என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள்' என்று நபி(ஸல்) அவாகள் கூறினார்கள். இதை ஸஹ்து இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்கள் கூறியதாக ஆமிர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


எண் 422: பள்ளியில் வியாபாரம் செய்வோரைக் கண்டால் அவரை அழைத்து உன்னிடம் இருப்பது என்ன? நீ என்ன விரும்புகின்றாய்? என்று அதாஉ இப்ன யஸார் அவர்கள் கேட்பார்கள். அவர் தன் வியாபாரம் செய்வதைப் பற்றிக் கூறினால், 'நீ உலக கடைவீதிக்குச் செல், இதுவோ மறுமையின் கடையாகும்' என்று கூறுவார்கள் என்று தனக்கு செய்தி கிடைத்தாக மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.


எண் 423: உமர்(ரலி) அவர்கள் பள்ளியில் ஓரத்தில் 'பதீஹா' என்று பெயரிடப்பட்ட ஒரு திண்ணையைக் காட்டினார்கள். 'ஒருவர் சப்தமிட்டு பேசவோ, பாட்டுப் பாடவோ விரும்பினால் இந்த திண்ணையின் பக்கம் வரட்டும்' என்று உமர்(ரலி) அவர்கள் அறிவித்தார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.


பாடம் 115
தொழுகையில் ஆர்வமூட்டல்
எண் 424: நஜ்து நாட்டில் இருந்து தலைவிரி கோலமாக ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். அவரின் சப்தம் மட்டுமே கேட்டது. அவர் கூறுவதை விளங்க முடியவில்லை. அவர் நபி(ஸல்) அவர்களிடம் நெருங்கி அமர்ந்து இஸ்லாத்தைப் பற்றிக் கேட்டார். 'ஒரு பகல், இரவிலே ஐந்து நேரம் தொழுதல்' என்று நபி(ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். அவைகள் அல்லாத வேறு (தொழுகை) என்மீது கடமையா? என்று அவர் கேட்க, நீர் விரும்பி செய்வதைத் தவிர (வேறு எதுவும் கடமை) இல்லை' என்று நபி(ஸல்) அவர்கள் கூறி விட்டு, 'ரமளான் மாதம் நோன்பு வைத்தல்' என்றும் கூறினார்கள். (நோன்பில்) அது அல்லாத 'ரமளான் மாதம் நோன்பு வைத்தல்' என்றும் கூறினார்கள். (நோன்பில்) அது அல்லாத வேறு எதுவும் எனக்குக் கடமையா? என்று அவர் கேட்க 'நீர் விரும்பிச் செய்வதைத் தவிர (வேறு எதுவும் கடமை) இல்லை' என்று நபி(ஸல்) அவர்கள் கூறி விட்டு, ஜகாத் தைப் பற்றியும் கூறினார்கள். 'அது அல்லாத வேறு எதுவும் எனக்குக் கடமையா?' என்று அவர் கேட்க, நீர் விரும்பிச் செய்வதைத் தவிர (வேறு கடமை இல்லை) என்று நபி(ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக, இதை விட நான் அதிகமாக்கவும் மாட்டேன். இதிலிருந்து எதையும் குறைக்கவும் மாட்டேன் என்று கூறிவிட்டு, புறப்பட்டுச்சென்றார். இவர் (இதில்) உண்மையாக நடந்து கொண்டால் வெற்றி பெற்று விட்டார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை தல்ஹா இப்னு உபைதில்லாஹ் கூறுகின்றார்கள்.


எண் 425: உங்களில் ஒருவர் தூங்கும் போது, அவரின் தலை உச்சியில் ஷைத்தான் மூன்று முடிச்சுக்களைப் போடுகின்றான். ஒவ்வொரு முடிச்சின் போதும் நீண்ட இரவு நேரம் உள்ளது. நன்றாகத் தூங்கு' என்று கூறுவான். அப்போது அவர் விழித்து, அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒருமுடிச்சு அவிழ்ந்து விடும். அவர் ஒளுச் செய்து விட்டால், ஒரு முடிச்சு அவிழ்ந்து விடும். அடுத்து அவர் தொழுதால் மற்றொரு முடிச்சும் அவிழ்ந்து விடுகிறது. இதனால் அவர் சுதந்திரமானவராக உளத்தூய்மையானவராக காலையில் எழுவார். இவ்வாறு நடந்து கொள்ளவில்லையென்றால், கடின இதயமானவராக, சோம்பேறியாக எழுவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.


பாடம் 117
பெருநாட்களில் குளித்தல். அவற்றில் பாங்கு, இகாமத்?

எண் 426: நபி(ஸல்) அவர்களின் காலத்தில் இரந்து இன்று வரை நோன்பு மற்றும் ஹஜ்ஜுப் பெருநாட்களில் தொழ பாங்கு, இகாமத் இல்லை என பல அறிஞர்களும் கூறியதாக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


எண் 427: அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் பெருநாள் அன்று தொழுமிடத்திற்கு தொழச் செல்லும் முன் குளித்துக் கொள்வார்கள் என நாபிஉ கூறுகிறார்கள்.


பாடம் 118
பெருநாட்களில் குத்பாவிற்கு முன் தொழுதல் !

எண் 428: நோன்பு மற்றும் ஹஜ்ஜுப் பெருநாட்களில் பிரசங்கம் செய்யும் முன் நபி(ஸல்) அவர்கள் தொழ வைப்பார்கள் என இப்னு ஷிஹாப் கூறுகின்றார்கள்.


எண் 429: அபூபக்கர்(ரலி) அவர்கள், உமர்(ரலி) அவர்கள் ஆகியோரும் இவ்வாறே செய்வார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


எண் 430: நான் ஒரு பெருநாளில் உமர்(ரலி) அவர்களுடன் கலந்திருந்தேன். அவர்கள் தொழுகை நடத்தி விட்டு பிரசங்கம் செய்வார்கள். (அதில) 'இந்த இரண்டு பெருநாட்களில் நோன்பு வைப்பதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். இன்று உங்களை நோன்பிலிருந்து விடுவித்த நாளாகும். மற்றொரு நாளோ நீங்கள் கொடுத்த குர்பானியில் இருந்து உண்ணும் நாளாகும் என்று கூறினார்கள்.
(இது போல்) உதுமான்(ரலி) அவர்களுடன் ஒரு பெருநாளில் கலந்து கொண்ட போது அவர்கள் வந்து தொழுகை நடத்தினார்கள். அது முடிந்ததும் பிரசங்கம் செய்தார்கள். (அதில்) 'இன்று உங்களுக்கு இரண்டு பெருநாட்கள் (ஜும்ஆ வும் பெருநாளும்) சேர்ந்து வந்து விட்டது. ஜும்ஆ விலும் கலந்து கொள்ளலாம். எனவே விரும்புவோர் ஜும்ஆ தொழுது கொள்ளுங்கள். வீட்டிற்குச் செல்ல விரும்புவோருக்கு (ஜும்ஆ தொழாமல் செல்ல) அனுமதிக்கிறேன் என்று கூறினார்கள்.

(இது போல்) உதுமான்(ரலி) முற்றுகையிடப்பட்டிருந்த நேரத்தில் அவர்களுடன் பெருநாளில் கலந்து கொண்டேன். அவர்கள் தொழ வைத்து விட்டு, பின்பு பிரசங்கம் செய்தார்கள் என அபூ உபைத் அவர்கள் கூறுகின்றார்கள்.


பாடம் 118
பெருநாள் தொழுகைக்குச் செல்லும் முன் சாப்பிடுதல்

எண் 431: உர்வா அவர்கள் நோன்புப் பெருநாள் அன்று (காலையில்) ஈத்கா செல்லும் முன் சாப்பிடுவார்கள் என அவர்களின் மகன் ஹிஷாம் கூறுகின்றார்கள்.


எண் 432: நோன்புப் பெருநாள் அன்று பெருநாள் தொழுகைக்கு முன் சாப்பிட மக்கள் கட்டளையிடப்பட்டனர் என ஸயித் இப்னு முஸய்யப் கூறுகின்றார்கள்.


பாடம் 119
பெருநாள் தொழுகையில் தக்பீர் கூறுதல், கிராஅத் ஓதுதல்

எண் 433: நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையில் நபி(ஸல்) அவர்கள் எந்த அத்தியாயத்தை ஓதினார்கள் என அபூவாகித் லைஸி(ரலி) அவாகளிடம் உமர்(ரலி) அவர்கள் கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் 50 வது அத்தியாயத்தையும், 54 வது அத்தியாயத்தையும் ஓதுவார்கள் என பதில் கூறினார்கள். இதை உபைதுல்லாஹ் இப்னு அப்துல்லா கூறுகின்றார்கள்.

(முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, இப்னு மாஜா வில் அபூவாகித்(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் இடம் பெற்றுள்ளது).


எண் 434: நான் நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் இரண்டிலும் அபூஹுரைரா(ரலி) அவர்களுடன் கலந்திருக்கிறேன். அவர்கள் (பெருநாள் தொழுகையில்) முதல் ரக்அத்தில் (அல்ஹம்து சூரா) ஓதும் முன் (அதிகபட்சமாக) 7 தக்பீர் கூறினார்கள். இரண்டாவது ரக்அத்திலும் ஓதும் முன் 5 தக்பீர் கூறினார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.

'இது நம்மிடத்திலும் சட்டமாகும் என மாலிக் (ரஹ்) கூறுகிறார்கள்.

பெருநாள் அன்று மக்கள் தொழுது முடித்திருப்பதைக் காணும் ஒருவர் (தணித்து) வீட்டிலோ, தொழுமிடத்திலோ தொழ வேண்டியதில்லை. அப்படியே ஒருவர் வீட்டிலோ, தொழுமிடத்திலோ தொழுது விட்டால் அதை நான் குற்றமாகக் கருதவில்லை. முதல் ரக்அத்தில் கிராஅத் ஓதும் முன் 7 தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்திலும் ஓதும் முன் 5 தக்பீர்களும் (அதிகபட்சமாக) கூற வேண்டும் என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


பாடம் 120
பெருநாள் தொழுகைக்கு முன் - பின் தொழாமல் இருப்பது

எண் 435: நோன்புப் பெருநாள் தொழுகைக்கு முன்பும், பின்பும் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் எதுவும் தொழ மாட்டார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


எண் 436: சூரியன் உதயமாகும் முன் சுப்ஹு தொழதப் பின் பெருநாள் தொழுமிடத்திற்கு ஸயீத் இப்னு முஸய்யப் அவர்ள் செல்வார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


பாடம் 121
பெருநாள் தொழுகைக்கு முன்-பின் தொழுதிட அனுமதி

எண் 437: நோன்புப் பெருநாள் அன்னு தொழுமிடத்திற்கு செல்லும் முன் நான்கு ரக்அத்கள் தன் தந்தை ஸாலிம் தொழுவார்கள் என அப்துர் ரஹ்மான் இப்னு காஸிம் கூறுகிறார்கள்.


எண் 438: நோன்புப் பெருநாள் அன்று தொழுகைக்கு முன் பள்ளியில் தன் தந்தை உர்வா தொழுவார்கள் என ஹாஷிம் இப்னு உர்வா கூறுகின்றார்கள்.

குறிப்பு: நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைக்கு முன்-பின் நபில் தொழுகை தொழுததில்லை என்ற ஆதாரப்பூர்வமான ஹதீஸ் புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா வில் இடம் பெற்றுள்ளது).


பாடம் 122
பெருநாள் அன்று இமாம் புறப்படுதல், குத்பா கேட்க காத்திருத்தல்

எண் 439: நோன்பு பெருநாளும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் தொழும் நேரத்தில் தொழுமிடத்தை அடையும் விதத்தில் இமாம் புறப்பட்டுச் செல்வது நம்மிடத்தில் கருத்து வேறுபாடு இல்லாத சுன்னத்தாகும் என்று மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாக யஹ்யா கூறுகின்றார்கள்.

இமாமுடன் தொழும் ஒருவர், குத்பாவை கேட்கும் முன் வீடு திரும்பலாமா? என கேட்கப்பட்டதற்கு, 'இமாம் திரும்பும்வரை திரும்பக் கூடாது' என்று மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.


பாடம் 123
பயத் தொழுகை

எண் 441: (படையில்) ஒரு பிரிவினர் இமாமுடன் இருக்கவும், மற்றொரு பிரிவினர் எதிரிகளின் எதிரேயும் இருக்க இமாம் (தொழ) தயாராகுவார். ஒரு ரக்அத்தின் ருகூஉ வையும், ஸஜ்தாவையும் தன்னுடன் இருப்பவர்களுடன் சேர்ந்து இமாம் செய்வார். பின்பு நிலைக்கு வருவார். நிலையிலேயே இருப்பார். இமாம் நின்று கொண்டிருக்கும் போதே அவர்கள் தாங்களாகவே மற்றொரு ரக்அத்தை பூர்த்தி செய்து விட்டு. ஸலாம் கூறி முடிப்பார்கள். பின்பு எதிரிகளை எதிர் நோக்குவா. ஏற்கனவே தொழாமல் இருந்த மற்றவர்கள் முன்னோக்குவார்கள். இமாமுக்கும் பின்னே நின்று தக்பீர் கூறுவார்கள். அவர்களுடன் ருகூஉ ம், ஸஜ்தாவும் செய்து ஸலாம் கொடுத்து விடுவார். உடன் இவர்கள் எழுந்து தாங்களாகவே இரண்டாவது ரக்அத்தை முடித்து ஸலாம் கூறுவார்கள். இதுவே பயத் தொழுகை முறையாகும் என ஸாலிஹ் இப்னு கவ்வாத் அவர்களிடம் ஸஹ்ல் இப்னு அபூ ஹஸமா(ரலி) கூறினார்கள்.


எண் 442: அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களிடம் பயத்தொழுகையைப் பற்றி கேட்கப்பட்ட போது, 'இமாமும், அவருடன் ஒருபிரிவினரும் (கிப்லாவை) முன்னோக்குவர். அவர்களுக்கு இமாம் ஒரு ரக்அத்தை தொழ வைப்பார். அவருக்கும் பகைவருக்குமிடையே தொழாத ஒரு பிரிவினர் இருப்பர். அவருடன் இருப்போர் ஒரு ரக்அதைத் தொழுததும் ஸலாம் கொடுக்காமல் தொழாமல் இருப்போரின் இடத்திற்கு பின்னோக்கி வருவார்கள். தொழாதவர்கள் முன்னோக்கி வந்து இமாமுடன் ஒரு ரக்அத் தொழுவார்கள். உடனே இமாம் இரண்டு ரக்அத் தொழுதவராக முடித்துக் கொள்வார்கள். பின்பு இரண்டு பிரிவினரில் ஒவ்வொருவரும் இமாம் தொழுகையை முடித்த பின்பு தனித்தனியே ஒரு ரக்அத் தொழுவார்கள். இரண்டு பிரிவினருடைய இரண்டு ரக்அத் தொழுதவர்களாக ஆகிவிடுவர். போரில் பயம் கடுமையாக இருந்தால் அவர்கள் இருந்த இடத்தில் நின்றவாறு அ;லலது வாகனத்தில் இருந்து கிப்லாவை முன்னோக்கியோ அல்லது முன்னோக்காமலோ தொழுவார்கள் என்று பதில் கூறினார்கள் என நாபிஉ கூறுகிறார்கள். இப்னு உமர்(ரலி) அவர்கள் இதை நபி(ஸல்) அவர்களிடமிருந்தே அறிவித்தார்கள் என நான் கருதுகிறேன் என நாபிஉ கூறியதாக மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.


எண் 443: சூரியன் மறையும் வரை நபி(ஸல்) அவர்கள் (கன்தக்) அகழ்ப் போரில் லுஹரையும், அஸரையும் தொழவில்லை என ஸயீத் இப்னு முஸய்யப் கூறுகின்றார்கள்.

பயத் தொழுகை விஷயத்தில் நான் கேள்விப்பட்டதில் எனக்கு மிக விருப்பமானது ஸாலிஹ் இப்னு கவ்வாத் வழியாக காஸிம் இப்னு முஹம்மத் அறிவிக்கும் ஹதீஸ்கள் தான் என இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.


பாடம் 124
கிரகணத் தொழுகை முறை
எண் 444: நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அன்று நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு தொழ வைத்தார்கள். (அதுசமயம்) அவாகள் (தொழ)நின்றார்கள். (நீண்ட கிராஅத் மூலம்) நீண்ட நேரம் நின்றார்கள். பின்பு ருகூஉ செய்தார்கள். அப்போது ருகூஉ வையும் நீண்ட நேரம் செய்தார்கள். பின்பு (கிராஅத் ஓதியவர்களாக) நின்றார்கள். அது முதல் நிலையை விட சற்றுக் குறைவாக நின்றார்கள். பின்பு ருகூஉ செய்தார்கள். முதலில் செய்த நீண்ட நேர ருகூஉ போன்று இல்லாமல் குறைவான நேரம் ருகூஉ செய்தார்கள். பின்பு (ருகூஉ வில் இருந்து) எழுந்து ஸஜ்தா செய்தார்கள். பின்பு முன்பு போலவே மற்றொரு ரக்அத் தொழ வைத்து, தொழுகையை முடித்தார்கள். அப்போது சூரியன் கிரகண நிலையில் இருந்து நீங்கி இருந்தது. உடனே மக்களுக்கு உரை நிகழ்த்தலானார்கள். அப்போது அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். பின்பு, 'நிச்சயமாக இந்த சூரியனும், சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ள இரண்டு அத்தாட்சிகளாகும். ஒருவர் இறந்து போனதற்காகவோ, பிறப்பதற்காகவோ, அவ்விரண்டும் கிரகணத்திற்கும் வருவதில்லை. நீங்கள் கிரகண நிலையைக் கண்டால், அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள். அவனைப் பெருமைப்படுத்துங்கள்.தர்மம் செய்யுங்கள் என்று கூறி விட்டு, முஹம்மதின் சமுதாயமே! அல்;லாஹ்வின் மீது சத்தியமாக தன் அடியான் - ஆணோ, பெண்ணோ, விபச்சாரம் செய்வதே அல்லாஹ்விடம் கோபத்திற்குரிய ஒன்று. முஹம்மதின் சமுதாயமே! நான் அறிந்தவைகளை நீங்கள் அறிந்திருந்தால் குறைவாக சிரித்திருப்பீர்கள். அதிகமாக அழுதிருப்பீர்கள் என்றும் (தன் உரையில்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


எண் 445: சூரிய கிரகணம் ஏற்பட்டது.அப்போது நபித்தோழர்களும், நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். நீண்ட நேரம் சூரா பகரா (2வது அத்தியாயம்) ஓதும் அளவுக்கு நின்றார்கள். பின்பு நீண்ட நேரம் ருகூஉ செய்தார்கள். பின்பு (இருமுறை) ஸஜ்தா செய்தார்கள். பின்பு முந்தின ரக்அத்தினைப் போன்று (நீண்ட நேரமின்றி சுமாரான அளவுக்கு) நீண்ட நேரம் நின்றார்கள். பின்பு முந்திய ருகூஉ போன்றில்லாமல் (சுமாரான அளவுக்கு) நீண்ட நேரம் ருகூஉ செய்தார்கள். பின்பு ருகூஉ விலிருந்து எழுந்து முந்திய நிலை போன்றில்லாமல் (சுமாரான அளவுக்கு) நீண்ட நேரம் நின்றார்கள். முந்திய ருகூஉ போலன்றி (சுமாராக) நீண்ட நேரம் ருகூஉச் செய்தார்கள். பின்பு (இருமுறை) ஸஜ்தாச் செய்து (தொழுகையை) முடித்தார்கள். (அதுசமயம்) சூரியன் (கிரகண நிலையிலிருந்து வெளியேறி) பிரகாசமாயிருந்தது.

நிச்சயமாக சூரியனும், சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இருந்து இரண்டு அத்தாட்சிகளாகும். ஒருவர் இறந்திட்டதாலோ, பிறப்பதினாலோ அவ்விரண்டையும் கிரகணம் பீடிப்பதில்லை. நீங்கள் கிரகணத்தைக் கண்டால் அல்லாஹ்வை நினைவு கூருங்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! இந்த உங்களின் இடத்தில் எதையோ எடுப்பது போன்றும் பின்பு நீங்கள் பின் வாங்குவது போன்றும் கண்டோம்' என்று நபித்தோழர்கள் கூறினர். 'நான் சொர்க்கத்தைக் கண்டேன்'. அதில் இருந்து ஒரு கிளையை எடுக்க முயன்றேன். அதை நான் எடுத்திருந்தால் அதை நீங்கள் உலகம் உள்ளளவும் சாப்பிட்டிருப்பீர்கள். மேலும் நரகத்தைக் கண்டேன். இதைப் போன்று நான் கடுமையாகக் கண்டதில்லை. அதில் பெண்களை அதிகமாகக் கண்டேன்' என்று நபி(ஸல்) அவர்கள் பதில் கூறியதும், இறைத்தூதர்(ஸல்) அவர்களே! ஏன்? (பெண்கள் நரகில் உள்ளனர்?) எனக் கேட்டனர். அவர்கள் மாறு செய்கின்றனர்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வுக்கு அவர்கள் மாறு செய்தார்களா? எனக் கேட்கப்பட்ட போது, அவர்ள் கணவருக்கு மாறு செய்கிறார்கள். காலம் முழுதும் அவர்களுக்கு நீ நல்லது செய்தாலும் உன்னிடம் ஒரு குறையைக் கண்டால், உன்னிடம் அறவே நான் நல்லதைக் கண்டதில்லை என்று அவள் கூறுவது மூலம் அவர்கள் உபகாரத்திற்கும் மாறு செய்கிறார்கள். (எனவே, நரகிற்கு அதிகம் செல்கின்றனர்) என நபி(ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். இதை அப்துல்லா இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கின்றார்கள்.


எண் 446: யூதப் பெண் ஒருத்தி, ஆயிஷா(ரலி) அவர்களிடம் வந்து (கப்ரு வேதனை பற்றி) கேட்டாள். 'கப்ரு வேதனையை விட்டும் அல்லாஹ் உன்னைக் காப்பாற்றுவானாக!' என்று ஆயிஷா(ரலி) கூறினார்கள். 'மக்கள் தங்களின் கப்ருகளில் வேதனை செய்யப்படுவார்களா? என்று நபி(ஸல்) அவர்களிடம் ஆயிஷா(ரலி) கேட்டார்கள். இதிலிருந்து அல்லாஹ்விடம் காப்பாற்றிட வேண்டுகிறேன் என்று கூறிய நபி(ஸல்) அவர்கள், காலை நேரத்தில் வாகனத்தில் ஏறிச் சென்றார்கள். அப்போது சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே, நபி(ஸல்) அவர்கள் பகல் நேரத்தில் திரும்பினார்கள். இரு மலைக்குன்றுகளுக்கிடையில் நடந்து சென்று நின்றார்கள். தொழ வைத்தார்கள். அவர்களின் பின்னே மக்களும் நின்றார்கள். நீண்ட நேரம் நிலையில் இருந்தார்கள். பின்பு நீண்ட நேரம் ருகூஉ செய்தார்கள். பின்பு எழுந்து, முந்தின நிலை போன்று இல்லாமல் நீண்ட நேரம் நின்றார்கள். பின்பு முந்தின ருகூஉ போலன்றி நீண்ட நேரம் ருகூஉ செய்தார்கள். பின்பு எழுந்து, ஸஜ்தாச் செய்தார்கள். பின்பு முந்திய நிலை போலன்றி நீண்ட நேரமாக நின்றார்கள். பின்பு முதல் ருகூஉ போலன்றி நீண்ட நேரம் ருகூஉ செய்தார்கள். பின்பு எழுந்து, முந்திய நிலை போலன்றி நீண்ட நேரம் நின்றார்கள். பின்பு எழுந்து, ஸஜ்தா செய்தார்கள். பின்பு திரும்பினார்கள். அப்போது அல்லாஹ் நாடிய அளவுக்கு கூற வேண்டியதைக் கூறினார்கள். பின்பு கப்ரு வேதனையை விட்டு அவர்கள் பாதுகாப்பு வேண்டிட அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.


பாடம் 125
கிரகணத் தொழுகை பற்றி..
எண் 447: சூரிய கிரகணம் ஏற்பட்ட போது, நான்ஆயிஷா(ரலி) அவர்களிடம் வந்தேன். அப்போது மக்கள் நின்று தொழுது கொண்டிருந்தனர். உடன் ஆயிஷா(ரலி) அவர்களும் நின்று தொழுதார்கள். மக்களுக்கு என்ன நேர்ந்தது? என நான் கேட்டேன். ஆயிஷா(ரலி) அவர்கள் வானத்தின் பக்கம் தன் கையால் சமிக்ஞை செய்தார்கள். பின்பு, 'சுப்ஹானல்லாஹ்' என்று கூறினார்கள். 'இது ஒரு அத்தாட்சி தானே' என்று கேட்டேன். அவர்கள், 'ஆம்' என தன் தலை மூலமாக சமிக்ஞை செய்தார்கள். நானும் தொழ நின்றேன். எனக்கு மயக்கம் ஏற்பட்டது. நான் என் தலை மீது தண்ணீரை ஊற்றிக் கொண்டேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தார்கள்.

''பின்பு'' இதுவரை நான் பார்த்திராத சொர்க்கத்தையும், நரகத்தையும் என் இந்த இடத்திலேயே நான் காட்டப்பட்டேன். நீங்கள் கப்ரில் சோதிக்கப்படுவீர்கள். விரைவில் தஜ்ஜால் மூலமும் சோதிக்கப்படுவீர்கள். உங்களில் ஒருவர் கொண்டு வரப்பட்டதும், 'இவர் பற்றி நீ அறிந்தது என்ன? என்று அவரிடம் கேட்கப்படும். அப்போது ஒரு இறைவிசுவாசி, 'இவர், முஹம்மது(ஸல்) எனும் இறைத்தூதர் ஆவார். எங்களிடம் தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும் கொண்டு வந்தார். நாங்கள் ஏற்றோம். நம்பிக்கை கொண்டோம். நாங்கள் (அவரை) பின்பற்றினோம் என்று கூறுவார். அப்போது அவரிடம் நல்லவிதமாகத் தூங்குவீராக! நீர் முஃமினாக இருந்தீர் என்பதை நாங்கள் அறிவோம்' என்று கூறப்படும் நயவஞ்சகரோ, 'இவரை நான் அறிய மாட்டேன். இவர் பற்றி எதையோ மக்கள் கூறியதைக் கேட்டேன். அதை நானும் கூறினேன்' என்பான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இச்சம்பவத்தை அஸ்மா பின் அபூபக்கர்(ரலி) அறிவிக்கின்றார்கள்.


பாடம் 126
மழைத் தொழுகை முறை

எண் 448: (திறந்த வெளியில் உள்ள) தொழுமிடத்திற்கு நபி(ஸல்) அவர்கள் வந்து மழைத் தொழுகை நடத்தினார்கள். பின்பு (கிப்லாவை) முன்னோக்கியவர்களாக தன் மேலாடையை புரட்டி விட்டுக் கொண்டார்கள் என்று அப்துல்லா இப்னு ஸைத்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

மழைத்தொழுகை (முறை பற்றி) எத்தனை ரக்அத்? என்று மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, 'இரண்டு ரக்அத்' ஆகும் என்றும் குத்பாவுக்கு முன்பே தொழுகையை இமாம் ஆரம்பித்து இரண்டு ரக்அத் தொழ வைப்பார்கள். பின்பு நின்றவராக உரை (குத்பா) நிகழ்த்துவார். கிப்லாவை முன்னோக்கி துஆச் செய்வார். இரண்டு ரக்அத்திலும் சப்தமிட்டு 'கிராஅத்' ஓதுவார். வலது புறப்பகுதியை இடப்புறத்திலும், இடப்புறத்தில் உள்ளதை வலது புறத்திலுமாக மேலாடையை போடுவதையே இமாம் மேலாடையை புரட்டிப் போட்டுக் கொள்வதாகும். இமாம் மேலாடையைப் புரட்டிப் போட்டுக் கொண்டதும் மக்களும் தங்கள் மேலாடையை புரட்டிப் போட்டுக் கொள்தல் வேண்டும். அவர்களும் உட்கார்ந்தவர்களாக கிப்லாவை முன்னோக்கி இருப்பபார்கள் என மாலிக் (ரஹ்) அவர்கள் பதில் கூறினார்கள்.


பாடம் 127
மழைக்காக வேண்டும் முறை

எண் 449: அல்லாஹும்மஸ்கி இபாதக்க வ பஹீமதக்க, வன்ஷுர் ரஹ்மதக்க, வ அஹ்யீ பலதக்க மய்யித' என்று நபி(ஸல்) அவர்கள் மழை வேண்டி துஆச் செய்வார்கள் என அம்ரு இப்னு ஷுஐபு(ரலி) கூறுகின்றார்கள்.

(துஆவின் பொருள்: இறைவா! உன் அடியார்களுக்கும், உன் பிராணிகளுகு;கும் மழையைப் பொழிவாயாக! உன் அருளை (உலகம் முழுவதும்) பரத்துவாயாக! இறந்து (காய்ந்து) போன உன் ஊரை (மழை மூலம்) உயிர்ப்பிப்பாயாக!)


எண் 450: நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, இறைத்தூதர்(ஸல்) அவர்களே! விவசாயம் அழிந்து விட்டது. கால்நடைகள் மடிகின்றன. அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள்;' என்றார். நபி(ஸல்) அவர்கள் துஆச் செய்தார்கள். வெள்ளிக் கிழமை கொடுக்கப்பட்டோம். (மறு வெள்ளிக்கிழமை) நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர்(ஸல்) அவர்களே!' வீடுகள் இடிந்தன. கால்நடைகள் அழிந்து விட்டன. விவசாயம் அழிகிறது' என்று கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள், இறைவா! மலைகள் மீதும், ஓடைகள் வெளிகளிலும், மரத்தின் வேர்களின் மீதும் (மழையைப்) பொழியச் செய்வாயாக! என்று கூறினார்கள். உடனே மழை, ஆடை விலகியது போல் விலகி விட்டது. இதை அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவிக்கின்றார்கள்.

மழைத் தொழுகையை தவறவிட்டவர், குத்பாவின் போது வருகிறார். இவர் பள்ளியில், திரும்பி வந்து வீட்டில் தொழாலாமா? என்று கேட்ட போது, இது விஷயத்தில் அவர் இஷ்டம் தான். விரும்பினால் செய்வார். அல்லது விட்டு விடுவார் என்று மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.


பாடம் 128
நட்சத்திரங்கள் மூலம் மழை பெய்யத் தேடுவது
எண் 451: ஹுதைபிய்யா உடன்படிக்கை நடந்த போது இரவு மழை பெய்திருந்த நிலையில் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு சுப்ஹ் தொழ வைத்தார்கள். (தொழுகை) முடிந்த போது, மக்களை முன்னோக்கிய அவர்கள், 'உங்கள் இறைவன் என்ன கூறுகிறான்? என்பதை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்டார்கள். 'அல்லாஹ்வும் அவனது தூதருமே அறிவார்கள்' என நபித்தோழர்கள் கூறினார்கள். 'என் அடியார்களில் ஒருவர்என்னை நம்பியவராகவும், ஒருவர் என்னை மறுத்தவராகவும் காலையில் எழுகிறார்கள். 'அல்லாஹ்வின் அருளால், அவன் கருணையினால் நாம் மழை கொடுக்கப்பட்டுள்ளோம்' என்று கூறினால், இதன் மூலம் அவர் என்னை நம்பி, நட்சத்திரத்தை மறுத்தவராக உள்ளார். இன்ன, இன்ன நட்சத்திரம் மூலமாக மழை கொடுக்கப்பட்டோம் என்று கூறினால், இதன் மூலம் அவர் என்னை மறுத்து, நட்சத்திரத்தை நம்பியவராவார்' என்று அல்லாஹ் கூறினான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஸைத் இப்னு காலித் அல் ஜுஹ்னீ(ரலி) அறிவிக்கின்றார்கள்.
எண் 453: மக்கள் மழை கொடுக்கப்பட்ட நிலயில் காலையில் எழுந்தால், வளம் தரும் நட்சத்திரம் மூலமே மழை கொடுக்கப்பட்டோம் என்று கூறுகிறார்கள் என்று அபூஹுரைரா(ரலி) அவர்கள் கூறி விட்டு, அல்லாஹ். மக்களுக்கு தன் கருணை யில் கொடுக்க எண்ணியதை, எவரும்அதை தடுக்க முடியாது. அவன் தடுத்ததை அத்ன பின் ஒருவருக்கு கொடுக்கவும் (எவராலும்) முடியாது' என்ற வசனத்தை ஓதினார்கள். இது தனக்கு செய்தியாக கிடைத்ததாக மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.


பாடம் 129
மல, ஜலம் கழிக்கும் போது கிப்லாவை முன்னோக்குவது கூடாது

எண் 454: உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கச் சென்றால், மறைவுறுப்பின் மூலம் கிப்லாவை முன்னோக்குதல், பின்னோக்குதல் கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறி இருக்கும் நிலையில் நான் எப்படி இந்த கழிவறைகளை பயன்படுத்துவது என்பதை அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான்அறிய மாட்டேன் என்று எகிப்தில் இருக்கும் போது அபூ அய்யூப் அல் அன்சாரி(ரலி) அவர்கள் கூறியதாக, அபூதல்ஹா(ரலி) அவர்களின் அடிமை என்று கூறப்படும் ராபிஉ இப்னு இஸ்ஹாக் கூறுகின்றார்கள்.

(இது நஸயீ யில் உள்ளது).


எண் 455: சிறுநீர், மலம் கழித்து கிப்லாவை முன்னோக்குவதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என அன்சாரீ நபித் தோழர்களில் ஒருவர் கூறியதாக நாபிஉ கூறுகின்றார்கள்.


பாடம் 130
மலஜலம் கழிக்க கிப்லாவை முன்னோக்கிட அனுமதி

எண் 446: (மலம் கழிக்க) உன் தேவைக்காக உட்கார்ந்தால் கிப்லாவையும், பைத்துல் முகத்தஸையும் முன்னோக்க வேண்டாம் என சிலர் கூறுகின்றார்கள். (ஆனால்) நான் எங்கள் வீட்டு மேற்கூரை மீது ஏறினேன். அதுசமயம் நபி(ஸல்) அவர்கள் கட்டிடத்தில் மலம் கழிக்கும் போது பைத்துல் முகத்திஸை முன்னோக்கி இருப்பதைப் பார்த்தேன் என அப்துல்லா இப்னு உமர்(ரலி) அறிவிக்கின்றார்கள்.

(குறிப்பு: மதீனாவில் இருந்து பைத்துல் முகத்திஸை முன்னோக்கினால் கஃபா முதுகுக்குப் பின்புறமாக அமையும் என்பதை நினைவில் கொள்க!) இது புகாரீ, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜா வில் இடம் பெற்றுள்ளது).


பாடம் 131
'கிப்லா' திசையில் எச்சில் துப்புவது கூடாது
எண் 457: நபி(ஸல்) அவர்கள் கிப்லா – (திசை) சுவற்றில் காரல் எச்சிலைக் கண்டு, அதைச் சுரண்டினார்கள். பின்பு மக்களை நோக்கியவர்களாக 'உங்களில் ஒருவர் தொழுதால் தன் முகத்தின் முன்பாக எச்சில் துப்ப வேண்டாம். ஏனெனில் அல்லாஹ் ஒருவன் தொழும் போது அவன் முன்னே இருக்கிறான்' என்று கூறினார்கள். இதை அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


எண் 458: நபி(ஸல்) அவர்கள் கிப்லாவின் (திசை) சுவற்றில் எச்சிலையோ, காரல் எச்சிலையோ, சளியையோ கண்டால் நபி(ஸல்) அவர்கள் அதை சுரண்டுவார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(இது புகாரீ, முஸ்லிம் ல் இடம் பெற்றுள்ளது).


பாடம் 132
'கிப்லா' பற்றி..
எண் 459: குபா என்ற இடத்தில் மக்கள் சுப்ஹு தொழுகையில் இருந்த போது ஒருவர் வந்து, 'கஃபாழவ முன்னோக்கிட கட்டளையிடப்பட்டுள்ள திருக்குர்ஆன் வசனம் நபி(ஸல்) அவர்கள் மீது சென்ற இரவு இறக்கப்பட்டுள்ளது. எனவே, கஃபாவை முன்னோகுங்கள் என்று கூறினார். மக்களின் முகங்களோ (ஷாமை) சிரியாவை நோக்கி இருந்தது. உடனே கஃபாவை நோக்கித் திரும்பினார்கள் என அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள்.

(இது புகாரீ, முஸ்லிம் ல் இடம் பெற்றுள்ளது).


எண் 460: மதீனாவிற்கு வந்த பின் நபி(ஸல்) அவர்கள் பைத்துல் முகத்தஸை நோக்கி 16 மாதங்கள் தொழுதனர். பின்பு பத்ருப் போருக்கு இரண்டு மாதத்திற்கு முன்னால் கிப்லா (வின் திசை) மாற்றப்பட்டது என ஸயீத் இப்னு முஸய்யப் அறிவிக்கின்றார்கள்.


எண் 461: கிப்லாவின் திசையை முன்னோக்கி விட்டால், கிழக்குக்கும் மேற்குக்கும் இடைப்பட்ட (அதாவது பூமி முழுதும்) கிப்லாவாகும் என உமர்(ரலி) அறிவிக்கின்றார்கள்.


பாடம் 133
நபி(ஸல்) அவர்களின் பள்ளிவாசல் பற்றி..

எண் 462: மஸ்ஜிதுல் ஹராம் தவிர மற்ற பள்ளிகளில் ஆயிரம் (ரக்அத்) தொழுகை தொழுவதை விட இந்த எனது பள்ளியில் (ஒரு ரக்அத்) தொழுகை தொழுவது சிறந்தது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுiரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.

(இது புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ யில் இடம் பெற்றுள்ளது).


எண் 463: என் வீட்டிற்கும், என் பிரசங்க மேடைக்கும் மத்தியில் உள்ள இடம் சொர்க்கத்தின் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும். என் பிரசங்கமே (மறுமையில் உள்ள) என் தடாகத்தின் மீது உள்ளது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.

(இது புகாரீ, முஸ்லிம் ல் இடம் பெற்றுள்ளது).


எண் 464: என் வீட்டிற்கும், என் பிரசங்க மேடைக்கும் மத்தியில் உள்ள இடம் சொர்க்கத்தின் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லா இப்னு ஸைத் அல் மாஸினீ(ரலி) அறிவிக்கின்றார்கள்.


பாடம் 134
பள்ளிவாசல்களுக்கு பெண்கள் செல்லுதல்
எண் 465: 'அல்லாஹ்வின் பள்ளியில் அல்லாஹ்வின் அடிமைகiளான பெண்களை தடுக்காதீர்கள்' என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(அபூஹுரைரா(ரலி) அறிவிப்பதாக அஹ்மத், அபூதாவூத், இப்னு குஸைமா ஆகியவற்றில் இடம் பெற்றுள்ளது).


எண் 466: (பெண்களே!) உங்களில் ஒருவர் இஷாத் தொழுகைக்கு வந்தால் நறுமணம் பூசி வர வேண்டாம் என் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக புஸ்ரு இப்னு ஸயீத் கூறுகிறார்கள்.


எண் 467: ஸைத் இப்னு அம்ரு நுபைல்(ரலி) அவர்களின் மகள் ஆதிகா(ரலி) அவர்கள் (தன் கணவர்) உமர்(ரலி) அவர்களிடம், நீங்கள் தடுத்தாலே தவிர நான் (பள்ளிக்குச்) செல்வேன்' என்று கூறி பள்ளிக்குச் செல்ல அனுமதி கேட்டார்கள். ஆனால் உமர்(ரலி) அவர்கள் அவர்களைத் தடுக்கவில்லை என யஹ்யா இப்னு ஸயீத் கூறுகின்றார்கள்.


எண் 468: (இன்றைய) பெண்கள் செல்வதை நபி(ஸல்) அவர்கள் பார்த்தால், பனீ இஸ்ரவேலர்களது பெண்கள் தடுக்கப்பட்டது போன்று இவர்களையும் பள்ளிக்கு வருவதைத் தடுத்திருப்பார்கள் என் ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதாக அப்துர் ரஹ்மான் அவர்களின் மகள் உம்ரா கூறுகின்றார்கள்.

(இது முஸ்லிம், புகாரீ, அஹ்மத் ல் இடம் பெற்றுள்ளது).


பாடம் 135
குர்ஆன் தொடும் நபருக்கு ஒளு அவசியம் என்ற கட்டளை
எண் 469: அம்ரு இப்னு ஹஸீம்(ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் எழுதிய கடிதத்தில் 'சுத்தமானவனே தவிர குர்ஆனைத் தொடக் கூடாது' என்று இருந்தது என அப்துல்லா இப்னு அபூபக்கர் இப்னு ஹஸ்ம் அறிவிக்கின்றார்கள்.

(குறிப்பு: இதன் அறிவிப்பாளர் தொடர் அறுபட்டு உள்ளது. ஆனாலும் முழு அறிவிப்பாளர் வரிசையுடன் இதே ஹதீஸ் வேறு நூல்களிலும் உள்ளது. அந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் சுவைத் இப்னு அபீஹாதம் என்பவர் இடம் பெறுவதால் இது சரியான ஹதீஸ் அல்ல).

குர்ஆன், ஒரு மரப் பலகையிலோ, ஒரு தலையணையிலோ வைத்து சுத்தமான ஒரு நபரைத் தவிர சுமக்கக் கூடாது. இது சரி என்றால், அவரின் சுத்தமின்னை நிலையிலே அது சுமக்கப்பட்டதாக ஆகி விடும். குர்ஆனை அசுத்தமாக்கும் ஏதேனும் அதை சுமக்கும் ஒருவரின் கையில் உள்ளது என்பதற்காக இது வெறுக்கப்படவில்லை. எனினும், சுத்தமில்லாதவன் அதை சுமப்பவனுக்கு, குர்ஆனின் கண்ணியம், அதன் கவுரவம் பேணுவதற்காகவே இது வெறுக்கப்படுகிறது என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.

சுத்தமானவர்களே தவிர அதை தொட மாட்டார்கள் என்ற வசனத்தின் விஷயமாக நான் கேள்விப்பட்டதில் மிக அழகானது, இந்த வசனம் அபஸா வதவல்லா என்ற 80வது அத்தியாயத்தில் உள்ள வசனத்தின் அந்தஸ்தில் உள்ளதாகும்.

அந்த அத்தியாயத்தில் அல்லாஹ் கூறுவது:-

அவ்வாறல்ல! ஏனெனில் (இக்குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும். எனவே, எவர் விரும்புகிறாரோ அவர்அதை நினைவு கொள்வார். (அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் இருக்கிறது. உயர்வாக்கப்பட்டது. பரிசுத்தமாக்கப்பட்டது. (வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால், (லவ்ஹுல் மஹ்ஃபூழ் லிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கைமிக்கவர்கள், நல்லவர்களாவார்கள். (அல்குர்ஆன் 80:12-16).

இவ்வாறு மாலிக் (ரஹ்) கூறுகிறார்கள்.


பாடம் 136
ஒளுவின்றி குர்ஆன் ஓதுவதற்குரிய அனுமதி
எண் 470: குர்ஆனை ஓதக் கூடிய கூட்டத்தினருடன் உமர்(ரலி) அவர்கள் இருந்தார்கள். மல ஜலம் கழிக்கச் சென்று விட்டு, குர்ஆனை ஓதியவாறே திரும்பி வந்தார்கள். அப்போது ஒருவர், 'தலைவரே! ஒளுவின்றி குர்ஆனை ஓதுகின்றீர்களே!' எனக் கூறினார். இது விஷயமாக (கூடாது என்று) உனக்கு தீர்ப்பு வழங்கியவன் யார்? முஸைலமாவா? என்று உமர்(ரலி) அவர்கள் கேட்டார்கள். இதை முஹம்மது இப்னு சிரீன் கூறுகின்றார்கள்.


பாடம் 137
குர்ஆனை பகுதி பகுதியாக ஓதுவது பற்றி..

எண் 471: இரவில் குர்ஆனின் ஒரு பகுதியை ஓதத் தவறியவர் சூரியன் சாய்ந்ததில் இருந்து லுஹர் தொழுகைக்குள் அதை ஓதி விட்டால் அவர் அதைத் தவற விட்டவராக ஆக மாட்டார் என்று (அல்லது அதை நிறைவேற்றியராவார் என்றோ) உமர்(ரலி) அவர்கள் கூறியதாக அப்துர் ரஹ்மான் இப்னு அப்துல் காரீ அறிவிக்கின்றார்கள்.


எண் 472: நானும், முஹம்மது இப்னு யஹ்யா அவர்களும் அமர்ந்திருந்தோம். அப்போது முஹம்மது அவர்கள் ஒருவரை அழைத்து, 'உன் தந்தையிடம் நீ கேட்டதை எனக்குக் கூறுங்கள்' என்று கேட்டார்கள். அப்போது அவர் தந்தை கூறியதாக கூறினார் (அவர் தந்தை கூறியதாவது:-)
நான் ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களிடம் சென்று, 'ஏழு முறைகளில் குர்ஆன் ஓதுவதைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கு ஸைத் அவர்கள் (எல்லாமே) அழகானது தான் என்று கூறினார்கள். தொடர்ந்து அவர் 15 நாள்களில் அல்லது 20 நாட்களில் தான் தொடர்ந்து குர்ஆனை ஓதுவது எனக்கு விருப்பமானது என்று கூறி விட்டு, அது ஏன் என்று என்னிடம் கேட்பீராக! என்றார்கள். அதற்கு நான் அவ்வாறே கேட்கிறேன்' என்றேன். அதை சிந்தித்து விளங்குவதற்காகவே என்று விடையளித்தார்கள். இதை யஹ்யா இப்னு ஸயீத் கூறுகின்றார்கள்.


பாடம் 138
குர்ஆன் பற்றி..
எண் 473: ஹிஷாம் இப்னு ஹகீம்(ரலி) அவர்கள், சூரா ஃபுர்கானை (அத்தியாயத்தை) நபி(ஸல்) அவர்களும், நானும் ஓதுவதற்கு மாற்றமாக ஓதுவதை நான் கேட்டேன். அவரிடம் வேகமாகச் சென்றேன். பின்பு அவர் ஓதி முடிக்கும் வரை காத்திருந்தேன். (முடிந்ததும்) அவரை அவரது மேலாடையால் சுற்றி (கட்டி) அவரை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தேன். 'இறைத்தூதர்(ஸல்) அவர்களே! சூரா ஃபுர்கானை நீங்கள் ஓதுவதற்கு மாற்றமாக இவர் ஓதிடக் கேட்டேன்' என்று கூறினேன். 'அவரை அவிழ்த்து விடுங்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறி விட்டு, (அவரிடம்) 'நீ ஓது' என்றார்கள். நான் எப்படி ஓதக் கேட்டேனோ அதன்படியே அவர் ஓதினார். உடனே நபி(ஸல்) அவர்கள் 'இவ்வாறே (குர்ஆன்) இறக்கியருளப்பட்டது' என்று கூறினார்கள். பின்பு என்னிடம் 'நீர் ஓதவும்' என்று கூறினார்கள். அதை நான் ஓதினேன். 'இவ்வாறே (குர்ஆன்) இறக்கியருளப்பட்டது. இந்தக் குர்ஆன் ஏழு விதத்தில் இறக்கப்பட்டது. எனவே நீங்கள் உங்களுக்கு எளிதானதையே ஓதுங்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


எண் 474: குர்ஆனை (யுடையவருக்கு) உதாரணம் கட்டப்பட்ட ஒட்டகத்தைப் போன்றதாகும். 'அதை ஒருவர் நன்கு கவனித்தால் அவர் தன் வசம் அதை வைத்துக் கொள்ளலாம். அதை அவிழ்த்து விட்டால், அது ஓடி விடும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


எண் 475: ஹாரிஸ் இப்னு ஹிஷாம்(ரலி) அவர்கள், நபி(ஸல்) அவர்களிடம், 'இறைச்செய்தி (வஹீ) உங்களுக்கு எப்படி வந்தது? என்று கேட்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'சில சமயம் மணி ஓசை போன்று என்னிடம் அது வரும். அது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். இதனால் எனக்கு (காய்ச்சல் ஏற்படும்), நடுக்கம் ஏற்படும். அவர் (மலக்கு) கூறியதை நான் மனனம் செய்து கொள்வேன். சிலசமயம், என்னிடம் மலக்கு மனித தோற்றத்தில் வருவார். என்னிடம் பேசுவார். அவர் கூறியதை நான் மனனம் செய்து கொள்வேன்' என்று கூறினார். இதைக் கூறிய ஆயிஷா(ரலி) அவர்கள், 'கடும் குளிர்காலத்தில் அவர்கள் மீது வஹீ இறங்கியதை நான் பார்த்தேன். அப்போது அவர்களுக்கு நடுக்கம் ஏற்பட்டது. மேலும் அவர்களின் நெற்றி, வியர்வையினால் நனைந்திருந்தது' என்றும் கூறினார்கள்.


எண் 476: அப்துல்லாஹ் இப்னு உம்மீ மக்தூம்(ரலி) அவர்கள் விஷயத்தில் தான் ''அபஸ வதவல்லா'' எனத் துவங்கும் அத்தியாயம் இறக்கப்பட்டது. அவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். ''முஹம்மது அவர்களே! என்னை அருகில் வைத்துக் கொள்ளுங்கள்'' என்று கூறினார். (அது சமயம்) நபி(ஸல்) அவர்களிம், இணைவைப்போரில் உள்ள முக்கியமானவர்களில் ஒருவர் இருந்தார். நபி(ஸல்) அவர்கள் அவரை (உம்மீ மக்தூம்(ரலி))ப் புறக்கணித்தார்கள். மேலும் (இணைவைக்கும்) மற்ற நபரை நோக்கி, ''இன்னாரின் தந்தையே! நான் கூறுவதில் குறை ஏதும் கண்டீர்களா?'' என்று கேட்டார்கள். ''இல்லை, ரத்த (உறவின்) மீது சத்தியமாக, நீர் கூறியதில் குறையை நான் காணவில்லை'' என்று அவர் கூறினார். அப்போது தான், ''குருடன் அவரிடம் வந்த போது அவர் புறக்கணித்தார், கடுகடுத்தார்'' என்று வசனம் இறக்கியருளப்பட்டது. இதை தன் தந்தை உர்வா கூறியதாக ஹிஷாம் கூறுகின்றார்கள்.


எண் 477: நபி(ஸல்) அவர்கள் இரவில் பயணம் சென்றார்கள். அவர்களுடன் உமர்(ரலி) அவர்களும் சென்றார்கள். ஒரு விஷயம் பற்றி அவர் அவர்களிடம் கேட்டார்கள். அவருக்கு அவர்கள் பதில் கூறவில்லை. பின்பு மீண்டும் அவர்களிடம் கேட்டார்கள். அவருக்கு அவர்கள் பதில் கூறவில்;லை. அப்போது உமர்(ரலி) அவர்கள், ''உம்மை உமரின் தாய் இழக்கட்டுமாக! மூன்று முறை இறைத்தூதரிடம் வற்புறுத்தினாய், ஒவ்வொரு முறையும் உமக்கு அவர்கள் பதில் அளிக்கவில்லையே'' என்று (தமக்குத்தாமே) கூறிக் கொண்டார்கள். உமர்(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:-

நான் உடனே என் ஒட்டகையை ஓட்டிக் கொண்டு, மக்கள் முன் சென்றேன். என் விஷயமாக குர்ஆன் வசனம் இறக்கப்படக் கூடும் என பயந்தேன். சிறிது நேரம் கூட இல்லை. என்னை சப்தமிட்டு அழைப்பவரின் குரல் கேட்டேன். என் விஷயமாக குர்ஆன் வசனம் இறக்கபட்டிருக்கலாம் என நான் பயந்ததாக கூறிக் கொண்டேன். உடனே நபி(ஸல்) அவாகளிடம் வந்து, ஸலாம் கூறினேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், ''இரவு என் மீது எனக்கு ஒரு அத்தியாயம் இறக்கப்பட்டுள்ளது. அது சூரியன் உதயமான இன்றைய நாளை விட எனக்கு மிக விருப்பமானதாக உள்ளது'' என்று கூறி விட்டு, நிச்சயமாக நாம் உமக்கு தெளிவான வெற்றியை அளித்து விட்டோம் (என்று துவங்கும்) 48:1 வசனத்தை ஓதினார்கள்.

இதை அஸ்லம் கூறியதாக அவர்களின் மகன் ஸைத் கூறுகின்றார்கள். (இது புகாரியிலும் இடம் பெற்றுள்ளது).


எண் 478: ''உங்களில் ஒரு கூட்டம் தோன்றுவார்கள். உங்களின் தொழுகையே அவர்களின் தொழுகையேயாகும். உங்களின் நோன்புகளே அவர்களின் நோன்புகளாகும், உங்களின் செயல்களே அவர்களின் செயல்களாகும் நீங்ள் ஒப்பிட்டு நோக்குவீர்கள். (அந்த அளவுக்கு அவர்களின் வழிபாடு அதிகமாக இருக்கும். ஆனால்) அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். அவர்களின் தொண்டைக் குழிகளை விட்டும் அது கடக்காது. வேட்டைப் பிராணியிலிருந்து அம்பு (பட்டு) வெளியாவது போல் மார்க்கத்தை விட்டும் அவர்கள் வெளியயேறுவார்கள். அம்பின் நுனியில் போய் பார்ப்பீர்.அதில் (அடையாளம்) எதையும் காண மாட்டீர். அம்பின் அடியில் பார்ப்பீர். எதையும் அப்போது காண மாட்டீர். அம்பின் இறகையும் பார்ப்பீர். அதிலும் (அடையாளம்) எiதையும் காண மாட்டீர். (இறுதியில் அம்பு வேட்டைப் பிராணியை) குத்தியதா? என சந்தேகம் கொள்வீர். (அந்த மாதிரி அவர்களின் வழிபாட்டின் பயன் அமையும்)'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஸயீத்(ரலி) அறிவிக்கின்றார்கள்.

இது புகாரியிலும் இடம் பெற்றுள்ளது.


எண் 479: அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் அல்பகரா அத்தியாயத்தைக் கற்றுக் கொள்ள எட்டு வருடங்கள் எடுத்துக் கொண்டார்கள் என்ற செய்தி தமக்குக் கிடைத்ததாக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


பாடம் 139
குர்ஆனில் 'ஸஜ்தா' வசனங்கள் பற்றி..

எண் 480: அபூஹுரைரா(ரலி) அவர்கள் 84 வது அத்தியாயத்தை (தொழுகையில்) மக்களுக்காக ஓதினார்கள். அதில் ஸஜ்தா செய்தார்கள். தொழுகையை முடித்ததும், ''நபி(ஸல்) அவர்களும் இவ்வாறே இதில் ஸஜ்தா செய்தார்கள்'' என்று மக்களிடம் அறிவித்தார்கள் என அபூஸலமா இப்னு அப்துர் ரஹ்மான் கூறுகின்றார்கள்.


எண் 481: உமர்(ரலி) அவர்கள் ஹஜ் (எனும் 23 வது) அத்தியாயத்தை ஓதினார்கள். அதில் இரண்டு ஸஜ்தாக்களையும் செய்தார்கள். பின்பு 'இந்த (23வது) அத்தியாயம் இரண்டு ஸஜ்தாக்கள் மூலம் சிறப்பிக்கப்பட்டுள்ளது'' என்றும் கூறினார்கள் என எகிப்துவாசி கூறினார். இதை இப்னு உமர் அவர்களின் அடிமை நாபிஉ கூறுகின்றார்.


எண் 482: அப்துல்லா இப்னுஉமர்(ரலி) அவர்கள் 23 வது அத்தியாயத்தை ஓதும் போது இரண்டு ஸஜ்தாக்கள் செய்வதை நான் பார்த்துள்ளேன் என அப்துல்;லா இப்னு தினார் கூறுகின்றார்கள்.


எண் 483: உமர்(ரலி) அவர்கள் நஜ்மு எனும் (53வது) அத்தியாயத்தை ஓதினார்கள். அப்போது அதில் ஸஜ்தா செய்தார்கள். பின்பு நிலைக்கு வந்து, மற்றொரு அத்தியாத்தை ஓதினார்கள் என அஹ்ரஜ் கூறுகின்றார்கள்.


எண் 484: ஜும்ஆ நாளன்று மிம்பரில் இருக்கும் போது உமர்(ரலி) அவர்கள் ஸஜ்தா வசனத்தை ஓதினார்கள். உடனே மிம்பரை விட்டும் இறங்கி ஸஜ்தா செய்தார்கள். மக்களும் அவர்களுடன் சேர்ந்து ஸஜ்தா செய்தனர். பின்பு மற்றொரு முறை ஜும்ஆ நாளன்று இதை ஓதினார்கள். மக்கள் ஸஜ்தா செய்ய ஆயத்தமானார்கள். உடனே உமர்(ரலி) அவர்கள், வேண்டாம். அப்படியே அமருங்கள். இதில் நம் விருப்பம் தானே தவிர அல்லாஹ் இதைக் கட்டாயமாக்கவில்லை'' என்று கூறினார்கள். அவர்களும் ஸஜ்தா செய்யவில்லை. மக்கள் ஸஜ்தா செய்வதையும் தடுத்தார்கள். இதை உர்வா கூறுகின்றார்கள்.

'ஒரு இமாம் ஸஜ்தா வசனத்தை ஓதி மிம்பரில் இருந்து இறங்கி ஸஜ்தா செய்வது கட்டாயமில்லை' என இமாம் மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.

இது நம்மிடம் உள்ள சட்டமாகும். ஸஜ்தா வசனங்களில் பதினொன்று எதுவும் முஃபஸ்ஸல் வசனங்களில் இல்லை என இமாம் மாலிக்(ரலி) கூறுகின்றார்கள்.

சுப்ஹுத் தொழுகைக்குப் பின்னும், அஸருக்குப் பின்பும் குர்ஆனில் உள்ள ஸஜ்தா வசனங்களை ஓதிட ஒருவருக்கு அனுமதியில்லை. ஏனெனில் நபி(ஸல்) அவாகள் சுப்ஹுக்குப் பின் சூரியன் உதயமாகும் வரை தொழவும், அஸருக்குப் பின் சூரியன் மறையும் வரை தொழவும் தடை செய்துள்ளனர். ஸஜ்தாவும், தொழுகை போல் தான். எனவே இந்த இரண்டு நேரங்களிலும் ஸஜ்தா செய்ய வேண்டுமா? என்று கேட்கப்பட்டதற்கு, ''ஆண், பெண் இருவரும் சுத்தமாக இருந்தாலே தவிர ஸஜ்தா செய்யக் கூடாது'' என்று மாலிக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

ஸஜ்தா வசனத்தை ஒரு பெண் ஓதுகிறார். அதை ஒருவர் கேட்கிறார். இதற்காக இவரும் ஸஜ்தா செய்ய வேண்டுமா? என்று கேட்கப்பட்டதற்கு, ''ஸஜ்தா செய்ய இவருக்கு அவசியமில்லை. ஸஜ்தா ஒரு கூட்டத்தார் மீது கடமை என்பது, அவர்கள் இவருடன் உள்ளனர். அவரை இமாமாக பின் தொடர்கின்றனர். ஸஜ்தா வசனத்தை அவர் ஓதினால் அவருடன் சேர்ந்து இவர்களும் ஸஜ்தா செய்ய வேண்டும். இமாமாக இல்லாத நிலையில் ஒருவர் தனிப்பட்டவனாக ஸஜ்தா வசனத்தை ஓதிட ஒருவர் கேட்டால் அவருக்கு ஸஜ்தா செய்வது கடடாயமில்லை'' என்று மாலிக் (ரஹ்) பதில் கூறினார்கள்.


பாடம் 140
''குல்ஹுவல்லாஹு அஹத்'', ''தபாரக்கல்லதீ பியதிஹில் முல்க்'' ஆகிய அத்தியாயங்களை ஓதுவதன் சிறப்பு!

எண் 485: ''குல்ஹுவல்லாஹு அஹது'' (எனத் துவங்கும் 112 வது) அத்தியாயத்தை திரும்ப திரும்ப ஒரு மனிதர் ஓதுவதைக் கேட்டேன். விடிந்ததும் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, இதுபற்றி கூறினேன். (ஓதிய) அம் மனிதர் அதை குறைவாக எண்ணிக் கொண்டிருந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ''என் உயிரை தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக!, நிச்சயமாக அந்த அத்தியாயம், குர்ஆனின் மூன்றில் ஒரு பங்குக்குச் சமமாகும்'' என்று கூறினார்கள். அதை அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவிக்கின்றார்கள்.


எண் 486: நபி(ஸல்) அவர்களுடன் சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு மனிதர் ''குல்ஹுவல்லாஹு அஹது'' சூராவை ஓதுவதைக் கேட்டார்கள். ''அவருக்கு அவசியமாகி விட்டது'' என்று அப்போது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ''இறைத்தூதர்(ஸல்) அவர்களே! என்ன அவசியமாகி விட்டது? என்று கேட்டேன். ''சொர்க்கம்'' என்று கூறினார்கள். உடனே நான் அந்த மனிதரிடம் சென்று, இச்செய்தியைக் கூற எண்ணினேன். நபி(ஸல்) அவர்களிடம் நான் காலை நேர உணவு தவறிவிடுமோ எனப் பயந்தேன். எனவே நபி(ஸல்) அவர்களுடன் காலை நேர உணவைச் சாப்பிட்டேன். பின்பு அந்த மனிதரிடம் சென்றேன். அவர் சென்று விட்டதைக் கண்டேன் என்று அபூஹுரைரா(ரலி) அவர்கள் கூறினார்கள் என ஸைத் இப்னு கத்தாப் குடும்பத்தினரின் அடிமையான உபைத் இப்னு ஹுனைன் கூறுகிறார்.


எண் 487: ''குல்ஹுவல்லாஹு அஹத்'' அத்தியாயம், குர்ஆனின் மூன்றில் ஒரு பங்குக்கு ஈடாகும். மேலும் ''தபாரகல்லதீ பியதிஹீ'' எனும் 67 வது அத்தியாயம், அதை ஓதியவருக்காக (மறுமையில்) வாதிடும்'' என்று ஹுமைத் இப்னு அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் கூறியதாக இப்னு ஷிஹாப் கூறுகின்றார்கள்.


பாடம் 141
அல்லாஹ்வை நினைவு கூர்தல்

எண் 488: ''லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர்'' என்று ஒருவர் நூறு தடவை கூறினால், அவருக்கு பத்து அடிமைகளை உரிமை விட்ட நன்மைகள் உண்டு. அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். மேலும் நூறு தீமைகள் அதிகப்பட்டு விடும். அந்நாளில் (காலை முதல்) மாலை வரை ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பும் உண்டு. வேறு எவரும் இவர் செய்ததை விட சிறந்ததை செய்து விட முடியாது. ஆனால் இதை விட அதிகமாக செய்ததைத் தவிர என்று நபி(ஸல்) கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.

(அரபி வாசகத்தின் பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை, அவன் தனித்தவன். அவனுக்க இணையாளன் இல்லை. அவனுக்கே ஆட்சி அதிகாரம். அவனுக்கு புகழ் அனைத்தும், அவனே அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவன்).


எண் 489: ''சுப்ஹானல்லாஹி'' வபிஹம்திஹி'' என்று ஒருநாளைக்கு நூறு தடவை ஒருவர் கூறினால் அவரது குற்றங்கள் கடல் நுரை அளவுக்கு இருப்பினும் அவைகள் அழிந்து விடும் என்று நபி(ஸல்) கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.


எண் 490: ஒருவர் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் ஒரு தடவை (சுப்ஹானல்லாஹ் என்று) தஸ்பீஹ் கூறினால், 33 தடவை (அல்லாஹு அக்பர் என்று) தக்பீர் கூறினால், ஒரு தடவை (அல்ஹம்துலில்லாஹ்) என தஹ்மீது கூறினால், மேலும், ''லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து, வஹுவ அலாகுல்லி ஷைஇன் கதீர்'' என்று நூறாவது தடவையாக கூறி முழுமைப்படுத்தினால் அவரது பாவங்கள் கடல் நுரை போல் இருந்தாலும் மன்னிக்கப்படும் என அபூஹுரைரா(ரலி) கூறியதாக அதாஉ இப்னு யஸீதுல் லைதீ கூறுகின்றார்கள்.


எண் 491: நிலையான நற்செயல்களில் ஒன்றாக, ஒரு அடியான் ''அல்லாஹு அக்பர், சுப்ஹான்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், லா இலாஹ இல்லல்லாஹு லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்'' என்று கூறுவதும் ஆகும் என்று ஸயீத் இப்னு முஸய்யப்(ரலி) கூறியதாக உமாரா இப்னு ஸய்யத் கூறுகின்றார்கள்.


எண் 492: ''உங்களின் அந்தஸ்துகளை உயர்த்துகின்ற, உங்கள் எஜமானனிடம் உங்களை தூய்மைப்படுத்துகின்ற உங்களின் செயல்களில் சிறந்ததாகவும், தங்கம், பட்டை தர்மம் செய்வதை விட உங்களுக்கு சிறந்ததாகவும், மேலும் உங்களின் எதிரிகளை நீங்கள் சந்தித்து, அவர்களின் கருத்தை நீங்கள் வெட்டி, உங்கள் கருத்தில் அவர்கள் வெட்டுவது என்பதை விட உங்களுக்கு சிறந்ததாகவும் உள்ளதை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? என்று அபூதர்தா(ரலி) கேட்ட போது, மக்கள் 'சரி' என்று கூறினார். ''அல்லாஹ்வை நினைவு கூர்(ந்து சிந்திக்கச் செய்)வது தான்'' என்று அபுதர்தா(ரலி) கூறினார்கள். இதை அறிவிக்கும் ஸியாத் இப்னு அபூஸியாத் என்பவர் ''அல்லாஹ்வின் வேதனையிலிருந்து ஆதமின் மகனைக் காப்பாற்றும் செயல் ஒன்று, அல்லாஹ்வைத திக்ர் செய்தல் என்பதை விட வேறு இல்லை'' என் முஆத் இப்னு ஜபல்(ரலி) கூறியதாகவும் கூறுகின்றார்கள்.


எண் 493: நாங்கள் நபி(ஸல்) அவர்களின் பின்னே தொழுது கொண்டிருந்தோம். நபி(ஸல்) அவாகள் ருகூஉ விலிருந்து தன் தலையை உயர்த்தி 'ஸமிஅல்லாஹுலிமன் ஹமிதா' என்று அவர்கள் கூறிய போது அவர்களின் பின்னே இருந்த ஒருவர் 'ரப்பனா வலகல் ஹம்து, ஹம்தன் கதீரன் தப்பியபன் முபாரகன் ஃபீஹி' என்று கூறினார். நபி(ஸல்) அவாகள் தொழுகையை முடித்ததும், ''சற்று முன் கூறியவர் யார்?'' என்று கேட்டார்கள். அந்த மனிதர் ''இறைத்தூதர்(ஸல்) அவர்களே! நான் தான்'' என்றார். உடனே நபி(ஸல்) அவர்கள், ''(நீ கூறியதை) தங்களில் யார் முதலில் பதிவு செய்வது என முப்பதுக்கும் மேற்பட்ட வானவர்கள் போட்டி போட்டதை நான் பார்த்தேன்'' என்று கூறினார்கள். இதை ரிஃபாஆ இப்னு ராஃபிஹ்(ரலி) அறிவிக்கின்றார்கள்.


பாடம் 142
பிரார்த்தனை பற்றி..

எண் 494: ''ஒவ்வொரு நாக்கும் அவர் பிரார்த்திக்கும் ஒரு பிரார்த்தனை உண்டு. நான் என் பிரார்த்தனையை மறுமையில் என் சமுதாயத்திற்கு பரிந்துரை செய்ய பயன்படுத்திக் கொள்ள விரும்புகின்றேன்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


எண் 495: ''அல்லாஹும்ம ஃபாலிகில் இஸ்பாஹி, வஜாஇலில் லய்லி ஸகனன், வஷ்ஷம்சி வல் கமரி ஹுஸ்பானன் இக்ழி அன்னீத் தய்ன, வ அஹ்னினீ மினல் ஃபக்ரி அவம்திஹ்னீ பிஸம்ஈ வ பஸரீ வகுவ்வத்தீ ஃபீ ஸபீலிக'' என்று நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள் என தனக்கு செய்தி கிடைத்தாக யஹ்யா இப்னு ஸயீத் கூறுகின்றார்கள்.

(இதன் பொருள்: இறைவனே! கலை நேரத்தை உருவாக்கியவனே! இரவை அமைதி பெற ஏற்படுத்தியவனே! சூரியனையும், சந்திரனையும் பிரகாசிக்கச் செய்தவனே! என்னை விட்டும் கடனை நீக்குவாயாக! என்னை ஏழ்மையை விட்டும் பாதுகாப்பாயாக! என் செவிப்புலன், என் பார்வை, என் வலிமை மூலம் உன் வழியல் என்னை பயன்படுத்துவாயாக!)


எண் 496: ''இறைவனே! நீ விரும்பினால் என்னை மன்னிப்பாயாக! நீ விரும்பினால் எனக்கு அருள் புரிவாயாக! என உங்களில் ஒருவர் பிரார்த்திக்கும் போது கூற வேண்டாம். (மாறாக) கேட்பதை வலியுறுத்திக் கேட்கட்டும்! அவனை கட்டாயப்படுத்துவர் எவருமில்லை என்று நபி(ஸல்)அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.


எண் 497: நான் கேட்டேன், எனக்குக் கிடைக்கவில்லை என்று கூறி அவசரப்படாமல் இருக்கும் வரை உங்களில் ஒருவரின் பிரார்த்தனை ஏற்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.


எண் 498: நம் இறைவன் ஒவ்வொரு இரவும் முதல் வானத்தில் இறங்கி, இரவின் மூன்றில் இறுதிப் பகுதி வரை இருந்து கொண்டு. ''என்னிடம் பிரார்த்திப்பவர் யார்? அதை நான் ஏற்கிறேன், என்னிடம் கேட்பவர் யார்? அதை நான் தருகின்றேன். என்னிடம் பாவமன்னிப்புக் கோருபவர் யார்? அவரை நான் மன்னிக்கிறேன்'' என்று கூறுவான் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


எண் 499: நான் நபி(ஸல்) அவர்களின் அருகே தூங்கிக் கொண்டிருந்தேன். இரவில் அவர்களை நான் (தேடி) துளாவினேன். என் கையால் அவர்களைத் தொட்டேன். என் கை அவர்களின் பாதங்கள் மீது இருந்தது. அவர்கள் ஸஜ்தா செய்தவர்களாக, ''அஊது பிரிழாக மின் ஸக்திக, வபி முஆஃபதிக மின் உகூபதிக்க, வபிக மின்க லா உஹ்ஸீ ஃஸனாஅன் அலய்க, அன்த கமா அஸ்னய்த அலா நஃப்ஸிக'' என்று கூறினார்கள். இதை ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்.

இதன் பொருள்: இறைவனே! உன் திருப்தி மூலம் உன் கோபத்தை விட்டும், உன் விடுதலை மூலம் உன் தண்டனையை விட்டும், உன் அரவணைப்பு மூலம் உன் புறக்கணிப்பை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன். உனக்கு எதிராக புகழை நான் எண்ணவில்லை. நீ, உன்னை நீ புகழ்வது போல் உள்ளவனாவாய்.


எண் 500: பிரார்த்தனையில் மிகச் சிறந்தது, அரஃபா நாளின் போது செய்யும் பிரார்த்தனையாகும். நானும், எனக்கு முன் இருந்த நபிமார்களும் கூறியவற்றில் சிறந்தது, ''லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீகலஹு'' என்பது தான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக தல்ஹா இப்னு உபைதுல்லா இப்னு கரீஸ்(ரலி) அறிவிக்கின்றார்கள்.


எண் 501: குர்ஆனிலிருந்து ஒரு அத்தியாயத்தை மக்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்தது போல், இந்த (பின்வரும்) துஆவையும் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். ''அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் அதாபி ஜஹன்னம வ அஊது பிக்க மின் அதாபில் கப்ர், வ அஊதுபிக்க மின் ஃபித்னதில் மஹ்யா வல் மாத்தி'' என்ற துஆவை நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லா இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

பொருள்: இறைவா! உன்னிடம் நரகத்தை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். மேலும் உன்னிடம் கப்ரு வேதனையை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன். தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். மேலும் வாழ்வு மற்றும் மரணத்தில் உள்ள குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.


எண் 502: நபி(ஸல்) அவர்கள் இரவின் ஒரு பகுதியில் தொழத் தயாரானார்கள். அல்லாஹும்ம லகல் ஹம்து, அன்த நூருஸ் ஸமாவாத்தி வல் அர்ழி, வலகல் ஹம்து, அன்த கய்யாமுஸ் ஸமாவாத்தி வல் அர்ழி, வலகல் ஹம்து, அன்த ரப்புஸ் ஸமாவாத்தி வல் அர்ழி வமன் ஃபீஹின்ன, அன்தல் ஹக்கு, வ கவ்லுகல் ஹக்கு, வ வஹ்துகல் ஹக்கு, வலிகாஉக ஹக்குன் வல் ஜன்னத்த ஹக்கு, வன்னாரு ஹக்குன், வஸ்ஸாஅது ஹக்குன், அல்லாஹும்ம லக்கல் ஹம்து, வபிக ஆமன்து, வஅலய்க தவக்கல்து, வஇலய்க அனய்து, வபிக காஸம்து, வஇலய்க ஹாகம்து, ஃபஹ்ஃபிர்லீ மா கத்தம்து வ அக்கர்த்து வ அஸ்ரர்து, வ அஹ்லன்து, அன்த இலாஹு லாஇலாஹ இல்லா அன்த என்று பிரார்த்திப்பார்கள் என அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்;(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

பொருள்: இறைவா! உனக்கே புகழ் அனைத்தும். நீயே வானங்கள், பூமியின் ஒளி ஆவாய். உனக்கே புகழ் அனைத்தும். நீயே வானங்கள், பூமியை நிர்வாகம் செய்பவன். உனக்கே புகழ் அனைத்தும். நீயே வானங்கள், பூமி மற்றும் இவ்விரண்டிலும் உள்ளவர்கள் இறைவன் ஆவாய். நீயே உண்மையாளன். உன் வார்த்தை உண்மையானது. உன் வாக்குறுதி உண்மையானது. உன் சந்திப்பு உண்மையானது. சொர்க்கம் உண்மையாகும். நரகம் உண்மையாகும். மறுமையும் உண்மையானது. இறைவா! உனக்கே கட்டுப்பட்டேன். உன்னையே நம்பிக்கை கொள்கிறேன். உன் மீதே பொறுப்பேற்படுத்துகின்றேன். உன் பக்கமே திரும்புவேன். உன்னிடமே முறையிடுவேன். உன்னிடமே தீர்ப்பை எதிர்பார்க்கின்றேன். எனவே, இறைவா! என்னை நான் முன்னும், பின்னும், ரகசியமாகவும், வெளிப்படையாகவும் செய்வதவற்றை மன்னிப்பாயாக! நீயே என் இறைவன். உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை.


எண் 503: மதீனாவிற்கு அருகில் உள்ள பனூ முஆபியா குடியிருப்புப் பகுதியில் இருந்த எங்களிடம் அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் வந்தார்கள். ''இந்த உங்களின் பள்ளிவாசலில் நபி(ஸல்) அவர்கள் எங்கே தொழுதார்கள் என்பதை அறிவீர்களா?'' என்று கேட்டார். அவரிடம் 'ஆம்' என்றேன். மேலும் அதில் மூலைப் பகுதியை நான் காண்பித்தேன். ''இங்கே மூன்று விஷயங்களுக்காக நபி(ஸல்) அவர்கள் பிரார்தித்ததை நீர் அறிவீரா?'' என்று கேட்டார். 'ஆம்' என்றேன். ''அவற்றை எனக்குக் கூறு'' என்று கேட்டார்கள்;. ''முஸ்லிம்களை முஸ்லிம் அல்லாத எதிரி வெற்றி கொள்ளாமல் இருக்கவும், பஞ்சம், வெள்ளத்தால் அவர்கள் அழிக்கப்படாமல் இருக்கவும் பிரார்த்தனை செய்தார்கள். அவ்விரண்டையும் கொடுக்கப்பட்டார்கள். மேலும் அவர்களுக்கிடையே பிணக்கு ஏற்படாமல் இருக்க பிரார்த்தனை செய்தார்கள். ஆனால் அது ஏற்கப்படவில்லை என்று கூறினேன். ''நீர் உண்மை கூறினீர்'' என்று கூறிய இப்னு உமர்(ரலி) அவர்கள், ''மறுமை நாள் வரை குழப்பம் (பிணக்கு) தொடரும்'' என்று கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஜாபிர் அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


எண் 504: பிரார்த்தனை செய்யும் எவருக்கும் மூன்றில் ஒன்று ஏற்படாமல் இருப்பதில்லை.அவரது பிரார்த்தனை ஏற்கப்படும். அல்லது அவரின் பிரார்த்தனையை ஏற்பது தாமதப்படுத்தப்படும் அல்லது அவரின் பிரார்த்தனை நிராகரிக்கப்படக் கூடும் என்று ஸைத் இப்னு அஸ்லம் கூறுகின்றார்கள்.


பாடம் 143
துஆவின் ஒழுங்குகள்

எண் 506: ''ஒரு மனிதர் அவருக்குப் பின் அவரது மகனின் பிரார்த்தனை காரணமாகவே உயர்த்தப்படுவார்'' என தன் இரண்டு கைகளையும் வானத்தை நோக்கி உயர்த்திக் காட்டியவராக ஸஈது இப்னு முஸய்யப் கூறுவார்கள் என யஹ்யா இப்னு ஸஈத் அவர்கள் கூறுகின்றார்கள்.


எண் 507: ''மேலும், உம் தொழுகையில் (அதிக) சப்தமிடாதீர். அதில் மெதுவாக ஓதாதீர். மேலும் இந்த இரண்டுக்குமிடையே ஒரு வழியை தேர்ந்தெடுப்பீராக'' (அல்குர்ஆன் 18:110) என்ற வசனம் இறக்கப்பட்டது. பிரார்த்தனை விஷயத்தில் தான் என்று தன் தந்தை உர்வா கூறியதாக ஹிஷாம் கூறுகின்றார்கள்.

கடமையான தொழுகையில் பிரார்த்தனை செய்வது பற்றி கேட்கப்பட்ட போது, ''அதில் பிரார்த்தனை செய்வதால் குற்றமில்லை என மாலிக் (ரஹ்) அவர்கள் பதில் கூறினார்கள் என யஹ்யா கூறுகின்றார்கள்.


எண் 508: அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக ஃபிஹலல் கய்ராதி வ தர்கல் முன்கராதி, வஹுப்பல் மஸாகீனி, வ இஃதா அரத் தஃபின்னாஸி பித்னதன் ஃபக்பிழ்னி இலய்க அய்ர மஃப்தூனீன்'' என்று நபி(ஸல்) அவர்கள் பிரார்த்திக்கும் போது கூறுவார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.

பொருள்: இறைவா! நல்லதைச் செய்திடவும், கெட்டதை தவிர்த்திடவும், ஏழைகளிடம் அன்பு கொள்வதையும் உன்னிடம் கேட்கின்றேன். மக்களிடையே குழப்ப நிலையை நீ நாடினால் குழப்ப நிலையை அடையாதவனாக உன்னிடம் என்னை எடுத்துக் கொள்வாயாக!


எண் 509: நேர்வழியை கேட்கும் ஒரு பிரார்த்தனையாளருக்கு, அதைப் பின்பற்றி நடப்போரின் கூலி போன்று கொடுக்கப்படாமல் இருப்பதில்லை. இதனால் இவர்களின் கூலியில் எதையும் அது குறைத்து விடாது. மேலும் வழிகேட்டை கேட்டும் ஒரு பிரார்த்தனையாளருக்கு அதன் குற்றங்கள் போன்று அவருக்கு கொடுக்கப்படாமல் இருப்பதில்லை. அவர்களின் குற்றச் சுமையிலிருந்து எதையும் அது குறைத்து விடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.


எண் 510: அல்லாஹும்ம ஜ்அல்னீ மின் அ இம்மத்தில் முத்தகீன் என்று அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுவார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.

பொருள்: இறைவா! இறையச்சமுடைய தலைவர்களில் ஒருவராக என்னை ஆக்குவாயாக!


ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் தொகுப்பு பிடிஃஎ ஃபைல் பதிவிறக்க
, ,