குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

6.4.12

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ஈமான் இல்லை என்றால் எண்ணிக்கை பயன்தராது
ஈமான் இல்லை என்றால் எண்ணிக்கை பயன்தராது

நபிமொழி
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :
மிக விரைவில் ஒரு காலம் வரும், உண்பவன் தனது சகாவை பந்திக்கு அழைப்பதைப் போல உங்களின் மீது தீய சக்திகளின் ஆதிக்கமிருக்கும். (நீங்கள், ஈமானின் பலம் குன்றியிருப்பீர்கள்).

தோழரொருவர் கேட்டார் :
நாயகமே! நாமன்று எண்ணிக்கை குறைந்து இருப்பதால் அவ்வாறு நிகழுமோ?
பதிலிறுத்தார் பெருமானார் (ஸல்) அவர்கள்,
நீங்கள் அப்போது மிகுதியாக இருப்பீர்கள். எனினும் (ஈமான் விஷயத்தில்) நீங்கள் நுரையைப் போன்றும், நீர்க்குமிழிகளைப் போன்றும் காணப்படுவீர்கள். இதனால் உங்கள் பகைவர்களின் மனதிலிருந்து உங்களைப் பற்றிய அச்சத்தை இறைவன் போக்கி விடுவான். மேலும் உங்களுடைய மனங்களில் வஹ்ன் னை ஏற்படுத்தி விடுவான்!
வஹ்ன், என்றால் என்ன? என்று வினவப்பட்டது.
அதற்கு வஹ்ன் என்றால் உலக ஆசையும், இறப்பை வெறுத்தலும் ஆகும்! என்று கூறினார்கள்.
நூல் : அபூதாவூது அறிவிப்பாளர் : சௌபான் (ரலி)

நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்களுக்கிடையில் இருந்தபோது ஒருவர் அவர்களிடம் வந்து 'ஈமான் என்றால் என்ன?' என்று கேட்டதற்கு 'ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய சந்திப்பையும் அவனுடைய தூதர்களையும் நீர் நம்புவது. மேலும், மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது' எனக் கூறினார்கள்.

அடுத்து 'இஸ்லாம் என்றால் என்ன?' என்று கேட்டதற்குவர்கள் கூறினார்கள். 'இஸ்லாம் என்பது அல்லாஹ்வுக்கு (எதனையும்) நீர் இணையாகக் கருதாத நிலையில் அவனை நீர் வணங்குவதும் தொழுகையை நிலை நிறுத்தி வருவதும் கடமையாக்கப்பட்ட ஸகாத்தை நீர் வழங்கி வருவதும் ரமலான் மாதம் நீர் நோன்பு நோற்பதுமாகும்' என்று கூறினார்கள்.

அடுத்து 'இஹ்ஸான் என்றால் என்ன?' என்று அவர் கேட்டதற்குவர்கள் கூறினார்கள்: '(இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை (நேரில்) காண்பதைப் போன்று நீர் வணங்குவதாகும். நீர் அவனைப் பார்க்காவிட்டாலும் நிச்சயமாக அவன் உம்மைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான் என்றார்கள்'

 அடுத்து 'மறுமை நாள் எப்போது?' என்று அம்மனிதர் கேட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'அதைப் பற்றிக் கேட்கப்பட்டவர் (நான்) அதைப் பற்றிக் கேட்கின்ற உம்மை விட மிக்க அறிந்தவரல்லர். (வேண்டுமானால்) அதன் (சில) அடையாளங்களைப் பற்றி உமக்குச் சொல்கிறேன். அவை, ஓர் அடிமைப் பெண் தனக்கு எஜமானாகப் போகிறவனை ஈன்றெடுத்தல்; மேலும் கறுப்பு நிற ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்த மக்கள் உயர்ந்த கட்டிடங்கள் கட்டித் தமக்குள் பெருமையடித்துக் கொள்ளல். ஐந்து விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட்டார்' என்று கூறிவிட்டு, பின்வரும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள். 'மறுமை நாளைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது.' (திருக்குர்ஆன் 31:34)

பின்னர் அம்மனிதர் திரும்பிச் சென்றார். 'அவரை அழைத்து வாருங்கள்' என்றார்கள். சென்று பார்த்தபோது அவரைக் காணவில்லை. அப்போது, 'இவர்தான் ஜிப்ரீல். மக்களுக்கு அவர்களின் மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்க வந்திருக்கிறார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஜிப்ரீல்(அலை) அவர்களின் கேள்விகளுக்கு நபி(ஸல்) அவர்கள் அளித்த பதில்கள் அனைத்தும் நம்பிக்கையைச் சேர்ந்தது என்று புகாரி ஆகிய நான் கூறுகிறேன்.
ஸஹீஹ் புகாரி : 50.
அத்தியாயம் : 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை
, ,