குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

4.2.21

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அத்தகாஸுர்-அல் அஸ்ர்
பேராசை 
அல் குர்ஆன் அத்தியாயம் :102 
அத்தகாஸுர்

 
 
படைத்தவனை மறந்துவிட்டு
பராமுகமாய் இருந்துவிட்டு
போதுமென்ற மனமின்றி
பொருள் சேர்க்கும் மானிடரே!
கொண்டதும் தர்மமெனக்
கொடுத்ததும் முன்னர்
உண்டதும் உடலில்
உடுத்தியதும் அன்றி

உங்களுக்கென் றொன்றுமில்லை
உய்கின்ற உலகினிலே – நீவிர்
சேர்த்ததுவோ செல்வங்களோ
செத்துவிட்டால் உமதில்லை!

இருப்பதுவே நிலைக்குமென்ற
இறுமாப்பில் – நீவிர்
இறைவனையே மறந்துவிட்டு
இம்மையிலே மூழ்கிவிட்டீர்!

மண்ணறையில் கிடத்தும்வரை
மதிகெட்ட மாந்தர்களே
மறைவானவற்றை மறுத்து
மயங்கித் திரிவீரோ?

அந்நாளதிக தூரமில்லை
அறிவீரோ – நீவிர்
அடங்கிவிழும் காலத்தை
அருகிலேயே காண்பீர்கள்!

கண்டிப்பாய்ச் சந்திப்பீர்
மண்ணறையின் முழு இருட்டை
தன்னுடலும் புதையுண்டு
தரைக்குள்ளே சிதையுவதை

அஞ்ஞான நிலைமாறி
மெய்ஞான வழிகொண்டு
அறிய முயன்றிருந்தால்
இனிதா யிருக்குமிப் பயணம்!

உறுதியாகப் பார்ப்பீர்கள்
இறுதியாகப் பெருநெருப்பை
ஐயமறக் காண்பீர்கள்
அனல்கக்கும் நரகத்தை!

தங்குமிடம் தரணியிலே
தழைத்து நின்ற தாவரங்கள்
தெளிந்த நீர்நிலைகள்
தேன் மற்றும் திரவியமும்

அலைகடலும் மலைமுகடும்
மிதமழையும் மலர்வனமும்
அளிக்கப்பட்ட அருட்கொடைகள்
அந்நாளில் வினவப்படும்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்


காலம்
அல்குர்ஆன் 
அத்தியாயம் :103
 

 
 
இன்னும் விடிந்திராத
இருள்சூழ்ந்த நேரமல்ல;
இனிதாய் உதித்துவிட்ட
இளங்காலைப் பொழுதுமல்ல;

உலகே விழித்துக்கொள்ள
உருவான வேளையல்ல;
உச்சியில் செங்கதிரின்
உஷ்ணமான காலமல்ல;

கதிரவன் மங்கிச்சாயு மந்தக்
காலத்தின் மீ தாணை…
மனிதன் என்றென்றும்
இழப்பில்தான் இருக்கின்றான் 

மறை வானவற்றையும்
மறை ஆணையிட்டவையும்
இறை தந்த மார்க்கத்தையும்
நிறை மனதாய் ஏற்று…

சோதனைகளைச் சகித்து
வேதனைகளைப் பொறுத்து
நல்லறங்கள் செய்து
அல்லாதவற்றைத் தவிர்த்து…

சத்தியத்தை நேர்மையாகவும்
பொறுமையைக் கனிவாகவும்
தமக்கிடையே உபதேசிக்கும்
நல்லோர்களைத் தவிர !


சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்.

நன்றி: சத்திய மார்க்கம் / அதிரை நிருபர் 
, ,