குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

1.1.21

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அல் ஹுமஸா-அல் ஃபீல்
அல் குர்ஆன் அத்தியாயம் : 104 அல் ஹுமஸா

கண் சைகையாலும்
கைச் செய்கையாலும்
வீண் பொய்களாலும்
வாய்ச் சொற்களாலும் 

பிறர் நோகக் குறைசொல்லி
புறம் பேசி, சுகம் காணும்
மானங் கெட்ட மானிடன்
ஈனப்பட்டு இழிவடைவான்

நிரந்தரம் அற்ற வாழ்க்கையே
நிலைக்கும் என்றெண்ணி
அறம்தரம் அற்றுப் பொருளையே
அளவுமீறிச் சேர்க்கின்றான்

குவித்துவைத்தச் செல்வத்தை
குறையுமோ என்றஞ்சி
எடுத்து வைத்து மீண்டும்
எண்ணியெண்ணிப் பார்க்கின்றான்

மரணமென்ற சாசுவதம்
மறந்துவிட்ட அவனும்
காசுபணம் காக்கு மென்ற
கோணற் கணக்கில் திளைக்கின்றான்

நாணல் வேலி நதியை வகுக்குமா
கானல் நீர்தான் தாகம் தணிக்குமா
போட்டுவைத்தக் கணக்கு யாவும்
பிழையாகிப்போக, பொருளும் உதவாது

கூடிப்போனப் பாவச்சுமையால்
கொடிய நரகில் எறியப்படுவான்;
எத்தகைய அழிப்பிடம் அதுவென
எடுத்துச் சொல்வார் எவர்?

அல்லாஹ் மூட்டிய அணையா நெருப்பது
எல்லா உறுப்பையும் சூழும்
நச்சு எண்ணங்கள் நிறைந்த அந்த
நெஞ்சுக் குழியையேத் தீண்டும்

சூழ்ந்துவிட்ட நெருப்பில் அவனும்
வீழ்ந்தழிந்து போவான்
நீண்டு நிலைக்கும் கம்பங்களாய்த்
தீயும் தின்று தீர்க்கும்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்.


யானைப் படை
அல் குர்ஆன் அத்தியாயம் : 105 அல் ஃபீல்
யானைப் பல கொண்ட சேனை – இறை
ஆலயம் இடிக்க வந்த வேளை
அப்படையை உம்மிறைவன்
அழித்த தெங்ஙனம், அறியாததா?

பெருத்த பலம் கொண்ட அவர்தாம்
வகுத்தக் கொடும் சூழ்ச்சிதனை
நிகழ்த்த விடாமல் எதிர்த்துத்
தடுத்தவன் உம் இறை யன்றோ?

இறையில்லம் தகர்க்கும் தோன்றலில்
குறைஷியருக் கெதிரான சூழ்ச்சியை
யாவற்றிலும் மிகைத்த இறைவன்
வென்று வீழ்த்திய தறியாததா?

சதிகாரக் கூட்டத்திற் கெதிராக
அதிகாரம் மிக்க இறைவன்
விதித்தது போலவே விரைந்து
எதிர்த்தன வானில் பறவைகள்

சுடப்பட்டச் சிறுசிறுக் கற்களைச்
சுமந்துவந்த பறவைகள் கூட்டம்
திரண்டு வந்தப் யானைப் படை
மிரண்டுவிட வீசின வேகமாய்

கல்லெறிப் பட்டுக் குலைந்தனப் படைகள்
எள்ளளவேனும் எதிர்க்க இயலாமல்
விலங்குகள் மென்று விழுங்கிய மிச்ச
வைக்கோலைப் போல வீழ்ந்தனவே!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்.

நன்றி: சத்திய மார்க்கம் / அதிரை நிருபர்
, ,