குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

12.1.18

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

மாசிலா முழு நிலவே
almighty-arrahim
மாசிலா முழுநிலவே
மாநபியே முகமதுவே (ஸல்);
மாக்களென மாறிவிட்ட
மானுடத்தை மீட்டவரே!

மதிகெட்ட மக்களுக்கு
மறைவாங்கித் தந்தவரே;
மறுமையெனும் மறுவாழ்வின்
மகிமைதனை மொழிந்தவரே!
குகையிருப்பு நிகழ்ந்தவுடன்
சிலைமறுப்பு செப்பினீர்கள்;
கொலைமிரட்டல் காலங்களில்
தலைமறைவாய்ப் பொறுத்தீர்கள்!
ஓரிறையின் உயர்வுகளை
ஓங்கிநீரும் உரைத்தீர்கள்;
ஒவ்வொரு மனிதருக்காய்
ஒழுக்கநெறி கொடுத்தீர்கள்
திக்கெட்டும் அறியச்செய்தீர்
தித்திக்கும் தேன்செய்தி;
தீமைகளைத் தடுத்தொழிக்க
திகட்டாத தீன்செய்தி
சொல்லடிகள் சுணக்கவில்லை
கல்லடிகள் முடக்கவில்லை
கண்மணியாம் எம்நபியே
கண்ணியமாய் மனம்பொறுத்தீர்
கார்முகிழின் கருணைவிஞ்சும்
காருண்ய கோமானே;
யார்யாரோ இகழ்ந்துரைத்தும்
இறைச்செய்தி எத்திவைத்தீர்
ஓர்இறையை மறுத்தோரை
நேர்வழியில் எதிர்த்தீர்கள்;
ஊர்வெளியே விரட்டியோரை
போர்முனையில் வெற்றிகொண்டீர்!
இறைவணக்கம் கற்றுத்தந்து
குறையணைத்தும் நீங்கவைத்தீர்;
பசியையும் தாகத்தையும்
புரியவைக்க நோன்புதந்தீர்!
ஏழைக்கு ஈயச்சொன்னீர்
எளியோர்க்கு உதவச்சொன்னீர்;
ஈகையால் எழுமின்பம்
இன்னதென்ன்று காட்டித்தந்தீர்!
அறியாமை இருள்அகற்றி
ஆன்மீக வெளிச்சம்தந்தீர்;
அகிலத்தோர் ஈடேற
அழகான மார்க்கம்தந்தீர்!
அல்லாஹ்தன் அடியோர்க்கு
அருளித்தந்த நாயகமே
ஸல்லல்லாஹு அலா முஹம்மது
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்!

இளங்கவி சபீர் 
, ,