குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

30.4.21

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அல் பய்யினா - அஸ்ஸில்ஸால்
தெளிவான சான்று
அல்குர்ஆன் அத்தியாயம் :98
அல் பய்யினா



நபி யொருவர் வருவார்- நன்
நெறி அவரும் தருவா ரென
நம்பிக்கைக் கொண்டதுபோல்
நடித்துக் கொண்டிருந்தனர்…
வேதம் வரப் பெற்றோரும் – பல
விக்ரக வழிபாட்டினரும்!

நம்பிய நபியையும் நன் மறைதன்னையும்
கண்டதும் மறுத்தனர்; நன்மையை எதிர்த்தனர்
சாட்சியங்கள் காட்டச்சொல்லி
சந்தேகம் எழுப்பினர்;
இம்மையில் லயித்தனர் !

தெளிவான சான்றாக
நபி வந்த பின்னரும்
வழிகாட்டும் நெறியாக
மறை தந்த பின்னரும்
வேதம் வாய்க்கப் பெற்றோர்
விட்டுப் பிரியவில்லை -அவர்கள்
கட்டுக் குலையவில்லை!

ஓரிறையை அன்றி
வேறொன்றை வணங்காதீர்
நேர்வழியை விட்டு
கணம்கூட விலகாதீர்

என்ற வழிகாட்டலும்…

தொழுகையைக் கொண்டே
துதித்திட வேண்டியும்
ஏழைக்கான நிதியைக்
கொடுத்திடத் தூண்டியும் –

கட்டளைகள் கொண்டதும்
சட்டங்கள் சொன்னதும் அன்றி
பாரமாய் ஏதுமில்லை
படைத்தவனின் மாமறையில் !

எத்துணை ஆதாரங்கள்
எடுத்துரைத்த பின்னரும்
பித்தரைப் போலன்றோ
பிதற்றித் திரிந்தனர்…

சில வேதம் பெற்றோரும்
சிலைவணக்கம் புரிந்தோரும்
நன் நபியை மறுதலித்து
நரக நெருப்பினுள்
நிலைத்திருப்பர்- இவர்களே
படைப்பினங்களிலேயே
படுமோசமானோர் !

நம்பிக்கை கொண்டு
நல்லறங்கள் செய்தோரே
படைப்பினங்களிலேயே
மிகச் சிறந்தோ ராவார் !

இத்தகைய புண்ணியர்தம்
இருப்பிடம் இன்பம்தரும்
நிரந்தர சொர்க்கமாகும்;
சலசலக்கும் நதியோடு
சுவனமது சுகமாகும் !

படைத்தவனைப் பொருந்தியதால்
படைத்தவனும் திருப்தியுற்று
முடிவிலா அவ்வாழ்வை
முழு அருளாய்த் தந்திடுவான்!

-சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

நில அதிர்ச்சி
அல் குர்ஆன் அத்தியாயம் : 99
அஸ்ஸில்ஸால்


தாங்கி நிற்கத் தளமு மின்றி
தொங்கிக் கொள்ள கயிறு மின்றி
அண்ட வெளியில் அந்தரத் தில்
சுழலும் பூமி அதிரும் போது
தன்னில் தழைத்த இயற்கை வளமும்
மனிதன் அமைத்த செயற்கை யாவும்
குளித்தக் குருவி சிலுப்பும் உடல்போல்
சிலிர்த்து பூமி, உதிரும் போது

கண்டதே காட்சி கொண்டதே கோலமென
கண்ணால் காணாத எதையும் நம்பாத
மானிடன் வியந்து மனத்திலே பயந்து
என்ன இதுவென வினவும் போது

சிற்சில அதிர்வெனவும் சிலபல புதிரெனவும்
சூறைக் காற்றெனவும் சுழற்றியப் புயலெனவும்
எச்சரித்து வந்தபூமி நிச்சயித்து அறிவிக்கும்
அந்நாளைப் பற்றிய திடமானச் செய்தியை

படைத்துப் பரிபாலித்து பாதுகாப் பவனும்
விதைத்து விருத்தியாக்கி விளைவிப் பவனும்
அருளாலும் அன்பாலும் ஆள்பவனு மாகிய
அல்லாஹ்வின் கட்டளையே இது வென !

நம்பிக்கை யுற்றும் நம்பிக்கை யற்றும்
செய்வினைச் சுமையோடு சிதறுண்ட மக்கள்
பொய்யெனக் கருதியவை மெய்யாதல் கண்டு
செயலுக்கான கூலிக்காக அந்நாளில் மீள்வர்

நல்லெண்ணத் தோடு நல்லறம் செய்தோர்
பொல்லாச் செயற் பதிவு இல்லாத மாந்தர்
வல்லவன் வகுத்த வழியிலே வாழ்ந்தோர்
எல்லா விதத்திலும் நற்கூலி பெறுவர்

தீயவை எண்ணி தீங்கையே பண்ணி
தேவைக்கு ஏற்பப் பாவங்கள் செய்தோர்
தீமைகள் தட்டுக் கனம்கூடிப் போக
தீர்வாய்க் காண்பர் கொடுந் தண்டனையை!
 
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்.

நன்றி: சத்திய மார்க்கம் / அதிரை நிருபர்

, ,