குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

26.6.14

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அல்லாஹ்வை அஞ்சுவதற்காக நோன்பு

மாசு மருவற்ற தூய இரட்சகனாகிய அல்லாஹ் தன்

திருமறையில் கூறுகிறான்…

‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் இறைவனை அஞ்சுவதற்காக உங்கள் முன் சென்றோர் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது’ (அல்குர்ஆன் 2:183)
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்….
‘ரமளான் மாதம் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப் படுகின்றார்கள்’ அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரீ 1899
கண்ணியமிக்க மாதம் விடை பெற்றுவிட்டது. கருணையாளனாகிய அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெற்றுக் கொண்டோம். இரவும் பகலும் வணக்கங்களால் பள்ளிகள் அலங்காரமாய் இருந்தன. ஐவேளை தொழுகைகளை பேணாதவர்களெல்லாம் வந்திருந்து தினமும் தொழுகைகளை பேணக்கூடியவர்களுக்கு ரமளானில் பள்ளியில் நெருக்கடியை ஏற்படுத்தி இருந்ததை காண முடிந்தது.
புதுப்புது முகங்கள்! ஆர்வத்தோடு அமல்கள்! அகமும், புறமும் அமைதியில் லயித்து கிடந்த மனிதர்கள்! எந்நேரமும் பள்ளிகளில் தித்திக்கும் திருமறையை ஓதுபவர்களின் ரீங்காரம். இடைவிடாத தொடர் பயான்கள்! நன்மைகளை ஒருவருக் கொருவர் எத்திவைத்தல்! தர்ம சிந்தனைகள்! நோன்பு திறப்பு சேவைகள்! இரவுத் தொழுகைகள்!  ஸஹர் நேர காரியங்கள்! லைலத்துல் கத்ர் இரவு! ஃபித்ராக்கள்! என்றெல்லாம் அமல்களின் அலங்காரத்தால் அழகிய மாதம் நிறைவு பெற்றுவிட்டது. ஸுப்ஹானல்லாஹ்!
நம்மை விட்டு பிரிந்து சென்ற இந்த ரமளானுடைய நோன்பு நம்மீது அல்லாஹ்வின் அச்சத்தை ஏற்படுத்தி வந்தது என்றால் அது மிகையாகாது. அண்ணல் நபி(ஸல்) அவர்களின் உண்மை கூற்றுபடி ரமளான் வந்து விட்டால் iஷத்தான் நம்மை விட்டு விரண்டோடுகின்றான். இதை ஒவ்வொருவரும் உளப்பூர்வமாக உணர்ந்து வைத்துள்ளோம்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்…
‘நோன்பைத்தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும். நிச்சயமாக நோன்பு எனக்கு(மட்டுமே) உரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்’ என்று அல்லாஹ் கூறுகிறான். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புஹாரி 1904
ரமளான் அல்லாத காலங்களில் நம்மில் பலர் பலவிதமான தீய பழக்கங்களை வழமையாக செய்து வந்தாலும் ரமளான் வந்து விட்டால் எல்லா விதமான பாவ காரியங்களையும் மூட்டை கட்டி வைத்துவிடுவதையும், தீய காரியங்கள் செய்யும் சூழ்நிலைகள் இருந்தும் அதை நெருங்காமல் இருப்பதையும் பார்க்கின்றோம்.
எல்லா மக்களுக்கும் எந்நேரமும் அல்லாஹ்வை பற்றிய சிந்தனையே மேலோங்கியிருந்தது. மருந்துக்குக் கூட மாற்று எண்ணங்களை – பேச்சுக்களை காணமுடியவில்லை. ‘இந்த மாதம் கண்ணியமிக்க மாதம்; இதில் நான் வைத்திருக்கும் நோன்பு எம்மை படைத்த இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கு மட்டுமே ஆகும். இந்த வணக்கத்தில் சொந்தம் கொண்டாட வேறு எவருக்கும் உரிமையில்லை’ என்ற அழுத்தம் திருத்தமான எண்ணம் மக்களால் வலுவாகப் பதிவு செய்யப்பட்டிருந்ததை உணர முடிந்ததது. அல்ஹம்துலில்லாஹ்!
தர்ஹாக்களைப் பற்றிய பேச்சோ, அவ்லியாக்கள் என்பவர்கள் பற்றிய ஷிர்க்கான-பித்அத்தான ஆராதனையோ மக்களிடத்திலே இம்மாதத்தில் எட்டிப் பார்க்கக்கூட முடியவில்லை. மார்க்கம் என்ற பெயரில் யாரேனும் எதையேனும் கதையளந்தால் மக்கள் அவர்களை ஓரம்கட்டுவதை காணமுடிந்தது. குறித்த நேரத்தில் தொழுகைகள் நிறைவேற்றப்பட்டன. இன்னும் சொல்வதானால் கடமையான தொழுகையின் நேரத்திற்கு முன்பே பள்ளிக்கு வந்திருந்து ஜமாஅத் தொழுகைக்காக காத்திருக்கும் அழகிய நற்பண்பை மக்களிடையே காண முடிந்தது.
அல்லாஹ் தன் திருமறையில்…
‘நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது (அல்குர்ஆன் 4:103)
அப்துல்லாஹ் பின் மஸ்வூது(ரலி) அவர்கள் கூறியதாவது.
அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்ட போது, ”தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவதாகும்’ என்று பதில் கூறினார்கள். (நூல்: புஹாரி 524)
தொழுகையை நிறைவேற்றியதும் அல்லாஹ்வின் அருளைத் தேடி விரைந்து செல்லும் ஆற்றலையும் மக்களிடம் கண்டோம்.
அல்லாஹ் தன் திருமறையில்…
‘தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்’ (அல்குர்ஆன் 62:10)
தர்மங்கள் இக்லாஸான நிலையில் வழங்கப்பட்டன. அல்லாஹ்வுக்காக தர்மம் செய்யும்போது இந்த ரமளானில் மேலான நன்மைகள் அல்லாஹ்விடம் கிட்டும் என்ற வலுவான நம்பிக்கையை மக்கள் வெளிப்படுத்தியிருந்தனர்.
‘தமது செல்வங்களை இரவிலும், பகலிலும், இரகசிய மாகவும், வெளிப்படையாகவும் (நல்வழியில்) செலவிடு வோருக்கு தமது இறைவனிடம் அவர்களுக்கான கூலி உண்டு. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அவர் கள் கவலைப்படவும் மாட்டார்கள்’ (அல்குர்ஆன் 2:274)
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்…
‘பேரிச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் (தர்மம்) செய்து நரகத்திலிருந்து (உங்களைப்) பாதுகாத்துக் கொள்ளுங்கள் அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம்(ரலி) நூல்: புஹாரி 1417
கடினமான வேலை சூழல்களுக்கு மத்தியிலும் குறிப்பிட்ட நேரத்தில் மார்க்கக் கடமைகளை நிறைவேற்றும் அபாரமான நினைவாற்றலையும் செயல் திறனையும் மக்கள் கொண்டிருந்தனர்.
‘எந்தத் துன்பம் ஏற்பட்டாலும் அல்லாஹ்வின் விருப்பத்தைக் கொண்டே தவிர இல்லை. அல்லாஹ்வை நம்புகின்ற சமுதாயத்திற்கு அவன் வழி காட்டுவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் (அல்குர்ஆன் 64:11)
அபூஹுரைரா(ரலி) கூறியதாவது: ”உங்களில் ஒருவரது வாசலில் ஆறு ஒன்று (ஓடிக்கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து தடவை குளிக்கிறார். அவரது மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா எனக் கூறுங்கள்’ என்று தோழர்களிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘அவரது அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது’ என நபித் தோழர்கள் கூறினர். ‘இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி 528)
திருமறை திருக்குர்ஆனோடு மாசு மருவற்ற தொடர்பை மக்கள் இம்மாதம் முழுவதும் கொண்டிருந்தனர். அதுசொல்லும் செய்தியை கல்மிச்சமில்லாமல் அவர்கள் செவியேற்பதையும் பார்க்க முடிந்தது.
அல்லாஹ் கூறுகிறான்…
”இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது)மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும்’(அல்குர்ஆன் 2:185)
இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறியதாவது:
”ஜிப்ரீல்(அலை) ரமளானின் ஒவ்வொரு இரவும் ரமளான் முடியும் வரை நபி(ஸல்) அவர்களைச் சந்திப்பார். நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள். ஜிப்ரீல்(அலை) தம்மைச் சந்திக்கும் போது மழைக்காற்றைவிட அதிகமாக நபி(ஸல்)  அவர்கள் வாரி வழங்குவார்கள்’ (நூல்: புஹாரி 1902)
சிகரெட், பீடி, பான்பராக், சினிமா போன்ற லாகிரி வஸ்துக்களை விட்டுவிட்டு எங்களால் சிறுநேரம்கூட இருக்கமுடியாது என்று சொன்னவர்களெல்லாம் இந்த ரமளானில் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு அல்லாஹ்வுக்காக நோன்பிருந்ததை பார்த்தோம். அல்லாஹ்வுக்காக என்றால் எங்களிடம் அண்டியிருக்கும் அத்தனை பலவீனங்களையும்இ மூட நம்பிக்கைகளையும். மாற்றிக்கொள்வோம் என்று சாட்சி பகரக்கூடியவர்களாய் மக்களில் பலர் இருந்ததைக் கண்டோம்.
அல்லாஹ் தன் திருமறையில்…
‘…அல்லாஹ்வை நம்பி நல்லறம் செய்பவரின் தீமைகளை அவரை விட்டும் அவன் நீக்குவான்.  அவரை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி’ (அல்குர்ஆன் 64:9)
சாதாரண நாட்களில் பஜ்ருக்கு எழுவதே போராட்டமான நிலையில் ரமளானில் ஸஹருக்கே எழுந்து தேவைகளை நிறைவேற்றிக் கொண்டு பஜ்ர் தொழுகையை மக்கள் கண்ணியப்படுத்திய விதம் உறக்கம் ஒரு பொருட்டல்ல! உண்மை மார்க்கமே மேலானது என்பதை சொல்லாமல் சொல்லியதை பார்த்தோம்.
அல்லாஹ் தன் திருமறையில்…
”இரவில் குறைவாகவே தூங்கிக் கொண்டிருந்தனர். இரவின் கடைசி நேரத்தில் பாவமன்னிப்புத் தேடுவார்கள்’ (அல்குர்ஆன் 51:17,18)
அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்…
”நீங்கள் ஸஹர் செய்யுங்கள்: நிச்சயமாக ஸஹர் செய்வதில் பரக்கத் இருக்கிறது’ அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி) நூல்: புஹாரி 1923
அல்லாஹ் தன் திருமறையில்…
”மகத்துவமிக்க இரவில் இதை (குர்ஆனை) நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது  வைகறை வரை இருக்கும்’ (அல்குர்ஆன் 97:1-5)
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
”யார் லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறாரோ அவர்(அதற்கு) முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்’ அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புஹாரி 2014
அந்த மன்னிப்பையும் திருப்பொருத்தத்தையும் வேண்டி அல்லாஹ்வுக்காக லைலத்துல் கத்ரை தேடினோம். அல்லாஹு அக்பர்! ஏகத்துவ தென்றல் எங்கெங்குமதவழ்ந்தது. ஈமானும் இக்லாஸும் ஒன்று மற்றொன்றைக் கொண்டு ஒளி பெற்றுக் கொண்டன.
அல்லாஹ்வின் நல்லடியார்களே! இவற்றுக்கெல்லாம் என்ன காரணம்? ரமளான் என்ற கண்ணியமிக்க மாதம் இறை நினைவையும் இறையச்சத்தையும் கற்றுத்தரும் பள்ளிக் கூடமாகவும்- கற்றதை செயல்படுத்தும் செயற்களனாக இருந்தது தான். மக்கள் எல்லோரையும் ரமளான் தன்பக்கம் இழுத்து அல்லாஹ்வின் மார்க்கம் வலியுறுத்தும் கடமைகளை எவ்வாறு செயல்படுத்த வேண்டும்? எவ்வாறு செயல்படுத்தினால் இறையச்சமும், இறைப்பொருத்தமும் கிடைக்கும் என்கின்ற படிப்பினைகளைக் கற்றுத்தந்து இருக்கின்றது.
இதன்மூலம் ரமளான் மனித இதயங்களில் அண்டியிருந்த அழுக்குகளையும், ஈமானை சுற்றிப் படிந்திருந்த ஒட்டடைகளையும் சுத்தப்படுத்தி துப்புரவாக்கி  அனுப்பியுள்ளது. இறையருளால் கிடைத்திருக்கும் இந்த அருட்கொடையை இஸ்லாமிய சமுதாயம் ரமளானுக்கு அடுத்துவரும் காலங்களிலெல்லாம் ‘அல்லாஹ்வுக்காக பாதுகாத்துக் கொள்ளுமா? அல்லது பரிதவிப்பில் விட்டுவிடுமா?
அல்லாஹ் தன் திருமறையில்…
”முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்’ (அல்குர்ஆன் 33:35)
இதுவரை நாம் குறிப்பிட்டுள்ள மக்களின் காரியங்கள் மகத்தான இரட்சகனாகிய அல்லஹ்வின் அருட்கொடைகளாகும். அதன் ஆதாரங்களைத்தான் அல்குர்ஆனின் வசனங்களாகவும், பெருமானார்(ஸல்) அவர்களின் அமுத மொழிகளாகவும் குறிப்பிட்டு காட்டியுள்ளோம். அவை உயர்வான மறுமை வாழ்க்கைக்கும், அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்கும் உத்தரவாதம் அளிப்பைவைகளாக உள்ளன என்பதை நினைவில் இறுத்திக்கொண்டு இன்ஷா அல்லாஹ் நம் முயற்சிகளை தொடர்ந்திடுவோமாக! அல்லாஹ் இலகுவானவன்!
, ,