குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

21.5.15

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

முனாஃபிக் - நயவஞ்சகன்
 நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பொருட்செல்வமும், மக்கட்செல்வமும் அல்லாஹ்வின் நினைவை விட்டு உங்களைத் திசை திருப்பி விட வேண்டாம்.
இதைச் செய்வோரே இழப்பை
அடைந்தவர்கள்(63:9)
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களே முனாஃபிக்குகள். தன்னைப் போன்று பரிசுத்தமானவர் என்று நம்பக் கூடிய வகையில் நடப்பவர்கள் வேஷம் போட்டு மோசம் செய்பவர்கள்.


சமுதாய மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் வல்லவர்கள் சுருக்கமாகச் சொன்னால் சைத்தானின் எடுபிடிகளே நயவஞ்சகர்கள். இந்நயவஞ்சகர்களின் அடாவடித்தனத்தை முனாஃபிக்கூன் என்ற அத்தியாத்தில் அல்லாஹ் படம் பிடித்து காட்டுகிறான். இவர்களின் அடையாளங்கள் குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும்போது யாரிடம் நான்கு குணங்கள் உள்ளனவோ அவன் முழு நயவஞ்சகன். அவைகளாவன

1. கொடுத்தால் வாக்குறுதியை மீறுவான்
2. அமானிதத்தை மோசடி செய்வான்
3. பேசினால் பொய்யே பேசுவான்.
4. சண்டையிடும் போது இழி மொழியில் வசைமாறி பொழிவான். - அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி ) முஸ்லிம், புகாரி

மேலும் இந்நயவஞ்சகத் தன்மை படைத்தவர்களைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனிதர்களின் மிகக் கெட்டவர்கள் இரு முகங்களையுடைவனாவான். இங்கொரு முகத்தைக் கொண்டு வருவான். அங்கொரு முகத்தைக் கொண்டு வருவான். என்று கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

முனாஃபிக்கை முனாஃபிக் என்று கூறலாமா? வெறுக்கலாமா?பனூஹாஸிம் என்ற தன்னுடைய சமூகத்திற்கு தனது வீட்டில் தொழுகை நடத்த ஒரு இடத்தை தேர்ந்து எடுக்க நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இத்பான்பின் மாலிக் (ரலி)அவர்கள் விருந்து சமைத்து அழைத்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்ததைக் கேள்விப்பட்ட அங்குள்ள மக்கள் இத்பான் (ரலி)வீட்டில் கூடினார்கள். மாலிக்பின் துவைஸின் மட்டும் வரவில்லை.

அங்கு கூடியிருந்த மனிதர்களில் ஒருவர் மாலிக்பின் துவைஸ் ஏன் வரவில்லை என கேட்டார். மற்றொரு மனிதர் அவர் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசிக்காத ஒரு முனாஃபிக் என்று கூறினார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவ்வாறு கூறாதே! அவர் அல்லாஹ்வின் திருப்தியை நாடி லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறியதை நீர் அறிய மாட்டீரா? என்று கேட்டார்கள்.
அதற்கு அம்மனிதர் அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக அவரது நேசமும், அவரது உரையாடலும் முனாஃபிக்குகளிடமே இருப்பதை நாங்கள் பார்க்கிறோம் என்றார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடி யார் ''லாஇலாஹ இல்லல்லாஹு'' சொல்கிறாரோ அவருக்கு நரகை அல்லாஹ் ஹராமாக்கி விட்டான் என்று குறிப்பிட்டார்கள்.
மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என மக்கள் கூறும் வரை அவர்களோடு போராட வேண்டும் என்று நான் ஏவ்ப்பட்டுள்ளேன். அந்த கலிமாவை கூறி, நமது தொழுகையைத் தொழுது, நமது கிப்லாவை முன்னோக்கி, நாம் அறுப்பது போல் அறுத்து வருவார்களானால் தக்க காரணமின்றி அவர்களுடைய உயிர், பொருளுக்குச் சேதம் ஏற்படுத்துவது நமக்கு விலக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய விசாரணை அல்லாஹ்வின் நாட்டத்தைப் பொருத்ததாகும்.அனஸ் (ரலி)புகாரி எனவே அல்லாஹ்வின் நல்லடியார்களே! வெளிப்படையாக ஒரு முஸ்லிமின் நயவஞ்சகச் செயல்களை அறிந்து விடினும் அம்முஸ்லிமை முனாஃபிக் என்று சொல்ல வேண்டாம். ஏனெனில் அல்லாஹ்வின் திருப்தியை நாடி கலிமா சொன்னாரா இல்லையா என்பதை நாம் அறிய முடியாது. இது மறைவான அல்லாஹ் மட்டுமே அறியும் விஷயம். எனவே அந்த வல்ல அல்லாஹ்விடம் பொறுப்பைக் விட்டு விட்டு அச்சகோதரர்களை வெறுக்காமல் அன்போடு பழகி, பண்போடு பேசி ஒற்றுமையுடன் வாழ்வோமாக.

Umarhathab abusaud 

, ,