குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

9.1.14

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

இஸ்லாம் - ஒரு பார்வை
மனிதன் தனது வாழ்வை சரியான முறையில் சீரமைத்துக் கொள்ள அவனுக்கு இரண்டு விஷய்ஙகள் தேவைப்டுகின்றன.

தனது உலக வாழ்க்கையை நடத்திச் செல்வதற்காக தனிப்பட்ட முறையிலும், சமூக ரீதியிலும் அவனுக்குத் தேவைப்படும் உலகியல் சாதனங்கள.

தனி வாழ்விலும் சமூக வாழ்விலும் நீதியையும் அமைதியையும் சுட்டிக் காத்திடுவதற்கு அவன் மேற்கொள்ள வேண்டிய கொள்கைகள் பற்றிய அறிவு!

மனித வாழ்வுக்குத் தேவைப்படும் இந்த இரண்டையும் அதாவது உலகியல் சாதனங்களையும், கொள்கைள் பற்றிய அறிவையும் மிதனைப் படைத்த இறைவன் நிறைவாகவே அவனுக்கு அருளியுள்ளான். அவை அனைத்தும் அவன் முன் பரந்து விரிந்து கிடக்கின்றன. அவற்றை அவன் விரும்பிய வண்ணம் முழமையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மனிதனின் ஆன்மீக, சமூக மற்றும் கலாச்சாரத் துறைகளில் தேவைப்படும் கொள்கைகளை நிறைவு செய்திடுவதற்காக இறைவன் மனித இனத்திலிருந்தே தனது திருத்தூதர்களை எழுப்பினான். இந்தத் திருத் தூதர்கள் வாயிலாக இறைவன் தனது வழிகாட்டுதலை தன் வேத வெளிப்பாடாக (னுநஎiநெ சுநஎநடயவழைn) அளித்தான்.

அந்த இறைவழிகாட்டுதல், முழமையான ஒரு வாழ்க்கைத் திட்டமாகும். அந்த வாழ்க்கைத் திட்டத்தின் பெயர் தான் இஸ்லாம்.

இஸ்லாம் என்பது ஓர் அரபிச் சொல்லாகும். கீழ்ப்படிதல், சரணடைதல், அடிபணிதல் ஆகிய பொருள்களை அது குறிக்கின்றது. ஒரு நெறி எனும் முறையில் இஸ்லாம். ஒரே இறைவனுக்கு அடிபணிந்து அவனுக்கு முழமையாகக் கீழ்ப்படிந்து நடக்கும்படி வலியுறுத்துகின்றது. இறைவனுக்கு முழமையாகக் கீழ்ப்படிந்து வாழ்வதே இஸ்லாத்தின் குறிக்கோளாகும். இஸ்லாம் எனும் சொல்லுக்குரிய மற்றொரு அகராதிப் பொருள் அமைதி என்பதாகும். உண்மையான ஒரே இறைவனிடம் சரணடைந்து அவனுக்கு கீழ்படிவதால் மட்டுமே ஒருவன் உடல் மற்றும் ஆன்ம அமைதியை அடைந்து விட முடியும் என்பதை இது அறிவுறுத்துகிறது.

 இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள்

இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை தவ்ஹீத் என்ற ஏகத்துவம். அதாவது ஓரிறைக் கொள்கையாகும். இதன் கருத்து இதுதான். இந்தப் பேரண்டம் முழவதும் இறைவனால் படைக்கப்பட்டிருக்கின்றது. அவனே இப்பேரண்டத்தின் அதிபதியும் ஆட்சியாளனும் ஆவான். இறைவன் ஒருவனே! அவனது மேலாதிக்க உரிமையிலும் அவனது இறைமை அந்தஸ்திலும் அவனுக்கு இணையானவர்கள் - துணையானவர்கள் யாரும் இல்லை. அவனே இப்பேரண்டத்தின் ஆட்சியாளன், பாதுகாவலன், பராமரிப்பாளன், படைப்பாளன். அவனே மனிதனைப் படைத்துள்ளான். மேலும் ஒவ்வொரு மனிதனுக்கும் இந்தப் பூமியின் மீது வாழ்வதற்கான குறிப்பிட்ட ஒரு கால அளவை அவனே நிர்ணயித்துள்ளான்.

இறைவன் மனிதனுக்கு குறிப்பிட்ட ஒரு வாழ்க்கை நெறியை வகுத்துத் தந்துள்ளான். அந்த வாழ்க்கை நெறியை ஏற்றுக் கொள்ளவோ நிராகரிக்கவோ சுதந்திரம் கொண்டவனாக மனிதன் இருக்கின்றான். இந்த வாழ்க்கை நெறியை ஏற்றுக் கொண்டு அதற்கு முற்றிலும் இசைவாக வாழ்க்கை நடத்துபவரே முஸ்லிம். அதாவது, இறைநெறிக்குப் பணிந்து வாழ்பவர். இந்த வாழ்க்கை நெறியை நிராகரிப்பவர். இறைவனுக்குப் பணிந்து வாழாதவர் - அவனை மறுப்பவர் ஆவார்.

முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதரே என்றும் இறைவன் ஒருவனே என்றும் மனதார ஏற்று அதனை வாய்மையாக அறிவிப்பதன் வாயிலாக ஒரு மனிதன் இஸ்லாத்தில் இணைந்து விடுகின்றான். இஸ்லாத்தின் இரண்டாவது அடிப்டைக் கொள்கை. இறைத்தூதுத்துவமே ஆகும். இதன் கருத்தாவது : வாழ்க்கைக்குத் தேவையான எந்த வழிகாட்டுதலையும் வழங்காமல் மனிதனை இறைவன் விட்டு விடவில்லை.

மாறாக, அவன் தன் வழிகாட்டுதலை தூதர்கள் வாயிலாகவும் இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் வாயிலாகவும் வழங்கியுள்ளான். இப்போது ஓர் இறைத்தூதரை நம்புகிறோம் எனில் அதன் பொருள் இதுவே. அவர் கொண்டு வந்த தூதை சத்தியமானது என நாம் ஏற்றுக் கொள்கிறோம். மேலும், அவர் வழங்கிய சட்டதிட்டத்தைப் பின்பற்றி வாழ்கிறோம். அவர் அறிவுறுத்தியபடியே நம் வாழ்வை நாம் நடத்துகின்றோம்.

இந்தத் தூதுத்துவக் கொள்கை தானாகவே நம்மை இஸ்லாத்தின் மூன்றாவது அடிப்படைக் கோட்பாட்டிற்கு இட்டுச் செல்கின்றது. அந்தக் கொள்கை மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்வின் மீது நம்பிக்கை கொள்வதாகும். இஸ்லாத்தின் கருத்துப்படி இந்த உலகம் ஒரு சோதனைக் களமாகும். இங்கு மனிதன் சோதனைக்குள்ளாக்கப்பட்டு, அவன் எத்தன்மை வாய்ந்தவன் என்று மதிப்பிடப்படுகின்றான். மனிதன் இந்த உலகில் செய்கின்ற செயல்கள் எல்லாவற்றிற்கும் பதில் சொல்லியே தீர வேண்டும். ஒரு நாள் இந்த உலகம் அடியோடு அழிக்கப்பட்டு அதன் ஆயள் முடிவடைந்துவிடும்.

அதன் பிறகு புதிய உலகம் ஒன்று தோற்றுவிக்கப்படும். அந்தப் புதிய உலகில் - மரணத்திற்குப் பின் வருகின்ற அந்த மறுமை வாழ்வில் தான், மனிதன் அவனது நற்செயல்களுக்கான வெகுமதியையோ, தீய செயல்களுக்கான தண்டனையையோ அளிக்கப் பெறுவான். தமது இம்மை வாழ்வில் இறைவனுக்கு முற்றிலுமாகக் கீழ்ப்படிந்து வாழ்பவர்கள், மறுமை வாழ்வில் நிரந்தரமாக சுவனப் பேற்றை அடைவார்கள். இறைவனின் கட்டளைகளை அலட்சிப்படுத்துவார்கள். இறைவனுக்கு நன்றியில்லாமல் நடந்து கொண்டதற்கான கசப்பான விளைவுகளை அனுபவிப்பார்கள்.

 இஸ்லாத்தின் எளிமை, அதன் அறிவுப்பூர்வமான நடைமுறைக்கேற்ற அமைப்பு :
இஸ்லாம் புராணங்கள், கட்டுக் கதைகள் ஏதமில்லாத ஒரு நெறியாகும். அதன் அறிவுரைகள் எளிதானவையும், எளிதில் புரிந்து கொள்ளத் தக்கவையாகும். அது எல்லாவித மூடநம்பிக்கைகளையும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத நம்பிக்கைகளையும் விட்டுத் தூய்மையானதாகும். இஸ்லாத்தில் மத குரமார்களின் ஆதிக்கம் கிடையாது. நடைமுறை வாழ்வுக்கும் மனிதத் தேவைகளுக்கும் தொடர்பில்லாத வெற்றுத் தத்துவங்களுக்கும், பயனற்ற சடங்குகளுக்கும் அதில் இடமில்லை. புரிந்து கொள்ள முடியாத சிக்கலான சடங்குகளும் சம்பிரதாயங்களும் அதில் இல்லை. ஒவ்வொரு மனிதனும் இறைவனின் திருமறையை நேரடியாக அணுகி அதன் வழிகாட்டுதலில் இருந்து பயனடைய முடியும்.

இஸ்லாம் மனிதனின் பகுத்தறியும் ஆற்றலைத் தட்டி எழுப்புகின்றது. அவனை தனது அறிவாற்றலைப் பயன்படுத்தும்படி தூண்டுகிறது. எந்த ஒரு விஷயத்தையும் அதன் எதார்த்த நிலையின் வெளிச்சத்தில், அதன் விரிவான பின்னணியில் பார்க்கும்படி - சிந்திக்கும்படி கட்டளையிடுகின்றது.

என் இறைவா! என் அறிவை அதிகப்படுத்தியருள் (20:14)

என்று பிரார்த்திக்கும்படி மனிதனுக்கு திருக்குர்ஆன் அறிவுறுத்துகின்றது.

அறிவில்லாதவர்கள், அறிவுடையோருக்குச் சமமாக மாட்டார்கள். (39:09)

என்று அது அழுத்தந்திருத்தமாகக் கூறுகின்றது. சிந்திக்க மறுப்பவர்களை.. ..!

மிருகங்களைப் போன்றவர்கள், ஏன் அவற்றை விடவும் தாழ்ந்தவர்கள் (7:179)

என்று இடித்துரைக்கின்றது.

உலகியலும், ஆன்மீகமும்..!

இஸ்லாத்தின் தனித்தன்மை வாய்ந்த ஒரு சிறப்பம்சம் என்னவெனில் அது வாழ்க்கையை உலகாதாயம் சார்ந்தது, ஆன்மீகம் சார்ந்தது என - ஒன்றோடொன்று இசைந்து போக முடியாத - இரு வேறுபட்ட கூறுகளாய்ப் பிரிப்பதில்லை. அது மனித வாழ்கை பிரிக்க முடியாத ஒன்றாகக் கருதுகிறது. வாழ்வைத் துறப்பதை அது ஆதரிப்பதில்லை. மாறாக வாழ்க்கையை நிறைவுடையதாக்கிக் கொள்ளும்படி அது வலியுறுத்துகின்றது. துறவு மனப்பான்மையைச் சரியானது என அது ஏற்றுக் கொள்ளவில்லை. உலகப் பொருட்களை விட்டு ஒதுங்கி வாழும்படி அது மனிதனைக் கேட்கவில்லை. கரடுமுரடான இன்னல் நிறைந்த வாழ்க்கையிலும் இறையச்சத்துடன் வாழந்து மறுமை வெற்றியை - முக்தியை அடையலாம் என்று அது இயம்புகின்றது. இறைவன் மனித குலத்திற்கு வழிகாட்டிட இறுதியாக அருளிய வேத வெளிப்பாடான திருக்குர்ஆன் பின்வருமாறு பிரார்த்திக்கும்படி நமக்கு அறிவுறுத்துகின்றது.

எங்கள் இறைவா, இந்த உலகத்திலும் எங்களுக்கு நன்மையை அளிப்பாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையை அளிப்பாயாக! (2:201)

தனது அருட்கொடைகளை ஏற்றுத் துய்த்திட மறுப்பவர்களை அல்லாஹ் வன்மையாகக் கண்டிக்கின்றான்.

நபியே!) நீர் (அவர்களிடம்) கேளும். அல்லாஹ், தனது அடியார்களுக்காகப் படைத்திட்ட அழகான பொருள்களை உலக சாதனங்களை விலக்கப்பட்டவையாய் ஆக்கியது யார்? (7:32)

மேலும், உண்ணுங்கள்! பருகுங்கள்! ஆனால் வீண் விரையம் செய்யாதீர்கள் (7:31) என்று தெளிவாகக் கட்டளையிடுகின்றது.

உலகாதாய வாழ்வுக்கும் ஒழுக்க வாழ்வுக்கும், சடத்துவ வாழ்விற்கும் ஆன்மீக வாழ்விற்குமிடையே எந்தப் பிரிவினையையும் இஸ்லாம் ஏற்றுக் கொள்வதில்லை. அனுமதிப்பதுமில்லை. தனது வாழ்வை ஆரொக்கியமான அடிப்படைகளின் மீது அமைத்துக் கொள்ள தன் ஆற்றல்கள் வலிமைகள் அனைத்தையும் அர்ப்பணித்திட வேண்டும் என்று அது மனிதனுக்கு ஆணையிடுகின்றது. ஒழுக்கச் சக்திகளும், ஆன்மீக சக்திகளும் ஒன்றோடொன்று இறுகப் பிணைக்கப் பயன்படுத்தி ஆன்மீக வெற்றியை அடைந்திட முடியும். துறவு வாழ்க்கை நடத்துவதன் வாயிலாக மனிதன் வெற்றியடைய முடியாது என்று அது அறிவுறுத்துகின்றது. மனித வாழ்வின் இரு அம்சங்களான உலகாதாயம், ஆன்மீகன் ஆகிய இரண்டுக்குமிடையே ஒரு சமநிலையைத் தோற்றுவிப்பதை இஸ்லாம் தனது குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

உலகில் உள்ளவை அனைத்தும் மனிதனுக்காகப் படைக்கப்பட்டுள்ளன. மனிதனோ தன்னைப் படைத்த இறைவனுக்காக! தன்னுடைய அந்த ஏகனான அதிபதியின் விருப்பத்தை கட்டளையை நிறைவு செயவதே னிதனின் வாழ்க்கைக் குறிக்கோளாகும். இஸ்லாத்தின் அறிவுரைகள், மனிதனின் ஆன்மீக, உலகியல் தேவைகளை நிறைவு செய்கின்றன. மனிதன் தனது ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் தன் உலகியல் வாழ்வை தன் தனிப்பட்ட வாழ்வு, கூட்டு வாழ்வு இரண்டையுமே சீர் திருத்திக் கொள்ள வேண்டுமென்றும், அசத்தியத்தின் வலிமையை அடக்கி, நீதியை நிலைநாட்ட வேண்டுமென்றும், தீமைகளை ஒழித்துக் கட்டி நற்பண்புகளை மலரச் செய்ய வேண்டுமென்றும் அவனுக்குக் கட்டளையிடுகின்றது. இவ்விதம் அது எல்லாவித ஒரு தலைப்பட்சமான தீவிரப் போக்குகளையும் தவிர்த்து நடுநிலையான பாதையைத் தேர்ந்தெடுத்து அதில் உறுதியுடன் நடைபோடச் செய்கிறது.

 முழுமையான வாழ்க்கை நெறி :
மதம் என்பதற்கு பொதுவாகவே இன்று தவறான சிதைந்த கருத்து கொள்ளப்படுகின்றது. அத்தகைய குறகிய பொருளில் இஸ்லாம் ஒரு மதம் அல்ல! மதம் என்பது மனிதனின் தனிப்பட்ட வாழ்வுடன் தொடர்புடையது என்பதை அது ஏற்றுக் கொள்வதில்லை. அது முழமையானதொரு வாழ்க்கை நெறியாகும். மனித வாழ்வின் எல்லாத் துறைகளையும் அது தழுவி நிற்கிறது. தனிப்பட்ட வாழ்வு, சமூக கூட்டு வாழ்வு, உலகாதாய வாழ்வு, ஒழுக்க வாழ்வு, ஆன்மீக வாழ்வு, அரசியல் வாழ்வு, பொருளாதார வாழ்வு, ஆகிய அனைத்தையும் அது தன்னுள் கொண்டுள்ளது. சட்டம், கலாச்சாரம், தேசிய சர்வதேச விவகாரங்கள் அனைத்தையுமே அது தழுவி நிற்கிறது. இஸ்லாத்தை மேற்கொள்ளும் ஒவ்வொருவர் மீதும் பின்வரும் விஷயத்தைக் குர்ஆன் கடமையாக்குகிறது.

இஸ்லாம் வழங்கும் அறிவுரைகளின் எந்தப் பகுதியையும் கூறுபோட்டு ஒதுக்கி விடக் கூடாது. மாறாக, அதனுடைய அறிவுரை முழவதையும் வாழ்வின் அனைத்துத் துறையிலும் ஒரு மனதுடன் பேணி நடக்க வேண்டும். மதம் என்பது மனிதனின் தினப்பட்ட வாழ்க்கைக்கு உரியது. சமுதாயம் பண்பாட்டுத் துறைகளில் அதனுடைய ஆதிக்கம் இல்லாதொழிய வேண்டும் என்று தீர்மானிக்ப்பட்ட நாள். உலக வரலாற்றிலேயே மிக துரதிர்ஷ்டம் வாய்ந்த நாளாகும். நவீன யுகத்தில் சமயத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த மிக முக்கிய காரணி, கூட்டு வாழ்க்கையின் மீதான தனது பிடியை அது தானாகவே தளர்த்தி விட்டு தனிப்பட்ட வாழ்க்கையின் குறகிய வட்டத்திற்குள் முடங்கிக் சென்று விட்டதே! தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமே ஆட்சி புரிகின்ற சமயக் கருத்தோட்டத்தை இஸ்லாம் முழமையாக நிராகரித்து விடுகின்றது. ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதும், சமூகத்தின் சீர்திருத்தம் அதன் புத்தமைப்பும் தான் தனது குறிக்கோள்கள் என்று அது தெளிவாக எடுத்துரைக்கின்றது.

திருக்குர்ஆன் கூறுகின்றது :

நிச்சயமாக நம் தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளுடன் அனுப்பினோம்; அன்றியும், மனிதர்கள் நீதியுடன் நிலைப்பதற்காக, அவர்களுடன் வேதத்தையும் (நீதத்தின்) துலாக்கோலையும் இறக்கினோம்; இன்னும், இரும்பையும் படைத்தோம்; அதில் கடும் அபாயமுமிருக்கிறது; எனினும் (அதில்) மனிதர்களுக்குப் பல பயன்களும் இருக்கின்றன - (இவற்றின் மூலமாகத்) தனக்கும், தன்னுடைய தூதருக்கும் மறைமுகமாகவும் உதவி செய்பவர் எவர் என்பதையும் (சோதித்) அறிந்து கொள்வதற்காக அல்லாஹ் (இவ்வாறு அருள்கிறான்); நிச்சயமாக அல்லாஹ் பலம் மிக்கவன், (யாவரையும்) மிகைத்தவன். (57:25)

நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் :

உங்களில் ஒவ்வொருவருக்கும் தனக்குக் கிழ்ப்பட்டவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பாளாராவீர். அவர்களின் நலன்களைப் பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். ஆகவே, நாட்டின் தலைவர், தன் நாட்டு மக்களின் நலன்களைப் பற்றி விசாரணை செய்யப்படுவார்.

ஒவ்வொரு மனிதனும் தன் குடும்பத்தாருக்கு மேய்ப்பாளனாவான். எனவே, குடும்பத்தின் ஒவ்வோர் உறுப்பினருடைய நலன் பற்றியும் கேள்வி கேட்கப்படுவான். ஒவ்வொரு பெண்ணும் தன் கணவனுடைய குடும்பத்தின் பொறுப்பாளியாவான். எனவே, அக்குடும்பத்தின் ஒவ்வொருவரின் நலன் பற்றியும் கேள்வி கணக்குக் கேட்கப்படுவான். மேலும், ஒவ்வொரு பணியாளனும் தன் எஜமானனுக்குப் பாதுகாப்பாளனாவான். எனவே, அவன் தன் எஜமானனின் சொத்தை (எப்படிப் பாதுகாத்தான் என்பது) பற்றி விசாரணை செய்யப்படுவான்.

இவ்விதம் இஸ்லாத்தின் அறிவுரைகளை ஒருமுறை மேலோட்டமாகப் பார்த்தாலே அது வாழ்வின் அனைத்துத் துறைகளையும் தழுவிய ஒரு வாழ்க்கை நெறி என்றும், தீய சக்திகள் அடக்கியாண்டிடும் வகையில் மனித வாழ்வின் எந்த ஒரு துறைiயையும் அது விட்டு விடவில்லை என்றும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

 தனிவாழ்வுக்கும் பொதுவாழ்வுக்குமிடையே சமநிலை உருவாக்குதல் :
இஸ்லாம் இறைவனால் வழங்கப்பட்ட உண்மையான மார்க்கமாகத் திகழ்வதால், அது தனிநபர் வாழ்வுக்கும் கூட்டு வாழ்வுக்குமிடையே சமநிலையை மிக ஆக்ககரமான முறையில் - மிகுந்த பயனளிக்கும் விதத்தில் நிலைநாட்டுகின்றது. அது மனித ஆளமையில் தனிப்பட்ட முறையில் நம்பிக்கை வைத்திருக்கின்றது. மனிதர்கள் அனைவரையும் தனிப்பட்ட முறையில் தமது செயல்களுக்குப் பொறுப்பாளர்களாகவும் இறைவன் முன் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்களாகவும் கருதுகின்றது. இஸ்லாம் தனிமனிதனின் அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதமளிக்கின்றது. அவற்றைத் தடை செய்திடவும் பறித்திடவும் எவரையும் அது அனுமதிப்பதில்லை. மனித ஆளமையின் வளர்ச்சியை அது தனது கல்விக் கொள்கையின் தலையாய குறிக்கோளாகக் கொண்டுள்ளது. சமூகத்தில் அல்லது அரசில் மனிதன் தனது ஆளமையை இழந்து விட வேண்டும் என்கிற கருத்தை இஸ்லாம் ஏற்றுக் கொள்வதில்லை. அதே நேரத்தில் அது மனிதனுள் ஒரு விதப் பொறுப்புணர்வைத் தோற்றுவிக்கின்றது. மனிதர்களை ஒரு சமூகத்தினுள்ளும் அரசினுள்ளும் ஒன்று திரட்டி அமைப்ப ரீதியாக கட்டுப்பாட்டிற்குள் கொண்ர்கின்றது. சமூக நன்மைக்குத் தனது பங்கை ஆற்றிடும்படி தனிமனிதனுக்குக் கட்டளையிடுகின்றது.

இஸ்லாத்தில் தொழுகை கூட்டாக நிறைவேற்றப்படுகின்றது. அது முஸ்லிம்களிடையே சமூக ஒழுங்கையும் கட்டுப்பாட்டு உணர்வையும் வளர்க்கின்றது. ரமளான் நோன்பு முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றாக ஒரே நேரத்தில் வைப்பதற்கென்றே உள்ளதாகும். இந்த அரிய ஏற்பாடு தனிநபர் மற்றும் சமுதாயத்தினுடைய நலன்களை அடைய வழிகோலுகிறது.

ஜகாத் (தன் சொத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட விகிதத்தை இறைவழியில் செலவழித்தல்) திட்டமிட்ட முறையில் விநியோகிக்கப்பட வேண்டுமென்பதற்காக அதனைக் கூட்டான முறையில் வழங்கிட முயற்சிகள் மேற்கொள்ளும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. ஹஜ் கடமை அதற்கென நிர்ணயிக்கப்பட்டுள்ள காலத்தில் கூட்டாக நிறைவேற்றப்பட வேண்டுமென்று ஆணையிடப்பட்டுள்ளது.

சுரக்கமாகக் கூறின், இஸ்லாம் தனிமனிதனையும், அலட்சியப்படுத்தவில்லை, சமூக நலன்களையும் புறக்கணிக்கவில்லை. இரண்டுக்குமிடையே இணக்கமான சமநிலையை ஏற்படுத்துகின்றது.

அனைத்துலகத் தன்மையும் மனிதாபிமாமும்

இஸ்லாத்தின் செய்தி மனித இனம் முழவதற்கும் உரியதாகும். இஸ்லாத்தின் பார்வையில் இறைவன் உலகங்கள் அனைத்திற்கும் இறைவன் ஆவான் (1:1)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மனிதகுலம் முழவதைற்கும் இறைத்தூதராவார். திருக்குர்ஆன் இதனைப் பின்வருமாறு எடுத்துரைக்கின்றது.

மக்களே! நான் உங்கள் அனைவருக்காகவும் அனுப்பப்பட்டுள்ள இறைத் தூதராவேன் (7:158) அவர் அகிலத்தார் அனைவரையும் அச்சுறுத்தி எச்சரிப்பவர் ஆவார். (25:1) மேலும் உம்மை அகிலத்தார் அனைவருக்கும் ஓர் அருட்கொடையாகவே நாம் அனுப்பி வைத்துள்ளோம். (21:107) இஸ்லாத்தின் பார்வையில் மனிதர்கள் அனைவரும் சமமானவர்களே! அவர்களுடைய நிறம், மொழி, இனம், தேசியம், ஆகியன எதுவாயிருந்தாலும் சரியே! அது மனித சமுதாயத்தின் மனச்சான்றை முன்னிலைப்படுத்திப் பேசுகின்றது. இனம், அந்தஸ்து, செல்வம் ஆகிய எல்லாவித தடைக் கற்களையும் தகர்த் தெறிகின்றது. இத்தகைய தடைகள் உலகில் எப்போதும் இருந்து வருகின்றன. இதனை எவரும் மறுக்க முடியாது. இஸ்லாம் இந்தத் தடைகளையெல்லாம் அகற்றி மனித சமுதாயம் முழவதும் இறைவனின் ஒரே குடும்பம் என்கிற கருத்தோட்டத்தை அளித்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

இறைவனின் படைப்புகள் அனைத்தும் அவனது குடும்பமே! இறைவனிடம் மிகுந்த அன்புக்குரியவன் அவனது படைப்பினங்களை அதிகம் நேசிப்பவனே ஆவான்.

என் இறiவா! என் உயிருக்கும் அகிலத்திலுள்ள அனைத்துப் பொருள்களுக்கும் அதிபதியே! மனிதர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதரர்களே என்று நான் உறுதி மொழி கூறுகின்றேன்.

இறைவனின் வழிமுறைகளுக்கு மதிப்பளியுங்கள்! அவனது குடும்பத்தின் (மனித இனத்தின்) மீது அன்பு செலுத்துங்கள்.

இஸ்லாம் தனது நோக்கிலும் அணுகுமுறையிலும் சர்வதேசத்தன்மை வாய்ந்ததாகும். எந்தவகையான தடைகளையும் பாகுபாடுகளையும் அனுமதிப்பதில்லை. அது மனித சமுதாயம் முழவதையும் ஒரே பார்வையின் கீழ், கொள்கை நெறியின் கீழ் ஒன்றுபடுத்த விரும்புகின்றது. இவ்விதம் இஸ்லாம் ஒரு முழுமையான, ஒருங்கிணைந்த அனைத்துத் துறைகளையும் தழுவிய, சமநிலை தவறாத வாழ்க்கை நெறியாக விளங்குகின்றது.

இன்ஷா அல்லாஹ் இனி வரும் காலங்களில் கீழ்க்கண்ட தலைப்புகளில் தொடராக வெளிவர இருக்கின்றது.

1. குர்ஆன் ஒர் ஒப்பற்ற நூல்!

2. இஸ்லாம் ஓர் இணையற்ற மார்க்கம்!

3. முஹம்மத் (ஸல்) அவர்கள் - ஓர் அழகிய முன்மாதிரி

4. மறுமை வாழ்வு ஒரு தெளிவு!

5. இறைவழிபாடு - இஸ்லாத்தின் பார்வையில்

6. இஸ்லாத்தில் மனித உரிமைகள்

7. இஸ்லாமிய ஒழுக்கவியல்

8. இறைவனைப் பற்றி இஸ்லாத்தின் கருத்தோட்டம்

9. இஸ்லாத்தில் இறைத் தூதுத்துவம்

10. இம் மனிதரைத் தெரிந்து கொள்ளுங்கள்
, ,