குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

8.10.20

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அல்கவ்ஸர்-அல்காஃபிரூன்
பேரின்பத் தடாகம்
அல் குர்ஆன் அத்தியாயம் :108 அல்கவ்ஸர்



தகிக்கின்றத் தாகம்
தணிக்கின்றத் தடாகம்
பசிக்கின்ற நேரம்
புசித்திட ஹலாலும்;

நினைக்கின்ற யாவும்
கிடைக்கின்ற யோகம்;
அளிக்கின்ற ஒருவன்
அவனே உம் நாயன்!

அவனையே தொழுது
அபயம்கேட் டழுது;
அவனுக்காகவே அறுத்து
அவன் பெயரில் கொடுப்பீர் !

உமக்கெதிரி எவரோ
அவர்க்கில்லை உறவு
தமக்குப்பின் தொடர்பு
தடுக்கப்பட்டச் சந்ததி

உத்தமர் உம் வழியை
உண்மையென் றறிந்து
உமக்குப் பின்னாலே
உலகமே திரளும் !

-சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்.

மறுதலித்தோர் !
அல் குர்ஆன் அத்தியாயம் :109 அல் காஃபிரூன்



எத்துணை எடுத் தியம்பியும்
இசையாத இனத்தோர்க்கு – ஏக
இறைவன் ஒருவனே யென்று
ஏற்காத குலத்தோர்க்கு,

இனியும் எத்தி வைப்பீர்
இறைச் செய்தி என்னவென்று – அந்த
நம்பிக்கை அற்றோர்க்கு
நல்வழி விட்டோர்க்கு,

“வரைந்தவை வார்த்தவையென
வணங்குவீர், அவற்றையெலாம் -புனித
மார்க்கமும் மறையும் பெற்ற
நான் வணங்க மாட்டேன்!

நான் உரைக்கும் மீட்சியை
நீங்கள் ஏற்க மாட்டீர் – நித்தம்
நான் வணங்கும் இறையை
நீவிர் வணங்க மாட்டீர்!

விழி யற்றோர் நிலையிலேயே
வழி கெட்டோர் விரைய – நேர்
வழி பெற்ற எம்மை
இழி நிலையோர் ஏற்கார்!

அன்றியும்…
கலைஞரும் சிற்பியும்
கலந்து படைத்ததைக் – கடவுளெனக்
கையெடுத்து நீங்கள் வணங்க,
நான் வணங்க மாட்டேன்!

அதுபோல்…
உலகங்களைப் படைத்த
இணையற்ற இறைவனை
ஒருவன் என் றேற்பேன்;
நீங்கள் ஏற்க மாட்டீர்!

உலக வாழ்க்கையில் இலயித்த
உங்கள் வழி உங்களுக்கு
ஏக இறைவனை ஏற்ற
எம் வழி எமக்கு!”

  - சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்.

நன்றி: சத்திய மார்க்கம் / அதிரை நிருபர்
, ,