குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

15.3.13

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

இஸ்லாமிய ஒழுக்கவியல்
மனிதகுலம் முழுமைக்கும் பொருந்தக் கூடிய சர்வதேச அடிப்படை உரிமைகளை இஸ்லாம் விதித்துள்ளது. இவை எல்லாக் காலத்திலும் எல்லாச் சூழ்நிலையிலும் விதிக்கப்பட்டு பேணப்பட வேண்டியவை. இந்த உரிமைகளைச் சாதிப்பதற்கு சட்ட பாதுகாப்பை மட்டும் இஸ்லாம் அளிக்கவில்லை. வலுவான ஒழுக்க வாழ்வமைப்பையும் வழங்கியுள்ளது. தனிநபர் வாழ்வுக்கும் சமுதாய நலத்திற்கும் வழிகோலும் அனைத்துச் செயல்களும் இஸ்லாத்தில் அறமாக கருதப்படுகிறது. தனிநபர் மற்றும் சமூக நலத்திற்கு ஊறுவிளைவிப்பவை ஒழுக்கக் கேடாக கொள்ளப்படுகிறது. இஸ்லாத்தில் இறையன்பும், மனித நேயமும் மிக முக்கியமாகக் கருதப்படுவதால்,
வெற்றுச் சடங்குகளுக்கு இங்கு வேலையில்லை.

குர்ஆன் கூறுகிறது :

நற்செயல் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை. ஆனால் நற்செயல் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்). இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் பொன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள் (பயபக்தியுடையவர்கள்). (2:177)

இந்த வசனங்களில் நேர்மை, இறையச்சம் ஆகியவற்றிற்கு அழகான விளக்கம் அளிக்கப்படுகிறது. வணக்க வழிபாட்டு விதிகளை மனிதன் கடைபிடிக்க வேண்டும். இறையன்பு, மனித அன்பு கருத்தூன்றி கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என வற்புறுத்தப்பட்டுள்ளது. நான்கு விஷயங்கள் இங்கு கூறப்பட்டுள்ளன.

நமது நம்பிக்கை வாய்மையானதாகவும், உளமார்ந்ததாகவும் இருக்க வேண்டும்.

பிற மனிதர்களுக்கு உதவிபுரிதல் மூலமாக நமது நம்பிக்கை வெளிப்பட வேண்டும்

சமூக நல மன்றங்களை ஆதரிக்கும் நல்ல குடிமகனாக விளங்க வேண்டும்

எந்தச் சூழ்நிலையிலும் நேரியபாதையிலிருந்து அசைக்க முடியாத திடமான உள்ளத்தையும் நாம் பெற்றிருக்க வேண்டும்.

இந்த அளவுகோலை வைத்துக் கொண்டு நன்மையானவற்றையும், தீமையானவற்றையும் அறிந்து கொள்ள முயல வேண்டும். முழு ஒழுக்க மாண்புகளுக்கும் இந்த மைய அச்சினூடே சுழல வேண்டும். ஒழுக்க விதிகளை வலியுறுத்தும் முன்னர் இஸ்லாம் ஒன்றை தெளிவாக மனித உள்ளத்தில் விதைக்க விரும்புகின்றது.

இறைவன் எப்பொழுதும் எல்லா இடத்திலும் மனிதனைப் பார்க்கக் கூடியவனாக இருக்கின்றான். உலகத்தாரின் பார்வையை மனிதன் ஏமாற்றலாம். ஆனால் இறைவனை ஏமாற்ற இயலாது. உலகத்தாரின் - அரசின் தண்டனையிலிருந்து தப்பலாம். ஆனால் இறைவனின் பிடியிலிருந்து தப்ப முடியாது. இறை திருப்தியை - இறை மகிழ்ச்சியைப் பெறுவதே மனிதனின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என இஸ்லாம் அறிவுறுத்துகின்றது. இவ்வாறு அறச் செயலுக்கான மிக உயர்ந்த ஒரு நிலையை துலாக்கோலை வழங்கியுள்ளது. மானிட ஒழுக்கப் பரிமாண வளர்ச்சிக்கு இது எண்ணற்ற வாயில்களைத் திறந்து வைக்கிறது. ஞானத்திற்கு அடிப்படை ஆதாரமாக இறைவாக்கு (வேத வெளிப்பாடு) கொள்ளப்படுகிறது. இதனால் ஒழுக்கத்துக்கான நீடித்த - நிலைத்த அளவுகோல் நிர்ணயிக்கப்படுகிறது.

இங்கே நியாயமான விட்டுக் கொடுத்தல்களும் ஒருவரையொருவர் சார்ந்திருந்தாலும் சமூகப் புதுமை மாற்றங்களும் அனுமதிக்கப்படும். தான் தோன்றித்தனம் ஏற்றத்தாழ்வுகள், மூக்கத்தனமான போக்குகள் இங்கு இருக்காது. இறையச்சம் இறையன்பு இவையே ஒழுக்க மாண்புகளைச் செயல்படுத்தும் உந்து சக்திகளாய் விளங்குமெ தவிர உலகாயதக் கட்டுப்பாடோ, கட்டுப்பாடுகளோ நிர்ப்பந்தங்களோ அல்ல.

இறைநம்பிக்கை மற்றும் தீர்ப்பு நாளைப் பற்றிய நம்பிக்கையை வலியுறுத்துவதன் வாயிலாக ஒழுக்க நடவடிக்கைகளை உளப்பூர்வமாக மனிதன் மேற்கொள்ளும் ஆற்றலை இஸ்லாம் வழங்கி விடுகிறது. இதனால் உள்ளமும் ஆத்மாவும் ஐக்கியப்பட்டு, நல்ல பண்புகளுக்கு அர்ப்பணமாகிறது. நன்கு அறியப்பட்ட ஒழுக்க நியதிகளின் முக்கியத்துவத்தை இஸ்லாம் குறைத்து மதிப்பிடவில்லை. நவீன அறப்போதனையும் கூறிடவில்லை. தவறான மூலத்தையும் தந்திடவில்லை. புது மாறுதலைiயும் அளிக்கவில்லை. காரணமின்றி ஒரு சிலவற்றை அளவுக்கதிகமாக கவனத்தில் கொள்வதும் வேறு பலவற்றை அறவே நிராகரிக்கும் போக்கும் இஸ்லாத்தில் இல்லை. நடுநிலையோடு, சம நிலையோடு பொதுவாக உலகில் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒழுக்கப் பண்புகளை கூடுதல் குறைவின்றி இஸ்லாம் ஏற்றுக் கொள்கிறது. முழு அளவிலான வாழ்க்கைத் திட்டத்தில் ஒவ்வொரு ஒழுக்கப் பண்பிற்கும், சமச்சீரான அளவில் அதற்குரிய தகுந்த இடத்தை இஸ்லாம் அளிக்கிறது.

தனிநபரின் ஆளுமையை விரிவாக்கி குடும்பம், சட்டம், கல்வி, சமூக எல்லைகளில் சமுதாயத்துடன் உறவுகளை வலுவடையச் செய்கிறது. கருவறையிலிருந்து மண்ணறை வரை இத்தொடர்பும் சம்பந்தமும் நீடிக்கிறது.

சமையற்கட்டிலிருந்து ஆட்சிக்கட்டில் வரையிலும், உணவறையிலிருந்து போக்களம் வரையிலும் ஆக, வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் இஸ்லாம் ஒழுக்க மாண்பினை வலியுறுத்துகிறது. தனிவாழ்வு, பொதுவாழ்வு எதுவுமே இதிலிருந்து தப்புவதில்லை. வாழ்க்கையை ஒரே கூறாக இஸ்லாம் பார்ப்பதால் அனைத்து நிலையிலும் அறப் போதனைகள் ஏற்கப்பட வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு குறுகிய தன்னல எல்லைகளையெல்லாம் கடந்து ஒழுக்க மாண்புகள் வாழ்வியல் பற்றுக் கோடாக - ஆதிக்கச் சக்தியாக மலர்ந்து நிற்க இஸ்லாம் நாட்டம் கொள்கிறது.

அனைத்து விதமான தீமைகளிலிருந்து பாதுகாப்பளித்து, ஒட்ட மொத்தமான நல்லலைகளின் தொகுப்பை வாழ்வியல் திட்டமாக இஸ்லாம் மனிதர்கள் முன் சமர்ப்பிக்கிறது. அறவுரைகளைப் பரப்புவதோடு நின்று விடாமல் தீமைகளையும் தடுத்த நிறுத்த வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது. நன்மைகள் பரவ வேண்டும். அதே நேரத்தில் தீமைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தாக வேண்டும். நன்மையை ஏவுதலும் தீமையைத் தடுத்தலும் ஏக காலத்தில் செய்தாக வேண்டும். மனச்சான்று உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். நற்பண்புகள் இரண்டாவது இடத்திலும் தீய குணங்கள் முதலாவது இடத்தில் அரசோச்சுவதையும் இஸ்லாம் ஒப்பவில்லை. இந்த அறைகூவலை யார்யாரெல்லாம் செவிமடுக்கின்றார்களோ, ஏற்றுக் கொள்கின்றார்களோ அவர்களெல்லாம் ஒரே இலட்சியக் குழுவாகச் சங்கமிக்கிறார்கள். அவர்களுக்குத் தான் முஸ்லிம் என்று பெயர். இந்தச் சமுதாய உருவாக்கத்திற்கு மூல நோக்கம் இது தான் :

நல்லவைகளை வலியுறுத்தி தீமைகளை அடக்கியாள அமைப்பு ரீதியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஒரு முஸ்லிமுடைய வாழ்வின் பல்வேறு கோணங்களை எடுத்துரைக்கும் இஸ்லாமிய அடிப்படை ஒழுக்க அறிவுரைகளைப் பார்ப்போம். ஒரு முஸ்லிமின் ஒழுக்கமான தனிவாழ்வு மற்றும் சமூகப் பொறுப்புகளைப் பரந்த அளவில் உள்ளடக்கியதாக அவை அமைந்துள்ளன என்பது தெளிவாகும்.

இறையுணர்வு

ஒரு முஸ்லிமின் மிக உச்சகட்ட பண்பு இறைநம்பிக்கையே என்று குர்ஆன் கூறுகிறது :

உங்களில் யார் மிகவும் இறையச்சமுடையவராக இருக்கின்றாரோ அவரே அல்லாஹ்விடத்தில் மிக கண்ணியவான்! (49:13)

இரக்க சிந்தை, அடக்கம், ஆசைகளையும், உணர்வுகளையும் கட்டுப்படுத்துதல், வாய்மை, ஒழுங்கு, பொறுமை, நிலைகுலையாமை, நேர்மை, ஒப்பந்தத்தை நிறைவேற்றல் ஆகிய நற்குணங்களை ஒழுக்கப் பண்புகளாக மீண்டும் மீண்டும் குர்ஆன் வலியுறுத்துகிறது.

நிலைகுலையாத பொறுமையாளர்களையே இறைவன் நேசிக்கின்றான். (3:146)

அவர்கள் வசதியுள்ள நிலையிலும், வசதியற்ற நிலையிலும் செலவழிப்பார்கள். சினத்தை அடக்கிக் கொள்வார்கள். மேலும் மக்களை மன்னிப்பார்கள். இத்தகைய உயர்பண்பினரை இறைவன் நேசிக்கின்றான். (3:133-134)

தொழுகையை நிலைநிறுத்துங்கள். நல்லவற்றை ஏவுங்கள். தீமைகளை விலக்குங்கள். சிரமங்களை சகித்துக் கொள்ளுங்கள். செயல்களில் இது சத்திய நிலைப்பாடாகும். மனிதர்களை விட்டு முகத்தை (பெருமை கொண்டு) திருப்பிக் கொள்வோரை இறைவன் நேசிப்பதில்லை. நடத்தில் நடுநிலையை விரும்புங்கள். குரலையும் தாழ்;த்திக் கொள்ளுங்கள். நிச்சயமாக குரல்களிலெல்லாம் மிக அருவருக்கத்தக்கது கழுதையின் குரலே. (31:18-19)

ஒழுக்க நியதிகளின் தொகுப்பாக நபி (ஸல்) கூறுகிறார்கள் :

என்னுடைய இறைவன் எனக்கு ஒன்பது கட்டளைகள் பிறப்பித்துள்ளான். நான் தனிமையிலும் (மற்றவர்களுடன்) சேர்ந்திருக்கும் போதும் இறைவனை நினைக்க வேண்டும். கோபத்திலும் மகிழ்ச்சியிலும் நீதமாகப் பேச வேண்டும். வறுமையிலும் வளத்திலும் நடுநிலையைக் கடைப்பிடிக்க வேண்டும். என்னுடன் யார் நட்புறவைத் துண்டித்தார்களோ அவர்களுடன் நான் நட்புறவு கொள்ள வேண்டும். எனக்குத் தந்துதவ மறுத்தவர்களுடன் நான் கொடுத்து உதவ வேண்டும். எவற்றைப் பற்றி நான் உங்களிடம் ஏவாமல் விட்டு விட்டேனோ அவை பழிப்புக்குரியவை. மேலும் எவற்றை நான் உங்களுக்கு ஏவினேனோ அவை மிக்க நல்லவை!

சமூகப் பொறுப்புக்கள் :

இஸ்லாம் கற்பிக்கும் கடமைகள் கழிவிரக்கம், பிறர்நலம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. சில குறிப்பிட்ட நேரங்களில் பரந்த மனப்பாங்குடன் கூடிய இந்த இறையாணைகள் சில நேரங்களில் விதிவிலக்காகவும் அமைவதுண்டு. பல்பேறு உறவுகளுக்குடையே இருக்க வேண்டிய உரிமைகள், பொறுப்புகளை இஸ்லாம் வலியுறுத்தும் அதே நேரத்தில், குறிப்பிட்ட அன்பார்ந்த நடவடிக்கைகளையும் உறுதிப்படுத்துகிறது. பரந்து பட்ட மனிதத் தொடர்புகளில் முதலாவது நமது குடும்ப உறுப்பினர்களிடையே அமைய வேண்டியதாகும். தாய், தந்தை, கணவன், மனைவி, குழந்தைகள் - பிறகு ஏனைய உறவினர்கள், அண்டை வீட்டார், நண்பர்கள், அறிமுகமானோர், அநாதைகள், விதவைகள், வறியோர், ஏனைய முஸ்லிம்கள், ஏனைய மனிதர்கள், மிருகங்கள் என்று மனித உறவின் வட்டம் விரிவடைந்து செல்வதைப் பார்ப்போம்.

பெற்றோர் :

பெற்றோருக்கு பணிவிடை செய்வது, மதிப்பளிப்பது குறித்து இஸ்லாம் மிக அதிகமாகவே எடுத்துக் கூறுகிறது. இறைநம்பிக்கையில் ஒரு பகுதியாகவம் இது கொள்ளப்படுகிறது.

அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக் மேலும், ''என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!'' என்று கூறிப் பிரார்த்திப்பீராக! (17:23-24)

பிற உறவினர் தொடர்பு :

இன்னும், உறவினருக்கு அவருடைய உரிமை (பாத்தியதை)களைக் கொடுப்பீராக் மேலும், ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும், (அவரவர்களுக்கு உரியதைக் கொடுத்து விடுவீராக!) வீணாகப் (பொருளை) விரையஞ் செய்யாதீர். (17:26)

அண்டைவீட்டார் உரிமை :

முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அண்டை வீட்டுக்காரர் பசியோடிருக்கும் போது தான் மட்டும் வயிறார உண்பவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்.

எவருடைய தீய நடத்தையிலிருந்து அண்டை வீட்டார் பாதுகாப்புப் பெறவில்லையோ, அவர் இறைநம்பிக்கை கொண்டவராக மாட்டார்.

திருக்குர்ஆன் மற்றும் முஹம்மத்நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகளிலிருந்து தெரியவரும் கருத்து யாதெனில், ஒரு முஸ்லிம் தனது பெற்றோர், உறவினர்கள், அண்டை வீட்டார் ஆகியோரின் உரிமைகளை மட்டும் பேணி நடந்தால் போதாது. மாறாக முழு மனிதகுலம், மிருகங்கள், பயன்தரு மரங்கள், தாவரங்கள் ஆகிய அனைத்துக்கும் உரிய சமூகப் பொறுப்புக்களை நிறைவேற்றியே தீர வேண்டும். உதாரணமாக, விளையாட்டாக மிருகங்களையும் பறவையினங்களையும் வேட்டையாடுவதை இஸ்லாம் அனுமதிப்பதில்லை.

தகுந்த அத்தியாவசிய காரணமின்றி பயன்தருமரங்களையும் கனிதரும் தாவரங்களையும் வெட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது.

இவற்றையெல்லாம் பார்க்கும் போது ஒன்று தெளிவாகிறது. ஒழுக்க மாண்புகளின் அடிப்படையில் இஸ்லாம் நிர்மாணிக்கும் உயர்ந்தபட்ச குணவொழுக்க அமைப்பின் மனித குலம் அதன் வலிமையை உணரும். தன்னார்வ மாயையிலிருந்து ஆத்மாவை இது விடுவிக்கும். கொடுங்கோண்மை, கொடூர, தாறுமாறான, சுயநலப் போக்கை இது தவிர்க்கும். இது இறையச்சமுள்ள மனித இனத்தை உருவாக்கும், பொய்மையுடன் ஒத்துப் போகாத கொள்கைக் குன்றுகளை இது உருவாக்கும். இச்சமூகத்தில் பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல், சுயக்கட்டுப்பாட்டுடன் திகழும் சமூக நல விரும்பிகளை தோற்றுவிக்கும். அனைத்து உயிர்களின் மீதும் அனைத்து கால கட்டத்திலும் இரக்கம், அன்பு, ஈதல், தொண்டுள்ளம், அமைதி, வாய்மை கொண்டு பழகும் தன்மையை இஸ்லாம் வளர்க்கிறது. சிறந்த தூய பண்புகள் செழித்தோங்குவதால் நல்லவைகளையே இச்சமூக அமைப்பில் எங்கும் நீக்கமற எதிர்பார்க்கலாம்.
, ,