குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

31.1.14

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

குர்ஆனின் நற்போதனைகள்
1. வானங்களையும், பூமியையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். (அல்குர்ஆன் 31:20;45:13)

2. சூரியனையும், சந்திரனையும் அவனே உங்களுக் வசப்படுத்தித் தந்தான். (அல்குர்ஆன் 14:33,16:12,29:61,31:29,35:13, 39:5)


3. பூமியிலுள்ளவைகளை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். (அல்குர்ஆன் 22:65)



4. இரவையும் பகலையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். (அல்குர்ஆன் 14:33,16:12)
5. ஆறுகளை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான்(அல்குர்ஆன் 14:32)
6. தன் கட்டளையினால் கடலில் செல்லுமாறு கப்பலை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். (அல்குர்ஆன் 14:32 ,16:14,45:12)
7. நீங்கள் அவனிடம் கேட்ட யாவற்றிலிருந்தும் அவன் (அல்லாஹ்) உங்களுக்குக் கொடுத்தான்; அல்லாஹுவின் அருட்கொடைகளை நீங்கள் கணிப்பீர்களாயின் அவற்றை நீங்கள் எண்ணி முடியாது. (அல்குர்ஆன் 14:34)
8. ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு பள்ளியிலும் தொழும்போது உங்களை ஆடைகளால் அலங்கரித்துக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள்; பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். (அல்குர்ஆன் 7:31)
9. தன் பெற்றோருக்கு நன்மை செய்யும் படியாக நாம் மனிதனுக்கு உபதேசம் (வஸிய்யத்) செய்திருக்கிறோம். (அல்குர்ஆன் 29:8,31:14,46:15)
10. ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும் அவர்களுடைய மானத்தை அவர்கள் பார்க்குமாறு அவர்களுடைய ஆடையை அவர்களை விட்டும் களைந்து சுவனபதியை விட்டு வெளியேற்றியது போல் அவன் உங்களை (ஏமாற்றிச்) சோதனைக் குள்ளாக்க வேண்டாம். (அல்குர்ஆன் 7:27)
11. நிச்சயமாக மனிதனுக்கு ஷைத்தான் பகிரங்க பகைவனாவான். (அல்குர்ஆன் 12:5, 17:53)
12. ஷைத்தான் மனிதனுக்கு மிகவும் சதி செய்பவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 25:29)
13. ஆதமுடைய மக்களே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள்; நிச்சயமாக அவன் உங்களுக்கு””பகிரங்கமான பகைவன்” என்று நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா. (அல்குர்ஆன் 36:60)

கவனிக்க: அல்லாஹ் மனிதனை தனது பிரதி நிதியாக (கலீஃபாவாக) படைத்து அவனுக்கு அழகிய உருவமைப்பையும், அறிவு ஞானத்தையும், நல்லது கெட்டதை பிரித்தறியும் பகுத்தறிவையும் அளித்து, வானங்கள், பூமியிலுள்ளவைகளையும் அவனுக்கு வசப்படுத்தித் தந்தான். இவ்விதமாக மனிதனை கெளரவித்து, சிறப்பித்து படைப்பிடனங்க ளிலேயே உயர்வானதாக்கினான். அதே சமயம் நமது பகிரங்க விரோதியையும் அடையாளம் காட்டி அவனைப் பின்பற்ற வேண்டாமென எச்சரிக்கவும் செய்தான். அந்த எச்சரிக்கையை ஏற்றுக் கொண்டு நாம் அவனை நமது பகிரங்க விரோதியாகவும், அவனைப் பின்பற்ற மாட்டோமென்றும் =7:172 வசனத்தில் கூறியது போல- உறுதி மொழியும் அளித்துள்ளோம். (பார்க்க 36:60) இருப்பினும் அல்லாஹ் அவ்வப்போது தனது திருத்தூதர்களையும், வேத அறிவுரைகளையும் அனுப்பி நம்மை நேர்வழியில் வாழ தொடர்ந்து அறிவுறுத்தினான். என்பதை நினைவூட்டும் மனிதனின் ஒரு பக்கமாகும். ஆனால்……

அல்லாஹ் நமக்கு அருட்கொடையாக அருளிய அறிவைக் கொண்டே, அழகிய அமைப்பைக் கொண்டே, செல்வ செழிப்பைக் கொண்டே நமது விரோதி ஷைத்தான் நம்மை வழிகெடுக்கிறான் என்பதை நாம் மறந்து வழ்கிறோம். மனிதனின் மறுபக்கத்தைப் பார்க்கும்போது ஷைத்தானின் தாக்கம் நம்மீது எந்த அளவு ஊடுருவியுள்ளது என்பதை அறியலாம்.

மனிதன், ஓர் உன்னத் படைப்பு!

1. நிச்சயமாக நாம் ஆதமுடைடய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம். …….நாம் படைத்துள்ள பலவற்றைவிட அவர்களை மேன்மைப்படுத்தினோம். (அல்குர்ஆன் 17:70)

2. நிச்சயமாக நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம். (அல்குர்ஆன் 95:4)

3. (அல்லாஹ்) அவனே, தான் படைத்துள்ள ஒவ்வொரு பொருளையும் அழகாக்கினான்; மேலும், அவன் மனிதனின் படைப்பைக் களிமண்ணிலிருந்து ஆரம்பித்தான். (அல்குர்ஆன் 32:7)

4. மனிதனே! சங்கை மிகு கொடையாளனான உன்இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை மருட்டி விட்டது எது? அவன்தான் உன்னைப் படைத்து, உன்னை ஒழுங்குப்படுத்தி, உன்னை செவ்வையாக்கினான்; எந்த வடிவில் அவன் விரும்பினானோ (அப்படியே) பொருத்தினான். (அல்குர்ஆன்82:6-8)

5. (மனித இனத்தின் ஆதி மனிதன்) ஆதமுக்கு அல்லாஹ் எல்லாப் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான். (அல்குர்ஆன்2:31)

6. (அர்-ரஹ்மான்) அளவற்ற அருளாளன்; இந்த குர்ஆனை கற்றுத் தந்தான்; மனிதனைப் படைத்தான்; அவனே மனிதனுக்கு (பகுத்தறிவு, பேச்சு) விளக்கத்தையும் கற்றுத் தந்நதான். (அல்குர்ஆன் 55:1-4)

7. மனிதனுக்கு அறியாதவற்றையயல்லாம் (அல்லாஹ்) கற்றுக் கொடுத்தான். (அல்குர்ஆன் 96:5)

8. ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்கு வதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 51:56)

9. உம் இறைவன் ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்க ளுடைய சந்ததிகளை வெளியாக்கி,அவர்களைத் தங்களுக்கே சாட்சி யாக வைத்து:

“”நான் உங்களது இரட்சனல்லவா?” எனக் கேட்டதற்கு, அவர்கள், “”உண்மைதான், நாங்கள் சாட்சி கூறுகிறோம் என்று கூறியதை நினைவூட்டுவீராக.” (அல்குர்ஆன் 7:172)

10. (ஆதி மனிதர் ஆதத்தை இவ்வுலகுக்கு அனுப்பியபோது) அல்லாஹ் அறிவுறுத்தியது:
நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கி விடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழி(யைக் காட்டும் அற வுரைகள்)வரும்போது, யார் என்னுடைய (அவ்)வழியைப் பின்பற்று கிறார்களோ அவர்களுக்கு எத்தகை அச்சமுமில்லை; அவர்கள் துக்க படவுமாட்டார்கள். (அல்குர்ஆன் 2:38)

11. ஆதமுடைய மக்களே! உங்களிடம் உங்களிலிருந்தே(நம்) தூதர்கள் வந்து, என் வசனங்களை உங்களுக்கு விளக்கினால், அப்போது எவர்கள் பயபக்தி கொண்டு(தம் வாழ்க்கையில்) திருத்திக் கொண்டார்களோ அவர்களுக்கு அச்சமுமில்லை; அவர்கள் துக்கப்படவம் மாட்டார்கள். (அல்குர்ஆன் 7:35)

12. ஆதமுடைய மக்களே ! மெய்யாகவே நாம் உங்களுக்கு உங்களு டைய அலங்காரமாகவும் ஆடையை அளித்துள்ளோம்; ஆயினும் தக்வா(இறை உணர்வு) என்னும் ஆடையே உயர்வானது. (அல்குர்ஆன் 51:56)

குறிப்பு : எல்லாம் வல்ல அல்லாஹ் தானே ஆதி மனிதன் ஆதம் (அலை) அவர்களைப் படைத்து, அழகிய உருவமைப்பைக் கொடுத்து, தனது ரூகை(உயிரை) ஊதி, தானே பாடங்களையும் கற்பித்து மற்ற தனது படைப்புகளை விட மேன்மையானதாக, கண்ணியமிக்க உன்னத படைப்பாக்கினான். வேறு எந்த படைப்பினத்திற்குமில்லாத பேச்சு, பகுத்தறிவு, விளங்கி செயல்படும் (பயான்) சக்திகளை இம்மனிதனுக்கு மட்டுமுள்ள சிறப்பு அம்சங்களாக்கினான். மனிதன் அறியாதவற்றை யயல்லாம் கற்றுக் கொடுத்தான்; கற்று கொடுத்துக்கொண்டிருக்கின்றான்.

இச்சிறப்புக்களைப் பெற்ற மனித இனம் தன்னை மட்டும் இரட்சக னாக ஏற்று வணங்க வேண்டுமென ஆணையிடுகின்றான். நாமும் ஆதியிலேயே அவன் மட்டுமே இரட்சகன் என ஏற்று சாட்சி பகர்ந்துள்ளோம். (பார்க்க 7:172)

எப்படி அவனை வணங்கவேண்டும்? வணக்கம் என்றால் என்ன? என்ற விபரங்களை தனது அறவுரைகள் மூலம் தெரிவிப்பதாகவும் அல்லாஹ் ஆதி மனிதருக்கு அறிவித்தான். அவ்அறிவிப்புப்படி நம் மிலிருந்தே நமக்கு நேர்வழி காட்ட அவனது நேர் வழிகாட்டிகளை நபி -ரசூல்மார்களை அனுப்பி வைத்தான். அவர்கள் காட்டும் நேர்வழிபடி நடப்பவர்களுக்கு எவ்வித அச்சமுமில்லை: அவர்கள் எதற்கும் துக்கபடமாட்டார்கள் என்ற உத்திரவாதமும் அளித்துள்ளான்.

அழகிய படைப்பு, ஆற்றல்மிக்க பகுத்தறிவு, அல்லாஹ்-ஓரிறைவன் என்ற உணர்வு, அதனை அவ்வப்போது நினைவூட்ட அவனது நேர்வழிகாட்டிகள்,அறவுரைகள் வருகை என வரிசைப்படுத்தி அதன்படி இறைவுணர்வுடன் வாழ்வதே மேன்மையான வாழ்வு, உன்னத வாழ்வு என நமக்கு தெளிவுபடுத்தியுள்ளான். இச்சிறப்புக்கள் வேறு எந்த படைப்பினத்திற்குமில்லாத சிறப்பு அம்சங்களாகும்.

-Dr.A.முஹம்மது அலி, Ph.D.
, ,