குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

28.11.13

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

இறந்தவர்களின் ஆவிகள்
மனிதர்களில் நபிமார்கள் மிகவும் உயர்வானவர்கள் என்றால் அதற்கு அடுத்த நிலையை உடையவர்கள் ஷஹீத்கள் எனும் உயிர்த்தியாகிகளாவர். சத்தியத்தை நிலைநாட்டும் அறப்போரில் தங்கள் இன்னுயிரை ஈந்த அடியார்களின் கடன் தவிர அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்பட்டுவிடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதிலிருந்து இவர்களின் உயர்வான நிலையை அறிந்து கொள்ளலாம். இந்த உயிர்த் தியாகிகளின் ஆத்மாக்களின் நிலையை நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு விளக்குகின்றார்கள்.

ஷஹீத்களின் உயிர்கள் பச்சை நிறத்து பறவைகளின் கூட்டுக்குள் (வைக்கப்பட்டு) சுவனத்தில் விரும்பியவாறு அவை சுற்றித் திரியும். பின்னர் அர்ஷின் அடியில் தொங்கிக் கொண்டிருக்கும் விளக்குகளின் அருகில் அவை நெருங்கும். இறைவன் அவர்களுக்குக் காட்சி தந்து "நீங்கள் விரும்புவது என்ன? என்று கேட்பான். "எங்கள் இறைவா நாங்கள் எதை விரும்புவது? நீ உனது படைப்பினங்களில் எவருக்கும் வழங்காதவற்றை எங்களுக்கு வழங்கியிருக்கிறாயே என்பார்கள். மீண்டும் அதே கேள்வியை இறைவன் கேட்பான். ஏதேனும் கேட்காவிட்டால் இறைவன் விடமாட்டான் என்று அவர்கள் அறிந்து கொண்டபின் "எங்கள் இறைவா! எங்களை மண்ணுலகுக்கு மீண்டும் நீ திருப்பி அனுப்ப வேண்டும். நாங்கள் உனது பாதையில் மீண்டும் போர் புரிய வேண்டும். மீண்டும் ஒரு முறை உன் பாதையில் நாங்கள் கொல்லப்பட வேண்டும் என விரும்புகிறோம் என்பார்கள். உயிர் தியாகத்திற்குக் கிடைக்கும் பரிசுகளைக் கண்டதனால் இவ்வாறு விரும்புவர். அப்போது "திரும்பச் செல்ல இயலாது என்று நான் விதித்துவிட்டேன் என்று இறைவன் கூறி விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி)
நூல் : முஸ்லிம்

இறைவனுக்காகத் தங்கள் உயிரை அர்ப்பணித்தவர்கள் மிகவும் உயர்வான ஒரு காரியத்திற்காக உலகுக்குத் திரும்பி வர அனுமதி கேட்கின்றார்கள். உயர்வான பதவியைப் பெற்றவர்கள் உயர்வான பணிக்காக உலகுக்கு வருவதற்கு அனுமதி கேட்டும் இறைவன் மறுத்து விடுகின்றான். "இறந்தவர்கள் மண்ணுலகுக்கு வர முடியாது என்று விதியாக்கி விட்டேன் என இறைவன் திட்டவட்டமாக அறிவித்து விடுகிறான்.

இதற்குப் பிறகும் இறந்தவர்களின் ஆவிகள் இவ்வுலகுக்கு வரமுடியும் என்று நம்புகிறீர்களா? அப்படி நம்புவது இஸ்லாமாக இருக்க முடியுமா? மிகவும் உயர்ந்த நிலையை அடைந்துள்ள நபிமார்களின் ஆத்மாக்களும், உயிர்த்தியாகிகளின் ஆத்மாக்களும் கூட திரும்ப வர இயலாது என்பது நிரூபனமான பின் மற்ற ஆத்மாக்கள் எப்படிப் பேய்களாக உலா வர முடியும்?

தங்களின் உள்ளங்களில் ஊறிப்போன பேய்கள் பற்றிய நம்பிக்கையை இஸ்லாம் மறுக்கின்றது என்று தெளிவாகத் தெரிந்தவுடன் பேய்களை விரட்டியடித்து விடும் அளவுக்கு உறுதியான ஈமான் உள்ளவர்களும் முஸ்லிம்களில் உள்ளனர். இவர்களுக்கு இதுவரை நாம் எடுத்து வைத்த சான்றுகளே போதுமானதாகும். இதற்கு மேல் இவர்களுக்கு விளக்கம் தேவையில்லை.

திருக்குர்ஆனே கூறினாலும், திருத்தூதரே சொன்னாலும் தங்களின் பாரம்பர்யமான ஒரு நம்பிக்கையை விட்டுவிடத் தயங்குபவர்களும் நம்மில் உள்ளனர். அல்லாஹ்வை விடவும் அவனது தூதரை விடவும் இத்தகையவர்களுக்கு இன்னும் ஆயிரம் சான்றுகளைச் சமர்ப்பித்தாலும் இவர்கள் பேய்களின் பிடியிலிருந்து விடுபடப் போவதில்லை. இவர்களை நாம் விட்டு விட வேண்டியது தான்.

இன்னும் சிலர் இருக்கின்றார்கள். இவர்கள் தங்களின் பாரம்பர்ய நம்பிக்கையையும் விடமுடியாமல், அதே நேரத்தில் நாம் எடுத்துக் காட்டிய பேய்களுக்கு எதிரான சான்றுகளை மறுக்கவும் முடியாமல் தடுமாறிக் கொண்டிருப்பவர்கள்.

"இரண்டும் கெட்டான் நிலையில் இருக்கும் இத்தகையவர்கள் இரண்டையும் மறுக்காமல் புதிய விளக்கம் அளித்துக் கொண்டிருக்கிறார்கள். பேய்களுக்குப் புதியதொரு இலக்கணத்தை உருவாக்கி வித்தியாசமான கோணத்தில் பேய்களை அறிமுகப்படுத்துகின்றார்கள். பேய்களுக்கு இவர்கள் கூறும் புதிய இலக்கணத்தையும் அலசி ஆராய்ந்து அவர்களுக்கு விளக்கமளிப்பது நமக்கு அவசியமாகி விடுகின்றது.

இறந்தவர்களின் ஆவிகள் இவ்வுலகுக்குத் திரும்பவும் வர முடியாது என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். திருக்குர்ஆனும் நபிமொழிகளும் அவ்வாறு கூறுவதால் அதை நாங்கள் மறுக்க மாட்டோம். ஆயினும் இறந்தவர்களின் ஆவிகள் தான் பேய்கள் என்று நாங்கள் சொல்லவில்லை.

ஒவ்வொரு மனிதனிடமும் ஒரு வானவரும், ஒரு ஷைத்தானும் உள்ளனர். மனிதன் இறந்த பின் அவனுடன் இருந்த ஷைத்தான் அவனை விட்டு வெளியேறி சுற்றிக் கொண்டிருக்கிறான். அந்த ஷைத்தான் தான் உயிருடன் உள்ளவன் மேல் ஏறி அமர்ந்து கொண்டு ஆதிக்கம் செலுத்துகின்றான். இதைத்தான் "பேய் என்கிறோம்.

இது தான் இவர்கள் பேய்களுக்கு அளிக்கும் புதிய இலக்கணம். தங்களின் நம்பிக்கைக்குச் சான்றாக இவர்கள் குர்ஆன் ஹதீஸையே முன்வைக்கிறார்கள்.

"ஆதமுடைய மக்களிடம் ஷைத்தானுக்கு ஒரு ஆதிக்கம் உண்டு. அது போலவே வானவருக்கும் ஒரு ஆதிக்கம் உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் திர்மிதீயில் இடம்பெற்றுள்ளது.

இந்தக் கருத்தில் இன்னும் அநேக ஹதீஸ்கள் உள்ளன. இவை மனிதனுக்குள் ஷைத்தானின் ஆதிக்கம் இருந்து கொண்டிருக்கிறது என்பதற்குச் சான்றாகும்.

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்.

(அல்குர்ஆன் 2:275)

இந்த வசனமும், மேற்கண்ட நபிமொழிகளும் மனிதனிடமும் ஷைத்தான்கள் ஊடுருவியுள்ளனர் என்பதற்கும், அந்த ஷைத்தான்கள் இறந்தவனிடமிருந்து வெளிப்பட்டு உயிருடன் உள்ளவனைப் பிடித்துக் கொள்கின்றன என்பதற்கும் சான்றுகளாக உள்ளன என்று இவர்கள் கூறுகின்றனர்.

இப்படிக் கூறுவதால் இறந்தவர்களின் ஆவிகள் இவ்வுலகுக்கு வரமுடியாது என்பதையும் நாங்கள் மறுக்கவில்லை என்கின்றனர்.

இவர்களின் வாதங்களும் அந்த வாதங்களை நிலைநாட்டுவதற்காக அவர்கள் எடுத்து வைக்கும் சான்றுகளும் சரியானவை தாமா? இதனை நாம் ஆராயக் கடமைப்பட்டுள்ளோம்.

"ஒவ்வொரு மனிதனிடமும் ஒரு ஷைத்தானும் ஒரு வானவரும் இருக்கின்றார்கள் என்று இவர்கள் எடுத்து வைத்த நபிமொழி நம்பகமானது தான். ஆனால் இந்த நபிமொழியிலிருந்து அவர்கள் எடுத்து வைக்கும் வாதம் சரியானதல்ல.

ஒவ்வொரு மனிதனிலும் ஒரு ஷைத்தானும், ஒரு வானவரும் இருப்பதை மட்டுமே இந்த நபிமொழி கூறுகிறது. ஒருவரிடம் இருந்த ஷைத்தான், அவரது மரணத்திற்குப் பிறகு இன்னொருவரிடமும் சென்று விடுவான் என்பதற்கு இதில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த ஆதாரமும் இல்லை.

இவர்கள் எடுத்துக் காட்டுகின்ற இந்த நபிமொழியைச் சிந்திக்கும் போது இவர்களது நம்பிக்கைக்கே இது எதிராக அமைந்துள்ளதையும் நாம் உணர முடியும்.
ஒவ்வொரு மனிதனிடமும் ஒரு ஷைத்தான் இருக்கிறான் என்று அந்த நபிமொழி கூறுகிறது. பேய்கள் பிடித்துவிட்டதாக இவர்களால் நம்பப்படுகின்றவர்களிடம் மட்டும் (இவர்களது வாதத்தின் படி) இரண்டு ஷைத்தான்கள் இருக்கின்றனர் என்று ஆகின்றது. இறக்கும் போதே அவனுடன் இருந்த ஷைத்தானுடன் புதிதாகக் குடியேறிவிட்ட ஷைத்தானையும் சேர்த்து இவனிடம் இரண்டு ஷைத்தான்கள் இருப்பதாக நம்புவது, ஒவ்வொருவரிடமும் ஒரு ஷைத்தான் இருப்பதாகக் கூறுகின்ற நபிமொழிக்கு முரண்படுகின்றது.

"பேய்கள் என்பது ஷைத்தான் தான் என்று இவர்கள் கண்டுபிடித்த புதிய இலக்கணமும் சரியானது அல்ல என்பது தெளிவாகின்றது.

ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன் உலவி அவர்கள்.


இறந்தவர்களின் ஆவிகள்


, ,